அப்பெண்கள் மூலம் அவருக்கு 59 பிள்ளைகள்
மத போதகர் என்ற போர்வையில் 23 பெண்களை அடிமைகளாக நடத்தி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி 59 பிள்ளைகளுக்கு தந்தையான நபர் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை இஸ்ரேலிய டெல் அவிவ் நகரிலுள்ள நீதிமன்றமொன்றில் நிறுத்தப்பட்டார்.
கோயல் ரட்ஸன் (60 வயது) என்ற இந்நபர் மீது பாலியல் துஷ்பிரயோகம், பாலியல் பலாத்காரம், முறைகேடான பாலியல் நடத்தை மற்றும் அடிமைகளாக நடத்தியமை ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
அவர் தனது கட்டுப்பாட்டின் கீழுள்ள பெண்களை, தான் அதீத ஆற்றல்கள் உள்ள ஒருவர் எனவும் அவர்களை இரட்சிக்க வந்த ஒருவர் எனவும் நம்பச் செய்து அவர்களை தனது கட்டளைகளுக்கு அடிபணிந்து நடக்கச் செய்ததாகக் கூறப்படுகிறது.
மேலும் அனைத்து பெண்களது கரங்களிலும் ரட்ஸனின் பெயரும் உருவப்படமும் பச்சை குத்தப்பட்டு இருந்தது.
ரட்ஸன் மேற்படி 23 பெண்களில் முதல் பெண்ணை 1972 ஆம் ஆண்டில் திருமணம் செய்தார். 1980 களின் ஆரம்பத்தில் இரண்டாவது பெண்ணுடன் திருமண பந்தத்தில் இணைந்தார்.
தொடர்ந்து 1991 ஆம் ஆண்டிலிருந்து 21 பெண்களை தனது வாழ்க்கையில் இணைத்துக் கொண்டார். தனக்கு பாவங்களை விரட்டவும் குணப்படுத்தவும் கூடிய அற்புத ஆற்றல் இருப்பதாக அப்பெண்களை நம்ப வைத்த ரட்ஸன் அப்பெண்களது வாழ்க்கை விருப்பங்கள், சிந்தனைகள், உணர்வு வெளிப்பாடுகள் மற்றும் நடவடிக்கைகள் அனைத்தையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
தனக்கு பூரணமாக அடி பணிய மறுக்கும் பெண்களுக்கும் பிள்ளைகளுக்கும் கடுமையான தண்டனைகளை வழங்கும் நடைமுறையொன்றை அவர் பின்பற்றி வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் அப்பெண்கள் பிறருடன் பழகாத வகையில் தனக்குச் சொந்தமான வளாகமொன்றில் அவர்களை சிறை வைத்திருந்ததாக தெ>விக்கப்படுகிறது.
அத்துடன் அவர் தனது இரு மகள்மாரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதுடன் பிறிதொரு மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் அவர் தனது பிள்ளைகள் அல்லாத 4 சிறுமிகளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாகக் கூறப்படுகிறது. ரட்ஸனின் சட்டவிரோத நடவடிக்கை குறித்து பிராந்திய அதிகாரிகள் சுமார் 10 வருடங்களாக அறிந்திருந்த போதும், மத அமைப்பு என்ற போர்வையில் அவர் பெண்களை சிறை வைத்திருந்தமை குறித்து அவர்களால் சட்ட ரீதியாக நிரூபிக்க முடியாது போனது. அதற்கு ரட்ஸனால் சிறை வைக்கப்பட்டிருந்த பெண்கள் அவருக்கு எதிராக சாட்சியமளிக்க முன்வராமையே காரணமாக இருந்தது.
இந் நிலையில் அதிகாரிகள் ரட்ஸனால் சிறை வைக்கப்பட்டிருந்த பெண்களில் ஒருவரை இரகசியமாக அணுகி அவரது அச்சத்தை போக்கி அவருக்கு எதிராக முறைப்பாடு செய்யத் துண்டியதையடுத்து ரட்ஸன் கடந்த மாதம் கைது செய்யப்பட்டார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக