துன்புறும் ஒவ்வொரு நோயாளியும் தன்னுடைய நோயின் காரணம் என்ன என்பதைக் கண்டுபிடித்து முதலில் அதனைச் சீர் செய்ய வேண்டும்.
நற்சீரகத்தை இலேசாக வறுத்துப் பொடி செய்து அதனுடன் பனை வெல்லம் சேர்த்துச் சாப்பிடலாம்.
ஓமத்தை தேய்த்து உமியைப் போக்கி அரைத்து வெந்நீரில் கலக்கிக் குடிக்கலாம்.
வாழைப்பழத்தினால் ஏற்பட்ட அஜீரணத்துக்கு ஏலக்காயைப் பொடி செய்து அரை தே.க. வெந்நீருடன் எடுக்கலாம். அல்லது ஒரு தே.க. நெய்யினை உட்கொள்ளலாம்.
வெற்றிலையைச் சுத்தப்படுத்தி அதில் 7 மிளகு, சிறிதளவு சீரகம் வைத்து மடித்து வாயிலிட்டு நன்றாக மென்று சாப்பிட்டு சிறிது வெந்நீர் அருந்தலாம்.
நற்சீரகம் 15 கிராமுடன் அரை தே.கரண்டி மிளகும், சிறிதளவு உப்பும் சேர்த்து மை போன்று அரைத்து அதை உருட்டி எடுத்து வாயிலிட்டு வெந்நீரில் அருந்த வயிற்றுப் பொருமலும் அகலும்.
அஜீரண மிகுதியால் புளிப்பேப்பம் என்றால் சுக்கு 5 கிராம் அளவு எடுத்து தட்டி அதில் 200 மி.லீ. நீர் விட்டு பாதியாக சுண்டுமளவு கஷாயமாக்கி வடிகட்டிக் கொண்டு அத்துடன் சிறிதளவு சர்க்கரை சேர்த்து ஒருவேளை அருந்தினால் போதும்.
நாயுருவி வேரை சுத்தம் செய்து கழுவிய பின் பொடிப் பொடியாக நறுக்கி ஒரு கைப்பிடி அளவு எடுத்து அத்துடன் 200 மி.லீ. நீர் விட்டு நன்றாக கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டிக் கொண்டு காலை, மாலை இரு வேளையும் 100 மி.லீ. வீதம் அருந்தி வர குணமாகும்.
உணவு முறையாக பிரண்டைக் கொழுந்தை சுத்தம் செய்து 50 கிராம் அளவு எடுத்து நல்லெண்ணெயில் வதக்கி அத்துடன் மிளகு, சீரகம், பூண்டு, புளி, பெருங்காயம் போன்றவற்றையும் சேர்த்து துவையலாக அரைத்து தாளிதம் செய்து உணவுடன் சேர்த்து உண்டு வரலாம். இவ்வாறு ஒரு வாரம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் அஜீரணம், வயிறு இரைதல், பொருமல் எல்லாம் தீரும்.
கறிவேப்பிலையுடன் சுட்ட புளி, வறுத்த உப்பு, வறுத்த மிளகாய் சேர்த்து துவையல் செய்து சாப்பிட செரியாமை, பித்த வாந்தி தணியும்.
அரைக்கீரையை பூண்டு, மிளகு, சீரகம் இவற்றுடன் சேர்த்து புளி சேர்க்காமல் கடைந்து பக்குவப்படுத்தி உணவுடன் உட்கொள்ளலாம். தூதுவளை இலையை சிறிது நெய் விட்டு வதக்கி உப்பு, புளி, காரம் கூட்டித் துவையலாக அரைத்து அன்னத்துடன் கூட்டிச் சாப்பிட பசியை உண்டாக்கும். வாயுவையும் கண்டிக்கும்.
புதினா இலையையும் தூதுவளை இலை போன்று துவையல் செய்து அன்னத்துடன் சாப்பிடலாம்.
புளியங்காயின் இளங்காயுடன் பச்சை மிளகாய், இஞ்சி, கொத்த மல்லிக் கீரை, உப்பு இவற்றைத் திட்டமாக அரைத்து தாளித்து துவையலாக அன்னத்துடன் கூட்டிச் சாப்பிட பசியை உண்டாக்கும். பித்தத்தைக் குறைக்கும்.
சுக்கு, மிளகு, திப்பிலி, கறிவேப்பிலை, உப்பு இவைகளை ஓரளவாக எடுத்து இளம் பதத்தில் வறுத்துப் பொடித்து எடுத்து எடைக்கு கால் பங்கு பொ>த்த பெருங்காயம் கலந்து கூட்டி வைத்துக் கொண்டு அதில் ஒரு தே. கரண்டியை அளவு சுடு சோற்றிலிட்டு சிறிது நெய் விட்டுப் பிசைந்து ஒரு பிடி சாப்பிட்ட பின் வழக்கம் போல் உணவை உட்கொள்ள பசி உண்டாகும்.
இலந்தைப் பழத்தின் கொட்டையை நீக்கி விட்டு தசையுடன் மிளகும் உப்பும் சேர்த்தரைத்து உலர்த்தி வைத்துக் கொண்டு ஒரு நெல்லிக் காயளவு காலையில் கொடுத்து வரலாம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக