நேசம் சரவணமுத்து
இலங்கையில் இப்போது கூடுதலான பெண்கள் அரசியலில் ஈடுபடுகின்றனர். எனினும், சர்வசன வாக்குரிமை கிடைத்ததற்குப் பின் நடைபெற்ற முதலாவது தேர்தலில் ஒரு பெண் கூடப் போட்டியிடவில்லை. ஒரேயொரு பெண் போட்டியிட முன்வந்த போதிலும் கடைசி நேரத்தில் தனது முடிவை மாற்றிக்கொண்டார்.1931 ஆம் ஆண்டு நடைபெற்ற முதலாவது சட்டசபைத் தேர்தலில் பலாங்கொடைத் தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை லீலாவதி அசரப்பா தாக்கல் செய்தி ருந்தார். இவர் இந்திய வம்சாவளிப் பிராமணப் பெண். கொழும்பு மாநகர சபையின் பிரதான வைத்திய அதி காரியான டாக்டர் சி. வி. அசரப்பாவின் மனைவி.
பலாங்கொடைத் தொகுதிக்கு வேட்புமனு தாக்கல் செய்த மற்றொரு வேட்பாளர் ஜே. சி. ரத்வத்தை. இவர் முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவின் தந்தையாரான பார்ன்ஸ் ரத்வத்தையின் சகோதரர்.
வேட்புமனு தாக்கல் செய்த போதிலும் லீலாவதி அசரப்பா ஆரம்ப கட்டத்தி லேயே போட்டியிலிருந்து விலகினார். பலாங்கொடையில் ரத்வத்தை குடும்பத்தினருக்கு மிகுந்த செல்வாக்கு இருப்பதை அறிய வந்ததாகவும், அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரை எதிர்த்துத் தன்னால் போட்டியிட முடியாதென்பதால் விலகியதாகவும் பத்திரிகையாளர்களுக்கு அவர் கூறினார்.
அடலின் மொலமுறே
முதலாவது சட்டசபைத் தேர்தலில் பெண் வேட்பாளர்கள் போட்டியிடாத போதிலும் சட்டசபையில் இரண்டு பெண்கள் உறுப்புரிமை வகித்தார்கள்.
1931ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் மீதெனிய அதிகார் ரூவான்வெல தொகுதியிலிருந்து போட்டியின்றித் தெரிவாகினார். 1931 செப்ரெம்பர் மாதம் அவர் இறந்ததால் நடைபெற்ற இடைத் தேர்தலில் அவரது மகள் அடலின் மொலமுறே தெரிவு செய்யப்பட்டார். அடலினின் கணவர் பிரான்சிஸ் மொலமுறே சட்டசபையில் சபாநாயகர். அடலினுக்கு அவரது கணவரே சத்தியப் பிரமாணம் செய்து வைத்தார்.
கொழும்பு வடக்குத் தொகுதியி லிருந்து 1931ம் ஆண்டு தெரிவு செய்யப்பட்டவர் டாகடர் ரட்னஜோதி சரவணமுத்து. இவர் கொழும்பு மாநகர சபையின் முதலாவது மேயராகத் தெரிவு செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது தெரிவு செல்லுபடியற்றது எனவும் ஏழு வருடங்களுக்குச் சிவில் உரிமையை ரத்துச் செய்வதாகவும் தேர்தல் ஆட்சேபனை வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டதால் 1932 மே 30ந் திகதி நடைபெற்ற இடைத் தேர்தலில் இவரது மனைவி நேசம் சரவணமுத்து போட்டியிட்டார்.
பொறியியலாளர் ஒருவரின் மக ளான நேசம் 1897ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் பிறந்தவர். வேம்படி மகளிர் கல்லூரியில் கல்வி கற்றவர். டாக்டர் ரட்னஜோதி சரவணமுத்துவுக்கும் இவருக்கும் 1915ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
இடைத் தேர்தலில் நேசம் சரவணமுத்துவுக்கு ஆதரவாகச் செயற்பட்டவர்களில் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கவும், சட்ட சபையில் அப்போதைய பிரதிச் சபாநாயகர் எப். ஏ. ஒபயசேகரவும் முக்கியமானவர்கள். நேசம் சரவணமுத்துவை எதிர்த்துப் போட்டி யிட்ட டாக்டர் எச். எம். பீரிஸ்ஸ¤ம் கொழும்பு வடக்கில் மிகுந்த செல்வாக்கு உள்ளவர். நேசம் சரவணமுத்து 8681 மேலதிக வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டார். சட்டசபைக்குத் தெரிவு செய்யப்பட்ட முதலாவது தமிழ்ப் பெண் என்ற பெருமைக்கு உரியவரானார்.
இன்னொரு இடைத் தேர்தலைச் சந்திக்க வேண்டிய நிலை நேசம் சரவணமுத்துவுக்கு ஏற்பட்டது. அவரது தேர்தல் செல்லுபடியற்றது எனத் தேர்தல் ஆட்சேபனை வழக்கில் தீர்ப்பாகியது. எனினும் அவரது சிவில் உரிமை ரத்துச் செய்யப்படாததால் இரண்டாவது இடைத் தேர்தலிலும் அவர் போட்டியிட்டார்.
இரண்டாவது இடைத் தேர்தல் 1932 நவம்பர் 12ந் திகதி நடைபெற்றது. தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட எச். வி. காசி செட்டியிலும் பார்க்க 8106 மேலதிக வாக்குகள் பெற்று நேசம் சரவணமுத்து தெரிவாகினார்.
இரண்டாவது சட்டசபைத் தேர்தல் 1936ம் ஆண்டு நடைபெற்றது. முதலாவது சட்டசபையில் அங்கத்துவம் வகித்த இரண்டு பெண்களில் ஒருவர் மாத்திரம் தெரிவாகினார். அடலின் மொலமுறே ரூவான்வெல தொகுதியில் கலாநிதி என். எம். பெரேராவிடம் தோற்றுவிட்டார். நேசம் சரவணமுத்து கொழும்பு வடக்கில் வெற்றி பெற்றார்.
நேசம் சரவணமுத்து சிறிது காலம் நோய்வாய்ப்பட்டிருந்து 1941 ஜனவரி 19ந் திகதி தனது நாற்பத்தி நான்காவது வயதில் மரணமடைந்தார். டாக்டர் ரட்னஜோதி சரவணமுத்து கொழும்பு மேயராக இரண்டாவது தடவை தெரிவு செய்யப்பட்டதற்குப் பதினோராவது நாள் இவரது மரணம் சம்பவித்தது.
இரண்டாவது சட்டசபைத் தேர்தலில் இன்னொரு தமிழப் பெண்ணும் போட்டியிட்ட போதிலும் தெரிவு செய்யப்படவில்லை. லக்ஷ்மி ராஜ ரட்னம் ஹட்டன் தொகுதியில் போட்டியிட்டார். அத் தொகுதியி லிருந்து தெரிவு செய்யப்பட்டவர் நடேச ஐயர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக