திங்கள், 26 மார்ச், 2012

முள்ளிவாய்க்கால் அழிவு பற்றி முன்கூட்டியே சொன்ன அமிர்!

1989ஆம் ஆண்டு ஜூலை மாதம் 13ஆம் திகதி தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் அமிர்தலிங்கம் சுட்டுக்கொல்லப்பட்டார். புலிகள் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் அமிர்தலிங்கமும் முன்னாள் யாழ்ப்பாண எம்.பி.யான வி.யோகேஸ்வரனும் கொல்லப்பட்டனர். கூட்டணியின் முக்கியஸ்தர்களில் ஒருவரான சிவசிதம்பரம் படுகாயங்களுக்கு இலக்கானார். புலிகளின் இயக்கப் பெயர்களைக் கொண்ட விசு, அலோசியஸ், அறிவு ஆகியோரைக் கொண்ட குழுவே துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டது. விசு என்பவரின் இயற்பெயர் இராசையா அரவிந்தராஜ். இவர் வவுனியாவில் புலிகள் இயக்கத்தின் அரசியல்துறைப் பொறுப்பாளராகக் கடமையாற்றியவராவார். கூட்டணித் தலைவர்களின் மெய்ப் பாதுகாவலர்கள் நடத்திய பதில் தாக்குதலில் புலி இயக்க உறுப்பினர்கள் மூவருமே ஸ்தலத்தில் கொல்லப்பட்டனர். கொழும்பு, பௌத்தலோக மாவத்தையிலுள்ள 342/2ஆம் இலக்க இல்லத்தில் கூட்டணித் தலைவர்கள் அக்காலத்தில் தங்கியிருந்தனர். இங்குதான் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.


தமிழீழக் குழுக்கள் மத்தியில் ஐக்கியத்தை ஏற்படுத்துவது தொடர்பாகக் கூட்டணித் தலைவர்களுடன் கலந்துரையாடும் நோக்குடன் வந்;ததாகக் கூறியே கொலையாளிகள் வருகை தந்திருந்தனர். இக் காலகட்டத்தில் நாட்டின் ஜனாதிபதியாக இருந்தவர் ரணசிங்க பிரேமதாசா 1987 ஜூலையில் மேற்கொள்ளப்பட்ட இலங்கை-இந்திய ஒப்பந்தத்தையடுத்து இலங்கைக்கு வருகை தந்திருந்த இந்தியப் படையினர் வடக்கு-கிழக்கில் நிலைத்;த காலமது. அது மட்டுமல்ல, இந்தியப் படை புலிகளைக் காடுகளுக்குள் ஓரம் கட்டிவிட்ட நேரமும் கூட. ஜனாதிபதி பிரேமதாசாவுக்கும் புலிகளுக்குமிடையில் பேச்சுவார்த்தைகளும் இடம்பெற்றுக் கொண்டிருந்தன. இந்தியப் படையை இலங்கையிலிருந்து வெளியேற்ற வேண்டுமென்ற நிலைப்பாட்டில் பிரேமதாசா இருந்தார். புலிகளுக்கும் இந்தப் பொது நோக்கமே இருந்தது. இந்தப் பின்புலங்களோடுதான் அமிர்தலிங்கம் கொலையுண்ட சம்பவத்தைப் பார்க்க வேண்டியுள்ளது.

அமிர்தலிங்கம் கொலை செய்யப்பட்டமைக்கும் புலிகள் இயக்கத்துக்கும் எவ்வித சம்பந்தமுமில்லை என்று லண்டனிலிருந்த புலிகளின் தலைமைக் காரியாலயம் உடனடியாகவே அறிக்கை விடுத்தது. இலங்கை அரசாங்கத்துக்கும் புலிகள் இயக்கத்துக்குமிடையில் நடைபெற்றுவரும் பேச்சுவார்த்தையைக் குழப்புவதற்காகச் சில தீய சக்திகள் திட்டமிட்டுச் செயற்படுவதாக அந்த அறிக்கை சந்தேகத்தையும் வெளியிட்டிருந்தது. பிரேமதாச அரசாங்கமும் புலிகள் மீது சுட்டுவிரலை நீட்டிக் குற்றஞ்சாட்டத் தயங்கியது. ஆனால் மூன்று மாதங்களின் பின்னர் ரீட்டா செபஸ்தியன் என்ற பெண் பத்திரிகையாளர் குட்டை உடைத்தார். மட்டக்களப்பிலுள்ள புலி முகாம்களில் மாட்டப்பட்டிருந்த மாவீரர்களின் புகைப்படங்களின் மத்தியில் மூன்று கொலையாளிகளின் படங்களையும் தான் பார்த்ததாக ரீட்டா செபஸ்ரியன் சொன்னார். கொழும்பில் நடைபெற்ற பத்திரிகையாளர் மாநாடொன்றில் பாதுகாப்பமைச்சர் ரஞ்சன் விஜயரத்னவின் முகத்துக்கு நேரேயே அவர் இதனைக் கூறினார். அமைச்சர் விஜயரத்ன வெலவெலத்துப் போனார். பிரேமதாசா அரசுடன் பேசுவதற்காக கொழும்புக்கு வருகை தந்திருந்த புலிப் பிரமுகர் யோகியிடம் இது குறித்து விசாரிக்கப் போவதாகக் கூறி அமைச்சர் விஜயரத்ன சமாளித்துக் கொண்டார். ரீட்டா செபஸ்ரியன் டெய்லி நியூஸ் ஆங்கிலப் பத்திரிகையில் செய்தியாளராகப் பணியாற்றியவர். டெய்லி நியூஸ், லேக்ஹவுஸ் பத்திரிகை நிறுவனத்தின் ஆங்கிலத் தினசரியாகும். இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையின் கொழும்பு நிருபர் என்ற கோதாவிலேயே மேற்கண்ட பத்திரிகையாளர் மாநாட்டில் கலந்துகொண்டார்.

அமிர்தலிங்கத்தைப் புலிகள்தான் சுட்டுக் கொன்றனர் என்ற உண்மையை புலிகளின் பிரதித் தலைவராக விளங்கிய மாத்தையா பின்னர் ஏற்றுக் கொண்டார். கொழும்பிலிருந்து வெளிவந்து கொண்டிருந்த 'லங்கா கார்டியன்' என்ற ஆங்கில சஞ்சிகைக்கு வழங்கிய பேட்டியில் இதனை ஒத்துக்கொண்டார். இந்தியாவின் ஏஜன்டுகளாக விளங்கிய காரணத்தினால்தான் அமிர்தலிங்கத்தையும் ஏனைய தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர்களையும் கொன்றோம். சுருங்கச் சொல்வதானால் துரோகிகளைத்தான் கொன்றோம். இலட்சியத்துக்குத் துரோகம் இழைப்பவர்களைப் புலிகள் இயக்கம் கொல்லும்' என்றார் மாத்தையா. இந்தத் தகவல் அடங்கிய மாத்தையாவின் பேட்டி 1990ஆம் ஆண்டு மார்ச் 15ஆம் திகதிய 'லங்கா கார்டியன்' சஞ்சிகையில் பிரசுரமாகியிருந்தது. இதே மாத்தையாவை 'துரோகி' என்று சொல்லி பிரபாகரன் சிறையில் அடைத்து சித்திரவதை செய்து கொன்றார்.

பல்வேறு தமிழீழ ஆயுதக் குழுக்களிடையே ஐக்கியம் ஏற்பட வேண்டுமென்பதற்கான பேச்சுவார்த்தையில் புலிகள் தரப்புடன் ஏற்கனவே நான்கு தடவைகள் யோகேஸ்வரன் பேச்சுக்களில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அன்றைய கலந்துரையாடலில் அமிர்தலிங்கமும் சிவசிதம்பரமும் எதிர்பாராமலேயே சிக்கிக் கொண்டனர். கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் அன்று இரவு நடைபெறவிருந்த விருந்துபசாரத்தில் கலந்துகொள்வதற்காகத் தயாராகிக் கொண்டிருந்த வேளையிலேயே அமிர்தலிங்கம் அகஸ்மாத்தாக இந்தப் பேச்சுவார்த்தையில் சிக்கிக்கொண்டார். இந்தியப் பிரதமர் ராஜிவ் காந்தியின் விசேட பிரதிநிதியாக வருகை தந்திருந்த பி.ஜி.தேஷ்முக்கை வரவேற்குமுகமாக இந்த விருந்துபசாரம் ஏற்பாடாகியிருந்தது.

விசுவையும் அலோஸியசையும் அன்று சந்தித்தபோது புலிகளின் வீரம், அர்ப்பணிப்பு, கட்டுப்பாடு ஆகியவற்றைத் தான் மதிப்பதாக அமிர் தெரிவித்தார். ஆனாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஜனநாயக நடைமுறைகளைப் புலிகள் பின்பற்ற வேண்டுமெனத் தான் விரும்புவதாகவும் அமிர் குறிப்பிட்டிருந்தார். அமிர்தலிங்கத்துக்கு ஏற்கனவே புலிகள், மரண தண்டனை வழங்கப்படுமெனக் கூறியிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

அமிர் கொல்லப்படுவதற்கு மூன்று வருடங்கள் முன்னதாகவே ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப். ஆகிய தமிழீழ ஆயுதக்குழுக்கள் மீது புலிகள் தாக்குதல் நடத்தி அழித்திருந்தனர். அத்துடன் அனைத்துத் தமிழ் குழுக்களுக்கும் புலிகள் தடை விதித்துமிருந்தனர். புலிகள் நடத்திய தாக்குதல்களில் ஏனைய தமிழ்க் குழுக்களைச் சேர்ந்த ஆயிரத்துக்கு மேற்பட்ட இளைஞர், யுவதிகள் கொல்லப்பட்டிருந்தனர்.

தனித்தமிழ் நாட்டுக்கான தமிழீழப் பிரகடனம், 1976ஆம் ஆண்டு மே மாதம் 14ஆம் திகதி தமிழர் ஐக்கிய முன்னணியினரால் வெளியிடப்பட்டிருந்தது. தமிழரசுக் கட்சி, தமிழ்க் காங்கிரஸ், இதொ.கா. உட்பட தமிழ் கட்சிகள் கலந்துகொண்ட இந்த மாநாட்டிலேயே தமிழீழப் பிரகடனம் வெளியிடப்பட்டது. வட்டுக்கோட்டையிலுள்ள பண்ணாகம் என்ற இடத்தில் இந்த மாநாடு நடைபெற்றது. பண்ணாகம், அமிர்தலிங்கம் பிறந்து வாழ்ந்த இடம். வட்டுக்கோட்டைப் பிரகடனம் வெளியிடப்பட்ட அன்றைய தினமும் தமிழ்க் கட்சிகள் தமது கூட்டமைப்பின் பெயரை தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி என்று பெயர் மாற்றம் செய்து கொண்டனர்.

இதற்கு முன்னதாகவே தமிழீழம் பற்றிச் செல்வநாயகம், அமிர்தலிங்கம் உட்படப் பல தமிழ்த் தலைவர்கள் மேடைகளில் முழங்கத் தொடங்கிவிட்டனர். அமிர்தலிங்கம் ஆற்றல் மிக்க மேடைப் பேச்சாளர். தமிழீழத்தை அமைக்க வேண்டிய பொறுப்பு தமிழ் இளைஞர்களின் கைகளிலேயே உள்ளதென்றும் கூட அமிர் பேசியிருக்கிறார். மறுபுறத்தில் மாத்தையா குற்றஞ்சாட்டியது போன்று, இந்தியத் தலையீட்டுடன்தான் இலங்கைத் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியுமென்று வலுவாக நம்பியவர் அமிர்தலிங்கம். இலங்கையில் தமிழீழம் உருவாக வேண்டுமென்ற நோக்கம் இந்திராகாந்தி காலத்திலிருந்தே இந்தியாவுக்கு இருந்ததில்லை. இலங்கையில் தமிழீழம் உருவானால் அது இந்தியாவின் தமிழ்நாட்டில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது இந்தியாவுக்கும் புரியாததல்ல. இந்தித் திணிப்பை எதிர்த்துத் தமிழ்நாட்டில் தனிநாட்டுக் கோஷத்தை சீ.என்.அண்ணாதுரை காலத்திலேயே தி.மு.க. முன்வைத்திருந்தது. 1962ஆம் ஆண்டு இந்தியா-சீன எல்லை யுத்தத்தின்போதுதான் தி.மு.க தனிநாட்டுக் கோஷத்தைக் கைவிட்டது.

இந்தியாவில் தனித்தமிழ்நாட்டுக் கோஷம் ஆடி அடங்கியபோது இலங்கையில் தமிழ்ப் பிரிவினைக் கோஷம் முளைவிடத் தொடங்கிவிட்டது. அடங்காத் தமிழர் என்று வர்ணிக்கப்பட்ட சி.சுந்தரலிங்கம் 1960களிலேயே இந்தக் கோஷத்தை முன்வைக்கத் தொடங்கிவிட்டார். ஊர்காவற்றுறை எம்.பி.யாகவிருந்த சி.நவரட்ணமும் 1960களிலேயே தனிநாட்டுக் கோரிக்கையை முன்வைக்கத் தொடங்கிவிட்டார். அப்போதெல்லாம் தனிநாட்டுக் கோரிக்கை சாத்தியப்படாது என்று உரக்கப் பேசி வந்தவர் அமிர்தலிங்கம். 1970களின் மத்திய பகுதி வரை இதுவே அமிர்தலிங்கத்தினதும் அவர் சார்ந்து செயற்பட்ட தமிழரசுக் கட்சியினதும் செயற்பாடாக இருந்தது.

திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம், மொழியுரிமை மற்றும் வேலைவாய்ப்புக்களில் காட்டப்பட்ட பாரபட்சம், மொழிவாரித் தரப்படுத்தல் போன்றவையே தமிழ் இளைஞர்களை ஆயுதங்களுடன் அரசியல் அரங்கிற்கு இழுத்து வந்தது. தமிழர் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் இலங்கை அரசுகள் காட்டி வந்த அசமந்தப் போக்குகளும் இதற்குக் காரணமாக அமைந்தன. அமிர்தலிங்கம் போன்ற தமிழ் மிதவாதத் தலைவர்களின் செயற்பாடுகளும் இளைஞர்களுக்கு உசுப்பேத்தின என்பதை மறுக்க முடியாது. பின்நாட்களில் புலி வாலைப் பிடித்த நிலைக்குத் தமிழ்த் தலைவர்கள் தள்ளப்பட்டனர்.

1977ஆம் ஆண்டு தமிழர் விடுதலைக் கூட்டணிக்கும் புலிகளுக்குமிடையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. கூட்டணி சார்பில் அமிர்தலிங்கமும் புலிகள் சார்பில் உமா மகேஸ்வரன், பிரபாகரன், ஐயர், விச்சுவேஸ்வரன், நாகராசா ஆகியோரும் பங்குபற்றினர். பிரபாகரனும் உமா மகேஸ்வரனும் ஒன்றாகச் செயற்பட்ட காலமது. தமிழர் விடுதலைக் கூட்டணி, வெகுஜன அமைப்பாகவும், புலிகள் இயக்கம் தலைமறைவாகவும் இயங்குவதென இந்தக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. புலிகளுக்கு நிதி, பயிற்சி, ஆயுத உதவி ஆகியவற்றை வழங்குவதற்கான பொறுப்பைத் தான் ஏற்பதாகவும் இந்தக் கூட்டத்தில் அமிர்தலிங்கம் ஒப்புக்;கொண்டார். ஆனால் இத்தகைய உதவிகளை அமிர்தலிங்கம் வழங்கவே இல்லை என்று குற்றச்சாட்டுக்கள் பின்னர் எழுந்தன. இதற்குக் காரணங்களும் இருந்தன. அமிர்தலிங்கத்துக்கு வன்செயல்களில் நாட்டம் இருக்கவில்லை. அப்போதெல்லாம் தமிழர் விடுதலைக் கூட்டணியின் இளைஞர் அணியாக இளைஞர் பேரவையே திகழ்ந்தது. மாவை சேனாதிராசா, காசி ஆனந்தன் உட்படப் பெரும்பாலான இளைஞர் பேரவை உறுப்பினர்களெல்லாம் ஆயுதப் போராட்டத்தின் மூலம் தனித் தமிழ்நாட்டை உருவாக்கலாம் என்பதிலேயே அதிக அக்கறை கொண்டு செயற்பட்டனர். 1971இல் கொண்டுவரப்பட்ட பல்கலைக்கழக அனுமதிக்கான மொழிவாரித் தரப்படுத்தல் யாழ்ப்பாணத் தமிழ் மாணவர்களையே பெரிதும் பாதித்தது. மாணவர் பேரவையில் அங்கம் வகித்த இளைஞர்கள் பலர், தனித்தனியாகவும், குழுக்களாகவும் இணைந்து அரச விரோத வன்செயல்களில் ஈடுபடத் தொடங்கினர்.

1972ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் தமிழகத்திலுள்ள பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களை எஸ்.ஜே.வி.செல்வநாயகமும், அமிர்தலிங்கமும் சந்தித்து இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைகள் பற்றிக் கலந்துரையாடினர். அங்கு உரையாற்றிய செல்வநாயகம், 'இலங்கை வாழ் தமிழர்கள் தனிநாடொன்றினை உருவாக்குவதற்கு விரைவிலேயே அஹிம்சை வழியில் போராட்டத்தை ஆரம்பிக்க வேண்டிய நிலை ஏற்படலாம்' என்று கூறினார்.

காலவோட்டத்தில் ஆயுதப் போராட்டத்தில் அக்கறை கொண்ட தமிழ் இளைஞர்களின் எடுகோள்களுக்கு முற்றுமுழுதான விருப்பமில்லாமலேயே கைதியானார் அமிர்தலிங்கம். 1972ஆம் ஆண்டு காலப் பகுதியிலேயே உமாமகேஸ்வரன், பிரபாகரன், செட்டி தனபாலசிங்கம், ஆகியோர் இணைந்து புதிய தமிழ் புலிகள் என்ற அமைப்பைத் தோற்றுவித்தனர். இதுவே 1975ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமாக மாற்றம் பெற்றது. புதிய தமிழ் புலிகள் என்று அமைப்பே வன்செயல்களுக்குப் பிள்ளையார் சுழி போட்டது. 1972இல் தமிழரசுக் கட்சித் தலைவர்களின் முன்முயற்சியின் பேரில் தமிழர் ஐக்கிய முன்னணி தோற்றம் பெற்றது. இதுவே 1976ஆம் ஆண்டு வட்டுக்கோட்டைப் பிரகடனம் வெளியிடப்பட்ட தினத்தன்று தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியாக விரிவு பெற்றது.

1978ஆம் ஆண்டு வாக்கிலேயே புலிகள் இயக்கத்துக்குள் உள்முரண்பாடுகள் கூர்மையடைந்ததோடு, உட்கட்சிப் படுகொலைகளும் இடம்பெறத் தொடங்கின. பிரபாகரன் சுத்த இராணுவக் கண்ணோட்டத்துடன் இயங்குகிறாரென்று உமாமகேஸ்வரன், சுந்தரம் ஆகியோர் குற்றம்சாட்டினர். அரசியலுக்காகவே இராணுவம் என்பது உமாமகேஸ்வரன், சுந்தரம் போன்றோரின் கருத்தாக இருந்தது.

1980களின் ஆரம்ப வருடங்களில் சுந்தரம் குழுவினர் 'புதிய பாதை' என்ற பெயரில் பத்திரிகையொன்றினை வெளியிட்டு வந்தனர். மாவட்ட அபிவிருத்திச்சபை தொடர்பான தொடர் பேச்சுவார்த்தைகளில் ஜே.ஆர்.ஜெயவர்த்தன அரசுடன் அமிர்தலிங்கம் ஈடுபட்டிருந்த காலமது. அமிர்தலிங்கத்தையும் தமிழர் விடுதலைக் கூட்டணியையும் 'புதிய பாதை' கடுமையாக விமர்சித்து வந்தது. 1982ஆம் ஆண்டு ஜனவரி இரண்டாம் திகதி சுந்தரம் சுட்டுக் கொல்லப்பட்டார். யாழ்ப்பாணம் வெலிங்டன் தியேட்டருக்கு எதிரிலிருந்த சித்திரா அச்சகத்தில் 'புதிய பாதை' பத்திரிகை வெளியீடு தொடர்பான வேலைகளுக்காகச் சென்றிருந்த வேளை சுந்தரம் சுட்டுக் கொல்லப்பட்டார். பிரபாகரன் குழுவினரே சுந்தரத்தைச் சுட்டுக் கொன்றனர். இக் காலகட்டத்தில் அமிர்தலிங்கத்தின் செல்லப்பிள்ளையாக பிரபாகரன் செயற்பட்டு வந்தாரென்று உமாமகேஸ்வரன் குழுவினர் குற்றஞ்சாட்டி வந்தனர்.

தமிழர் விடுதலைக் கூட்டணிக்கும் பிரபாகரனுக்குமிடையிலான நெருக்கத்தைக் குறிப்பதற்கு இன்னுமொரு சம்பவத்தையும் குறிப்பிட முடியும். தமிழர் விடுதலைக் கூட்டணியின் அஹிம்சை வழி அரசியல் நடவடிக்கைகளை விமர்சிப்பதெனப் புலிகள் இயக்கம் தீர்மானம் எடுத்திருந்தது. இந்தத் தீர்மானத்துக்கான முன்முயற்சியை மேற்கொண்டவர் உமாமகேஸ்வரன். 1970களில் பிற்பகுதியில் இச் சம்பவம் இடம்பெற்றது. கூட்டணியை விமர்சித்து உமாமகேஸ்வரன் எழுதி அச்சிட்ட துண்டுப் பிரசுரங்களை இந்தியாவிலிருந்து இலங்கையின் வடபகுதிக்குக் கொண்டுவரும் பொறுப்பு பிரபாகரனிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. இராமேஸ்வரத்திலிருந்து களவாக படகுமூலம் துண்டுப் பிரசுரங்களை இலங்கையின் வடபகுதிக்குப் பிரபாகரன் கொண்டு வந்தும்விட்டார். இப் பிரசுரங்களை மக்களுக்கு விநியோகிக்க வேண்டாமென்று அமிர்தலிங்கமும் காசிஆனந்தனும், பிரபாகரனிடம் வேண்டுகோள் விடுத்தனர். அதற்கிணங்க பிரபாகரன் துண்டுப் பிரசுரங்களை எரித்து அழித்துவிட்டார்.

புதிய தமிழ் புலிகள் முதலாவது வங்கிக் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டிருந்தபோது, தப்பியோட முனைந்த பொன்.சிவகுமாரன் பொலிசாரிடம் சிக்கிக் கொண்டார். சிவகுமாரன் கழுத்தி;ல் அணிந்திருந்த சயனைட் குப்பியை விழுங்கித் தற்கொலை செய்துகொண்டார். இந்தச் சம்பவம் 1974ஆம் ஆண்டு ஜூன் மாதம் நான்காம் திகதி நடைபெற்றது. புதிய தமிழ் புலிகள் எடுத்துக்கொண்ட உறுதிமொழிக்கேற்ப பிடிபடாமல் தப்புவதற்காகச் சயனைட் விழுங்கித் தற்கொலை செய்துகொண்ட முதலாவது நபர் சிவகுமாரன்தான். கோப்பாயிலுள்ள மக்கள் வங்கியைக் கொள்ளையிடும் முயற்சியின்போதே இச் சம்பவம் இடம்பெற்றது. சிவகுமாரனின் பூதவுடல் யாழ் ஆஸ்பத்திரிச் சவச்சாலைக்குக் கொண்டு செல்லப்பட்டது. சவச்சாலைக்குச் சென்று அமிர்;தலிங்கமும் சிவசிதம்பரமும் அஞ்சலி செலுத்தியதோடு சிவகுமாரனின் பிரேத ஊர்வலத்திலும் இருவரும் பங்குபற்றினர். மரணச் சடங்கில் அமிர்தலிங்கம் ஆற்றிய உரை தென்னிலங்கையில் பெரும் எதிர்ப்பலைகளைக் கிளப்பியது.

'தமிழ் மக்களுக்காகத் தம்பி சிவகுமாரன் மாபெரும் தியாகத்தைச் செய்துள்ளார். இது அவரது வீரச்செயல். தமிழ் மக்களின் பிறப்புரிமையைப் பெற்றுக் கொள்ளும் இலக்கை அடைவதற்கு அவர் ஏற்றுக்கொண்டு செயற்பட்ட வன்செயல்பாணிச் செயற்பாட்டை நான் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும், அவரின் தியாகத்துக்கும் அர்ப்பண சிந்தைக்கும் தலை வணங்குகிறேன்' இவ்வாறு அமிர்தலிங்கம் கூறியமை தென்னிலங்கையில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. அக் காலகட்டத்தில் வடக்கிலும் கிழக்கிலும் முப்பதுக்கு மேற்பட்ட தமிழ்க்குழுக்கள் செயற்பட்டு வந்தன. வங்கிக் கொள்ளைகள், மாற்றுக் கருத்தாளர் படுகொலைச் சம்பவங்கள் பல இடம்பெற்று வந்தன. இதனால் அமிர்தலிங்கம் வன்செயல்களுக்குத் தூபமிடுகிறார் என்று பலமான விமர்சனங்களைத் தென்னிலங்கைச் சிங்கள அரசியல்வாதிகளும் ஊடகங்களும் காரசாரமாக மேற்கொண்டன. ஆனால் தனித் தமிழ்நாட்டுப் பிரிவினையை ஆதரித்து வந்த தமிழ் மக்கள் மத்தியில் அவர் கதாநாயகனாகப் பார்க்கப்பட்டார்.

அஹிம்சை வழிமுறையைத்தான் மனப்பூர்வமாக அமிர்தலிங்கம் வலியுறுத்தினாரென்றால், வன்செயல்பாணி வங்கிக் கொள்ளையில் ஈடுபட்ட ஓர் இளைஞனின் செயற்பாட்டைத் தியாகமென்றும் அர்ப்பணிப்பு என்றும் அமிர்தலிங்கம் வர்ணித்தது நியாயமா? அமிர்தலிங்கம் ஆயுதக் குழுக்களின் துப்பாக்கிகளுக்குப் பயந்தாரா? அல்லது சந்தர்ப்ப சூழ்நிலைகளின் சிறைக் கைதியானாரா? அல்லது தமிழ் மக்களின் நியாயமான உரிமைகளைப் பெறுவதற்கு அஹிம்சை வழிமுறையும், ஆயுதப் போராட்டமும் தேவையென்று கருதினாரா?

ஆனால், அமிர்தலிங்கத்தின் தொடர் செயற்பாடுகளில் முரண்பாடுகளின் முகங்கள் தெளிவாகவே தெரிந்தன. 1977ஆம் ஆண்டுத் தேர்தலில் பொத்துவில் தொகுதியிலிருந்து தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட கனகரட்ணம், ஐ.தே.க.வுக்கு கட்சி மாறியபோது அவரைத் துரோகியென வர்ணித்தார். அவரை உமாமகேஸ்வரனும் பிரபாகரனும் சுட்டுக்கொன்றபோது அக் கொலைச் சம்பவத்தைக் கண்டித்தார். 1981இல் இடம்பெற்ற யாழ் மாவட்ட சபைத் தேர்தலில் ஐ.தே.க.சார்பில் போட்டியிட்ட தியாகராசா சுட்டுக்கொல்லப்பட்டபோது அதற்குப் பலத்த கண்டனம் தெரிவித்தார். வன்செயல்கள் மூலம் தமிழ் மக்கள் தமது இலட்சியத்தை அடைந்துவிட முடியாது என்றும் சொன்னார்.

1979ஆம் ஆண்டு மார்ச் மாதம் சென்னை செய்தியாளர்கள் மத்தியில் அமிர்தலிங்கம் உரையாற்றினார். கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கையில், இலங்கையில் தமிழ் இளைஞர்களின் வன்செயல் இயக்கமே இல்லையென்று அடியோடு மறுத்தார். 'இன்னும் பத்து வருடங்களில் சுதந்திரமும் இறைமையும் மிக்க தனிநாடொன்றினை இலங்கைத் தமிழர்கள் ஈட்டுவார்கள்' என்று அதே மாதம் மதுரையில் உரையாற்றுகையில் கூறினார். ஆனால் பத்து வருடங்கள் கழிந்த பின்னர் 1989ஆம் ஆண்டு புலிகளால் அமிர்தலிங்கம் சுட்டுக் கொல்லப்பட்டார். இலங்கையில் தமிழ் இளைஞர்களின் வன்செயல் இயக்கமே இல்லையென்று கூறிய அமிர்தலிங்கம், பத்து வருடங்களில் தனித்தமிழீழம் கிடைத்துவிடுமென்று கூறிய அமிர்தலிங்கம் தனித்தமிழ்நாட்டை உருவாக்குவதற்காக இலங்கையில் ஆயுதமேந்திய புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

1979ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஜனாதிபதி ஜெயவர்த்தன தனது மருமகனான பிரிகேடியர் வீரதுங்காவை யாழ்ப்பாணத்திற்கு அனுப்பிவைத்தார். ஆறு மாதங்களுக்குள், அதாவது அந்த வருடம் முடிவடைவதற்கு முன்னர் நாட்டிலிருந்து குறிப்பாக யாழ்ப்பாணத்திலிருந்து முற்றாகப் பயங்கரவாதத்தை நிர்மூலமாக்க வேண்டும் என்று உத்தரவிட்டே அவர் யாழ்ப்பாணத்திற்கு அனுப்பப்பட்டார். அவர் யாழ்ப்பாணம் சென்று செய்த முதல் வேலை புலிகளெனச் சந்தேகிக்கப்பட்ட ஆறு தமிழ் இளைஞர்களைச் சுட்டுக்கொன்று யாழ் நகர வீதிகளில் வீசியதுதான். இது தமிழ் இளைஞர்களின் வன்செயல் உணர்வுகளுக்கு மேலும் உரமிட்டது. அத்துடன் நாடெங்கிலும் வதந்திகள் பரப்பி விடப்பட்டிருந்தன. மீண்டுமொருமுறை இனக்கலவரம் கட்டவிழ்த்துவிடப்படக்கூடிய சூழ்நிலை நிலவியது.

1977இல் ஜே.ஆர்.ஜெயவர்த்தன ஆட்சிக்கு வந்து ஒரு மாதம் கழிவதற்கிடையில் யாழ்ப்பாணத்தில் பொதுமக்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டன. யாழ்.சென் பற்றிக்ஸ் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற களியாட்ட விழாவொன்றில் இடம்பெற்ற கைகலப்புகளே இதற்குக் கால்கோள் இட்டது. இதன் விளைவாக யாழ் பல்கலைக்கழக மாணவர்களை புலிகள் மிரட்டி விரட்டினார்கள். விளைவு நாட்டின் பல பகுதிகளில் தமிழ் மக்கள் தாக்கப்பட்டார்கள். உடைமைகள் கொள்ளையடிக்கப்பட்டன. தீவைப்புக்களும் தாராளமாகவே இடம்பெற்றன. நாட்டு மக்களுக்கு ஊடகங்கள் மூலம் உரையாற்றிய ஜே.ஆர்.ஜெயவர்த்தன 'யுத்தம் என்றால் யுத்தம், சமாதானம் என்றால் சமாதானம்' என்று சவால் விடுத்தார். அரசாங்கத் தகவல்களின்படி 112 தமிழர்கள் கொல்லப்பட்டனர். சுமார் 25,000 பேர் வீடு, வாசல்களை இழந்தனர்.

1979இல் மீண்டும் ஓர் ஆபத்தான சூழ்நிலை உருவாகுவதைத் தடுப்பதற்கு அமிர்தலிங்கம் விரைந்து செயற்பட்டார். வடக்கு, கிழக்கில் வாழும் சிங்கள மக்களைப் பாதுகாப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு தமிழர் விடுதலைக் கூட்டணிப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அவசர செய்தியொன்றினை அனுப்பிவைத்தார்.

இராணுவத்தினரையும் பொலிசாரையும் ஆயுதமேந்திய இளைஞர்கள் தாக்கிக் கொல்வதற்கு முக்கிய காரணமொன்றிருந்தது. தாக்கிவிட்டுத் தப்பியோடினால் படையினர் மக்களைத் தாக்குவார்கள், இதனால் மக்களின் ஆதரவு தமக்குக் கிடைக்குமென்ற சுத்த இராணுவக் கண்ணோட்டம் புலிகளுக்கு மட்டுமல்ல, அரசியலில் முதன்மைப்படுத்துவதாகக் கூறிக்கொண்ட வேறு பல தமிழீழ ஆயுதக் குழுக்களுக்கும் இருந்தது. இவற்றில் பெரும்பாலானவற்றை தமிழர் விடுதலைக் கூட்டணியும் அமிர்தலிங்கமும் கண்டிக்கத் தவறவில்லை.

பிரிவினைக் கோஷத்தோடு ஆயுதமேந்தியவர்கள் அமிர்தலிங்கத்தை துரோகியாகவே பார்த்தனர். 1980களின் ஆரம்பங்களில் அமிர்தலிங்கம் தனது தவறுகளைச் சரிவரப் புரிந்துகொண்டார்.

1982ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 14ஆம் திகதி கிருஷ்ணா வைகுந்தவாசன் என்பவர் லண்டனில் சுதந்திர தமிழீழப் பிரகடனத்தை வெளியிட்டார். நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். இவர் தன்னைத் தானே லண்டனிலுள்ள தமிழர் ஒருங்கிணைப்புக் கமிட்டியின் தலைவரென்றும் கூறிக்கொண்டார். இவர்தான் நியூயோர்க்கில் நடைபெற்ற ஐ.நா.பொதுச் சபைக் கூட்ட மேடையில் ஏறி தமிழீழம் வாழ்க என்று சத்தம் போட்டவர். அமிர்தலிங்கம் இவ்வாறான செயற்பாடுகள் எல்லாம் தமிழ் மக்களுக்குச் சிறிதளவு கூட உதவப் போவதில்லை என்றும் கூறினார். ஆயுதங்களைக் கைவிட்டுவிட்டு மிதவாதத் தமிழ் தலைமையை ஆதரிக்குமாறும் அவர் அறைகூவல் விடுத்தார்.

1982ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஐந்தாம் திகதி நியூயோர்க்கில் நடைபெற்ற உலகத் தமிழர் இயக்கக் கூட்டத்தில் அமிர்தலிங்கம் தன்னைச் சுயவிமர்சனத்துக்கு உட்படுத்திக் கொண்டார். அத்துடன் ஆயுதப் போராட்டம் ஏற்படுத்தப் போகும் அழிவுகளை முன்கூட்டியே தீர்க்கதரிசனத்துடன் எச்சரித்தார். நாடு கடந்த இடைக்காலத் தமிழீழ அரசாங்கமொன்றினை அமைக்கும் தீர்மானம் அங்கு முன்வைக்கப்பட்டபோது அதனைக் கடுமையாக எதிர்த்தார். கிருஷ்ணா வைகுந்தவாசனும் அக் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தார். தமிழீழம் அமைப்பதில் இருக்கக்கூடிய நடைமுறைச் சிக்கல்களை அமிர்தலிங்கம் கீழ்க்கண்டவாறு சுட்டிக் காட்டினார்.

'தமிழீழம் என்ற இலக்கை எம்மால் நிச்சயமாக அடைய முடியுமென்று நாம் நியாயபூர்வமாக நம்பினால் ஆகக்குறைந்தது ஐம்பது சதவீதமாவது அந்த நம்பிக்கை எமக்கிருக்குமானால் அந்த ஆபத்தை நிச்சயமாக எம்மால் எதிர்கொள்ள முடியும். இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் உயிர்களுக்குப் பொறுப்புக் கூற வேண்டியவன் நான். ஆயுதப் போராட்டத்துக்கு ஒரு முன்னுதாரணமாகப் பங்களாதேஷ் விடுதலையைப் பலர் சுட்டிக்காட்டுகிறார்கள். பங்களாதேஷ் போராட்டத்தில் முப்பது இலட்சம் பேர் கொல்லப்பட்டனர். இலங்கையிலுள்ள தமிழ் மக்களின் மொத்த எண்ணிக்கையும் முப்பது இலட்சம்தான். விடுதலையை அனுபவிப்பதற்கு மக்கள் இருக்க மாட்டார்களென்றால், அந்த விடுதலையால் என்ன பயன்?'

இப்படிக் கேள்வி எழுப்பிய அமிர் மேலும் தொடர்ந்தார். 'வெளிநாடுகளில் சாய்மனைக் கதிரைகளில் அமர்ந்துகொண்டு போதனை செய்வது இலகுவானது. எமக்கிருக்கும் பாரிய பொறுப்பை நாம் உணர்ந்து கொண்டுள்ளோம். பொறுப்பற்ற விதத்தில் நாம் செயற்பட முடியாது. எம் மீது கற்களை வீசுவதற்கு முன்னால், எமது நிலையில் உங்களை வைத்துப் பாருங்கள். நாங்கள் மனிதர்கள். நாங்கள் தவறுகளைச் செய்திருக்கலாம். மகாத்மா காந்தி கூடத்தான் தவறுகளை இழைத்திருக்கிறார். அதனை அவர் ஒத்துக் கொண்டிருக்கிறார். எந்தவொரு கட்டத்திலாவது தமிழ் மக்களின் நம்பிக்கையை நான் இழந்துவிட்டேனென்று கருதினால், நான் என் பொறுப்பிலிருந்து விலகி தமிழ் மக்களின் நம்பிக்கையைப் பெற்ற எவரிடமாவது அதனைக் கையளிக்கத் தயாராக இருக்கிறேன்' இவ்வாறும் அமிர் கூறினார்.

கிட்டத்தட்ட 29 வருடங்களுக்கு முன்னர் அமிர்தலிங்கம் தீர்க்கதரிசனத்துடன் கூறிய இந்த வார்த்தைகளை இறுதிவரை ஆயுதமேந்தியவர்கள் உணர்ந்திருந்தால் முள்ளிவாய்க்கால் சேற்றுக்குள் முடிவை எட்டியிருக்க மாட்டார்கள்.

அழிவுகளுக்குப் பின்னரும் மேற்கு நாடுகளில் சாய்மனைக் கதிரைகளில் இருந்து கொண்டு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் பற்றி வாய்கிழியக் கத்துபவர்களுக்கு இது சமர்ப்பணம்.


எஸ்.அருளானந்தம் - முன்னாள் பிரதம ஆசிரியர், தினகரன்
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல