பிரதான சந்தேக நபர் உள்ளிட்ட 26 பேர் பொலிஸ் தடுப்புக் காவலில்
பிரதான சந்தேக நபரான மாலு சரத் உள்ளிட்ட 26 சந்தேக நபர்களையும் பல்வேறு கோணங்களில் விசாரித்துவரும் பொலிஸார் இவர்கள் சுமார் 6000 பேரை சட்ட விரோதமான கடல் மார்க்க படகுப் பயணத்தின் மூலம் அவுஸ்திரேலியாவுக்கு கடத்தியிருக்கலாம் என சந்தேகிக்கின்றனர்.
சட்ட விரோதமான முறையில் படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்குச் செல்லும் பாதுகாப்பற்ற கடற்பயணங்கள் இன்னும் நிறைவுற்றதாய் தெரியவில்லை.
ஏனெனில், கடந்த இரு வாரங்களில் மட்டும் 523 பேர் சட்ட விரோதமான முறையில் அவுஸ்திரேலியாவை வந்தடைந்திருப்பதாக அந்நாட்டின் குடிவரவு அமைச்சர் ஸ்கொட் மொரிசன் சுட்டிக் காட்டுகிறார்.
இந்தப் பிரச்சினையானது அவுஸ்திரேலியாவுக்கு பாரிய தலையிடியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அண்மைக்காலமாக இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக, கடல் மார்க்க பயணங்களை மேற்கொள்வோரின் எண்ணிக்கையானது சடுதியாக வீழ்ச்சியடைந்துள்ளது.
ஏனெனில், இந்த சட்ட விரோத செயற்பாட்டினை இலங்கையிலிருந்து முன்னெடுத்த கும்பலின் முக்கிய புள்ளிகள் என சந்தேகிக்கப்படும் பலர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளமையும் இதற்குக் காரணமாக இருக்கலாம்.
சட்டவிரோத அவுஸ்திரேலிய கடற்பயணங்கள் தொடர்பில் ஊடகங்கள் மூலம் இலங்கைப் பிரஜைகளுக்கு தொடர்ச்சியாக எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டு வரும் நிலையில், கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் இந்த மனிதக் கடத்தலுடன் தொடர்புபட்ட பிரதான சந்தேக நபரை பொலிஸ் விசேட குற்றத்தடுப்புப் பிரிவினர் கைது செய்தமை ஞாபகம் இருக்கலாம்.
ஏற்கெனவே அவுஸ்திரேலியாவுக்கான சட்ட விரோத மனிதக் கடத்தல்கள் தொடர்பில் பல அரசியல் பின்னணியைக் கொண்டவர்கள் மீது சந்தேகத்துடன் கூடிய குற்றச்சாட்டுகள் பல்வேறு தரப்பிலிருந்தும் முன்னெடுக்கப்பட்ட நிலையில் இவ்வாறான கடத்தலுடன் கடற்படை தொடர்புபட்டுள்ளதை அறிந்தபோது பலரும் அதிர்ச்சியடைந்தனர்.
ஏனெனில், கடல் மார்க்கமாக சட்ட விரோத கடற்பயணங்களை மேற்கொள்ள எத்தனித்த 3,943 பேரை கடற்படையினர் கைது செய்தும் பல்வேறு சந்தர்ப்பங்களில் இலங்கையின் கடற்பரப்பிலும் சர்வதேச கடற்பரப்பிலும் சட்ட விரோத பயணங்களை மேற்கொண்ட படகுகள் ஆபத்தில் சிக்கிக்கொண்ட போது அவற்றை மீட்ட கடற்படையில் சேவையாற்றும் சிலருக்கு தொடர்பிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தக்கூடியதே.
மாத்தறை பிராந்திய குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸார் இந்த சட்ட விரோத அவுஸ்திரேலிய கடற்பயணம் தொடர்பில் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ள நிலையில் இதுவரை 21 பேர் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவல் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய விடயமாகும்.
மாத்தறை பிராந்திய குற்றத்தடுப்புப்பிரிவின் பொலிஸ் பொறுப்பதிகாரி தம்பிக ஹப்புகொட தலைமையிலான பொலிஸ் குழு விசாரணைகளை முடுக்கி விட்டுள்ள நிலையில், பிரதான சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகலாம்.
இந்த சட்ட விரோத ஆஸி கடற்பயணம் குறித்து ஆரம்பத்தில் கைது செய்யப்பட்ட சில சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பலனாக மாத்தறை குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸாரால் இக்கடத்தலில் பிரதான பங்கு வகிப்பவர்கள் என சந்தேகிக்கப்படும் கடற்படையின் லெப்டினன்ட் கொமாண்டர் தரத்திலான அதிகாரியொருவரும் மேலும் நால்வரும் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் இருவரையும் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கான அனுமதியை பெற்றுக்கொண்ட பொலிஸார் அதன் பலனாக விரைவிலேயே இம்மனிதக் கடத்தலின் பிரதான சூத்திரதாரியை கைது செய்ய முடிந்தது.
கடந்த 12 ஆம் திகதி, வியாழக்கிழமை அது தலைநகர் கொழும்புக்கு வெளியே, கொழும்பை அண்மித்த கிரிபத்கொடை என்ற பிரதேசத்துக்கு மாத்தறை பிராந்திய குற்றத்தடுப்புப் பிரிவின் விசேட பொலிஸ் குழுவொன்று திடீரென நுழைந்தது.
அந்த பொலிஸ் குழு கிரிபத்கொடையை அடைந்தது அதிகாலை நேரம் என்பதால் அங்கு ஒரு மயான அமைதி நிலவியது.
கிரிபத்கொடயை அடைந்த மாத்தறை குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸார் தமக்குக் கிடைத்த தகவலின் பிரகாரம் அந்த சொகுசு வீட்டை முற்றுகையிட்டனர்.
அந்நேரம் கள்ளக் காதலியுடன் சல்லாபத்தில் இருந்த சரத்தை அவ்வீட்டிலிருந்து பொலிஸாரால் கைது செய்ய முடிந்தது. ஆம் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட அந்த நபர் மாலு சரத்தான். யார் இந்த மாலு சரத்?
திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா பகுதியில் பிரபலமான மீன் வியாபாரியே மாலு சரத் ஆவார். கொஞ்சம் அரசியல் பின்னணியும் கொண்ட இவர் கடந்த 2008 மற்றும் 2012 ஆம் ஆண்டுகளில் கிழக்கு மாகாண சபைக்காக ஐ.தே.கட்சியின் சார்பில் போட்டியிட்டவர்.
தேர்தல் காலங்களில் பிரசாரப் பணிகளுக்காக பல கோடிகளை வாரி இறைத்து செலவழிக்கும் இவர் அதற்கான பிரதான வருமான மார்க்கமாக சட்டவிரோத ஆட்கடத்தலை பயன்படுத்தியுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. அத்துடன் பிரதான சந்தேக நபரான இந்த மாலு சரத்துக்கு திருகோணமலை, கிரிபத்கொட மற்றும் குருணாகலை ஆகிய பகுதிகளிலும் தனித்தனி வீடுகள் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இத்தகைய பின்னணியைக் கொண்ட மாலு சரத்தே அவுஸ்திரேலியாவுக்கான சட்டவிரோத மனிதக் கடத்தல்களில் ஈடுபட்ட கும்பலின் பிரதான சந்தேக நபர் எனக் குறிப்பிடும் மாத்தறை பிராந்திய குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸார் சரத்தை கைது செய்து மறுநாளான 13 ஆம் திகதி வெள்ளியன்று அவரை 72 மணி நேரம் தடுத்து வைத்து விசாரிப்பதற்கான நீதிமன்ற ஆணையை மாத்தறை மாவட்ட பிரதான நீதிவான் ருவன் சிசிரவிடமிருந்து பெற்றுக்கொண்டனர்.
இதனையடுத்து 72 மணி நேர முடிவில் மீண்டும் 90 நாள் தடுப்புக்காவல் உத்தரவினை பெற்றுக் கொண்டுள்ள மாத்தறை குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் விசாரணைகளை தொடர்கின்றனர்.
பிரதான சந்தேக நபரான மாலு சரத் உள்ளிட்ட 26 சந்தேக நபர்களையும் பல்வேறு கோணங்களில் விசாரித்துவரும் பொலிஸார் இவர்கள் சுமார் 6000 பேரை சட்ட விரோதமான கடல் மார்க்க படகுப் பயணத்தின் மூலம் அவுஸ்திரேலியாவுக்கு கடத்தியிருக்கலாம் என சந்தேகிக்கின்றனர்.
அத்துடன் அவுஸ்திரேலியாவுக்கு கடத்தப்படும் ஒரு தலைக்கு குறைந்த பட்சம் 10 இலட்சம் முதல் 12 இலட்சம் வரையில் பணத்தொகை குறித்த கும்பலால் அறவிடப்பட்டி ருக்கலாம் என சந்தேகிக்கும் பொலிஸார் உண்மையில் இந்த சட்டவிரோத நடவடிக்கை மூலம் எத்தனை கோடிகளை இவர்கள் சம்பாதித்துள் ளனர் என்பது தொடர்பில் விசாரணைளை தொடர்கின்றனர்.
இதற்காக வேண்டி சந்தேக நபர்கள் 26 பேரின் வங்கிக் கணக்குகள் உள்ளிட்ட 243 வங்கிக் கணக்குகளை முழுமையாக பரீட்சித்து விசாரணைகளை தொடரும் திட்டத்தையும் மாத்தறை குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
தென் மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சீ.டீ.விக்கிரமரத்ன, பிரதிப் பொலிஸ் மா அதிபர் மெகானி பெரேரா, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் தேசபந்து தென்னக்கோன் உள்ளிட்ட சிரேஷ்ட நிலை அதிகாரிகளின் நேரடி கட்டுப்பாட்டில் இடம் பெற்றுவரும் இந்த விசாரணைகளில் இன்னும் சில நாட்களில் பல உண்மைகள் வெளிச்சத்துக்கு வரலாம்.
பொய்யான வாக்குறுதிகளை வழங்கி இன்னல்களுக்கு மத்தியில் சட்ட விரோதமாக அப்பாவிப் பொதுமக்களை அவுஸ்திரேலியாவுக்கு கடத்திய இந்த சந்தேக நபர்கள் தொடர்பில் சட்டம் தனது கடமையை செய்யத் தொடங்கிவிட்டது.
இந்நிலையில் சட்டவிரோத கடற்பயணங்கள் தொடர்பில் அவுஸ்திரேலியாவுக்குள் வருவோர் தொடர்பில் இறுக்கமான நடைமுறைகளை பின்பற்ற அவுஸ்திரேலிய அரசு தீர்மானித்துள்ள நிலையில் சட்டவிரோத கடற்பயணங்களூடாக அவுஸ்திரேலியா செல்வோர் பப்புவா, நியூகினியா தீவுகளிலேயே தங்க வைக்கப்படுவர்.அவர்களில் பெரும்பாலானோர் மீண்டும் நாட்டுக்கே திருப்பியனுப்பப்படுவர் என்ற அவுஸ்திரேலிய அரசு விடுக்கும் செய்தியையும் ஞாபகப்படுத்திக் கொள்ளலாம்.
எம்.எப்.எம்.பஸீர்
வீரகேசரி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக