ஞாயிறு, 26 ஏப்ரல், 2015

15 வருடங்களுக்கு முன்பு சுற்றி வளைத்து தளர்வடையச் செய்யும் போர் உத்தி மூலம் எப்படி எல்.ரீ.ரீ.ஈ ஆனையிறவைக் கைப்பற்றியது

பகுதி – 1

“எல்லோரும் இளவரசனை பாராட்டினார்கள்
அவர்தான் இந்த பெரிய யுத்தத்தை வெற்றி கண்டவர்”
“ஆனால் இறுதியில் அதனால் என்ன நன்மை ஏற்பட்டது?”
என்று சொன்னார் சிறியவரான பீற்றர்கின்
“ஏன் நான் அதைச் சொல்ல முடியாது” என்று அவர் கேட்டார்
“ஆனால் அது பிரசித்தமான ஒரு வெற்றி”
-றொபேட் சவுத்தி – “பிளென்ஹெயிம் யுத்தம்”

15 வருடங்களுக்கு முன்பு 22 ஏப்ரல்,2000 ல் மூலோபாயமிக்க ஆனையிறவு முகாம் ஒரு தீர்க்கமான போரில் இராணுவத்தின் நீடித்த எதிர்ப்பின் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளால் (எல்.ரீ.ரீ.ஈ) கைப்பற்றப்பட்டது. வன்னி பெருநிலப் பரப்பை யாழ்ப்பாணக் குடாநாட்டுடன் இணைக்கும் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த நிலப் பகுதியான பூசந்திதான் ஆனையிறவு. யாழ்ப்பாணம் - கண்டி வீதி அல்லது ஏ – 9 நெடுஞ்சாலை மற்றும் யாழ்ப்பாண தொடரூந்து பாதை ஆகிய இரண்டுமே ஆனையிறவின் ஊடாகத்தான் செல்கிறது, மற்றும் இந்த குறுகிய நாடா போன்ற நிலப்பகுதியை ஒரு அர்த்தத்தில் யாழ்ப்பாணத்திற்கான நுழைவாயில் என்றும் கூறலாம். ஆனையிறவின் வீழ்ச்சி, அதாவது அந்தப் பிரதேசம் எல்.ரீ.ரீ.ஈ யின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது நீண்ட தமிழ் ஈழப் போரில் ஒரு வரலாற்று அடையாளமாக கருதப்படுகிறது.



டச்சுக் காலனித்துவத்தின் போது 1776ல் முதலில் ஒரு சிறு கோட்டை ஒன்று கட்டப்பட்டது, நவீன காலத்தில் இது உல்லாசப் பயணிகளுக்கான ஒரு தங்கும் விடுதியாக மாற்றப்பட்டது. சுதந்திரமடைந்ததின் பின்னர் சட்ட விரோத குடியேற்றம், கள்ளக்கடத்தல்,மற்றும் சட்ட விரோத மரக்கடத்தல் என்பனவற்றைக் கண்காணிப்பதற்காக அங்கு நிரந்தரமாக ஒரு காவற்படைத் தளம் அமைக்கப்பட்டது. இனமோதலின் தீவிரம் அதிகரித்ததினால் ஆனையிறவின் முக்கியத்துவமும் அதிகரித்தது. அந்த சிறிய முகாம் படிப்படியாக பரந்து விரிந்த ஒரு வளாகமாக விரிவாக்கப் பட்டது. ஒரு சமயத்தில் ஆனையிறவு தளம் மற்றும் அதன் துணை முகாம்கள் என்பன 23 கி.மீ நீளம் மற்றும் 8 – 10 கி.மீ அகலமுள்ள நிலப்பரப்பை ஆக்கிரமித்திருந்தன.

ஆனையிறவை கைப்பற்றியதை கொண்டாடுவதற்காக எல்.ரீ.ரீ.ஈ 23,ஏப்ரல் 2000, ஞாயிறு, காலை 9.00 மணியளவில் ஒரு கொடியேற்ற நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது. புலிகளின் ஊடக வெளியீடுகள் தெரிவித்ததின்படி, நூற்றுக் கணக்கான எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்கள் மற்றும் துணைப்படை அங்கத்தவர்களாக சேவையாற்றிய பெரும் எண்ணிக்கையிலான பொதுமக்கள் ஆகியோர் சிவப்பு – மற்றும் - தங்க நிறத்திலான எல்.ரீ.ரீ.ஈ கொடி கேணல் பானுவினால்; ஏற்றப்படுவதை பார்த்தார்கள். 38 வயதான பானு பின்னுக்கு நகர்ந்து கொடிக்கு வணக்கம் தெரிவித்தபோது, எல்.ரீ.ரீ.ஈ போராளிகள் வைபவரீதியாக காற்றில் துப்பாக்கி வேட்டுக்களை வெடிக்க வைத்தார்கள், மற்றும் ஏழு பீரங்களில் ஒவ்வொன்றிலும் தலா மூன்று குண்டுகள் வீதம் 21 குண்டுகள் தீர்க்கப்பட்டன. அதன்பின்னர் அங்கு குழுமியிருந்தவர்களிடையே பானு உரையாற்றினார்.

கேணல் பானு அவரது உரையின்போது, எங்கள் தாயகத்தை விடுவிப்பதற்கான போரில் இது முதல் படி மாத்திரமே, மற்றும் இன்னும் பல போர்கள் வர இருக்கின்றன என்று பானு தெரிவித்தார். எல்.ரீ.ரீ.ஈ போராளிகளின் வீரம் மற்றும் தியாகங்கள் என்பனதான் ஆனையிறவினை அழிக்கும் கனவை சாத்தியம் என்று உணரச் செய்தன என்று அவர் தெரிவித்தார்.; சுமார் 200 வருடங்களுக்கு முன்பு டச்சுக்காரர்களால் உருவாக்கப்பட்ட இந்த முகாம் வேற்று நாட்டவர்களின் ஆதிக்கத்தின் அடையாளமாக நீண்ட காலமாக நின்றதுடன் குடா நாட்டில் உள்ள தமிழர்களை பெருநிலப் பரப்பிலிருந்து பிரித்தும் வைத்திருந்தது என்று சொன்ன பானு மேலும் தெரிவிக்கையில் “இப்போது அது இல்லை. எங்களுக்கு தேவையான யாவற்றையும் இங்கிருந்து அகற்றி அனுப்பிய பின்னர், இந்த அடக்குமுறை சின்னத்தில் எங்களது நினைவுக்காக ஒரு சிறு கட்டமைப்பை மாத்திரம் விட்டுவிட்டு ஏனையவற்றை இடித்து தரைமட்டமாக்கி விடுவோம்… எதிர்காலத்தில் எங்களது எதிரிகள் இந்த இடத்துக்கு திரும்பவும் வந்து அதை ஆக்கிரமிக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம்” என்றார்.

இந்தப்போரிலும் இந்தப் பிரச்சாரம் தொடர்பாக இதற்கு முன்னான போராட்டங்களிலும் தங்கள் இன்னுயிரை ஈந்த எங்கள் அனைத்து தோழர்களின் ஞாபகார்த்தமாக அஞ்சலி செலுத்துவதோடு, எங்கள் தேசியத் தலைவரான பிரதான கட்டளைத் தளபதி (வேலுப்பிள்ளை பிரபாகரன்) யினால் வரையப்பட்ட மிகவும் நுட்பமான தாக்குதல் திட்டம், திட்டத்தை லாவகமாக நிறைவேற்றிய அவரது தளபதிகள் மற்றும் அங்கத்தவர்களால் நடத்தப்பட்ட துணிச்சலான போராட்டம் என்பன காரணமாகத்தான்; எல்.ரீ.ரீ.ஈ போராளிகளால் இந்த வெற்றியை பெற முடிந்தது. இந்த வெற்றி இன்னும் வரவிருக்கும் அநேகமானவற்றின் அடையாளம் என்று அவர் பேசி முடித்ததும் இனிப்புகள் விநியோகிக்கப் பட்டன.

அதைத் தொடர்ந்து உடனடியாக நடைபெற்றவை எல்.ரீ.ரீ.ஈக்கு உயர்வான அடையாளம் மற்றும் வரையறுக்கத் தக்க நிகழ்வாக அமைந்தன. பொதுமக்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட குழுக்கள் மற்றும் சீருடை அணிந்த புலி அங்கத்தவர்கள் ஆகியோர், ஆனையிறவு கரையோரமாக வன்னி பெருநிலப் பரப்பு மற்றும் குடாநாடு என்பனவற்றை இணைக்கும் பூசந்தியின் மேலாக நடக்கத் தொடங்கினார்கள். ஒரு குழு பெருநிலப் பரப்பிலிருந்து குடா நாட்டுக்கு வடக்கு நோக்கி நடந்தார்கள் மறு பகுதியினர் குடா நாட்டிலிருந்து பெரு நிலப்பரப்பை நோக்கி தென்புறமாக நடந்தார்கள். இந்த நடையின் முக்கியத்துவம் என்னவென்றால், நினைவு தெரிந்த நாளிலிருந்து முதல் முறையாக குடாநாட்டுக்கு வருபவர்களையும் அங்கிருந்து வெளியேறுபவர்களையும் நிறுத்துவதற்கு காவலரண்களோ அல்லது காக்கி அணிந்த நபர்களோ இல்லை என்பதை வலியுறுத்துவதாக அமைந்திருந்தது. தமிழ் பொதுமக்களைப் பொறுத்தவரை அடக்குமுறையாக பின்பற்றப்பட்டு வந்த ஒரு அடையாளம் அழிக்கப்பட்டு விட்டது.

பானு இதற்கு ஒரு தசாப்தத்துக்கு முன்பு இதேபோன்றதொரு சந்தர்ப்பத்தில்கூட வெற்றியின் புளங்காகிதத்தில் திளைத்திருந்தார். 1990 செப்ரம்பர் 26ல், யாழ்ப்பாண நகரத்தின் மத்தியில் இருந்த 350 வருட பழமையான கோட்டை எல்.ரீ.ரீ.ஈயிடம் வீழ்ந்தது, வெற்றி வீரர்களான புலி அங்கத்தவர்கள் பானுவின் தலைமையில் எல்.ரீ.ரீ.ஈ கொடியினை கோட்டையில் ஏற்றினார்கள். அரியாலையில் பிறந்த பானு, யாழ்ப்பாண மாவட்ட தளபதியாக இருந்தார். முன்னர் அவர் மன்னார் தளபதியாக கடமையாற்றியிருந்தார். எனினும் அவரது தலைமையின் கீழ் தச்சன் காடு இராணுவ புறக்காவல் நிலையத்தின்மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் பல எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்களை பலி கொண்டதோடு தோல்வியில் முடிவடைந்தது, அதனால் பிரபாகரன் அவரை பதவியிறக்கம் செய்திருந்தார். சிறிது காலம் பானு வன்னிப் பகுதிக்கு அனுப்பப் பட்டார், ஆனால் சில வருடங்களின் பின்னர் அவரது பதவி திரும்பக் கிடைத்ததுடன் ஒரு முக்கியமான பணியும் அவரிடம் ஒப்படைக்கப் பட்டது.

எல்.ரீ.ரீ.ஈக்கு ஒரு பீரங்கிப் படைப் பிரிவை உருவாக்கும்படி பானுவுக்கு கட்டளையிடப் பட்டிருந்ததுடன் அவர் அதை திறமையாகவும் செய்து முடித்திருந்தார். ஆரம்பத்தில் எல்.ரீ.ரீ.ஈ வெற்றிகரமான தாக்குதல்களின்போது இராணுவத்திடம் இருந்து கைப்பற்றப்படும் பீரங்கிகளிலேயே தங்கியிருந்தது, பின்னர் கள்ளச் சந்தைகளில் எல்.ரீ.ரீ.ஈ பீரங்கிகளை கொள்வனவு செய்து கடல் வழியாக அவைகளை வன்னிக்கு அனுப்பிவந்தது. பீரங்கி பாவனையிலுள்ள நுணுக்கங்களை கற்பிப்பதற்காக வெளிநாட்டிலுள்ள கூலிப்படையினரை எல்.ரீ.ரீ.ஈ ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்திருந்ததாக கூறப்படுகிறது. பின்னர் எல்.ரீ.ரீ.ஈயின் பீரங்கிப் படைக்கு முன்னாள் யாழ்ப்பாணத் தளபதி கிட்டுவின் பெயர் சூட்டப்பட்டது, மற்றும் பானு அதற்கு தலைமையேற்றார்.

பானுவின் வேலைகளில் மகிழ்ச்சியடைந்த பிரபாகரன் ஒரு கவச பிரிவினை நிறுவும்படி அவருக்கு கட்டளை பிறப்பித்தார். திரும்பவும் ஆயுதப் படைகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஒரு சில கவச வண்டிகள் மற்றும் தாங்கிகளை மட்டும்தான் ஆரம்பத்தில் எல்.ரீ.ரீ.ஈயினால் பயன்படுத்தக் கூடியதாக இருந்தது. துரோகியான ஒரு சிங்கள இராணுவ அதிகாரிதான் கவச வாகனங்களைப் பயன்படுத்துவதிலுள்ள சில அடிப்படைப் பயிற்சிகளை புலிகளுக்கு புகட்டினார் என்று ஒரு வதந்தியும் உண்டு. பின்னர் கவச வாகனங்கள் சர்வதேச ஆயுதச் சந்தையில் கொள்வனவு செய்யப்பட்டு வன்னிக்கு கப்பல்களில் அனுப்பப் பட்டன. இந்த கவசப் பிரிவுக்கு முன்னாள் மன்னார் தளபதி விக்டரின் பெயர் சூட்டப்பட்டதுடன் பானுவே 2000ல் அதற்கும் தலைமையேற்றார்.

பீரங்கி மற்றும் கவசப் பிரிவுகள்

பீரங்கி மற்றும் கவசப் பிரிவுகள் வன்னிப் பகுதிப் போராட்டங்களில் முக்கியமான பங்கினை வகித்தன. ஆயுதப் படைகளின் முன்னேற்றங்களை கண்காணிப்பதற்கு அவை பொறுப்பானவைகளாக இருந்தன. எல்.ரீ.ரீ.ஈயின் நிலையான யுத்தமுறை சூழ்நிலைகளில் போராடும் பாணியில் ஒரு வியத்தகு மாற்றம் பெற்றது. அவர்கள் பீரங்கிப் பலம் மற்றும் கவச வாகனங்களை பெற்றதின் மூலமாக, குறைவான இழப்புகளுடன் இராணுவத்தை வெகு தூரத்தக்கு அப்பால் நிறுத்துவதற்கு புலிகளால் இயலுமாக இருந்தது. ஆயுதங்களின் நம்பிக்கை, மற்றும் விட்டுக் கொடுப்பற்ற நிலை காரணமாக போரின் தன்மை மரபு ரீதியாக மாறுவது அதிகரித்து வந்தது.
ஆனையிறவை சுற்றி நடந்த போரில் எல்.ரீ.ரீ.ஈயின் பீரங்கி மற்றும் கவசப் பிரிவுகள் மீண்டும் முக்கியமான பங்கினை வகித்ததுடன் குறுகிய காலத்துக்குள்ளேயே சிறிய இழப்புகளுடன் எல்.ரீ.ரீ.ஈ யினால் ஆனையிறவின் கட்டுப்பாட்டை கைப்பற்ற முடிந்தது. விக்டர் மற்றும் கிட்டு படைப் பிரிவுகளின் முக்கிய பங்களிப்பு காரணமாக பானுவுக்கு கொடியேற்றும் மரியாதை வழங்கப்பட்டது. சுவராஸ்யமான ஒரு விடயமாக அந்த நாட்களில் ஒரு போர் வெற்றியின் பின்னர் எல்.ரீ.ரீ.ஈயின் காணொளி கருவிகளின் முன்னால் பிரபாகரன் கொடியேற்றுவதோ அல்லது காட்சி தருவதோ கிடையாது. யுத்த களத்தில் போராடிய தனது துணைத் தலைவர்களுக்கே இந்த பெருமையை பெறும் தகுதியை அவர் விட்டுக் கொடுத்திருந்தார். எனினும் பெரிய இராணுவ நடவடிக்கைகளை பிரபாகரன்தான் திட்டமிட்டு ஒருங்கிணைப்பு செய்தார் எனும் பிரச்சாரத்தை அலுத்துப் போகுமளவிற்கு புலிகள் மேற்கொண்டு வந்தார்கள்.

ஆனையிறவில் எல்.ரீ.ரீ.ஈ பெற்ற வெற்றி பிரபாகரனால் வரையப்பட்ட விரelephant-1ிவான ஆனால் ஒரு எளிய உத்தியினால் கிடைத்தது என்று சொல்லப்படுகிறது. வழக்கமாக பிரபாகரன் எல்.ரீ.ரீ.ஈயின் இராணுவ தோல்விகளை, தவறுகளை கண்டறியவும் மற்றும் அவற்றிலிருந்து பாடங்களை கற்று அடுத்து வரும் போராட்டங்களில் பயன்படுத்துவதற்கும் வேண்டி அவற்றை ஆய்வு செய்வதுண்டு என்று சொல்லப்படுகிறது. அதன் காரணமாக ஆனையிறவை கைப்பற்றவதற்காக ஜூலை – ஆகஸ்ட் 1991ல் நடத்தப்பட்ட ஒரு தோல்வியடைந்த போராட்டம் பல படிப்பினைகளை வழங்கியிருந்தது. தோல்வியடைந்த அந்த நடவடிக்கையின் குறியீட்டுப் பெயர் “தரை, கடல், ஆகாயம்” என்பதாகும் மற்றம் அது 53 நாட்கள் நீடித்தது. எல்.ரீ.ரீ.ஈ தானாகவே ஏற்றுக் கொண்டதின்படி அந்த நடவடிக்கையில் 573 அங்கத்தவர்களை இழந்ததாகவும் மற்றும் 1,500 க்கும் மேற்பட்ட ஏனையவர்கள் காயமடைந்ததாகவும் குறிப்பிட்டிருந்தது. மனித வலு மற்றும் மன உறுதி என்பனவற்றினை பொறுத்தமட்டில் இவை தடையேற்படுத்தும் இழப்புகள் ஆகும்.

இரண்டு காரணிகள் காரணமாக ஸ்ரீலங்கா ஆயுதப் படைகளுக்கு எல்.ரீ.ரீ.ஈயினை திருப்பியடிப்பது இயலுமாக இருந்தது. முதலாவது காரணம் திறமையான அதிகாரியான சரத் பொன்சேகாவின் (முன்னாள் இராணுவ தலைவரான பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா) தலைமையின் கீழிருந்த முற்றுகையிடும் துருப்புகளின் தகமை மற்றும் அதிகரித்து வரும் முரண்பாடுகளுக்கு மாறாக அவர்கள் கொண்டிருந்த மன உறுதி. இரண்டாவது காலஞ்சென்ற ஜெனரல் டென்சில் கொப்பேகடுவ மற்றம் விஜய விமலரத்ன தலைமையிலான ஒப்பிறேசன் பலவேகய. அவர்கள் கிழக்கு கடலோரத்தில் உள்ள வெற்றிலைக்கேணியில் ஒரு கடற்கரை தலைமையகத்தை நிறுவி பின்னர் ஆனையிறவு முகாமுக்குள் அடைபட்டுக்கிடந்த இராணுவத்தினருடன் தங்கள் வழியில் போரிட்டார்கள். அதன்பின் முகாமானது உப்பளம்,பாடசாலைகள் உட்பட, அநேகமாக அந்த சூழலில் உள்ள அனைத்து முகாம்களையும் உள்ளடக்கி ஒரு பெரிய தளமாக மாற்றப்பட்டது. வெற்றிலைக்கேணி,கட்டைக்காடு, மற்றும் புல்லாவெளி போன்ற இடங்களில் துணை முகாம்களும் நிறுவப்பட்டன. இதன்படி பாதுகாப்பான விநியோகப் பாதை கடல் மற்றும் தரை மார்க்கமாக உறுதிப்படுத்தப் பட்டது. 1996ல் ஒப்பறேசன் சத்ஜெயவுக்குப் பின்னர் பிரதான நிலப்பரப்பில் ஆனையிறவுக்கு தெற்காகவுள்ள பரந்தன் மற்றும் கிளிநொச்சி என்பனவும் ஆனையிறவுடன் இணைக்கப்பட்டன. கிளிநொச்சி – ஆனையிறவு – வெற்றிலைக்கேணி தளம் முழு பிரிவுகளையும் அடக்கக்கூடிய விரிவான வளாகமாக மாறியது மற்றும் வெல்லமுடியாத பலம் பொருந்தியதாகவும் கருதப்பட்டது.

சுற்றி வளைப்பு மற்றும் தளர்வடையச் செய்தல்

அத்தகைய சூழ்நிலையில் பிரபாகரன் ஆனையிறவினை படிப்படியாக சுற்றி வளைத்து தளாவடையச் செய்து உள்ளேயிருக்கும் துருப்புகளுக்கான விநியோகத்தை தடை செய்து தளத்தை நிலைகுலைய வைக்கும் ஒரு உத்தியை கையிலெடுத்தார். ஆயுதப் படையினர் எண்ணிக்கையிலும் ஆயுத பலத்திலும் உயர் நிலையில் இருந்தபடியால்,அந்த திட்டம் பல உயிர்களை காவு கொள்ளச் செய்யும் நேரடி தாக்குதலை தடுப்பதாக இருந்தது.

எல்.ரீ.ரீ.ஈயின் இரண்டாவது கட்ட செயல்பாடான 1998 ல் நடத்திய ஓயாத அலைகள் நடவடிக்கையினால் எல்.ரீ.ரீ.ஈயின் உத்தி இலகுவாக்கப் பட்டது, அதில் கிளிநொச்சி கைப்பற்றப் பட்டது. அதன் பின்னர் எல்.ரீ.ரீ.ஈ பெருநிலப் பரப்பின் தென்பகுதியில் உள்ள பரந்தனுக்குள் ஊர்ந்து செல்ல ஆரம்பித்தது. தொடர்ச்சியான குறுகிய துரித தாக்குதல்கள் கொழும்பு ஊடகங்களால் அறிவிக்கப்படாமலே போயின, கரடிப்போக்கு, பரந்தன் சந்தி, பரந்தன் இரசாயனக் கூட்டுத்தாபனம் மற்றும் இறுதியில் பரந்தனுக்கும் மற்றும் ஆனையிறவுக்கும் இடையில் உள்ள உமையாள்புரமும் எடுக்கப்பட்டது. உமையாள்புரம் மற்றும் இயக்கச்சி ஆகிய இரண்டு இடங்களில் இருந்துதான் துருப்புக்கள் குடிநீரைப் பெறமுடியும். (ஆனையிறவு தளத்தில் உள்ள நீர் பாவனைக்கு பயன்படுத்த முடியாதபடி உப்பாக இருந்தது.)

குடாநாட்டை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் எல்.ரீ.ரீ.ஈயின் முதல் கட்ட நடவடிக்கை டிசம்பர் 11, 1999ல் இடம்பெற்றது. கிழக்கு கரையில் உள்ள வெற்றிலைக்கேணி மற்றும் கட்டைக்காடு பகுதியில் உள்ள முகாம்கள் மற்றும் ஆனையிறவுக்கு வடக்காக உள்ள புல்லாவெளி முகாம் என்பன தரை – கடல் கூட்டு நடவடிக்கை மூலம் எடுக்கப்பட்டது. வெற்றிகரமற்ற தாக்குதல் ஒன்று மேற்குப் பக்கமான இயக்கச்சியில் நடத்தப்பட்டது, ஆனால் ஆனையிறவின் பிரதான தளத்துக்கு நேரடித் தாக்குதல் எதுவும் நடத்தப்படவில்லை. இயக்கச்சி முகாம் ஆனையிறவுக்கு வட மேற்காக 5 கிமீ தொலைவில் உள்ளது, அது ஏ – 9 நெடுஞ்சாலையின் ஒரு வளைவில் அமைந்துள்ளது. வெற்றிலைக்கேணி, கட்டைக்காடு மற்றும் புல்லாவெளி என்பனவற்றின் வீழ்ச்சியுடன் ஆனையிறவுக்கான தரை – கடல் வழி விநியோகப் பாதை தடைப்பட்டது, மற்றும் உள்ள ஒரே பாதையாக சாவகச்சேரியில் இருந்து வரும் ஏ – 9 நெடுஞ்சாலை ஊடாக வரும் பாதை மட்டுமே இருந்தது. இயக்கச்சிமீது அழுத்தங்களை ஏற்படுத்தும் வண்ணம், எந்த ஒரு பலனையும் கருதாது சில மட்டுப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளை எல்.ரீ.ரீ.ஈ மேற்கொண்டது.

- டி.பி.எஸ்.ஜெயராஜ்

(தொடரும்)
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல