பிளான்ரர் பசிரிஸ் என்பது உள்ளங் காலின் தசை நார்களில் ஏற்படும் அழற்சியாகும்.உள்ளங்காலின் தசைநார் இழையங்கள் ஒன்று சேர்ந்த பலமான தசைப்பட்டை குதியிலிருந்து பாதத்தின் நடு எலும்பு வரை நீண்டு செல்லும்.இதனை உள்ளங்கால் தசைப்பட்டை என்பர்.
அது பாதத்தின் வில் போன்ற வளைவினை தாங்கி உறுதியளிக்கிறது. தசைநார் பட்டையில் ஏற்படும் சிறிய காயங்கள் அழற்சியை மற்றும் ஏனைய நோய்க்குறிகளை ஏற்படுத்த வல்லவை.
இக்காயங்கள் வழமையில் குதிக்கால் எலும்புக்கு அருகிலேயே ஏற்படுகின்றன.
குதிக்கால் அழற்சியின் அறிகுறிகள் எவை?
பிரதான நோய்க்குறி வலியாகும். இது குதிக்கால் அடியில் எவ்விடத்திலும் வரலாம்.பொதுவாக வலிக்குரிய பிரதான காரணமாக ஒரு குறித்த இடம் இனங்காணப்படலாம். இது அநேகமாக குதியிலிருந்து 4 சென்றிமீற்றர் முன்னோக்கி தொட முடியாத அளவுக்கு வலி இருக்கலாம். வழமையில் காலை நிலத்தில் வைக்கும் போது நோவு சிறிது குறையும். இருப்பினும் காலை எழுந்தவுடன் முதன் முதலில் கால் நிலத்தில் ஊன்றி நடக்கும் போது வலி மிக அதிகமாக இருக்கும். தொடர்ந்து நடக்கும் போது வலி அவ்வளவு இருக்காது. ஆனால் நீண்டதூர நடைப்பயணம் வலியை அதிகரித்து நிலைமையை மேலும் மோசமாக்கும். திடீரென காலை கடின அசைவுகளுக்கு உட்படுத்தும் போது உதாரணமாக படிக்கட்டுகளில் நடக்கும் போது அல்லது பெருவிரல் நுனியால் நடக்க வேண்டிய சந்தர்ப்பங்களில் வலி அதிகரிக்கும்.
குதிக்கால் அழற்சி எவர் எவர்க்கு ஏற்படலாம்?
இது மிகவும் பொதுவானது. பிரதானமாக 40வயதிற்கு மேற்பட்டவர்களை அதிலும் பெண்களை அதிகம் பீடிக்கிறது. விளையாட்டு வீரர்களிடையேயும் இது பொதுவாக காணப்படுகிறது. அத்துடன் பின்வரும் நிலைமைகள் இந்நோயை ஏற்படுத்தவல்லவை.
1. வழமையை விட அதிகமான நடத்தல், ஓடுதல், நீண்ட நேரம் நிற்றல் போன்ற செயற் பாடுகளில் ஈடுபடுதல்.
2) மிருதுத்தன்மை அதிக மற்ற காலணிகளை அணிதல்.
3. திடீர் நிறை அதிகப்பு, அளவுக்கதிகமான நிறை என்பன குதிப்பகுதிக்கு மேலதிக சிரமத்தை தோற்றுவிக்கும்.
4. உள்ளங்காலினை மிதமிஞ்சி பயன்படுத்தல் அல்லது அளவுக்கதிகமாக நீட்டல் உதாரணமாக விளையாட்டு வீரர்கள் அதிக தூரம் ஓடுதல் அல்லது அளவுக்கு மீறிய ஓட்டம்.
5. குதிக்கால் தசைநார் இறுக்கமடைதல் (குதிக்காலின் மேலாக பின்காலில் தசைப் பகுதியின் அடிப்பாகத்தில்) வயது முதிர்ந்தவர்கள் விடயத்தில் உடனடி காரணம் ஒன்றிருக்கும். குதிக்கால் எலும்பில் வளர்ச்சி ஏற்பட்டதாக (Caleaneum) நம்புவர். பலர் விடயத்தில் ஒரு குதிமுள் இருப்பதுண்டு. ஆனால் நோவுக்கு அது வழமையில் காரணமல்ல.
குதிக்கால் அழற்சிக்கான சிகிச்சைகள் எவை?
வழமையில் வீக்கம், வலி காலப் போக்கில் குறைவடைந்து விடும்.
உள்ளங்கால் தசை இழையங்கள் எலும்பை சூழவுள்ள இழையங்களைப் போல் மெதுவாகவே குணமடையும். இதற்கு பல மாதங்கள் அல்லது அதற்கு மேலும் செல்லலாம். இருப்பினும் பின்வரும் முறைகளில் விரைவில் குணமடைய வாய்ப்புண்டு.
இம்முறைகளில் மிக துரிதமாக ஒரு சில வாரங்களிலே குணமடையலாம்.
1. பாதத்தினை கூடியவரை ஓய்வில் வைத்திருக்கவும், அளவுக்கு மீறிய நடத்தல், நிற்றல், ஓடுதல் செயற்பாடுகளை, பாதத்தினை நீட்டுதல் போன்றவற்றை தவிர்க்கவும். மெதுவான நடை மற்றும் பயிற்சிகள் நன்மையளிக்கும்.
அவை கீழே தரப்பட்டுள்ளன.
2. பாதணிகள் இன்றி வெறும் காலுடனோ அல்லது கரடுமுரடான தரையிலோ நடக்க வேண்டாம். மிருதுத் தன்மையான குதிப்பகுதியுடைய சப்பாத்துகளை சிறந்த வில் போன்ற வளைவுடைய பாதணிகளை தெரிவு செய்யவும். திறந்த பாதணிகளை விட லேஸினால் தைக்கப்பட்ட பாதணிகள் விளையாட்டுக்கு உகந்தவை. பழைய அல்லது கிழிந்த சப்பாத்துகளை தவிர்க்கவும். அவை மிருதுத்தன்மையை அளிக்கமாட்டாது.
3. குதி உயர்ந்த பாதணிகள் குதிக்காலிற்கு பஞ்சு போன்று மிருதுத் தன்மையான பாதணிகளை எங்கும் வாங்கலாம் அல்லது இது போன்றவற்றை சப்பாத்துக்களில் இடுவதும் நன்மையளிக்கும். மென்மையான துணி வகைகளை பயன்படுத்தவும் இதன் நோக்கம் குதிப்பகுதியை ஒரு செ.மீற்றனால் உயர்த்துவ தாகும். குதி மிகவும் மென்மையானதாக இருக்கு மானால் அப்பகுதி பதியக் கூடிய நைவுகாப்பு உறையில் ஒரு பள்ளத்தை ஏற்படுத்தி விடலாம். இதனால் மிருதுவான குதியின் பகுதி சப்பாத்தின் உட்புறத்தில் பதியமாட்டாது.
4. பரசிற்றமோல் போன்ற நோவகற்றிகள் நோவை குறைப்பன. சிலவேளைகளில் வீக்கத் தடுப்பு மருந்துகள் (Ibuproeen போன்ற) பயன் தருவன இவையும் நோவகற்றிகள் தாம். ஆயினும் வீக்கத்தை தடுப்பதுடன் சாதாரண நோவகற்றிகளிலும் சிறந்தவை. சிலர் வீக்கத்தடுப்பு மருந்து கலந்துள்ளவையான கிறீம் வகைகளை பூசி நோவை ஆற்றுவதும் உண்டு.
5. பயிற்சிகள் : மெதுவாகவும் ஒழுங்கு தவறாமலும் குதிக்கால் தசை நார்ப் பகுதியை நிமிர்த்துதல் வேண்டும். இதன்போது உள்ளங்கால் தசை நார் ஆழ் தசைப்பட்டை நோவை தளர்த்தும்.
காரணம் உள்ளங்கால் பஸ்சிரிஸ் உள்ள சிலருக்கு குதிக்கால் தசைநார் இறுக்கமடைந்திருக்கிறது.
இதனால் குதிக்காலின் பின்பகுதி இழுப்பது போலிருக்கும். அத்துடன் உள்ளங்கால் தசை நார் சூழ் தசைப்பட்டையை இறுக்கமடையவும் செய்து விடும். அத்துடன் நீங்கள் இரவு முழுவதும் உறங்கும் வேளைகளில் உள்ளங்கால் தசை நார்ப்பட்டை தானாக இறுக்கமடைந்து விடுகிறது. (இதனாலேயே காலையில் நோவு அதிகமாகிறது) பின்வரும் பயிற்சிகள் நிவாரணம் தருவன.
1. ஒரு சுவரிலிருந்து 2 அல்லது 3 அடி விலகி நிற்கவும், பாதங்கள் குதிக்கால் நிலத்தில் ஊன்றியபடி முழங்கால்களை நிமிர்த்தி வைத்துக் கொண்டு சுவருடன் சாயவும். பின் காலின் தசைப் பகுதி யும், குதிக்கால் தசை நாரும் இறுக்கமாக இருக்கும். சில வினாடிகளுக்கு இவ்வாறு நிற்கவும். 10 தடவைகள் இவ்வாறு செய்யவும். நாளொன்றுக்கு 5, 6 தடவைகள் இவ்வாறு செய்யலாம்.
2. முழங்கால் 90 பாகையில் மடிந்திருக்கும், பாதங்களும், குதிக்கால்களும் நிலத்தில் நன்றாக பதியும்படியும் ஒரு இருக்கையில் அமரவும்.இப்பொழுது குதிக்கால்கள் அப்படியே இருக்க பாதங்களை மேல்நோக்கி உயர்த்தவும்.
இப்பொழுதும் குதிக்கால் தசை நார்களும் பின் கால் தசைப் பகுதியும் இறுக்கமாக இருப்பதை உணர்வீர்கள். இதனால் சற்று வேறுபட்ட தசை நார்களுக்கு பயிற்சி கிடைக்கிறது. மீண்டும் பழைய நிலைக்கு வந்து சில வினாடிகள் அமர்ந்திருங்கள். இவ்வாறு 10 தடவைகளும் நாளொன்றுக்கு 5, 6 தடவைகளும் செய்தல் வேண்டும்.
இப்பயிற்சியின் நோக்கம் தசை நார்களையும், தசை நார் சூழ் தசைப்பட்டையையும் குதிக் காலிலிருந்து மேல்நோக்கியும் கீழ்நோக்கியும் மெதுவாக தளரச் செய்வதாகும். ஒரு ஆய்வின் படி நீட்டி நிமிர்த்தும் பயிற்சிகள் பெரும் பயனை அளித்துள்ளன.
3. ஊக்கமருந்துகள் மேற்படி பயிற்சிகளுக்கு குணப்படாத நோவுகளுக்கு ஸ்ரொய்ட் ஊசி மருந்துகளை கொடுக்கலாம். இதனால் பல வாரங்களுக்கு நோவிலிருந்து நிவாரணம் கிடைக்கும். ஒருவேளை பிரச்சினை தீர்ந்தும் விடலாம். எல்லா சந்தர்ப்பங்களிலும் இது வெற்றியளிப்பதில்லை.
ஸ் ரீரொய்ட்ஸ் வீக்கத்தை தடுத்து நிறுத்தும்.
சில வேளைகளில் முதலாவது ஊசிக்கு குண மேற்படாத நிலையில் மேலும் சில ஊசிகள் ஏற்றப்படலாம்.
பிற சிகிச்சைகள்: சிலர் இரவில் பன்டேஜ் போட்டுக் கொண்டு நன்மையடைகிறார்கள்.
இதனால் உள்ளங்கால் தசைப்பட்டை இறுக்க மடைவது தடைப்படலாம். (பென்டேஜ் கட்டுவ தால் பயிற்சி செய்வதால் ஏற்படும் பயன்கள் கிட்டுகின்றன) சிக்கலான நிலைமைகளில் காலின் கீழ்ப்பகுதிக்கு ஒரு பிளாஸ்டர் போடப் படுகிறது. இது ஓய்வு, பாதுகாப்பு, பஞ்சணைப் பது போன்ற நிலை, சிறிதளவு நீட்டுவது, நிமிர்த்துவது போன்ற நிலையை உள்ளங்கால் தசைப்பட்டைக்கு குதிக்கால் தசை நார்களுக்கு ஏற்படுத்துகிறது. விளையாட்டு வீரர்கள் பயிற் சியின் முன்ரும் பின்னரும் ஐஸ் மசாஜ் ஏற்பாடு செய்கின்றனர்.
அறுவைச் சிகிச்சை: மிகவும் சிக்கலான பிரச்சினைகளுக்கு அறுவைச் சிகிச்சை தேவைப்படலாம். மேலே கூறப்பட்ட சிகிச்சை முறை களால் 12 மாதங்களுக்கு மேலாக குணப்படாத நிலையிலேயே அறுவைச் சிகிச்சை சிபார்சு செய்யப்படுகிறது. அறுவைச் சிகிச்சை எப்போதும் வெற்றியளிப்பதில்லை. சிலருக்கு இது சிக்கலை ஏற்படுத்தி விடும் என்பதால் இதனை இறுதித் தீர்வாகவே கருதலாம்.





































































































































.jpg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக