சனி, 27 பிப்ரவரி, 2010

ஹிரோஷிமா, நாகசாகிமீது அணுகுண்டுவீச்சுக்கள் ஒரு பார்வை

ஆகஸ்ட் 6, 1945 விடியற்காலை நேரத்தில், எனோலா கே (Enola Gay) என்ற பெயருடைய அமெரிக்க B-29 போர்விமானம் ஒன்று பசிபிக் தீவான டினியனில் இருந்த அமெரிக்க விமானதளத்தை விட்டு சீறிப்புறப்பட்டது. தரையில் இருந்து எவ்வித எதிர்ப்பும் இல்லாமல் கிட்டத்தட்ட ஆறு மணி நேரம் அது பறந்தது.

உள்ளூர் நேரம் காலை 8.15க்கு இந்த விமானம், 255,000 மக்கள் இருந்ததாக மதிப்பிடப்பட்டிருந்த ஜப்பானிய நகரமான ஹிரோஷிமாவின் தெளிவான வானில் தான் சுமந்துவந்திருந்த சுமையைப் போட்டது. இந்த விமானம் கொண்டுவந்திருந்த, "சிறு பையன்" (Little Boy) என்று பெயரிடப்பட்டிருந்த அணுக் குண்டு நகர மையத்திற்குமேல் 600 மீட்டர்களில் வெடித்தது; இதன் விளைவாக, கிட்டத்தட்ட அங்கிருந்த 30 சதவிகிதத்தினர், 80,000 மக்கள், உடனடியாகவோ அல்லது வெடிப்பு நிகழ்ந்த சில மணி நேரங்களிலேயோ கொல்லப்பட்டனர்.

மூன்று நாட்களுக்குப் பின்னர், ஆகஸ்ட் 9ம் தேதி, இதேபோன்ற விமானம் இன்னும் சக்திவாய்ந்த ஆயுதத்தை தாங்கி டினியன் தீவில் இருந்து புறப்பட்டது; அது அடையவேண்டிய இலக்கை எய்துவதற்கு அதிகம் கஷ்டப்பட்டது. தரையில் இருந்து தாக்குதலை எதிர்கொண்டு அதன் இலக்கான கோகுரா நகர் மேகங்களினால் மூடப்பட்டதைக் கண்ட பின், அது அதன் இரண்டாம் இலக்கான, 270,000 மக்கள் வசித்து வந்திருந்த பெரும் தொழில்நகரமான நாகசாகிக்கு பறந்து குண்டை வீசியது; சிறப்பான இடத்தியல் பண்புகள் மற்றும் நகரத்தின் மையத்தை அது தவறவிட்டதன் காரணமாக, விளைவுகள் சற்றே குறைவான பேரழிவாயின. கிட்டத்தட்ட 40,000 மக்கள் உடனடியாகக் கொல்லப்பட்டுவிட்டதாக மதிப்பிடப்பட்டது.

இதற்கு அடுத்த சில மாதங்களில், இந்த அணு ஆயுதக் கருவிகளால் விளைந்த கதிரியக்க நோய்கள் உள்பட காயமுற்றதில் இருந்து மேலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் மடிந்தனர். இத்தகைய உயர் எண்ணிக்கையிலான இறப்புக்களில் சரியான அளவு இயல்பிலேயே கணிக்கப்படுவது கடினம் என்றாலும், இரண்டு தாக்குதல்களின் விளைவாக நான்கு மாதத்திற்குள் மொத்தம் மாண்டவர்கள், ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்று, எண்ணிக்கை மொத்தம் 200,000 த்தில் இருந்து 350,000 வரை இருந்திருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இத்தனை சடுதியில், இதற்கு முன்னர் இவ்வளவு பெரிய அழிவு நேர்ந்ததேயில்லை.

இந்தக் குண்டு வீச்சுக்களுடன், ஆகஸ்ட் 8 அன்று ஜப்பானியக் கட்டுபாட்டிற்குள் இருந்த மஞ்சூரியா மீது சோவியத் படையெடுப்பு இணைந்ததானது, பசிபிக் பகுதியில் போரை விரைவில் முடிவிற்கு கொண்டுவந்தது. செப்டம்பர் 2ம் தேதி, ஜப்பானிய அரசாங்கம் நேச நாடுகளுடன் ஓர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது; இதன்படி கிட்டத்தட்ட நாட்டின் கட்டுப்பாடு முழுவதும் அமெரிக்க இராணுவத்திடம் முக்கியமாய் விட்டுக்கொடுக்கப்பட்டது.

ஜேர்மனி சரணடைந்த நான்கு மாதங்கள் கழித்து ஜப்பான் சரணடைந்தமை இரண்டாம் உலகப்போரை ஒரு முடிவிற்குக் கொண்டுவந்தது. அதே நேரத்தில், போரின்பொழுது இராணுவரீதியாக நட்பு நாடுகளாக இருந்த போதிலும், இந்தக் கட்டத்தில் அமெரிக்காவிற்கும் சோவியத் ஒன்றியத்திற்கும் இடையே பெருகிய முறையில் குரோதமான உறவில் ஒரு புதிய கட்டம் அடையப்பட்டு விட்டதையும் இது குறித்தது. நான்கு ஆண்டுகளுக்குள் சோவியத் ஒன்றியம் தன்னுடைய சொந்த அணுவாயுதத்தை தயாரித்து, பல தசாப்தங்கள் தொடர்ந்திருந்த அணுவாயுதப் போட்டியைத் தொடக்கி வைத்தது.

போரில் அணுவாயுதங்கள் பயன்படுத்தப்படுவதற்காக அமெரிக்க அரசாங்கத்தால் எப்போதும் கொடுக்கப்பட்டுவரும் உத்தியோக ரீதியிலான காரணவிளக்கம் ஒரு ஜப்பானிய படையெடுப்பின் தேவையை தவிர்ப்பதன் மூலம் அமெரிக்க உயிர்களை காப்பாற்றுவதற்காக அது அவசியமாக இருந்தது என்பதாகும். அணுகுண்டை பயன்படுத்தலாம் என்ற முடிவை எடுத்ததற்காக விமர்சனத்தை எதிர்கொண்ட அரசாங்க அதிகாரிகள், போர் முடிந்த பின்னர், ஹிரோஷிமா, நாகசாகி என்ற இரண்டு நகரங்களையும் முற்றிலும் அழித்த இக்குண்டைப் போட்டதால் கிட்டத்தட்ட 500,000ல் இருந்து 1 மில்லியனுக்கு இடையிலான அமெரிக்கர்களும் பல மில்லியன் ஜப்பானியர்களும் காப்பாற்றப்பட்டனர் என்று கருத்துரைத்தனர்.

இத்தகைய காரணவிளக்கம் எப்பொழுதுமே அதிகம் சந்தேகத்திற்குள்ளாகி இருந்தது; அதுவும் வரவிருந்த ஆண்டுகளில் படையெடுப்பு நிகழ்ந்திருந்தால் இன்னும் எத்தனை உயிர்கள் பாதிக்கப்பட்டிருக்கும் என்ற மதிப்பீடு மிகைப்படுத்தப்பட்டது என்று எடுத்திக்காட்டியது மட்டுமல்லாமல், படையெடுப்பே இல்லாமல் போர் விரைவில் முடிந்திருக்கக் கூடும் என்பதற்கும் அதிகமான சான்றுகள் வெளிவந்தன.

அணுகுண்டுகள் பயன்படுத்தியதற்கான காரணங்கள் சிக்கல் வாய்ந்தவை எனினும், அவை போரின் முடிவில் ஒன்றுக்கொன்று தொடர்புடைய இரு புவிசார் அரசியல் இலக்குகளைச்சுற்றி மையம் கொண்டிருந்தன:
(1) சோவியத் படைகள் சீனாவிற்குள் பெருமளவு புகுந்து ஜப்பானை நோக்கிச் செல்லுவதற்கு முன்னரே போரை ஒரு முடிவுக்குக் கொண்டு வருவதன் மூலம் கிழக்கு ஆசியாவில் சோவியத் ஒன்றியத்தின் செல்வாக்கை மட்டுப்படுத்தும் ஆவல்,

(2) அமெரிக்க இராணுவத்தின் போட்டியில்லாத சக்தியை நேரில் காட்ட வேண்டும் என்ற விருப்பு மற்றும் அதன் நலன்களை முன்னெடுப்பதற்கு இந்த அதிகாரத்தை பயன்படுத்துவதற்கான விருப்பம்.

அணுவாயுதத்தை பயன்படுத்துவதற்கான முடிவின் பின்னால் இருந்த உள்நோக்கங்கள் இத்தொடரின் இரண்டாம் பகுதியில் விரிவாக ஆராயப்படும். சமீபத்திய அமெரிக்க இராணுவவாதத்தின் வெடிப்பு, மற்றும் புதிய வகையிலான அணுவாயுதங்களை அபிவிருத்தி செய்வதற்கான உந்தல் உள்பட, மிகக் கொடூரமான ஆண்டு நினைவுதினத்தின் தற்போதைய முக்கியத்துவம், மூன்றாம் கட்டுரையின் கருப்பொருளாக அமையும்.

ஒரு புதிய வகையிலான குண்டு

ஜூலை 26, 1945 அன்று நேச நாடுகள் வெளியிட்ட பொஸ்ட்டாம் பிரகடனம், நிபந்தனையற்ற சரணாகதிக்கு ஜப்பான் உடன்படவில்லை என்றால் "விரைவில் முழு அழிவு" அதன்மீது விளைவிக்கப்படும் என்ற உறுதிமொழியை கொண்டிருந்தது. நாகசாகி மற்றும் ஹிரோஷிமா நகரங்களை பொறுத்தவரையில் அணுகுண்டு கொண்டுவந்தது நிச்சயமாக இதுதான்.

ஹிரோஷிமாவின்மீது குண்டுவீச்சு நடப்பதற்குள்ளேயே, ஜப்பானின் பல பெருநகரங்கள் அமெரிக்க விமானப்படை சக்தியின் மூலம் கடுமையாக தாக்கப்பட்டிருந்தன. அமெரிக்க இராணுவம் ஜப்பானிய வான்பரப்பின் கட்டுப்பாட்டை கொண்டபிறகு, அவ்வாண்டின் முற்பகுதியில் டோக்கியோவின் மீது 87,000 மக்களை கொன்ற பேரழிவு தரும் தீக்குண்டுகளை வீசியது உள்பட, முறையாக பெருநகரப் பகுதிகளில் குண்டுவீசத் தொடங்கியது. குடிமக்கள் உற்பத்தித் தொழில் வசதிவாய்ப்புக்களை மேற்கொண்டிருந்ததுடன், அந்நகரம் முக்கிய இராணுவத் தலைமையகத்தையும் கொண்டிருந்ததால், இதுகாறும் ஹிரோஷிமா இலக்கு வைக்கப்பட்டிருக்கவில்லை என்ற உண்மை அங்கு வசித்துவந்த மக்களால் ஒரு முரண்பாடான செயலாகவே கருதப்பட்டது.

ஆயினும்கூட குண்டுவீச்சு, ஹிரோஷிமா மக்கள் தயாரற்ற நிலையில் இருந்தபோதுதான் நடத்தப்பட்டது. வானிலை ஆய்வு விமானம் ஒன்று அவ்வழியே அன்று காலை சென்றபோது அதிகாரிகள் சங்கொலிகளை எழுப்பி மக்களை எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தினாலும், அது சென்றபின் இனி அச்சமில்லை என்ற அறிவிப்புத்தான் கொடுக்கப்பட்டது. எனோலா கேயும் அத்துடன் தொடர்ந்து வந்திருந்த இரு விமானங்களும் முன்னாய்வு நடத்தும் விமானங்கள் என்றுதான் கருதப்பட்டதால், அவை நகரத்தின் மேலே பறந்தபோது, எச்சரிக்கை சங்குகள் முழங்கப்படவில்லை.

ஹிரோஷிமா நகரத்தின் மீது போடப்பட்ட யூரேனியம் குண்டுவெடிப்பின் சக்தி 13,000 டன்கள் TNT க்கு ஒப்பானவை ஆகும். குண்டுவிளைவினால் வெளிப்பட்ட அணுக் கதிரியக்கம் பல மில்லியன் சென்டிகிரேட் டிகிரிக்கள் வெப்பத்தை தோற்றுவித்தது. மையக் கருப்பகுதியில், அதாவது 600 மீட்டர்கள் கீழே இருந்த நிலப்பகுதியில் வெப்பம் 3,000த்தில் இருந்து 4,000 சென்டிகிரடாக, அதாவது இரும்பை உருக்குவதற்குத் தேவையான வெப்பத்தைப் போல் இரண்டு மடங்கு இருந்தது. மிக ஆழ்ந்த தன்மையில் வெளிப்பட்டிருந்த வெப்பமும் ஒளியும் இலக்குப்பகுதிக்கு ஒன்றரைக் கிலோமீட்டர் சுற்றுப் பகுதி முழுவதையும் கருகச் செய்துவிட்டது; மேலும் இதைத் தொடர்ந்து வெளிவந்த மகத்தான அதிர்ச்சி அலை இரண்டு கிலோமீட்டர் சுற்றளவில் இருந்த கட்டிடங்கள் பலவற்றையும் அழித்துவிட்டது.

ஹிரோஷிமா குண்டு Aioi Bridge என்ற இலக்கைக் குறி கொண்டிருந்தது; ஆனால் 250 மீட்டர் அளவில் அந்த இலக்கை அது எய்தத்தவறியது. அதற்குப் பதிலாக, டாக்டர் ஷிமா என்பவர் தலைமையில் இயங்கிக் கொண்டிருந்த மருத்துவமனைக்கு நேர் எதிரே அது வெடித்தது: "ஷிமா மருத்துவமனை மற்றும் அதில் இருந்த நோயாளிகள் அனைவரும் காற்றுருவாகக் கரைந்தனர்.... 1,500 அடி அரைவிட்ட வட்டத்திற்குள் இருந்தவர்களில் 88 சதவிகிதத்தினர் உடனடியாகவோ அல்லது அன்றைய பொழுதிற்குள்ளாகவோ மடிந்தனர். வட்டத்தில் எஞ்சியிருந்தவர்கள் இதற்குப் பின் சில வாரங்களிலோ, மாதங்களிலோ மாண்டு போயினர்."

மையக் கருவட்டத்திற்கு அருகில் இருந்தவர்கள் உடனடியாக எவ்வித தடயமும் இன்றி கருகிப்போயினர்; ஒரு சுவர் அல்லது தெரு அவர்களது அங்கத்தை பாதுகாத்திருந்தால் கூட மிகச் சிறிய கணமே அவர்கள் ஆரம்ப வெப்ப வெடிப்பில் இருந்து உயிர்பிழைத்தனர். வெடிப்பிற்கு அருகில் இருந்தவர்கள் "எந்த மனித உடற்கூறும் பதிவுசெய்ய முடியாத வேகத்தில் சூனியத்தில் கரைந்து போயினர்" என்று ஒரு நூலாசிரியர் எழுதியுள்ளார்.

வெடிப்பின் மையத்திற்கு சற்றே தள்ளியிருந்தவர்கள் உடனடியாக இறக்கவில்லை; ஆனால் மூன்றாந்தர தீப்புண்கள் அவர்கள் உடல்களெங்கும் கடுமையாக பற்றின; அதிலும் நேரடியாக வெப்பத்திற்கு வெளியான உடற்பகுதிகள் அந்நிலையை அடைந்தன. காயங்களால் அவர்கள் இறக்கும்முன்னர் ஆழ்ந்த வலியைக் கொடுத்த காலத்தாலும் அவர்கள் பாதிக்கப்பட்டனர். வெடிப்பை கண்ணுற்றவர்கள், தப்பியவர்கள் மிகக்கொடூரமான முறையில் இந்த பாதிப்பாளர்கள் மாய்ந்தனர் என்று ஒரேசீராக விவரித்தனர்.

வெடிப்பு நடந்தபொழுது நகரத்தின் வெளிப்பகுதியில் இருந்த ஒரு டாக்டர் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ ஓடோடி வந்தபோது தான் பார்த்தவற்றை எழுதி வைத்துள்ளார். நகர மையப் பகுதியை அடைந்தபோது, "ஒரு வினோதமான உருவம் தன்னுடைய தடுமாறிய கால்களுடன் மெதுவாக என்னருகே வந்தது. ஒரு மனித வடிவத்தைக் கொண்டிருந்தாலும், அது முற்றிலும் நிர்வாணமாக இருந்து, இரத்தம் தோய்ந்த சகதியால் மூடப்பட்டிருந்தது. உடல் முற்றிலும் ஊதிப்போயிருந்தது. அதனுடைய திறந்த மார்பு, இடுப்புப் பகுதிகளில் இருந்து கந்தல் துணிகள் தொங்கிக் கொண்டிருந்தன. கைகள் மார்பைக் கட்டிய வண்ணமும், உள்ளங்கைகள் கீழ்நோக்கியும் இருந்தன. கந்தல்துணியில் இருந்து நீர் சொட்டிக் கொண்டிருந்தது. உண்மையில் நான் கந்தல்கள் என்று நினைத்தது மனிதத் தோலின் துகள்களாகும், நீர் என்று நினைத்தது மனித இரத்தமாகும்... எனக்கு முன்பு இருந்த சாலையைப் பார்த்தேன். அரைநிர்வாணமாய், எரிக்கப்பட்டும், குருதி கொட்டிக்கொண்டும் கணக்கிலாடங்கா தப்பித்தவர்கள் என் பாதைக்கு முன் நின்றிருந்தனர். அவர்கள் மொத்தத் தொகுப்பாக இருந்தனர்; சிலர் முழங்கால்களால் ஊர்ந்த வண்ணமும், சிலர் இரண்டு கைகள், இரண்டு கால்கள் இவற்றைப் பயன்படுத்தி ஊர்ந்ததையும், சிலர் கஷ்டப்பட்டு நின்றிருந்த நிலையையும் அல்லது மற்றவர் தோள்களின்மீது சாய்ந்திருந்ததையும் பார்த்தேன்."

"கந்தல் போலத் தோல் தொங்கிக் கொண்டிருந்த நிலையில்" மக்கள் இருந்தனர் என்ற விவரிப்பு, பொதுவாக தப்பிப் பிழைத்த பலராலும் அவர்கள் கண்ட காட்சியை பற்றிக் கூறப்பட்டுள்ளது. பலரும் மக்கள் தெருக்களில் அலைந்து கொண்டிருப்பதையும், பெரும் வேதனையில் இருப்பதையும், வெடிப்பினால் செவிடாகி விட்டநிலையிலும், தீப்பிழப்பு தாக்குதலினால் குருடாகி விட்ட நிலையிலும், அவர்களுடைய கைகள் அவர்களுக்கு முன் நீட்டப்பட்டிருந்த நிலையில் "முன்னங் கைகள் தொங்கிக் கொண்டிருந்தது ...வெடிப்புப் பாளங்கள் உடலில் ஒன்றோடொன்று உராய்வதால் ஏற்பட்ட பெரும் வலியில் துடித்த வண்ணமும்" இருந்தனர், சிலர் "தூக்கத்தில் நடப்பவர்கள் போல் தள்ளாடிக் கொண்டு இருந்தனர்."

ஆயிரக்கணக்கான மக்கள் இவ்வகையில் மரித்துப் போயிருக்கக் கூடும். Tabuchi என்ற பெயர்கொண்ட டாக்டர் ஒருவர், "இரவு முழுவதும் நூற்றுக்கணக்கான காயமுற்ற மக்கள் எங்கள் வீடு வழியாகச் சென்று கொண்டிருந்தனர்; ஆனால் இன்று காலை [ஆகஸ்ட் 7] எல்லாம் நின்றுவிட்டது. அவர்கள் அனைரும் தெருவின் இருபுறமும் படுத்துக் கொண்டிருந்தது; தொகுப்பின் அடர்த்தி அவர்கள் மீது கால்வைக்காமல் நகர முடியாது என்று இருந்தது.". தான் பார்த்ததை ஒரு தப்பிப் பிழைத்தவர், "அதில் தப்பிப் பிழைத்த நூற்றுக் கணக்கானவர்கள் எவ்வித உணர்வும் இன்றி சென்று கொண்டிருக்கின்றனர். தங்கள் பெரும் துயரப்பளுவில் வேதனையுற்று சிலர் பாதி இறந்து விட்டார்கள்.... அவர்கள் நடைபிணம் என்பதைத் தவிர வேறு ஒன்றும் இல்லை."என விவரிக்கிறார்.

உடனடியாக மரணம் அடையாதவர்கள் ஆற்றங்கரைகளுக்கோ, நீர்நிலைகளுக்கோ சென்று நீரில் அமிழ்ந்து தீப்புண்கள் வேதனையில் இருந்து விடுவித்துக் கொள்ள முற்பட்டனர். "Choju-Em ஆற்றின் நீண்ட கரையில் எவ்வாறு ஏராளமான எரிந்திருந்த மனிதர்கள் இருந்தனர் என்பதை நான் பார்த்தேன். கண்ணுக்கெட்டிய தூரம் வரை அவர்கள்தான் அங்கு நிறைந்திருந்தனர். மிக அதிகமான மக்களின் உடல்கள், நீரில் மூழ்கியவகையில் அல்லது கரையோரத்தில் இறந்த நிலையில், தண்ணீரில் நனைந்த வண்ணம் அலைகளுக்கேற்ப அசைந்து கிடந்ததை நான் பார்த்தேன்." என்று தப்பிப் பிழைத்தவர் ஒருவர் விவரித்துள்ளார். மற்றொரு டாக்டரான Hanoka, "நெருப்புக் காப்பகங்கள் முழுவதுமாக இறந்த மக்களால் நிரம்பியிருந்தன; அவர்கள் உயிரோடு வெந்ததைப் போன்று இருந்தது" எனத் தான் பார்த்ததாக விவரித்துள்ளார்.

வெடிப்பின் மையத்தைச் சுற்றி நகரத்தில் பல கிலோமீட்டர் தூரம் வரை அனைத்தும் முற்றிலும் அழிந்துவிட்டன. வெடிப்பினால் தகர்ந்து விழாத கட்டிடங்கள், அதைத் தொடர்ந்து அண்மையில் இருந்த மரவீடுகளில் சூழ்ந்திருந்த நெருப்பு பரவத் தொடங்கவே, அவற்றில் எரியுண்டன. இந்தத் தீயினால் அவர்களுடைய வீடுகள் சரிந்தபொழுது அதில் சிக்கிக் கொண்ட பலரும் அவற்றின் கீழே அகப்பட்டு மாண்டுபோயினர்.

Dr.Hachiya எழுதுகிறார்: "ஹிரோஷிமா இனி ஒரு நகரமாக இல்லை; ஒரு தீயில் கருகிய புல் தரைத் தளமாகத்தான் அது காட்சியளித்தது. கிழக்கிலும், மேற்கிலும் அனைத்தும் தரைமட்டமாயின. தொலைவில் இருந்த மலைகள் நான் நினைத்தும் பார்க்கமுடியாத வகையில் அருகே இருந்ததைப் போல் தோன்றியது. உஷிடா மலைகளும் நிகிட்சு காடுகளும் புகைப்படலத்திற்கப்பால், ஒரு முகத்தின் மூக்கு, கைகள் போல் தோன்றின. வீடுகள் அனைத்தும் போனபின்னர் ஹிரோஷிமாதான் எவ்வளவு சிறியதாக இருந்தது."

ஹிரோஷிமா, நாகசாகி இரண்டு இடங்களில் நிகழ்ந்த குண்டுவெடிப்புக்களின் ஒரு வாரத்திற்குள் கடுமையான காயமடைந்திருந்தவர்களில் பெரும்பாலானவர்கள் இறந்து விட்டனர் அல்லது பிழைக்க முயன்றனர். இந்தக் கட்டத்தில்தான் ஆயிரக்கணக்கான நோயாளிகள் "40 டிகிரி செல்சியசுக்கும் மேலான காய்ச்சலின் பாதிப்பால் தாக்குண்டனர்.... இதன் பின்னர் அவர்கள் மூக்கில் இருந்தும் தொண்டையில் இருந்தும் இரத்தக் கசிவு ஏற்பட்டது; பின்பு அவர்கள் ஏராளமான இரத்தத்தை உமிழ்ந்தனர்.... இக்காலக் கட்டத்தில்தான் ஒரு மர்மமான முறையில் முடிஉதிர்தல் அல்லது முடி இழப்பு தப்பிப் பிழைத்தவர்களிடையே ஏற்பட்டது. வலியினால் துடிக்கும்போது தங்கள் கைகளினால் தலையைப் பிடித்துக் கொள்ள நோயாளிகள் முற்பட்டபோது, அவர்களுடைய முடியானது விரல்கள் பட்டவுடனேயே உதிரத் தலைப்பட்டன."

இது அணுக் கதிரியக்கத்தினால் விளைவிக்கப்பட்ட நோயாகும்; அக்கதிரியக்கம் ஏராளமான ரீணீனீனீணீ கதிர்களை வெளியிட்டது. அந்த நேரத்தில், நகரத்தில் இருந்த டாக்டர்கள் நகரத்தின் மீது எறியப்பட்டிருந்த குண்டின் வினோதத் தன்மை பற்றி இன்னும் அறிந்திருக்கவில்லை; அவர்கள் மக்கள் ஒருவேளை கடுமையான வயிற்றுப் போக்கினால் அவதியுறுகின்றனரோ என நினைத்தனர்; அல்லது குண்டின் மூலம் வெளிப்பட்ட இரசாயனப்பொருளின் பாதிப்பு ஏதேனும் இருக்கலாம் என்று நினைத்தனர்.

ஒரு பிரிட்டிஷ் மருத்துவ அறிக்கை விளக்கியதாவது, இந்த வெடிப்பில் இருந்து வெளியான கதிரியக்கம் இரத்தத்தில் உள்ள உயிரணுக்களை அழிக்காமல் "இரத்தத்தில் உள்ள பல்வேறு வகையான செல்கள் உருவாகக் காரணமாக உள்ள எலும்புப் பகுதிக்குள் இருக்கும் பழமையான அணுக்களை அழித்தன. இதன் விளைவாக தீவிரமான விளைவுகள் ஏற்பட்டன; அதவாது இரத்தத்தில் முற்றிலும் வடிவமைப்பு கொண்டுள்ள அணுக்கள் தாமே மடியும்போது, எலும்பின் மஜ்ஜையில் இருந்து வெளிப்படும் புது அணுக்கள் தோன்றுவது நிகழவில்லை... சிகப்பு அணுக்கள் தோன்றுவது நின்றவுடன், நோயாளி பெருகி வந்த இரத்தச்சோகையால் அவதியுற்றார். சிவப்பணு உருவாக்கம் நின்றவுடன், தோல், கண்ணின் விழிபடலம், சில சமயம் குடல்கள், சிறுநீரகங்கள் ஆகியவற்றிலும் நலிந்த இரத்தமானது சிறிய, பெரிய கசிவுகளாக வெளிப்பட்டது. இரத்தத்தில் வெள்ளை அணுக்களின் வீழ்ச்சி கடுமையான நோய்களின் எதிர்ப்பைக் குறைத்தது; இதன் விளைவாக நோயாளி எளிதில் ஏதேனும் தொத்துவியாதிக்கு இரையாக நேர்ந்தது; இது வாயில் தோன்றி அல்லது உதடுகள், நாக்கு, சில சமயம் தொண்டை என்பவற்றில் எல்லாம் பெரும் புண்களாக வடிவெடுத்தது. ...சில சமயம் குண்டுவெடிப்பிற்கு ஒரு வாரம் கழித்து மரணங்கள் துவங்கி மூன்று வாரகாலத்தில் உச்சக்கட்ட எண்ணிக்கையை எய்தின. ஆறு அல்லது எட்டு வாரங்களுக்கு பின்னர் பாதிப்பு இல்லை.

கதிரியக்க நோய், வெடிப்பிற்கு அருகில் இருந்தவர்களை கடுமையாகத் தாக்கியது. ஆனால் தப்பிப் பிழைத்தவர்கள் பலரிடமும் உளரீதியாக இது பெரும் வடுக்களை ஏற்படுத்தியது; அவர்கள் இன்று நலமாக இருந்தாலும் நாளையே இறக்க நேரிடும் என்ற பெரும் கவலையில் இடையறா வேதனையை அடைந்தனர்.

மேலே கொடுக்கப்பட்டுள்ள விவரிப்பு ஹிரோஷிமா தாக்குதலில் தப்பித்தவர்களின் சாட்சியத்தில் இருந்து எடுக்கப்பட்டது ஆகும். நாகசாகியிலும் விளைவுகள் இதையத்துத்தான் இருந்தன. ஹிரோஷிமா குண்டுவீச்சின் முழு விளைவும் அறியப்படுவதற்குள், நாகசாகி குண்டுவீச்சு நடைபெற்றது. ஆகஸ்ட் 11ல் போடப்படுவதாக இருந்தது ஆகஸ்ட் 9 அன்று முன்கூட்டியே போடப்படவேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது; ஏனெனில் அடுத்த நாட்களில் வானிலை சாதமாக இருக்காது என்று கருதப்பட்டது.

நீண்டகாலமாக நாகசாகி ஒரு முக்கிய துறைமுகமாக இருந்ததோடு, ஜப்பானிய தீவான கியூஷ¨வில் இருந்த அழகிய நகரங்களில் ஒன்றாகவும் இருந்தது. அங்கு முக்கியமான தொழில், கப்பல் கட்டுதல் ஆகும்; அதனால்தான் இரண்டாம் குண்டுவீச்சின் இலக்காக அது தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தது. கிழக்கு ஆசியாவிலேயே அப்பொழுது மிகப் பெரிய தேவலாயத்தை கொண்டிருந்த உரகாமியின் புறநகரில் குண்டுவீச்சு நடைபெற்றது.

இரண்டாம் உலகப்போரின்போது பல கொடுமைகள் இழைக்கப்பட்டிருந்த அதேவேளை,. ஹிரோஷிமா, நாகசாகி மீதான குண்டுவீச்சுக்கள் ஐயத்திற்கிடமின்றி ஆணவம்மிக்க அழிவு நடவடிக்கையின் மிகப் பெரும் ஒற்றை நடவடிக்கையின் இரு உதாரணங்கள் ஆகும், அதில் பெரும்பாலும் நூறாயிரக்கணக்கான மக்கள், பிரதானமாக சாதாரண குடிமக்கள் துடைத்து அழிக்கப்பட்டுவிட்டனர். அவை உலகம் முழுவதும் இருக்கும் தொழிலாள வர்க்க மக்களுடைய நினைவில் இருந்து அழிந்துவிட அனுமதிக்கக்கூடாத நிகழ்வுகள் ஆகும் --அமெரிக்க இராணுவவாதத்தின் இரக்கமற்ற தன்மைக்கும் அழிக்கும் திறனுக்கும் ஒரு விருப்புறுதி ஆவணமாகும்.

"அமெரிக்க உயிர்களை காப்பாற்றுதற்கு" ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மக்கள்மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட பேரழிவு தேவைப்பட்டது என்று அமெரிக்க அரசாங்கத்தால் நீண்டகாலமாகவே நியாப்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. சான்றுகள் முற்றிலும் எதிரிடையாக கடந்த அறுபது ஆண்டுகளில் வெளிவந்துள்ளபோதிலும்கூட, இத்தகைய நியாயம் கற்பித்தல் இன்னும் அமெரிக்க அரசாங்க அதிகாரபூர்வமாய் அனுமதிக்கும் வரலாற்று உண்மையாக இருப்பதை முடிவுகட்டிவிடவில்லை.

உதாரணம் ஒன்றைக் கூறவேண்டும் என்றால், வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல், ஆகஸ்ட் 5, 2005 பதிப்பில் "ட்ரூமன் நிர்வாகம், ஜப்பானிய மண்ணில் படையெடுத்தால், 200,000-தில் இருந்து 1 மில்லியன் வரை அமெரிக்க படைவீரர்கள் உயிரிழக்க நேரிடலாம்" என்று எதிர்பார்த்ததால், அதைத் தவிர்ப்பதற்கு இந்த அணுகுண்டுவீச்சுக்கள் நிகழ்ந்தன என்று எழுதியுள்ளது. மேலும், ''ஜப்பானிய மண்ணில் படையெடுப்பு நிகழ்த்தியிருந்தால் மில்லியன் கணக்கான ஜப்பானியர்களும் இறந்திருக்கக் கூடும்'' என்றும் கூறியுள்ளது. இக்கணிப்பின்படி, பல நூறாயிரக்கணக்கான ஜப்பானிய குடிமக்கள், முக்கியமாக சாதாரண மக்கள், பல உயிர்களை முடிந்த அளவு காப்பாற்ற வேண்டும் என்ற நலன்களால் அணுகுண்டிற்கு உயிரை தியாகம் செய்யவும், அடக்கமுடியாத பெருந்துயரத்திற்கும் ஆளானார்கள் என்று கூறப்படுகிறது.

இந்த வாதத்தின் சர்ச்சைக்கான ஆதாரத்தை ஒருவர் சரி என்று ஏற்றுக்கொண்டாலும் கூட, சட்டபூர்வமாகவும் ஒழுக்கநெறி பார்வையிலும் இந்த நகரமையங்கள் அழிவிற்கு காரணமான அடிப்படை குற்றவியல் தன்மை ஒன்றையும் மட்டுப்படுத்திவிடவில்லை. ஆயினும், முன்பு கூறப்பட்டவை முற்றிலும் கற்பனையானவை. மதிப்பிடப்பட்ட இறப்புக்களின் எண்ணிக்கை மிகைப்படுத்தப்பட்டிருக்கின்றன என்பது மட்டுமில்லாமல் [1], அமெரிக்க அரசாங்கம் குண்டுவீச்சு நடத்துவதற்கு எடுத்த முடிவிற்கான காரணங்களுக்கு ஜப்பான் மீது அமெரிக்கப் படையெடுப்பை தவிர்ப்பதுடன் எந்தவிதத் தொடர்பும் கிடையாது.

எந்த ஒரு பெரிய வரலாற்றுப் பிரச்சினையில் இருப்பதைப் போலவே, குண்டுவீச்சு நடத்துதல் என்ற முடிவை எடுக்கத் தூண்டியதற்கும் பல பல்வேறுபட்ட காரணிகள் இருந்தன; அவை அனைத்தையும் விரிவாகப் பரிசீலிக்க இயலாது. இங்கு நாம் சில அடிப்படை பிரச்சினைகள் மற்றும் ஆவணங்களை ஆராய்வதற்கு நம்மை வரையறை செய்துகொள்வோம்.

சில இராணுவ தலைமையிடங்கள் அல்லது இராணுவ தொடர்புடைய தொழிற்துறைகள் இருந்திருந்தபோதிலும் பொதுவாக சிவிலியன் தன்மை கொண்டிருந்த பெரும் பாதுகாப்பற்ற நகரங்களில் அணுகுண்டுவீசுதல் என்ற செயற்பாட்டில் பசிபிக் போரில் அமெரிக்கா ஈடுபட்டிருந்தபோது ஒரு தொடர்நிகழ்வாகத்தான் இருந்தது என்பது முதலில் கவனிக்கப்படுதல் இன்றியமையாததாகும்.

ஜப்பானிய ஆகாயவழியை தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தவுடன், அமெரிக்க இராணுவம் பயங்கரவாதம் என்றுதான் விவரிக்கக் கூடிய வழிவகைகளுக்கு திரும்பியது----அதாவது பெரும் பயத்தையும், அச்சத்தையும் பரப்புவதற்காக, சாதாரண மக்களின் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்துவதற்கு திரும்பியது. ஹிரோஷிமா, நாகசாகி தாக்குதலுக்கு முன்பே இத்தகைய பேரழிவுத் தாக்குதல்களுக்கு உதாரணமாக இருந்தது மார்ச் 9, 1945 அன்று டோக்கியோவில் தீக்குண்டுகள் வீசப்பட்டதாகும்; இவற்றில் 87,000 மக்கள் கொல்லப்பட்டனர் [2]. இது நடந்து ஒரு மாதத்திற்குள்ளாகவே, பெப்ரவரி 13-14, 1945 அன்று ஜேர்மன் நகரமான டிரஸ்டெனில் மிக இழிபுகழ்பெற்ற தீக்குண்டுத்தாக்குதல் நடாத்தப்பட்டது.

மனிதாபிமானம் என்றெல்லாம் போலியாக பேசிவந்தாலும், அமெரிக்க இராணுவம் இந்த நடவடிக்கைகள் மூலம் போர்நடவடிக்கைகளில் ஜேர்மனி அல்லது ஜப்பான் போலவே தானும் மிருகத்தனமாக நடந்து கொள்ள இயலும் என்பதைத்தான் நிரூபணம் செய்தது. ஜூன் 6ம் தேதி ஜனாதிபதி ஹாரி ட்ரூமனுக்கும் போர் மந்திரி ஹென்ரி ஸ்டிம்சனுக்கும் இடையிலான விவாதத்தின்போது ஒரு சுவையான கருத்துப்பரிமாறல் இருந்தது; இது எத்தகைய முறையில் அமெரிக்க அரசாங்கம் ஜப்பானிய குடிமக்களை பரந்தமுறையில் துடைத்தழித்தல் பிரச்சினையை எண்ணினார்கள் என்பதை வெளிப்படுத்துகின்றது.

ஸ்டிம்சன் ஒரு நினைவுகுறிப்பில் அமெரிக்க விமானப் படை ஜப்பானிய நகரங்களில் சில பகுதிகளில் அணுகுண்டுவீச்சு செயல்படுத்துவது பற்றி அவர் எழுப்பிய செயல்முறை கவலைகளை பதிவு செய்கிறார்: "போரின் இந்தக் கூறுபாடு பற்றி இரண்டு காரணங்களுக்காக நான் கவலைப்பட்டதை பற்றி அவரிடம் [ட்ரூமனிடம்] தெரிவித்தேன்: முதலில் அட்டூழியங்கள் செய்வதில் ஹிட்லரையும் மிஞ்சக்கூடிய வகையில் அமெரிக்கா உள்ளது என்ற பெயர் ஏற்பட்டுவிடுவதை நான் விரும்பவில்லை; இரண்டாவதாக அமெரிக்க விமானப் படை ஜப்பானிய நகரங்களை முற்றிலுமாக தகர்த்துவிட்டால், எமது புதிய ஆயுதத்தின் [அணுக்குண்டு] வலிமையை காட்ட நல்ல பின்புலம் கிடைக்காமற் போய்விடலாம் என்றும் நான் கருதினேன். அவர் சிரித்துவிட்டு புரிகிறது என்று கூறினார். [3] ஜப்பானிய நகரங்களை வெறிபிடித்தது போல் அழித்துவிடுதல் என்பது அணுக்குண்டு வீச்சுத் திட்டத்தை தடைசெய்துவிடக்கூடும்; ஏனெனில் "சரியான பின்புலம்" பின் இருக்காது; அதாவது தக்க மக்கட்தொகுப்பு நிறைந்து, நகரத்தன்மை பொருந்திய தொடப்படாத இடம் இருக்காது என்று ஸ்டிம்சன் கவலைப்பட்டார். இக்காலக்கட்டத்தில் அமெரிக்கா ஜப்பானை இராணுவ அளவில் முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டிருந்தது, அதன் நகரங்களை விரும்பினால் தரைமட்டமாக்கிவிடும் என்ற நிலை இருந்தது என்பதையும் இந்த உரையாடல் விளக்கிக்காட்டுகிறது.

ஒரு பயங்கரவாத ஆயுதம் போல் குண்டை பயன்படுத்துதல்---அதாவது, ஜப்பானிய மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் பயன்படுத்துதல் என்பது மே 31, 1945 ல் நடைபெற்ற இடைக்கால குழுக்கூட்டம் ஒன்றில் அடிக்கோடிட்டுக் காட்டப்பட்டது. மான்ஹட்டன் திட்டம் என்பதில் நேரடியாக பங்கு கொண்டிருந்த ரொபேர்ட் ஓப்பன்ஹீமர் மற்றும் சில வீஞ்ஞானிகள், ட்ரூமன் நிர்வாகத்தில் உயரலுவலர்களான வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜேம்ஸ் பைர்ன்ஸ் மற்றும் போர் செயலர் ஸ்டிம்சன் போன்றோர் இந்த குழுவில் இருந்தவர்கள் ஆவர். அந்தக்கூட்ட குறிப்பின்படி, "பலதரப்பட்ட இலக்குகள், அவற்றை தாக்குவதில் ஏற்படும் விளைவுகள் பற்றிய விவாதங்களுக்கு பின்னர் ஒரு பொது உடன்பாடு காணப்பட்டது; அதைப்பற்றி போர் மந்திரி ஸ்டிம்சன் முடிவாகக் கூறுகையில், ஜப்பானியர்களுக்கு எந்த எச்சரிக்கையும் கொடுக்க வேண்டியதில்லை; சிவிலியப்குதியை தாக்க வேண்டிய தேவையில்லை; ஆனால் முடிந்த வரை அதிகமாகக் குடிமக்களிடையே ஆழ்ந்த பீதியுணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். டாக்டர் (ஜேம்ஸ்) கோனன்ட் கருத்துரைப்படி, செயலர் மிக விரும்பத்தகுந்த முறையில் இருக்கும் இலக்கு ஏராளமான தொழிலாளர்கள் வேலைசெய்யும் முக்கியமாக போர்த்தொழிலில் ஈடுபட்டிருக்கும் தொழிற்சாலை இடமும், தொழிலாளர்கள் இல்லங்கள் சூழப்பட்டிருக்கும் இடமாகவும் அது இருக்கவேண்டும் என்பதில் உடன்பட்டார்." [4] (வலியுறுத்தல் கட்டுரையாசிரியருடையது)

சாதாரண மக்கள் வாழும் பகுதியில் முழுக்கவனத்தையும் செலுத்தக் கூடாது என்று குறிப்பு இருப்பினும், இடைக்காலக் குழுவானது, குழுவில் பணிபுரிந்து வந்திருந்த சில விஞ்ஞானிகள் பரிந்துரைத்த கருத்தான, அணுகுண்டு முற்றிலும் இராணுவம் நிறைந்திருக்கும் பகுதி அல்லது மக்கள் இல்லாத பகுதியில் போடப்படவேண்டும் என்பதை மிகவெளிப்படையான முறையில் நிராகரித்தது.

மான்ஹட்டன் திட்டத்தில் பணிபுரிந்திருந்த அல்லது அதற்கு ஆதரவு கொடுத்திருந்த பல விஞ்ஞானிகளும் அதில் ஈடுபாட்டை தீவிரமாகக் கொண்டதற்கு காரணம் அவர்கள் ஹிட்லர் மீதும் நாஜி ஆட்சியின் மீதும் கொண்டிருந்த ஆழ்ந்த வெறுப்பே ஆகும். திட்டம் ஆரம்பத்தில் நியாயப்படுத்தப்பட்டதற்கு காரணமே, ஹிட்லர் இத்தகைய குண்டை முதலில் பெற்று விட்டால் அதன் விளைவுகள் முற்றிலும் பேரழிவை தரக்கூடியதாக இருக்கும் என்பதுதான். ஆனால் அந்த நேரத்தில் அமெரிக்கா இந்தக் குறிப்பிட்ட தொழில் நுட்பத்தில் முழுமை அடைந்த அளவில், ஜேர்மனி தோற்கடிக்கப்பட்டுவிட்டது. ஆயினும்கூட, ட்ரூமன் நிர்வாகம் அணுகுண்டை பயன்படுத்துவது என்ற முடிவெடுத்ததோடு மட்டும் இல்லாமல், பெரும் எக்காளக்களிப்புடன் அப்படிச் செய்தது. தான் ஒன்றும் இந்த முடிவிற்காக ஓர் இரவுத் தூக்கத்தை கூட வீணடிக்கவில்லை என்றுதான் ட்ரூமன் அனைவரும் அறிய பெருமிதத்துடன் கூறிக் கொண்டார். ஒரு விவரப்படி, அட்லாண்டிக்கை கடந்து கொண்டிருக்கையில் ஹிரோஷிமாவை பற்றி கேள்விப்பட்டபோது, அவர் அறிவித்ததாவது: "வரலாற்றில் இது ஒரு மிகப் பெரிய விஷயம்" என்று அறிவித்தார், பின்னர் கப்பலில் பல இடங்களுக்கும் சென்று இச் செய்தியைப் பரப்பினார்; தான் இதுகாறும் இத்தகைய மகிழ்ச்சிகரமான அறிவிப்பை அளித்ததில்லை என்றும் வலியுறுத்தினார். 'நாம் ஆட்டத்தில் வெற்றி பெற்று விட்டோம்'' என்று அவர் கரவொலி கொடுத்துக் கொண்டிருக்கும் கப்பல் குழுவினரிடம் கூறினார்."

இந்த நிகழ்வுப்போக்கை பற்றி கருத்துக் கூறுகையில், வரலாற்று ஆசிரியர் காப்ரியல் ஜாக்சன் குறிப்பிட்டார்: "ஆகஸ்ட் 1945-ல் குறிப்பிட்ட சூழ்நிலையில், அணுக்குண்டு பயன்படுத்தப்பட்டது உளவியியல் ரீதியாக சராசரி இயல்பு உடையவரும், ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைமை நிர்வாகி, நாஜி ஜனாதிபதி பயன்படுத்தியது போலவே ஆயுதங்களை பயன்படுத்துகிறார் என்பதைக் காண்பார்கள். இவ்விதத்தில் பலவிதமான அரசாங்கமுறைகளில் உள்ள ஒழுக்கநெறி வேறுபாடுகளை பற்றி அக்கறை உள்ளவர்களுக்கு, பாசிசத்திற்கும் ஜனநாயகத்திற்கும் இடையே உள்ள வேறுபாட்டை அமெரிக்கா தெளிவற்றதாக்கியது."

அணுக்குண்டும் அமெரிக்க மேலாதிக்கத்திற்கான உந்துதலும்

இரண்டாம் உலகப்போருக்கு முன்பு, எந்த நாகரிகமான சமுதாயத்திலும் மிகவும் ஆபத்தான சூழ்நிலையில்தான் அணுக்குண்டு போன்ற ஆயுதம் பயன்படுத்தப்படலாம் என்ற கருத்து இருந்திருக்கும். ஒரு சாதாரண பொதுமக்களுக்கு எதிராக இத்தகைய ஆயுதம் பயன்படுத்தப்படலாம் என்ற எண்ணமே ஒரு சமூகம் இழிந்த நிலையிலும் ஒழுக்கநெறியில் சரிந்த நிலையிலும் இல்லாவிடின் தோன்றியிருக்காது. ஆயினும்கூட அமெரிக்க நாடு ஒன்றுதான் உலகில் அணுக்குண்டை வீசிய ஒரே நாடு என்ற ஒற்றைத் தனிச்சிறப்பைக் கொண்டிருக்கிறது. மேலும், இது ஒரு இராணுவத் தேவையை ஒட்டி பயன்படுத்தப்படவில்லை; அரசியல் மற்றும் மூலோபாய காரணங்களுக்காகத்தான் போடப்பட்டது; எல்லாவற்றிற்கும் மேலாக சோவியத் ஒன்றியத்துடனான மோதலில் ஒரு கருவியாக பயன்படுத்தலாம் என்பதற்காக போடப்பட்டது. இந்த பரந்த நலன்களின் தன்மையைப்பற்றி அறிவதற்கு ஆகஸ்ட் 6 மற்றும் 9, 1945 நிகழ்வுகளை அவற்றின் வரலாற்று உள்ளடக்கத்தில் ஆராயவேண்டும்.

1939ல் ஆரம்பித்த போர், ஜேர்மனியின் இறுதிச் சரணாகதி மே மாதம் வரை வராவிட்டாலும்கூட, 1945ன் தொடக்கத்தில் ஒரு முடிவிற்கு வந்து கொண்டிருந்தது. இப்போரின் திருப்புமுனையாக பெப்ரவரி 1943ல் ஸ்டாலின்கிராட் போரில் ஜேர்மனியர்கள் தோற்றமை இருந்தது; இதைத் தொடர்ந்து 1944 வசந்த காலத்தில் அமெரிக்க பிரிட்டிஷ் படைகள் ஐரோப்பாவின்மீது படையெடுத்தன.

சோவியத் ஒன்றியம் அமெரிக்காவுடனும் பிரிட்டனும் உடன்படிக்கை கொண்டிருந்தபோதிலும்கூட, நேச நாடுகள் முகாமுக்குள்ளே மிகப்பெரிய பிளவுகள் இருந்தன. சோவியத் ஒன்றியத்தில் ஸ்ராலினிச சீரழிவு இருந்தபோதிலும்கூட, அதிகாரத்துவம் இன்னும் 1947 அக்போடபர் புரட்சியால் நிறுவப்பட்டிருந்த சொத்துரிமை உறவுகளின் அடிப்படையில்தான் இருந்தது. ஏகாதிபத்திய வல்லரசுகளோடு இணங்கிப்போக ஸ்ராலின் சிறப்பாக முயற்சித்தாலும், பிரிட்டனோ, அமெரிக்க ஆளும் செல்வந்த தட்டுகளோ அவற்றில் இருந்த சொத்து உறவுகளை ஏற்கத் தயாராக இல்லை.

அதே நேரத்தில், அமெரிக்காவிற்கும் பிரிட்டனுக்கும், ஜேர்மனி, ஜப்பானுக்கு எதிரான போரில் சோவியத் ஒன்றியத்தின் உதவி தேவைப்பட்டது. ஜேர்மனியை தோற்கடிப்பதில் செம்படை கொண்டிருந்த முக்கிய பங்கு, மற்ற வல்லரசுகளிடம் இருந்து, குறிப்பாக கிழக்கு ஐரோப்பாவில் இருந்து, அதற்கு சலுகைகளை கட்டாயமாக கொடுக்க வைத்தது. பெப்ரவரி 1945ல் நடைபெற்ற யால்டா மாநாட்டில் "மூன்று பெரிசுகள்", ஜேர்மனியின் மீதான கூட்டுக் கட்டுப்பாடு என்பது உட்பட, ஐரோப்பாவை தங்களிடையே பங்கு போட்டுக் கொள்ளவேண்டும் என்ற முக்கிய அம்சத்தில் உடன்பாட்டை கொண்டன. மேலும், அமெரிக்க ஜனாதிபதியான பிராங்க்ளின் டிலனோ ரூஸ்வெல்ட்டின் நிர்வாகம், போரை விரைவில் முடிவிற்குக் கொண்டு வர வேண்டும் என்றால், ஜப்பானுக்கு எதிரான போரில் சோவியத் ஒன்றியம் பங்கு பெறுதல் முக்கியம் என்று கருதினார். 1941ல் இருந்தே சோவியத் ஒன்றியமும் ஜப்பானும் "புதிரான நடுநிலையில்" இருந்தன; அந்த போரின் நேரத்தில் சோவியத் ஒன்றியம், ஜப்பானின் நேச நாடான ஜேர்மனியுடன் போரில் ஈடுபட்டிருந்தபோதும், ஜப்பான் சோவியத் ஒன்றியத்தின் நேச நாடான அமெரிக்காவுடன் போரில் ஈடுபட்டிருந்தபோதிலும் கூட, இரு நாடுகளுமே 1941ல் ஒரு நடுநிலை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு அவை ஒன்றையன்று எதிர்த்துப் போரிடாது என ஒப்புக் கொண்டிருந்தன.

ஜேர்மனி சரணடைந்து "இரண்டு அல்லது மூன்று மாதங்களில்" சோவியத் ஒன்றியம் ஜப்பானுக்கு எதிரான போரில் பங்கு பெறும் என்று யால்டாவில் ஒப்பந்தம் ஆயிற்று; இதற்கு ஈடு கொடுக்கும் வகையில் ரூஸ்வெல்ட்டும் சேர்ச்சிலும் சோவியத் நலன்களுக்கு முக்கியமானதாக தீர்மானிக்கப்பட்ட ஜப்பானுக்கு அருகில் உள்ள பல தீவுகள் துறைமுகங்கள் மற்றும் மங்கோலியாவின் பெருபகுதி சோவியத் கட்டுப்பாட்டில் கொண்டுவருவது உட்பட பல நிலப்பகுதி, வர்த்தக சலுகைகளை சோவியத்திற்கு கொடுப்பதை ஏற்றுக் கொண்டனர்.

ரூஸ்வெல்ட் ஏப்ரல் 12 அன்று இறந்துவிடவே, 1945 வசந்தகாலத்தில், ட்ரூமன் நிர்வாகமானது அணுகுண்டை வைத்திருப்பதை சமநிலையை மாற்றுவதற்கும் சக்திகளின் சமநிலைத்தன்மையை அமெரிக்காவின்பால் இடமாற்றுவதற்கும் ஒரு வழியாகப் பார்த்தது. தன்னுடைய நாட்குறிப்பில் 1945 மே 14 அன்று, போர் மந்திரி ஸ்டிம்ஸன் ஜனாதிபதியின் தலைமை அலுவலரிடம் நிகழ்த்திய உரையாடல் பற்றிக் குறித்து வைத்துள்ளார்; இதில் ஸ்டிம்சன் அணுக்குண்டு இருப்பு உறுதியாவதற்கு முன்னர் சோவியத் ஒன்றியத்துடன் எவ்விதமான மோதலும் கூடாது என்ற எச்சரிக்கையை விடுத்திருந்தது குறிப்பிடப்பட்டுள்ளது. தான் மார்ஷலிடம் தெரிவித்தது என்ன என்பது பற்றி ஸ்டிம்சன் எழுதியதாவது: "வார்த்தைகளுக்காக நம்முடைய செயல்கள் பேசவேண்டுமே ஒழிய, அதுவரை ரஷ்யாவை எப்படி, எவ்விதத்தில் நடத்துவது என்பது பற்றி வாயை மூடிக்கொண்டிருக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய சொந்தக் கருத்து.... நாம் முந்தி இருப்பதில் மீண்டும் வலிமையைப்பெற்றுக் கொள்ளவேண்டும்; அதை முரட்டுத்தனமாகவும் யதார்த்தமான வழியிலும் செய்ய வேண்டும். இன்னும் சொல்லப்போனால் அதை அவர்கள் நம்மிடம் இருந்து எடுத்துக்கொண்டு விட்டார்கள் ஏனெனில் நாம் இதுகாறும் அதிகம் பேசிவிட்டோம், அவர்களுக்கு அதிக சலுகைகளும் கொடுத்துவிட்டோம். அனைத்து சீட்டுக்களையும் வைத்திருக்கும் இடம் இதுதான் என்று நான் அவருக்குக் கூறினேன். சீட்டாட்டத்தில் முழு வலிமையும் வந்திருக்கும்போது எப்படி நடந்து கொள்ள வேண்டுமோ அப்படி நடந்து கொள்ளவேண்டுமே ஒழிய முட்டாள்தனமாக நடந்து கொண்டுவிடக் கூடாது. நம்முடைய உதவியில்லாமல் அவர்கள் தொழில் துறையில் வளர்ச்சி அடைய முடியாது; நம்மிடத்தில் வரவிருக்கும் ஆயுதமோ நமக்கு ஒரு பிரத்தியேகமான நன்மையை அளிக்கவுள்ளது."

இதற்கு அடுத்த நாள், ட்ரூமன், ஸ்ராலின் மற்றும் சேர்ச்சில் ஆகியோர் பொஸ்ட்டாமில் கூடி பேசுதல் முதல் அணுகுண்டுச் சோதனைக்கு முன்னரே வரும் என்ற கவலையை ஸ்டிம்சன் கொண்டிருந்தார். "ரஷ்யா எவ்வாறு மஞ்சூரியா மற்றும் போர்ட் ஆர்தர், வட சீனாவில் பல பகுதிகள் ஆகியவற்றில் பங்கு வகிக்க வேண்டும், சீனா நம்முடன் கொண்டுள்ள உறவு பற்றியது அதற்கு உணர்த்தப்பட வேண்டும் இவையெல்லாம் முக்கியமானவை ஆகும். இத்தகைய கடும்சிக்கல் வாய்ந்த பிரச்சனைகளின் அலைக்கிடையே ஷி1 பற்றிய (அணுக்குண்டின் இரகசியப் பெயர்) இரகசியம் மேலோங்கிநிற்கும் மற்றும் அநேகமாய் அந்த நேரம் வரைக்கும், அந்தக்கூட்டம் முடியும் வரை, இந்த ஆயுதம் நம் கையில் இருக்கிறதா அல்லது இல்லையா தெரியாது. விரைவில் அது பின்னர் இருக்கும் என நினைக்கிறோம்; உங்களது துருப்புச்சீட்டு உங்களது கையில் இல்லாமல் இராஜதந்திர முறையில் அத்தகைய இடருக்காளானநிலையில் சூதாடுவது பயங்கரமான ஒன்றாகத் தெரிகிறது."

இறுதியில் பொட்ஸ்டாம் மாநாடு சில வாரங்கள் ஒத்திவைக்கப்பட்டது; இது மான்ஹட்டன் செயல்திட்டத்திற்கு இன்னும் சில நாட்கள் அவகாசம் கொடுப்பதற்காக நடந்தது. மே 21 அன்று சோவியத் ஒன்றியத்தில் அமெரிக்காவின் முன்னாள் தூதராக இருந்த ஜோசப் டேவிஸ், ட்ரூமனுடன் ஓர் உரையாடலில் ஈடுபட்டிருந்தார். அப்பொழுது ஜூலை வரை போட்ஸ்டாம் மாநாட்டை தான் விரும்பவில்லை என்று ட்ரூமன் கூறியிருந்தார். வரவுசெலவுத் திட்டப் பொறுப்பு (*) தன்னிடம் அப்பொழுது இருந்ததாகவும் கூறினார். சோதனை ஜூன் மாதம் வருவதாக இருந்து பின்னர் ஜூலை வரை ஒத்திவைக்கப்பட்டது." இந்தப் பக்கத்தின் கடைசியில் டேவிஸ் பின்னர் தான் வரவுசெலவுத் திட்டம் என்றால் என்ன என்பது பற்றி விளக்கியிருந்தார். "அடிக்குறிப்பு (*) அணுக்குண்டு என்பதாகும். அப்பொழுது அவர் நெவடாவில் அணுகுண்டுச் சோதனை நடந்து வருவதாகக் கூறினார். பெரும் இரகசியமாக இது காப்பாற்றப்பட வேண்டும் என்றும் எனக்கு உத்தரவு இட்டார்."

ட்ரூமன் நிர்வாகத்தின் அதிகாரிகள் இவ்வாறு முழு உணர்வுடன் சோவியத் ஒன்றியத்துடனான விவகாரங்களில் அணுக்குண்டை ஒரு "பெரும் துருப்பாகத்தான்" கண்டனர். சோதனையின் வெற்றி பற்றி உறுதியில்லாமல் இருந்ததால், ட்ரூமன் தன்னுடைய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜேம்ஸ் பைர்ன்ஸ§டன் பொட்ஸ்டாமிற்கு சென்று சோவியத் ஒன்றியத்திடம் இருந்து அது ஜப்பானுக்கு எதிராக போரில் இறங்கும் என்ற வாக்குறுதியை பெறுவதை நோக்கமாகக் கொண்டிருந்தார். தன்னுடைய நாட்குறிப்பில் ட்ரூமன் எழுதினார்: "[அணுக்குண்டுச்] சோதனை தோல்வியுற்றால், நாம் ஜப்பானின் மீது படையெடுப்பது என்பதற்குப் பதிலாக, சோவியத் தலையிட்டீன் மூலம் ஜப்பானின் சரணாகதியை கொண்டுவரவேண்டும்."

பொட்ஸ்டாம் மாநாடு முறையாக ஆரம்பிப்பதற்கு சற்று முன் ஜூலை 16ம் தேதி வெற்றிகரமாக அணுக்குண்டுச் சோதனை நிகழ்ந்தது, "அந்தப் பையன்களை தட்டுவதற்கு ஒரு நல்ல சுத்தியலாக எனக்கு பயன்பட்டது" என்று ட்ரூமன் பின்னர் கூறினார். போட்ஸ்டாமில் அவர் நடந்து கொண்ட முறையே முற்றிலும் மாறுபட்ட தன்மையைக் கொண்டிருந்தது. ஸ்ராலினுடன் நிகழ்த்திய பேச்சுவார்த்தைகளின்போது ஆக்கிரோஷமாகவும், அடாவடித்தனமாகவும் நடந்து கொண்டார். போஸ்ட்டாம் மாநாட்டின் ஆரம்ப நாட்களில் சோவியத் ஒன்றியத்திடம் அது ஜப்பானுக்கு எதிராக போரில் சேரும் என்ற உறுதியமொழியைத்தான் ட்ரூமன் நாடியிருந்தார். ஆனால் அடுத்த சில வாரங்களில் சோவியத் படையெடுப்பு நிகழ்ந்து, ஜப்பான் தனியே ஸ்ராலினுடன் உடன்படிக்கை கொள்ளுவதற்கு முன்னரே அணுக்குண்டு பயன்பாடு போரை விரைவில் முடிவிற்கு கொண்டுவந்து விடும் என்று அமெரிக்க நிர்வாகிகள் தெளிவாகக் கருதினர்.

இத்தகைய உறுதிப்பாடு வெளியுறவுத்துறை அமைச்சர் பைர்ன்ஸிடம் நிச்சயமாகக் காணப்பட்டது. தன்னுடைய முக்கிய நோக்கம் போட்ஸ்டாமில் ரஷ்யாவை எப்படியும் போரில் ஈடுபடுத்துதல் என ட்ரூமன் கூறியதாக கடற்படைப் பிரிவு செயலர் ஜேம்ஸ் பார்டல் கொடுத்த அறிக்கைக்கு பைர்ன்ஸ் விடையிறுக்கையில், "ஜனாதிபதியின் கருத்துக்கள் மாறியிருக்கக் கூடும்; எப்படியும் அது என்னுடைய கருத்து அல்ல" என்றார்.

ஜப்பான் சோவியத் ஒன்றியத்துடன் உடன்பாடு கொண்டு, நடுநிலை சக்தியோ அல்லது அமெரிக்கா மூலமாக இல்லாமல், சோவியத் ஒன்றியத்தின் மூலம் சமாதானத்தை நாடக்கூடும் என்ற கவலை ட்ரூமனுக்கும் பைர்ன்ஸ§க்கும் இருந்தது. அமெரிக்கர்களால் ஒற்றறியப்பட்ட ஜப்பானியர்களிடம் இருந்து வெளிவந்த தகவல்களில் இந்தக் கவலைகள்தான் கூடுதலாக இருந்தன. உதாராணமாக ஜப்பானிய தகவல் ஒன்று, அமெரிக்கரால் ஒற்றுமுறையில் அறியப்பட்டதை, தூதரகச் சுருக்கமாகக் குறிப்பிடுகிறது: "ஜூலை 11 அன்று ஜப்பானிய வெளியுறவுத் துறை அமைச்சர் டோகோ சோவியத் ஒன்றியத்தின் தூதருக்கு "மிக அவசரம்" என்ற கீழ்க்கண்ட செய்தியை அனுப்பியுள்ளார். "உள்நாட்டிலும், வெளியிலும் ஜப்பான் எதிர்கொண்டுள்ள அழுத்தமான நிலைமையை ஒட்டி போரை நிறுத்திவிடலாமா என்ற கருத்தை இரகசியமாக ஆராய்ந்து வருகிறோம். எனவே நீங்கள் மோலட்டோவிடம் (சோவியத் வெளியுறவு அமைச்சர்) பேசும்போது ரஷ்யாவிற்கும் ஜப்பானுக்கும் உறவுகள் மறு சீரடையவேண்டும் என்று சொல்லுவதுடன் நிறுத்திக் கொள்ள வேண்டாம்; எந்த அளவிற்கு ரஷ்ய செல்வாக்கை பயன்படுத்தி போரை நிறுத்த முடியும் என்பது பற்றியும் நீங்கள் அவரிடம் விவாதிக்கவேண்டும்." இத்தகவலில், ரஷ்ய படையெடுப்பை தடுப்பதற்காக, ரஷ்யாவிற்கு நிறைய சலுகைகளை ஜப்பான் அளிக்கத் தயாராக இருந்தையும் குறிப்பிட்டது. இக்காலக்கட்டத்தில் சோவியத் படையெடுப்பை தவிர்க்க முடியும் என்று ஜப்பான் இன்னும் நம்பியிருந்தது.

வெளியுறவுத்துறை அமைச்சர் ஜேம்ஸ் பைர்ன்ஸின் உதவியாளர் வால்டர் பிரௌன் தன்னுடைய ஜூலை 24 நாட்குறிப்பில் எழுதியது முக்கியத்துவம் வாய்ந்தது; இதில், "JFB (பைர்ன்ஸ்) இன்னும் சற்று கால அவகாசத்தை எதிர்பார்க்கிறார்; அணுகுண்டிற்கு பின்னர் ஜப்பான் சரணடையும் என்றும், ரஷ்யாவிற்கு இதில் அதிக பங்கு இருக்காது என்றும், அதையட்டி சீனாவில் கூடுதலான நன்மைகளை அது கோரமுடியாமற் போகலாம்" என்று குறிப்படிப்பட்டுள்ளது. பின்பு ஆகஸ்ட் 3ம் தேதி, ஹிரோஷிமா தாக்குதலுக்கு மூன்று நாட்கள் முன்பு பிரௌன் எழுதுகிறார்: "கப்பலில் அகஸ்டா/ ஜனாதிபதி, லேய்தி, யிதிஙி (பைர்ன்ஸ்) இருவரும் ஜப்பான் சமாதனத்தை விழைகிறது என்பதில் உடன்பட்டனர் ...ஜனாதிபதி, ஸ்வீடன் போன்ற சில நாடு மூலம் இல்லாமல் ரஷ்யா மூலம் ஜப்பானியர்கள் அதை நாடுவரோ என அஞ்சினார்."

இத்தகைய மற்றும் இதுபோன்ற ஆவணங்கள் பலவும், அமெரிக்க தலைவர்கள் சோவியத் ஒன்றியத்திற்கு சாதகமான நிலையில் போர் முடியக் கூடாது என்ற கவலை கொண்டிருந்ததை தெளிவாக்குகின்றன; மேலும் ஜப்பான் வெகு விரைவில் சமாதானத்தை நாட உள்ளது என்பதையும் அவர்கள் நன்கு அறிந்திருந்தனர். The Decision to Use the Action Bomb என்ற தன்னுடைய நூலில் Gar Alperpvitz ஜப்பானிய சரணாகதியில் "இரு நிலை" வகையன்றைத்தான் நம்பிக்கையுடன் பார்க்கிறார். அவருடைய கருத்தின்படி, இறுதியில் ஆகஸ்ட் 8 நடந்த சோவியத் படையெடுப்பு ஜப்பானிய பேரரசரின் நிலை அச்சுறுத்தலுக்காளாக்கப்பட மாட்டாது என்ற உத்தரவாதத்துடன் இணைந்தது, இரண்டும் அமெரிக்கப்படையெடுப்போ அணுக்குண்டுப் பயன்பாடோ இன்றி போரை முடிவிற்குக் கொண்டு வந்திருக்கும்.

உண்மையில் ஒரு கூட்டு உளவுத் துறைக் குழுவின் அறிக்கை ஏப்ரல் 29, 1945ல் படைக் கூட்டுத் தலைவர்கள் குழுவிற்கு கொடுத்திருந்த அறிக்கையின் முடிவுரையும் இதேதான். "ஆகாயவழி-கடல்வழி ஆகியவை முற்றுகைக்குட்பட்டதால் கூடுதலாகப் பெருகியுள்ள விளைவுகள், மூலோபாய குண்டுவீச்சினால் பெருகிய முறையில் குவிந்துவிட்ட பேரழிவு, ஜேர்மனியின் சரிவினால் (படைகளை செலுத்துவதில் ஏற்படும் உட்குறிப்புக்களின் விளைவு) அனைத்துமே இந்த ஆண்டிற்குள் முழுமையான தோல்வி ஏற்பட்டுவிடும் என்பதை தவிர்க்க முடியாததாக ஜப்பானுக்கு ஆக்கிவிட்டது. ...சோவியத் ஒன்றியம் போரில் நுழைந்தது, மற்றும் மேற்கூறிய காரணங்களோடு சேர்ந்தது அனைத்துமே பெரும்பாலான ஜப்பானியர்களிடையே முழுமையான தோல்வியை தவிர்க்க இயலாது என்ற உறுதியை ஏற்படுத்திவிட்டது. ஜப்பானிய மக்களும், அவர்களின் தலைவர்களும் முழுமையான தோல்வி தவிர்க்க முடியாது, மற்றும் நிபந்தனையற்ற சரண் என்பது தேசத்தை அழித்துவிடும் என்று பொருள்கொள்ளாது (அதாவது பேரரசர் நீக்கப்படுவார் என்பதை), சரணாகதி அடைவது நம்பத்தக்க வகையில் விரைவில் தொடரும் என்று இணங்கத்தலைப்பட்டனர்."

பைர்ன்ஸின் கண்காணிப்பில், ஜப்பானுக்கு நிபந்தனையற்ற சரண் அடையுமாறு கொடுக்கப்பட்ட இறுதி எச்சரிக்கையான போட்ஸ்டாம் பிரகடனத்தில் பேரரசர் பற்றிய உறுதிமொழி கொடுக்கப்பட மாட்டாது என்ற வகையில் சொற்கள் அமைக்கப்பட்டிருந்தன. மேலும் அமெரிக்காவும் பிரிட்டனும் சோவியத் ஒன்றியத்தை பிரகடனத்தில் கையெழுத்திடுவதற்கு அழைக்கவில்லை. ஒரு புறத்தில், அமெரிக்காவும், பிரிட்டனும் தங்களுடைய தனிப்பாதையையே ஒரு ஜப்பானிய சரணுக்காக கொண்டனர் என்பது தெளிவாக்கப்பட்டது. மறுபுறத்தில், சோவியத் படையெடுப்பு என்ற அச்சுறுத்தல் தெளிவற்ற முறையில் பயன்படுத்தவும் பட்டது; இது ஜப்பானிய நம்பிக்கையான சோவியத் மத்தியஸ்தத்திற்கும் இடமளித்தது. இது ஜப்பான் பிரகடனத்தை நிராகரிப்பதை உறுதியாக்கி, அணுகுண்டு வீச்சு பயன்பாட்டிற்கு வகை செய்துவிட்டது.

மேலும், ஜப்பான் மீது அமெரிக்க ஆக்கிரமிப்பு என்பது நவம்பர் மாதம்தான் திட்டமிடப்பட்டிருந்தது. அமெரிக்க அரசாங்கம் ஆக்கிரமிப்பின் அவசியத்தை தவிர்ப்பதற்கு பிரதானமாக அணுகுண்டை பயன்படுத்தினால், அந்த முடிவை எடுப்பதற்கு முன்னரே ஏன் ட்ரூமன் இன்னும் கூடுதலாக தாமதிக்கவில்லை என்பதை விளக்குவது கடினம்; அதிலும் அந்த நேரத்தில் ஜப்பானில் பெரும் ஆபத்திற்கு உட்பட்டிருந்த நிலை இருந்தது என்பதை நிறைய உளவுத் துறைகள் காட்டியிருந்தன.

அதாவது ஹிரோஷிமாவில் என்ன நடந்தது என்பதை அறிந்து கொண்டு அதற்கு விடையிறுப்பதற்கு ஜப்பானியருக்கு ஒரு வாய்ப்பு ஏற்படுவதற்கு முன்னரே, ஏன் அவ்வளவு விரைவில், இரண்டாவது குண்டும் வீசப்பட்டது என்ற கேள்வியும் எழுகிறது. மீண்டும் சோவியத் ஒன்றியத்தின் படையெடுப்பு மைய பிரச்சினையாகும். நாகசாகியின்மீது நிகழ்ந்த குண்டுவீச்சு சோவியத் ஒன்றியம் படையெடுப்பை மேற்கொண்ட மறு நாள் நிகழ்ந்தது. மேலும் Alperovitz குறிப்பிடுகிறார்: "ருமேனியா, பல்கேரியா மற்றும் ஹங்கரி ஆகியவை 'எந்த ஒரு வல்லரசின் செல்வாக்கு மண்டலமாக இருக்காது' என்று ஆகஸ்ட் 9 அன்று, அதாவது, நாகசாகியில் குண்டுவீசப்பட்ட அன்று ட்ரூமன் அறிவித்தார்."

சோவியத் ஒன்றியத்தின் செல்வாக்கு கிழக்கு ஐரோப்பாவிலும், கிழக்கு ஆசியாவிலும் குறைக்கப்படுவது அமெரிக்காவின் உடனடி அக்கறைகளுடன் இணைந்து, போர் முடிவிற்கு வந்த பின்னர் அமெரிக்காவில் மேலாதிக்கத்தை ஏற்படுத்துவது ட்ரூமன் நிர்வாகத்தின் பொது நோக்கமாக இருந்தது. வரலாற்று ஆசிரியர் தோமஸ் மக்கோர்மிக் இதைப் பற்றி எழுதும்பொழுது நன்கு தொகுத்துக் கூறுவதாவது: "கண்கூசவைக்கும் இரண்டு ஒளிவீச்சுக்களில், ஒரு கொடூரமான வகையில் அனைவராலும் மேற்கொள்ளப்பட்டிருந்த போர் கொடூரமான முறையில் முடிவிற்குக் கொண்டுவரப்பட்டதும், அமெரிக்க மேலாதிக்கம் செலுத்துவதற்கு கதவு திறக்கும் சேர்க்கையை இறுதியில் அமெரிக்கா கண்டுகொண்டது."

இந்த மேலாதிக்க இலக்கை அடைவதற்கு ஹிரோஷிமா, நாகசாகி நகரங்களை தியாகம் செய்யவேண்டியது கட்டாயமாயிற்று. மக்கோர்மிக் குறிப்பிடுகிறார்: "சில விஞ்ஞானிகள் பரிந்துரைத்தபடி, முன்கூட்டியே அறிவிக்கப்பட்டு, மக்கள் இல்லாத இடத்தில் இந்த வெடிப்பு இலக்கை கொண்டிருந்தால், இந்த விளைவு வந்திருக்காது. அது குண்டின் சக்தியை நிரூபித்திருக்குமே ஒழிய அந்தக் கொடும் சக்தியை அமெரிக்கா செலுத்தும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்காது. 1945 கோடைகால மத்தியில் ஜப்பானிய அமைதியை வேண்டுவோரை அமெரிக்கர் தொடர விரும்பாததின் காரணம் அணு குண்டை உபயோகிக்க ஒரு வாய்ப்பை பெறாமல் அது போரை நிறுத்த விரும்பவில்லை."

அமெரிக்க மக்களிடையே, அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் அப்பட்டமான இரக்கமற்ற தன்மை பற்றி குறிப்பாக இரண்டாம் உலகப் போர் தொடர்பானதில் ஒருவகையான அனுபவமின்மைதான் இருந்தது. அமெரிக்க செய்தி ஊடகம் மற்றும் அரசியல் நிறுவனங்களால் இப்போர் ஜனநாயகத்திற்கான பெரும் போர், பாசிசம் மற்றும் கொடுங்கோன்மைக்கு எதிரான போர் என்று நீண்டகாலமாக வர்ணிக்கப்பட்டிருந்தன. உண்மையில் அமெரிக்கா போரில் இறங்கியதற்கு முக்கிய காரணம், போரை தொடர்ந்து நடத்துவதில் அதன் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பின்னே கிடக்கும் உந்துதல், எவராலும் சவால்செய்ய முடியாத மற்றும் மேலாதிக்க உலக வல்லரசாக தன்னை நிலைநிறுத்திக் கொள்ளவேண்டும் என்பதாகும். இந்த இலக்கை அடைவதற்கு நூறாயிரக்கணக்கான ஜப்பானிய உயிர்கள் குறைவான முக்கியத்துவத்தைப் பெற்றன.

அணுவாயுதங்களை ஜப்பானுக்கு எதிராக பயன்படுத்துவது என்ற ஜனாதிபதி ஹாரி ட்ரூமன் நிர்வாகத்தினால் எடுக்கப்பட்ட முடிவு அரசியல் மற்றும் மூலோபாய கருதிப்பார்த்தல்களினால் செயற்தூண்டல் அளிக்கப்பட்டதாகும். எல்லாவற்றிற்கும் மேலாக, அணுகுண்டு பயன்படுத்தப்பட்டது என்பது, போருக்குப் பிந்தைய காலத்தில் அமெரிக்காவின் மேலாதிக்க நிலை எவ்வித சவாலுக்கும் உட்படாமல் நிறுவப்படவேண்டும் என்ற அர்த்தத்தினாலாகும்.

இந்த செயற்தூண்டல்கள் போரில் அமெரிக்கத் தலையீட்டிற்கு பின்னாலான அடிப்படை உந்து சக்தியாகவும் கூட இருந்தன. இரண்டாம் உலகப் போர் நீண்ட காலமாகவே அமெரிக்க மக்களுக்கு ஒரு "நல்ல போர்" என்றும், பாசிசம், கொடுங்கோன்மை இவற்றிற்கு எதிரான ஜனநாயகத்திற்கான போர் என்றும், சித்தரித்துக் காட்டப்பட்டுள்ளது. ஹிட்லரின் பாசிசம் மற்றும் ஜப்பானியரின் இராணுவ வாதத்திற்கும் எதிரான போர் இது என்று மில்லியன் கணக்கான அமெரிக்க மக்கள் ஐயத்திற்கு இடமின்றி உண்மையில் நினைத்தாலும், போரை வழிநடத்தியவர்களுடைய இலக்குகள் முற்றிலும் வேறுவிதமாக இருந்தன. தன்னுடைய பூகோள நலன்களை உத்திரவாதம் செய்ய அமெரிக்க ஆளும் செல்வந்த தட்டு இரண்டாம் உலகப் போரில் நுழைந்தது. அமெரிக்காவில் இருந்த முதலாளித்துவ ஜனநாயக ஆட்சியின் அரசியல் தன்மை அதன் பாசிச எதிரிகளுடைய ஆட்சியின் தன்மையில் இருந்து பரந்து வேறுபட்டிருந்தாலும்கூட, அமெரிக்காவின் போர் இலக்குகள் ஏகாதிபத்தியத் தன்மையில் சிறிதும் குறைந்திருக்கவில்லை. இறுதிப் பகுப்பாய்வில், தன்னுடைய குறிக்கோள்களை அடைவதற்காக அணுகுண்டை பயன்படுத்தல் உட்பட அமெரிக்கா கையாண்ட இரக்கமற்ற வழிவகைகள் இந்த அடிப்படை உண்மையில் இருந்துதான் பாய்ந்தன.

சோவியத் ஒன்றியத்துடனான வளர்ந்துவரும் தன்னுடைய மோதலில், சக்திகளின் சமநிலையில் அணுகுண்டை பயன்படுத்தல் பெரும் மாற்றத்தை கொண்டுவரும் என்று அமெரிக்க அரசாங்கம் நம்பியது. ஆனால் அணுகுண்டுத் தயாரிப்பில் அமெரிக்க ஏகபோகம் மிகக் குறுகிய காலம்தான் நீடித்தது. ஹிரோஷிமாவில் ஆகஸ்ட் 6, 1945 அன்று அணுகுண்டு வீசப்பட்டதற்கு சோவியத் ஒன்றியத்தின் விடையிறுப்பு தன்னுடைய சொந்த அணுகுண்டுத் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட வளங்களை விரைந்து அதிகப்படுத்தியது. 1949ம் ஆண்டு சோவியத் ஒன்றியம் தன்னுடைய முதல் அணுகுண்டுச் சோதனையை நடத்தியது.

அமெரிக்க ஆளும் செல்வந்த தட்டின் பகுதிகளும், இராணுவ ஸ்தாபனங்களும் நடைமுறையில் உள்ள இராணுவச் சூழலில் அணுகுண்டைப் பயன்படுத்தலாம் என்று நினைத்திருந்தனர். 1950ம் ஆண்டு, கொரியப் போரின்போது சீனாவிற்கு எதிராக அணுவாயுதங்களை பயன்படுத்துவோம் என்று ட்ரூமன் அச்சுறுத்தினார் மற்றும் கொரிய எல்லையை ஒட்டிய மஞ்சூரியாவில் ஏராளமான அணுகுண்டுகளை இராணுவம் போடுவதற்கு அரசாங்கம் உத்தரவிடவேண்டும் என்று தளபதி டக்ளஸ் மக்கார்தர் வலியுறுத்தினார். இந்த முன்மொழிவுகள், அணுகுண்டை வீசுவது சோவியத் ஒன்றியத்துடன் ஒரு அணுவாயுத மோதலை தூண்டிவிடும் என்று அஞ்சி இறுதியில் நிராகரிக்கப்பட்டது.

ஹைட்ரஜன் குண்டுகள் என்று இன்னமும் சக்திவாய்ந்த குண்டுகள் தயாரிக்கப்பட்டு, 1952 கடைசிப் பகுதியிலேயே சோதனைக்கும் உட்படுத்தப்பட்டுவிட்டதால், அமெரிக்கா தன்னுடைய அணுவாயுதத்தில் சாதகம் பெற்றிருப்பது புதுப்பிக்கப்பட்டுவிடும் என்று நம்பியது. 1953-ம் ஆண்டு குடியரசுக் கட்சியின் ஐசனோவர் நிர்வாகம் கிழக்கு ஐரோப்பாவின் மீதான சோவியத் கட்டுப்பாட்டை ''திரும்பச் சுருட்டிக்கொண்டு போகவைத்தல்'' உட்பட, சோவியத் ஒன்றியத்திற்கு எதிராக மிகவும் வலிந்துதாக்கும் கொள்கையை மேற்கொள்ளப்போவதாக உறுதிமொழி கொடுத்து ஆட்சிக்கு வந்தது. ஜனவரி 1954ல், வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த ஜோன் போஸ்டர் டல்லஸ் நிகழ்த்திய உரை ஒன்றில், அமெரிக்கா "பதிலடி கொடுப்பதற்கு, உடனடியாகக் கொடுப்பதற்கு, தான் விரும்பிய இடங்களில், தான் விரும்பும் வகையில் கொடுப்பதற்கு பிரதானமாக பெரும் ஆற்றலை" சார்ந்து இருப்பதன் மூலம் "ஆக்கிரமிப்பைத் தடுக்கும்" என்று அறிவித்தார். இப்படி "பாரியளவு பதிலடி" என்ற உறுதிமொழி பொதுவாக கொரியப் போர் போன்ற உள்ளூர்போர் அல்லது பின்னர் வியட்நாமில் அபிவிருத்தி அடைந்த போர்களுக்கு பதில்கொடுப்பதில் அணுவாயுதங்கள் பயன்படுத்தப்படும் ஒரு அச்சுறுத்தலாக பொதுவாக விளக்கம் கொள்ளப்பட்டது.

ஆனால் இந்த அணுவாயுதத்தின் சாதகத்தன்மை மறுபடியும் ஆகஸ்ட் 1953-ல் தகர்ந்தது, ஏனெனில் அந்த ஆண்டு சோவியத் ஒன்றியம் தன்னுடைய முதல் ஹைட்ரஜன் குண்டைச் சோதித்தறிந்தது. இரண்டு நாடுகளும் விரைவில் பெரும் திறனை அடைந்து, ஒரு அணுவாயுத யுத்தம் ஏற்பட்டால் "பரஸ்பரம் அழிந்துவிடும் உத்தரவாத" சூழ்நிலை ஏற்பட்டது.

இக்கால கட்டம் முழுவதிலும், அதற்குப் பிந்தைய தசாப்தங்களிலும், அரசியல் ஸ்தாபனத்திற்குள் சோவியத் ஒன்றியம், அணுகுண்டு ஆகியவை தொடர்பான கொள்கையில் பெரும் பூசல்கள் தொடர்ந்திருந்தன. அணுவாயுதப் போர் என்ற அச்சுறுத்தல் இருந்தாலும், அமெரிக்க ஆளும் வர்க்கத்திற்குள் ஒரு கணிசமான பிரிவு அமெரிக்க இராணுவ சக்திக்கு எவ்வித தடைசெய்தலையும் சகித்துக்கொள்ளமாட்டோம் எனக் கூறியது.

ஹிரோஷிமா/நாகசாகிக்கு பிந்தைய எந்த அமெரிக்க நிர்வாகமும், ஜனநாயகக் கட்சி ஆயினும், குடியரசுக் கட்சியாயினும், அணுவாயுதப்போரில் தேவையானால் இறங்கும் நிலை ஒருபோதும் நிறுத்தப்படாதிருந்தது. ட்ரூமனின் போர் மந்திரி ஹென்றி ஸ்டிம்ஸன் "தலையாய துருப்பு" என்று அழைத்திருந்தது எப்பொழுதும் தேவையானால் பயன்படுத்துவதற்கு பின்னணியில் தயாராக இருந்தது. 1962ம் ஆண்டு கென்னடி நிர்வாகம் கியூப ஏவுகணை நெருக்கடியின் போது அணுவாயுதப் போரை சோவியத் ஒன்றியத்துடன் கிட்டத்தட்ட முன்னெடுத்துவிட்டது எனலாம்.

1970-களில் பொருளாதாரச் சூழ்நிலை மோசமடைந்த நிலையில், சோவியத் ஒன்றியத்திற்கு எதிராக கூடுதலான ஆக்கிரமிப்புக் கொள்கை வேண்டும் என்று வாதிட்டவர்கள் முக்கியத்துவம் பெறலாயினர். இது ஜனநாயகக்கட்சி நிர்வாகம் ஜிம்மி கார்ட்டர் தலைமையில் இருந்தபோதே தொடங்கிவிட்டது; அக்கொள்கை றேகன் நிர்வாகம் 1980-களில் செயல்பட்டபோது கூடுதலான ஊக்கத்தைப் பெற்றது. றேகன் ஒரு புதுப்பிக்கப்பட்ட ஆயுத அபிவிருத்தியை மேற்பார்வை செய்தார் மற்றும் தற்காப்பு ஏவுகணைக் காப்பு ("நட்சத்திரப் போர்" என்றழைக்கப்பட்ட திட்டம்) திட்டத்தை அபிவிருத்தி செய்வதன் மூலம், அணுவாயுதத் தாக்குதல் திறனிலும் அமெரிக்கா மேன்மை அடைவதற்கு முயன்றார், (Anti-Ballistic Missline -ABM) என்ற 1972ன் கண்டம்விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணை எதிர்ப்பு உடன்படிக்கை ஒன்று தடுப்பதற்காக வடிவமைக்கப்பட்டு இருந்தது. ஒரு வெற்றிகரமான பாதுகாப்பு கவசம் என்பது அமெரிக்காவை முதலில் அணுவாயுதத்தை தாக்குதலில் ஈடுபடுத்த வைக்கும், ஏனெனில் எவ்வித பதிலடி நடவடிக்கையையும் அது தடுத்து வீழ்த்திவிட இயலும்.

சோவியத் ஒன்றியம் 1991ல் தன்னைத் தானே அழித்து கொண்ட பின்னர், அமெரிக்க ஆளும் வர்க்கம் முன்கூட்டியே போர், இராணுவ சக்தி முழுவதும் அமெரிக்க நலன்களின் ஒருதலைபட்ச வலியுறுத்தல் என்ற அடிப்படையை கொண்ட ஒரு புதிய பொதுகருத்தை அடைந்துள்ளது

குறைவான ஒப்பந்தங்கள், கூடுதலான குண்டுகள்

சோவியத் ஒன்றியத்திற்கு பிந்தைய காலத்திய அமெரிக்க இராணுவவாத வெடிப்பு, ஜோர்ஜ் டபுள்யூ. புஷ்ஷின் ஜனாதிபதி காலத்தில் குறிப்பிடத்தக்க வகையில் பெரும் தீய வடிவை எடுத்துள்ளது. பதவிக்கு வந்த காலத்தில் இருந்தே புஷ் நிர்வாகம் அமெரிக்க இராணுவத் திறனை பெருக்கிக் கொள்ளும் வகையில் இரட்டை கூர்முனை மூலோபாயத்தை வளர்த்துள்ளது. இதன்படி ஒருபுறத்தில் அது எவ்வித சர்வதேச உடன்பாடு, ஒப்பந்தம் என்று அமெரிக்கா இராணுவரீதியாக செய்யக்கூடியவற்றிற்கு வரம்பு விதிப்பது எதையும் நிராகரிக்கிறது அல்லது கீழறுத்துள்ளது. மறுபுறத்தில், அணுவாயுதத் தொழில்நுட்பம், வருங்காலப் போர்களில் இந்த நுட்பத்தை பயன்படுத்தும் வகை உட்பட, அதன் இராணுவத் தொழில்நுட்பத்தை வளர்த்துக் கொள்ளுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது.

1999-ம் ஆண்டு குடியரசுக் கட்சியினர் ஆதிக்கத்தில் இருந்த அமெரிக்க செனட் மன்றம் அணுசோதனை பரவல் தடை ஒப்பந்தத்தை (CTBT) புறக்கணித்தது, இது முன்னர் கிளின்டன் நிர்வாகத்தால் கையெழுத்திடப்பட்டிருந்தது. 2001ம் ஆண்டு புஷ் மீண்டும் செனட்டின் இசைவைத் தான் நாடப்போவதில்லை என்றும் ஒப்பந்தத்தை "புதைத்துவிடுவதற்கு" வழி பார்த்துக் கொண்டிருப்பதாகவும் அறிவித்தார். ஒப்பந்தப்படி புதிய அணுவாயுத சோதனைகள் நடத்தப்படுவது தடுக்கப்படும், ஆனால் இன்னும் புதிய, சோதிக்கப்பட வேண்டிய அணுவாயுதங்களை தயாரித்துக் கொண்டிருப்பதால் புஷ் நிர்வாகம் இதை எதிர்க்கிறது.

டிசம்பர் 2001ல், இப்பொழுது தேசிய ஏவுகணை பாதுகாப்பு (National Missile Defence) என்று அழைக்கப்படும், நட்சத்திரப் போர் செயல்திட்டத்தை புதுப்பிப்பதற்கு அதனை அனுமதிக்கும் பொருட்டு, அமெரிக்கா ஒருதலைப் பட்சமாக ABM ஒப்பந்தத்தில் இருந்து விலகிக் கொள்வதாக புஷ் அறிவித்தார். இந்த NMD முறையின் வளர்ச்சி இப்பொழுதும் நிர்வாகத்தின் முன்னுரிமையாக இருக்கிறது மற்றும் விண்வெளியில் இராணுவத்தின் மேலாதிக்கத்தை அடைவதற்கான அதன் உந்துதலின் பகுதியாக அது இருக்கிறது. றேகன் நிர்வாகத் திட்டம் போன்றே, ஏவுகணை பாதுகாப்பு முறை, சீனா அல்லது ரஷ்யா போன்ற நாடுகளுக்கு எதிராக அணுவாயுத தாக்குதல்களுக்கான வழியைத்திறந்து விடுகிறது.

இந்த ஆண்டு தொடக்கத்தில் சர்வதேச அளவிலான அணுவாயுதப் பரவுதல் தடுப்பு ஒப்பந்தம் பற்றிய பரிசீலனை ஒன்றில், புஷ் நிர்வாகம் உடன்பாட்டின் அடித்தளத்தையே கீழறுக்கும் நிலைப்பாடு ஒன்றை அறிவித்தது. அணுவாயுதங்களை முயன்றுபெற மாட்டோம் என்ற உறுதிமொழிக்கு பிரதியுபகாரமாக, இவ்வொப்பந்தமானது அணுவாயுதங்கள் இல்லாத நாடுகளுக்கு இராணுவப்பயன்பாடு அல்லாத அணுசக்தி தொழில்நுட்பத்தை அபிவிருத்தி செய்வதற்கான உரிமையை உத்தரவாதம் செய்கிறது. மேலும் அணுசக்தி வல்லரசுகள் சிறிது, சிறிதாக தங்கள் அணுவாயுத குவிப்புக்களை குறைத்துக் கொள்ளுவதாக உறுதிமொழியும் கொடுக்க வேண்டும் என்றுள்ளது. ஆனால் புதிய புஷ் நிர்வாகத்தின் நிலைப்பாடு "போக்கிரி அரசுகள்" என்று அமெரிக்கா வரையறுக்கும் ஈரான் போன்றவை அணு எரிசக்தி திட்டங்களை வளர்க்கும் உரிமை மறுக்கப்படும் என்பதாகும். அதே தேரத்தில் தன்னுடைய அணுவாயுதக் குவிப்புக்களை தகர்த்து விடுவதற்கு பதிலாக அமெரிக்கா இருக்கும் ஆயுதங்களை நவீனப்படுத்தவும் தாக்குதலுக்காக புதிய ஆயுதங்களை தயாரிக்கவும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. உண்மையில், உடன்பாடு ஏதும் காணாமல் முடிவுற்ற மாநாட்டிற்கு முன் நடந்த பேச்சுக்களின் போது புஷ் நிர்வாகம் ஒரு அணுவாயுதம் இல்லாத சக்திக்கு எதிராக தமக்கு அணுவாயுதம் பயன்படுத்தும் உரிமை இருப்பதாக வெளிப்படையாக கூறிவிட்டது.

கடந்த தசாப்தத்தில், அமெரிக்க அரசாங்கம் அணுவாயுதங்கள் பிரதானமாக மற்றவர்களுக்கு எச்சரிக்கைதரக்கூடிய ஒன்றாக நோக்கங்கொண்டிருக்க வேண்டும் என்ற குளிர்யுத்த கருத்துருவை நிராகரித்து, தாக்கும் அணுவாயுத பயன்படுத்தல் கொள்கை ஒன்றை வளர்த்துள்ளது. அணுவாயுத நிலைப் பரிசீலனை 1997ல் கிளின்டன் நிர்வாகத்தின் போது நடைபெற்றது; அப்பொழுது அது வட கொரியா, சீனா மற்றும் ஈரான் போன்ற நாடுகளை இலக்கு வைப்பதற்கான முதல் நடவடிக்கைகளில் இறங்கியதாகக் கூறப்படுகிறது.

இந்தக் கொள்கை இன்னும் தெளிவாக மற்றொரு பரிசீலனையில் விளக்கப்பட்டது; 2002ல் செய்தி ஊடகத்திற்கு கசிய விடப்பட்ட இந்த அறிக்கையில் பென்டகன், "அமெரிக்கத் திட்டமிடல் மற்றும் இப்பொழுது அதற்குத் தேவைப்படும் சக்திகளுடன் அடிப்படையில் பழைய செயல்முறை (அணுவாயுதக் கட்டுப்பாடு) நெகிழ்ச்சியுடன் பொருந்தாது" என்று அறிவித்துள்ளது. பல நாடுகளையும் அவற்றின் அணுவாயுத தாக்கும் திறன் பெற்றுள்ளதற்காக வெளிப்படையாக அச்சுறுத்தியுள்ளது. மேலும் எதிர்காலத்தில் அணுவாயுதங்கள் பயன்படுத்தப்படுவதற்கான பொது வழிகாட்டு நெறிகளையும் கொடுத்துள்ளது; இந்த ஆயுதங்கள் "அணுவாயுதமில்லாத, தாக்குதலை எதிர்த்து நிற்கும் ஆற்றலை உடைய இலக்குகளுக்கு எதிராகப் பயன்படுத்தப்படலாம்" அல்லது "ஆச்சரியப்படத்தக்க முறையில் இராணுவ வளர்ச்சி ஏதேனும் தோன்றியிருந்தாலும் பயன்படுத்தப்படலாம்" என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது;

கடந்த கோடை காலத்தில், பாதுகாப்பு செயலாளர் டொனால்ட் ரம்ஸ்பெல்ட் ஒரு "இடைக்கால பூகோளம் தழுவிய தாக்கும் கட்டளை" ஒன்றை பிறப்பித்தார்: இதில் ஈரான் அல்லது வடகொரியா போன்ற நாடுகளுக்கு எதிராக முதலிலேயே அணுவாயுதத் தாக்குதலை தொடுக்கும் அதிகாரம் அடங்கி இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும் ஈராக், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் நடைபெறும் போர்களுக்கான திட்ட வழிகாட்டல்களில், அணுவாயுதத் தாக்குதல்களின் பலவகை விருப்பத்தேர்வுகளும் அடங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

போர் நடவடிக்கைகளின்போது பயன்படுத்துவதற்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்ட, "பதுங்குகுழியை தகர்க்கும்" புதிய வகை அணுவாயுதத் தொழில்நுட்பத்தை வளர்ப்பது தொடர்பாக புஷ் நிர்வாகம் நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இருக்கும் ஆயுதக் குவிப்புக்கள் நவீனப்படுத்தப்பட்டுள்ளன என்பதுடன் நியூ யோர்க் டைம்ஸ் கட்டுரை 2005 பெப்ரவரி 7 பதிப்பின்படி, "அமெரிக்க விஞ்ஞானிகள் அணுவாயுதங்களின் புதிய தலைமுறைக் கருவிகள் வடிவமைப்பை தொடங்கி விட்டதாகவும்" இவை பழைய ஆயுதக் குவிப்புக்களைவிட, "இன்னும் கூடுதலான நம்பகத்தன்மையை கொண்டிருப்பதுடன், நீடித்தும் இருக்கும்" என்றும் கூறப்படுகிறது.

அணுவாயுத வளர்ச்சியில் ஈடுபடுவதாக, மற்றும் "பேரழிவு தரும் ஆயுதங்களை" தயாரிப்பதாகக் கூறப்படும் நாடுகளுக்கு எதிராக, அமெரிக்கா அடிக்கடி அச்சுறுத்தல்களை வெளியிடுகிறது. மிகச்சமீபத்திய இலக்கு ஈரானாக உள்ளது; இது தன்னுடைய அணுசக்தி திட்டத்தை கைவிடாவிட்டால் இராணுவத் தாக்குதலை சந்திக்க நேரிடும் என்று அமெரிக்கா அச்சுறுத்தியுள்ளது. இந்த அச்சுறுத்தல்கள் அனைத்தும் வருங்கால அமெரிக்கப் படையெடுப்புக்களை நியாயப்படுத்தும் வகையில் உள்ளன; அவற்றில் அமெரிக்காவால் அணுவாயுதங்கள் பயன்படுத்துவது தவிர்க்கப்படும் எனக் கூறுவதற்கில்லை.

முன்கூட்டியே தாக்கித் தனதாக்கிக்கொள்ளும் போர் என்ற கொள்கையின் மூலம், அச்சுறுத்தல் திறன் கொண்டுள்ளது அல்லது வருங்காலத்தில் அத்திறனைக் கொள்ளக்கூடும் எனத் தான் கருதும் எந்த நாட்டின் மீதும் தாக்குதலை நடத்தும் உரிமையை கொண்டுள்ளதாக அமெரிக்கா கூறுகிறது. உலகில் அமெரிக்காவின் நலன்கள் இல்லாத பகுதி என்று எதுவும் இல்லை. ஆப்கானிஸ்தானில் போர் மற்றும் உக்ரைன் போன்ற நாடுகளில் அரசியல் தலையீடு போன்றவை மூலம் மத்திய ஆசியாவிலும் முன்னாள் சோவியத் ஒன்றிய பகுதியிலும் தன்னுடைய செல்வாக்கை பெருகிய முறையில் விரிவாக்கம் செய்து கொள்ளுவதற்கு அது முயன்றுள்ளது. ஈராக்கில் போர் மற்றும் ஈரானில் போருக்கான அச்சுறுத்தல் மூலமும் மத்திய கிழக்கில் மேலாதிக்கம் செய்ய முயல்கிறது. ஆபிரிக்காவிலும் தன்னுடைய நடவடிக்கைகளை பெருக்கிக் கொண்டுள்ளது; கிழக்கு ஆசியாவில் தன்னுடைய செல்வாக்கை உத்திரவாதம் செய்துகொள்வதற்கான அதன் முயற்சிகளின் பகுதியாக வட கொரியா, சீனா இவற்றிற்கு எதிராக பல முறையும் அச்சுறுத்தல்களை விடுத்துள்ளது.

இந்த நிலைமைகளில், கணக்கிலடங்கா மாறுதல்கள் ஏற்படக்கூடிய நிலையில், ஒரு போர் தோன்றினால் அணுவாயுதங்களை பயன்படுத்துவதற்கு வழிவகுக்கும். ஈரான் போன்ற நாடுகளின் மீதான படையெடுப்பு மட்டுமல்லாமல், ஒரு சிறிய நாட்டிற்கு எதிரான அமெரிக்கப் போர் வெகு விரைவில், அணுவாயுதங்களை கொண்டிருக்கும் நாடுகளான சீனா, ரஷ்யா அல்லது ஐரோப்பிய வல்லரசுகளுடன் கூட ஒரு பரந்த பூசலுக்கு வழிவகுக்கக் கூடும்.

ஹிரோஷிமாவிற்கும் நாகசாகிக்கும் விளைந்த பேரழிவு ஒருநாளும் மறக்கப்படமாட்டாது. ஏகாதிபத்தியத்தின் மிருகத்தன்மைக்கு எந்நாளும் சான்றாக அந்நகரங்களின் அழிவு நிலைத்து நிற்கும். அமெரிக்க இராணுவவாத வெடிப்பின் புத்துயிர்ப்பின் பின்னணியில், ஆகஸ்ட் 1945 நிகழ்வுகள் நமக்கு மனிதகுலத்தை எதிர்கொள்ளும் மாற்றீடுகளான உலகப் புரட்சி அல்லது உலகப் போர், சோசலிசம் அல்லது காட்டுமிராண்டித்தனம் என்பதைத்தான் நினைவுபடுத்துகின்றது.

By Joseph Kay
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல