
வடக்கிலிருந்து 4 ரயில்களில் பயணிகள் அழைத்து வருகை
புலிகளின் வங்கிகளில் அடகு வைக்கப்பட்டிருந்த நிலையில் பாதுகாப்புப் படையினரால் மீட்டெடுக்கப்பட்ட தங்க ஆபரணங்களில் அடையாளம் காணப்பட்ட மேலும் 2184 பொதிகள் இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் உரிமையாளர்களிடம் கையளிக்க ப்படவுள்ளன.
இவ்வாறு அடையாளம் காணப்பட்ட 1960 உரிமையாளர்களுக்குச் சொந்தமான தங்க ஆபரணங்களே அலரி மாளிகையில் வைத்து ஜனாதிபதியினால் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்படவுள்ளதாக பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடக மையத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்தார்.
வடமாகாணத்திலுள்ள ஐந்து மாவட்டங்களிலிருந்தும் இவ்வாறு அடையாளம் காணப்பட்ட 1960 பேரும் கிளிநொச்சி மற்றும் வவுனியாவிலிருந்து நான்கு விசேட யாழ். தேவி புகையிரதங்கள் மூலம் இன்று கொழும்புக்கு அழைத்து வரப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
பாதுகாப்பு மற்றும் சமகால விடயங்கள் தொடர்பாக ஊடகங்களுக்கு விளக் கமளிக்கும் வாராந்த செய்தியாளர் மாநாடு கொள்ளுப்பிட்டியிலுள்ள பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடக மையத்தில் இடம்பெற்றது.
இதன் போது பிரிகேடியர் மேலும் விளக்கமளிகையில்,
புலிகளின் சட்டவிரோத வங்கிகளில் அடகு வைக்கப்பட்டிருந்த தங்க ஆபரணங்கள் கைவிடப்பட்ட நிலையில் பாதுகாப்பு படையினரால் மீட்டெடுக்க ப்பட்டதாக இராணுவம் தொடராக கூறி வந்தது. தங்க ஆபரணங்கள் மாத்திரமன்றி ஆவணங்கள், ஆயிரக்கணக்கான கால்நடைகள், பூனை மற்றும் நாய் குட்டிகளையும் கூட மீட்டெடுத்து முடியுமான அளவு அடையாளங் கண்டு உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டது.
இவற்றில் சில பொதிகளில் உரிமையாளர்களின் விபரங்கள், பற்றுச் சீட்டுக்கள் வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், இதன் உரிமையாளர்களை உரிய முறையில் அடையாளம் கண்டு ஒப்படைக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தொடர்ச்சியாக ஆலோசனைகளை வழங்கி வந்தார் என்றாலும், உரிமையாளர்களை அடையாளம் காண்பது என்பது மிகவும் இலகுவான ஒன்றல்ல. வீடு வீடாக சென்று விபரங்களை திரட்டியும் பொருட்களை காண்பித்தும் அடையாளங்கள் உறுதிப்படுத்திக் கொள்ளப்பட்டன.
இதற்கமைய முதற் கட்டமாக அடையாளங் காணப்பட்ட வட மாகாணத்தைச் சேர்ந்த 25 பேரின் பெறுமதி வாய்ந்த நகைகளை கடந்த ஒக்டோபர் மாதம் 12ம் திகதி கிளிநொச்சியில் வைத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் உத்தியோகபூர்வமாக கையளித்தார். இரண்டாவது கட்டமாக தற்பொழுது அடையாளம் காணப்பட்ட 1960 உரிமையாளர்களுக்கே இன்று கையளிக்கப்படவுள்ளன. இவர்களில் மன்னாரைச் சேர்ந்த 223 பேரும், வவுனியா 319, கிளிநொச்சி 1187 முல்லைத்தீவு 186, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 45 பேரும் இவற்றில் அடங்குவர்.
வடமாகாணத்திலுள்ள ஐந்து மாவட்டங்களிலிருந்தும் இவ்வாறு அடையாளம் காணப்பட்ட 1960 பேரும் கிளிநொச்சியிலிருந்து 2 புகையிரதம் வவுனியாவிலிருந்து 2 புகையிரதம் என்ற அடிப்படையில் நான்கு விசேட யாழ். தேவி புகையிரதங்களில் இன்று கொழும்புக்கு அழைத்து வரப்படு கின்றனர்.
காலை 10.00 மணி முதல் 11.00 மணி வரையிலான நேரத்தில் பொல்காவலை பிரதேசத்தை வந்தடையும் இந்த புகையிரதம் அங்கு சிறிது நேரம் தரித்து நிறுத்தப்பட்டு இராணுவத்தினரால் பகல் போசனம் வழங்கப்படவுள்ளது. அதன் பின்னர் அங்கிருந்து புறப்படும் இந்த புகையிரதங்கள் காலை 11.15 மணி தொடக்கம் நண்பகல் 12.30 மணி வரை கொழும்பு, கொம்பனித் தெரு புகையிரத நிலையத்தை வந்தடை யவுள்ளது. அதன் பின்னர் இவர்கள் அலரி மாளிகைக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளனர் என்றார்.
ஸாதிக் ஷிஹான்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக