அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

சனி, 7 ஆகஸ்ட், 2010

நம்பிக்கையின்றி வெற்றி கிட்டாது!

நம்பிக்கையின் ஆதார சுருதி, தடைகளைத் தாண்டி எதுவும் என்னால் முடியுமென்ற போர்க் குதிரையைப் போன்றும், பொங்கியெழும் மாகடலையும் மிஞ்சும் ஆற்றலும் கொண்ட அற்புதமான சக்தியே! புதிய சிந்தனைகளும், எழுச்சியும், முனைப்பும் முழுமையான ஈடுபாடும் கொண்ட துடிப்பும், துள்ளலுமேதான் அப்துல்கலாமின் விண்வெளிச் சாதனைக்கு வலுக்கரமாய் அமைந்தன.

நம்பிக்கை வாசம்சுவாசமாய் மலர முதுகெலும்பாய் அமைவது மனதின் ஆற்றல். தனிமனிதன் ஒவ்வொருவரும் தன்னுடைய மன ஆற்றலால்தான் சாதனை புரிகின்றான். ஊனமுற்றவர்கள் கூட சாதிப்பது உள்மன ஆற்றலால் என்பதற்கு முன்னோடியாய் விளங்கியவர்கள் ஹெலன் கெல்லர், உலகப் புகழ்கவிஞர் ஜோன் மில்டனும் ஆகியோராவர்.

தோமஸ் அல்வா எடிசன் பத்து வயது முதற் கொண்டே ஆய்வுகூட்டத்திலேயே இருந்து எண்ணற்ற அரிய கண்டுபிடிப்புகளில் அரிய மின்சாரம் மூலம் விந்தைகளின் விருட்சமாய் இன்றும் அறிவியல் வானில் வலம் வருதல் கண்கூடு. சந்திர மண்டலத்தில் கண்டு தெளிவோம் என முரசு கொட்டிய புரட்சி வேந்தன் பாரதியின் கவி நம்பிக்கையே இன்று “சந்திரயான்” சென்று விரிவானில் சாகசம் கண்டமைக்கு வித்திட்ட விதையன்றோ? புவியீர்ப்பு விசையைக் கண்டுபிடித்த நியூட்டனிடம் வயதான காலத்தில் கூட அறிவியல் தொடர்பான புதிய புதிய யுக்திகளை கையாளும் நம்பிக்கை குடிகொண்டிருந்தது. நம்பிக்கை நம்மை விழித்தெழச் செய்யும் விழிகளாய் அமைந்தால் சாதனைகளும், சாகசங்களும், முத்திரைகளும், முன்னேற்றங்களும் இணைந்து வெற்றி வாகைசூட எழுச்சி நாயகனாய் வழிகாட்டும். நம்பிக்கையே இலட்சிய நெருப்பை பற்றவைக்கும் தீக்குச்சியென்பதை மனம் திட்டமிடுதல் அவசியமாகிறது.

முடியாது! என்ற கேள்வி மனதில் தலை தூக்குங்கால் முடியுமென்ற மலரின் வாசம் வீச துணிவு, உறுதி, உழைப்பு, சோர்வின்மை ஆகியவற்றை நம் காதுகள் ஒலித்துக் கொண்டேயிருக்குமாறு நம்மை ஆளுமையாக்கலே வெற்றியின் சூத்திரம்! கடமையாற்றும் தனிமனிதனிடத்தில் நம்பிக்கைப் பூவைத்தான் எதிர்பார்க்க முடியும். காலம் கருதும் பாங்குடனும், இடம் நோக்கிலும் திட்டமிடுதலையும் கண்காணித்து காவலாளியாய் வலம் வருதலால் முத்திரைக் கனியை சுவைக்க முடிகின்றது.

எதிர்காலம், இறந்த கலம், நிகழ்காலம் ஆகிய முப்படைப் போர்வீரர்களாய் இன்றும் இலக்கிய தராசில் மகாகவி பாரதியின் கனல் ஓவியங்கள் காணப்படுகின்றன. வளரும் இளங்கவிகளுக்கு உரமாய், பீடமாய் அமைந்தன என்பதை யாரும் மறுக்க இயலுமா? மறைக்க முடியுமா? மறக்க கூடுமோ? நம்பிக்கை உழப்பின் சுவாசமாய் மாறும்போது தான் முன்னேற்ற வயல்களில் வளர்ச்சியின் விளைச்சல் குவியலாகின்றது. உழைப்பின் கதவுகளுக்கு தாழ்பாள் போட்டு விட்டு நம்பிக்கையின்றி சோம்பி இருப்பவர்கள் என்றுமே எக்கணமும் வெற்றியின் வெளிச்சத்தை தரிசிக்க முடியாது.

இலட்சிய மேகங்கள் உன் விழிகளில் கண்விழித்தால் முன்னேற்றம் உன் வாழ்வின் தகவுகளை முனைப்போடு திறக்கும். இமைப் பொழுதும் விடாமுயற்சியுடன் செயற்படின் இமயம் கூட இடுப்பளவு தூரமே! சோதனைகள் கூட சாதனையின் படைவீரர் கூட்டமாம். வெற்றி கீதம் இசைக்க நம்பிக்கை நரம்புகளை உற்சாக வீணையால் மீட்டுவோம். நம்பிக்கை விதைகளை நடச் செய்வோம். வெற்றிக்கனிகள் வாழ்த்த இணைவோம்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக