குண்டு வெடிப்பை நிகழ்த்திய மிர்சா ஹிமாயத் பெய்க் (வயது 29), முகமது உசேன் பிலால் (29) ஆகிய இரு தீவிரவாதிகளையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
இவர்களில் ஹிமாயத் பெய்க், புனே பஸ் நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டான். உசேன் பிலால் நாசிக்கில் பதுங்கி இருந்த போது பிடிபட்டான்.
ஹிமாயத் பெய்க் மராட்டிய மாநிலம் உட்கிர் நகரையும், உசேன் பிலால் நாசிக்கையும் சேர்ந்தவர்கள்.
இவர்கள் மோசின், யாசின் ஆகிய தீவிரவாதிகளுடன் சேர்ந்து இந்த குண்டு வெடிப்பை நிகழ்த்தி இருக்கிறார்கள்.
ஹிமாயத் பெய்க் உட்கிர் நகரில் இண்டர்நெட் மையம் ஒன்று நடத்தி வந்தான். அங்கு வைத்து வெடிகுண்டை தயாரித்தனர். பின்னர் வெடிகுண்டை புனே கொண்டு வந்து பிப்ரவரி 13-ந்தேதி ஜெர்மனி பேக்கிரி யில் வைத்து உள்ளனர்.
நோக்கியா செல்போன் “அலாரம் கிளாக்” மூலம் குண்டை வெடிக்க செய்துள்ளனர்.
கைதான இருவரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர் படுத்தினார்கள். பின்னர் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.
அவர்கள் இருவரும், பாகிஸ்தானின் லஷ்கர்-இ- தொய்பா இயக்கத்தினரிடம் தீவிரவாத பயிற்சி பெற்றதாக போலீசாரிடம் தெரிவித்தனர்.
ஹிமாயத் பெய்க் லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தையும், உசேன் பிலால் இந்திய முஜாகிதீன் இயக்கத்தையும் சேர்ந்தவர்கள்.
உசேன் பிலால் 2008-ல் இருந்து 2010 வரை 3 தடவை பாகிஸ்தானுக்கு சென்று தீவிரவாத பயிற்சி பெற்று திரும்பினான்.
ஹிமாயத் பெய்க் இலங்கையில் கொழும்பு நகரில் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகளிடம் பயிற்சி பெற்றதாக கூறினான்.
லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் பயிற்சி முகாம் பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசத்தில் ஏற்கனவே செயல்பட்டு வருகின்றன.
ஆனால் கொழும்பிலும் அவர்கள் முகாம் இருப்பது இப்போதுதான் முதன் முதலில் தெரிய வந்துள்ளது.
கொழும்புக்கு சுற்றுலா பயணி போல சென்று பயிற்சி பெற்று வந்ததாக அவன் கூறி இருக்கிறான்.
இந்தியாவில் இருந்து பாகிஸ்தான், வங்காளதேசத்துக்கு யாராவது சென்றால் அவர்களை போலீசார் சந்தேக கண்ணோடு பார்ப்பது உண்டு. ஆனால் இலங்கைக்கு செல்பவர்களை சந்தேகிப்பது இல்லை. தினமும் இங்கிருந்து ஏராளமானோர் கொழும்புக்கு சுற்றுலா செல்வதால் யார் மீதும் சந்தேகம் ஏற்படுவது இல்லை.
இதை பயன்படுத்தி ஹிமாயத் பெய்க் உள்பட பல தீவிரவாதிகள் கொழும்பு சென்று பயிற்சி பெற்று இருக்கலாம் என கருதப்படுகிறது.
கொழும்பில் ஹிமாயத் பெய்க்குக்கு 2 வகையான தீவிரவாத பயிற்சிகளை அளித்து உள்ளனர். மும்பை தாக்குதல் தீவிரவாதி முகமது அஜ்மலும் இந்த இருவித தீவிரவாத பயிற்சி பெற்றவன் என்பது குறிப்பிடத்தக்கது.
கொழும்பில் எந்த இடத்தில் பயிற்சி முகாம் உள்ளது? எத்தனை பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது என்பது போன்ற விவரங்கள் ஹிமாயத் பெய்க் இன்னும் தெரிவிக்கவில்லை.
லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் தமிழ்நாட்டுக்கு அருகே கொழும்பிலேயே பயிற்சி முகாமை அமைத்து இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இன்னும் தீவிர விசாரணை நடத்தினால் கொழும்பு முகாம் பற்றிய முழு விபரமும் தெரிய வரும்.
ஹிமாயத் பெய்க் கைது செய்யப்பட்டதும் உட்கிர் நகரில் உள்ள அவனது வீட்டில் போலீசார் சோதனை நடத்தினார்கள். அங்கு 1.2 கிலோ ஆர்.டி.எக்ஸ் வெடி மருந்து, ஒரு துப்பாக்கி, மின் ஒயர்கள், ஒரு செல்போன் ஆகியவை கைப்பற்றப்பட்டன.
நாசிக்கில் உள்ள உசேன் பிலால் வீட்டிலும் சோதனை நடந்தது. அங்கு 2 கிலோ ஆர்.டி.எக்ஸ். மருந்து, லஷ்கர்- இ-தொய்பா பிரசார புத்தகம், வெடிகுண்டு தயாரிப்பு பொருட்கள், போலி ஆவணங்கள், பென் டிரைவர், 1,300 அமெரிக்க டாலர் பணம், ரூ.10,500 ரொக்கப்பணம் ஆகியவை கைப்பற்றப்பட்டன.
அவர்களுடன் குண்டு வைத்த மோசின், யாசின் இருவரும் தலைமறைவாக உள்ளனர். அவர்களை தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, உத்தர பிரதேசம், குஜராத், கோவா, டெல்லி ஆகிய இடங்களில் தேடி வருகிறார்கள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக