வியாழன், 3 பிப்ரவரி, 2011

அறிஞர் அண்ணாவின் நினைவு நாள் இன்று

மக்கள் மத்தியில் மதிப்பும் மரியாதையும் மிக்க மறக்க முடியாத மாமனிதர்களாக வாழ்ந்து மறைந்த வள்ளல்கள், அறிஞர்கள், ஆன்மீகவாதிகள், பகுத்தறிவாளர்கள், பக்திமான்கள், பரோபகாரிகள், கவிஞர்கள், கலைஞர்கள் என்று தன்னிகரற்ற பல தலைவர்களின் நீங்காத நினைவு நாட்களை ஆண்டுதோறும் அஞ்சலி செலுத்தும் தினமாக அன்று முதல் இன்று வரை அனுஷ்டிப்பது அனைவரும் அறிந்ததே.

அந்த வரிசையில் அமரர் அறிஞர் அண்ணா அவர்களின் நினைவிடத்தில் அதாவது அவர் மறைந்த அன்றைய தினத்தில் பெப்ரவரி மூன்றாம் திகதி அங்கு கூடும் மக்கள் கூட்டம், மறைந்தும் மறையாத மகத்தான மங்காப் புகழ் மிக்க தலைவன் அண்ணாவுக்கு அதிகமாகவே காணப்படும்.

அறிஞர் அண்ணாவால் ஆரம்பிக்கப்பட்ட கழகத்திலிருந்து பல்வேறு காரணங்களால் பிரிந்து சென்று புதிய கழகங்களை ஆரம்பித்த அருமை அண்ணாவின் ஆசைத் தம்பிகள் கூட அன்றைய தினம் அமரர் அண்ணாவின் நினைவிடத்துக்கு வந்து போட்டி போட்டு அஞ்சலி செலுத்துகின்றனர்.

வேறெந்தத் தமிழகத் தமிழ்த் தலைவருக்கும் இல்லாத புகழ், அண்ணா காலமாகி 42 ஆண்டுகள் ஆகியும் கூட நீடித்திருப்பதற்குக் காரணம் அவர் ஒரு அரசியல் கட்சியின் தலைவர் மட்டும் அல்லர். மனிதாபிமானி. கழகக் கொள்கையின் படி கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டின் காவலனாகத் திகழ்ந்தவர் என்பதேயாகும்.

அழகு தமிழ் அலங்காரச் சொல் எடுத்து, அடுக்கு மொழியில் எதுகை மோனையுடன் எழுதியும் பேசியும் எல்லோர் மனதிலும் எழுச்சி யூட்டி ஏற்றம் பெற்ற ஏந்தல்தான் அறிஞர் அண்ணா. ஏன் கலையுலகின் ஏழு ஞாயிறு என்று கூடச் சொல்லிச் சொந்தம் பாராட்டி மகிழத்தக்க கலைஞரிவர்.

1909 ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 15-ம் தேதி நடராசன் – பங்காரு இணையினருக்கு அண்ணா பிறந்தார்.
தொடக்கக்கல்வியும் உயர் நிலைக் கல்வியும் காஞ்சி பச்சையப்பர் கல்வி நிறவனங்களில் பயின்றார். அண்ணாவின் குடும்பம் மிகவும் எளிமையான குடும்பம். அண்ணாவின் சிற்றன்னை இராசாமணி அம்மையார் அண்ணா அவர்களைத் தொத்தா என்றே அழைப்பார்கள். அண்ணாவை வளர்த்தவர் வழிகாட்டியாக அண்ணாவின் வாழ்க்கையை அமைத்துக் கொடுத்தவர், இன்று பகுத்தறிவு இயக்கத்தின் தனிப் பெரும் சுடராய் ஒளிவிட்டுத் திகழ்ந்த அண்ணா, இளமைப் பருவத்தில் ஆலய வழிபாட்டைத் தவறவிடாத இளைஞராகத்தான் திகழ்ந்து கொண்டிருந்தார்.

அவர் பெரியாரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, நீதிக் கட்சியில் சேர்ந்தார். பின்னர் பெரியாருடன் திராவிடக் கழகத்தில் இணைந்து, மூட நம்பிக்கைகளுக்கு எதிரான பகுத்தறிவுக் கருத்துக்களையும், சமூக சீர்திருத்தக் கருத்துக்களையும் பரப்புவதில் முன்னின்று ஈடுபட்டார். பெரியாரின் சில நடவடிக்கைகள் காரணமாக எழுந்த கருத்து வேறுபாடுகளைத் தொடர்ந்து, திராவிடக் கழகத்தின் முக்கிய உறுப்பினர் பலருடன், 1949இல், பெரியாரை விட்டு விலகி, திராவிட முன்னேற்றக் கழகம் (தி.மு.க) என்ற புதிய இயக்கமொன்றை நிறுவினார்.

1957ஆம் ஆண்டு வரை தி.மு.க, ஒரு சமூக சீர்திருத்த இயக்கமாகவே இருந்து வந்தது. 1957இல் நடைபெற்ற தேர்தலில் கலந்துகொள்ள முடிவு செய்த கழகம், அத்தேர்தலில் 15 இடங்களை வென்ற போது அண்ணாதுரையும் சட்டசபை உறுப்பினரானார். தொடர்ந்து வந்த பத்தாண்டு காலத்தில், தமிழ் மக்களுக்குப் பாதகமானது என்று கருதப்பட்ட, மத்திய அரசின் மொழிக் கொள்கைக்கு எதிராகப் பல போராட்டங்களை நடத்தியதன் மூலம், தி.மு.க.வை ஒரு பலம் மிக்க அரசியல் இயக்கமாக வழி நடத்திச் சென்றார். இதன் காரணமாக 1967இல் நடைபெற்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்றுத் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆனார்.

அண்ணாவின் இயற்பெயர் அண்ணாதுரை என்றாலும் எல்லோரும் அவரை வயது வித்தியாசமின்றி அண்ணா என்றே அழைப்பார்கள். அந்த அண் ணாவையும் “அறிஞர் அண்ணா'' என அழைக்க வைத்த ஆரம்ப கர்த்தாதான் அமரர் கல்கி. அண்ணாவின் அழகு தமிழ் அடுக்குமொழி வசன நடையால் கல்கி வசீகக்கப்பட்டாலும் இருவடையேயும் அப்போது அறிமுகமில்லை. சென்னை தியாகராயர் கல்லூயில் அண்ணா கதை வசனமெழுதி அவரே வேடமேற்று நடித்த “நீதி தேவன் மயக்கம்'' என்ற நாடகம் நடந்து கொண்டிருந்த காலகட்டத்திலே அந்த நாடகத்தை காசு கொடுத்து டிக்கெட் வாங்கி வந்து பார்த்து ரசித்துக் கொண்டிருந்தார் கல்கி.

நாடகத்தில் அண்ணா அவர்கள் இராவணன் வேடமேற்று நடித்துக் கொண்டிருந்தார். கம்பர் மீது இராவணன் வழக்குக் கொடுத்து வாதாடுவதுதான் நாடகக் கதையின் மூலக் கருவாகும்.

“இரக்கமே இல்லாத அரக்கன் இராவணன்'' என்று இராமாயணத்தில் கம்பர் எழுதியது தவறு என்று குற்றம் சாட்டி, இராவணனே குறுக்கு விசாரணை செய்யும் காட்சியிலே...

“நீதிதேவன் அவர்களே! பத்து மாத காலம் எனது பாதுகாப்பிலே பதிவிரதை சீதையை அசோக வனத்திலே தங்க வைத்து, எனது மகளையே தோழியாக்கி, மறுபடியும் இராமனுக்கே மனைவியாக வாழும் தகுதியுடன் தூய்மை கெடாமல் வைத்திருந்தேனே நானா இரக்கமற்ற அரக்கன்?

“இராமன் இலட்சுமணன் இருவடையே என் தங்கை சூர்ப்பனகை சிக்கிக் கொண்ட போது, பெண் என்றும் அவள் மீது இரக்கம் காட்டாமல், இச்சபைக்கே வர முடியாத அளவுக்கு அருவருக்கத்தக்க வகையில் அவளது அவயங்களை அங்கவீனப்படுத்தியவர்களை விட்டு விட்டு, என்னை எப்படி இரக்கமில்லாத அரக்கன் என்று எழுத முடியும்?'' என்று இராவணன் (அண்ணா) கேட்டதும் நீதிதேவன் மயங்கி விழுந்தார்.

நாடகம் பார்த்துக் கொண்டிருந்த கல்கி, நாடகம் முடிந்ததும் மேடையேறி அண்ணாவின் ஆழ்ந்த அறிவாற்றலையும், வாதாடும் திறமையையும் எப்படிப் பாராட்டி வர்ணிப்பதென்றே தெரியவில்லை என்று கூறி அவருடைய தமிழுக்குத் தலைவணங்கி, அவருடைய அனுமதியுடன் அவரை “என் காதலரே'' என வர்ணித்து வாயாரப் புகழ்ந்து வாழ்த்தினார். அதே கல்கிதான், தஞ்சை மாநகரில் அண்ணா அவர்கள் கதை வசனமெழுதி நடிப்பிசைப் புலவர் கே. ஆர். ராமசாமியின் நாடக சபையினரால் தொடர்ந்து ஆறு மாத காலம் நடத்தி வந்த “ஓர் இரவு'' நாடகத்துக்குத் தலைமை தாங்கிப் பேசிய போது, அனைவரதும் அகமகிழ்வுக் கைதட்டல்களுக்கிடையே இதோ நம்மிடையேயும் ஒரு தமிழ் நாட்டு பெர்னாட்ஷா இருக்கிறார் என்று வியந்து பாராட்டியதோடு மட்டுமல்லாமல் இன்று முதல் இனி இவர் அறிஞர் அண்ணா என்றே அழைக்கப்படுவார் என்றும் அறிகப்படுத்தினார். அந்த அறிஞர் பட்டம் அண்ணாவின் பெயருடன் இணைந்து அன்றும் இன்றும் என்றும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

நடிப்பிசைப் புலவர் கே. ஆர். ராமசாமிக்காக ஒரே இரவில் எழுதி முடிக்கப்பட்ட நாடகம் என்பதால்தான், அந்த நாடகத்துக்கு ஓர் இரவு என்றும் பெயர் சூட்டப்பட்டது. இந்த நாடகம் பிறகு திரைப்படமாகவும் தயாரிக்கப்பட்டது.

“துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயா?'' என்ற பாவேந்தர் பாரதிதாசனின் பாடல் வரிகளை இன்று கேட்டால் கூட உடனே ஞாபகத்துக்கு வருவது அறிஞர் அண்ணா வின் “ஓர் இரவு' திரைப்படம்தான்.

பெரிய ஹோட்டல்களில் றூம் எடுத்து, எழுதும் மூட் வருவதற்காக அக்கரைச்சீமைத் தண்ணி வரவழைத்து, சிகரெட் புகைத்த வண்ணம் சிரமப்பட்டுச் சிந்தித்து சினிமாவுக்கு கதை வசனம் எழுதுவோர் மத்தியிலே, அறிஞர் அண்ணாவோ தனது வீட்டில் இரவு 11 மணிக்கு மேல் எழுதத் தொடங்கி விடிய முன் எழுதி முடித்து விடும் ஆற்றல் மிக்கவர்.

உட்கார்ந்தபடி காலின் மேல் காலை மடக்கித் தூக்கிப் போட்டுக் கொண்டு ஒரு புத்தகத்தையோ அல்லது ஒரு தடிப்பமான காட்போட் அட்டையையோ மடியில் வைத்துக் கொண்டு இரவில் ஏழெட்டு மணி நேரத்தில் ஒரு நாடகத்தையோ திரைக்கதை வசனங்களையோ புத்தகங்களையோ திராவிட நாடு இதழுக்கான கட்டுரைகளையோ தம்பிக்கு கடிதங்களையோ வரைந்திடும் வல்லமை பெற்றவர்தான் அறிஞர் அண்ணா.

அற்புதமான பேச்சாற்றலும் எழுத்தாற்றலும் மிக்க எம். ஏ. பட்டதாரியான அறிஞர் அண்ணா, இந்த இரண்டு சக்திகளையும் ஆக்க வழியிலேயே செலுத்தினார் என்பது அனைவரும் அறிந்ததே.

காலத்தோடு ஒட்டிச் செல்லாமல், காலத்திற்கேற்ற மாற்றத்தை உண்டாக்க, கலையுலகில் எதிர் நீச்சலடித்து கருத்துப் புரட்சி செய்த அறிஞர் அண்ணா, அரசியலிலும் சாதனைகள் பல புரிந்து தலைமைச்சராகித் தமிழகத்தில் சரித்திரம் படைத்தார்.

கதை வசனம் எழுதியது யார்? என்று மக்கள் கவனித்துப் பார்த்துக் கையொலி எழுப்பி ஆரவாரம் செய்து வரவேற்ற நிலையே முதன் முதலாக ஏற்படுத்திய தமிழ்த் திரைப்படம்தான், அண்ணா கதை வசனம் எழுதி 1949 ஆம் ஆண்டு வெளிவந்த வேலைக்காரி.

அண்ணா தீட்டிய வேலைக்காரி நாடகம் மிகவும் பரபரப்புடன் மக்களிடம் பெரும் வரவேற்புப் பெற்றது. அடுத்து அறிஞர் அண்ணாவின் “நல்ல தம்பி' படம் . அதில் ஒரு காட்சி : தாயையும் மகளையும் சந்திக்க ஒருவர் அவர்களது குடிசைக்கு வருகிறார். தாய் வீட்டு வாசலில் நிற்கிறாள். மகளைக் கூப்பிடும் போது “இதோ வரேம்மா' என்று வீட்டினுள்ளிருந்து மகளின் குரல் மட்டுமே வெளியில் கேட்கிறது.
திரும்பத் திரும்ப மகளின் குரலே ஒலிக்கிறது.
கடைசியில் மகளைக் கட்டாயம் காட்ட வேண்டிய கட்டம் வருகிறது.

“இதோ மகளை அனுப்புகிறேன்'' என்று கூறி விட்டு தாய், வீட்டினுள்ளே போகிறாள். சில நிமிடங்கள் கழிந்து மகள் வெளியே வருகிறாள்.
மகளுடன் தாய் வராமல், மகளை மட்டுமே அனுப்பியதற்கான காரணம் இப்போதுதான் பளிச்சென்று புரிகிறது. இருவருக்கும் இருப்பதோ ஒரே சேலை. தாய் முதலில் கட்டிக் கொண்டு வந்ததை இப்போது மகள் கட்டிக் கொண்டு வந்திருக்கிறாள்.

வறுமை நிலையை அண்ணா இப்படித் துல்லியமாக விளக்கிய விதம் இதயத்தைத் தொட்டது.

மக்களின் பேராதரவைப் பெற்றிருந்தும், இரண்டு ஆண்டுகள் மட்டுமே பதவியில் இருக்க அவரால் முடிந்தது. புற்று நோய்க்கு ஆளான அவர், 2-3 பிப்ரவரி 1969இல் காலமானார். அண்ணாவின் இறுதி யாத்திரையின் போது கலந்து கொண்ட மக்கள் தொகை சுமார் 30 லட்சமாகும். இது கின்னஸ் சாதனை என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கதாகும். ஒரு முதலமைச்சராக மட்டுமன்றி, ஒரு அறிஞராகவும், சமூக சீர்திருத்தவாதியாகவும், ஒரு சிறந்த அரசியல்வாதியாகவும், மிகச் சிறந்த பேச்சாளராகவும், மக்கள் தலைவனாகவும், இன்றும் தமிழக மக்களால் அவர் நினைவுகூரப்படுகிறார்
எளிய குடும்பத்தில் பிறந்து, நல்ல மாணவராக, ஆற்றல் மிக்க பேச்சாளராக, சிறந்த பத்திரிக்கை ஆசிரியராக, நல்ல நூலாசிரியராக , நாடக ஆசிரியராக, நாடக நடிகராக, ஒரு பேரியக்கத்தின் தலைவராக, பண்பட்ட அரசியல்வாதியாக, நாடு போற்றிய முதலமைச்சராக, ஓங்கு புகழ் பெற்றவர் பேரறிஞர் அண்ணா அவர்கள்.

திராவிட நாடு, ஹோம் லேண்ட், காஞ்சி, ஜஸ்டிஸ், குடியரசு, நம்நாடு, பாலபாரதி, நவயுகா, ஹோம் ரூல், போன்ற பத்திரிகைகளின் ஆசிரியராக விளங்கியவர். சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, ஹாங்காங், கம்போடியா, ஜப்பான், அமெரிக்கா, ஆகிய நாடுகளில் பயணம் மேற்கொண்டவர். விலைவாசி உயர்வு எதிர்ப்பு மறியல் போராட்டம், மும்முனைப் போராட்டம், கட்டாய இந்தி பதினேழாவது மொழிப் பிரிவு சட்ட நகல் எரிப்புப் போராட்டம் என பல போராட்டங்களில் ஈடுபட்டு சிறை சென்றவர்.

1967ஆம் ஆண்டு முதல் 1969 வரை தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த காலத்தில் சென்னை மாநிலத்தை தமிழ்நாடு என்று அழைக்க, அரசியல் சட்டத்தில் உரிய திருத்தம் செய்ய வகை செய்தவர். சீரும் சிறப்புமாக இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டை சென்னையில் நடத்திக் காட்டியவர். தாய்மொழி தமிழ், உலக மொழி ஆங்கிலம் ஆகிய இருமொழித் தீர்மானத்தை சட்டப் பேரவையில் நிறைவேற்றச் செய்தவர். கலப்புத் திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் அளித்தவர். மேடைப் பேச்சுக்கு இலக்கணம் வகுத்தவர். அரசியல் நாகரிகத்தைக் கடைபிடித்தவர். தமிழ், தமிழர், தமிழ்நாடு உயரவும், இளைஞர்கள் எழுச்சி பெறவும், தூங்கிக் கிடந்த தமிழர்களைத் தட்டியெழுப்பி விழிப்புணர்ச்சி ஊட்டவும், காலமெல்லாம் தம் எழுத்துக்களைப் பயன்படுத்தியவர்.

அடக்கம், எளிமை, மாற்றாரை மதித்தல், பிறர் மனம் புண்படாமல் பேசும் பாணி, எல்லாம் நானே என இறுமாத்திராத இளகிய இரக்க குணம். இப்படி உயரிய பல பண்புகளின் உறை விடமாக உயர்ந்த உத்தமர்தான் அமரர் அறிஞர் அண்ணா.

இவர் முன்வைத்த கருத்துக்கள்

* ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்.

* சட்டம் ஒரு இருட்டறை, வக்கீலின் வாதம் ஒரு விளக்கு.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல