ஔமோக்கை கவனித்துக் கொள்ளும் காவல்துறை கண்காணிப்பாளர் மரியா வால்பே, (சிறுமியின் முகம் மறைக்கப்பட்டுள்ளது)
வட ஆப்ரிக்காவிலிருந்து இத்தாலிக்கு தனியாக பணயம் செய்த, குடும்பத்திலிருந்து தவறிவிட்ட 4 வயது குழந்தை ஒன்று, தற்செயலான நிகழ்வு ஒன்றால் அதனுடைய தாயோடு சேர்க்கப்படவிருக்கிறது.
ஔமோக்கின் பெண் பிறப்புறுப்பை அழித்துவிடாமல் அவளை காப்பாற்றுகின்ற நோக்கத்தோடு, இக்குழந்தையின் தாய் அவளை ஐவரி கோஸ்டில் இருக்கும் தந்தையின் குடும்பத்தில் இருந்து அழைத்து சென்றுவிட்டார்.
ஆனால், வீட்டிலிருந்து பொருட்களை எடுத்து வர சென்ற தாய் துனிசியாவிலுள்ள துனிஸ் நகரில் அவருடைய தோழியின் வீட்டில் ஔமோக்கை விட்டுவிட்டு சென்ற போது, தாயும் சேயும் பிரிந்து விட்டனர்.
அந்த தோழிக்கு இத்தாலிக்கு பயணம் மேற்கொள்ள வாய்ப்பு கிடைத்தபோது, ஔமோக்கையும் அழைத்து சென்ற அவர், அங்கே குழந்தையை தவற விட்டுவிட்டார்.
கடலில் வைத்து மீட்கப்பட்ட ஔமோக், இத்தாலியின் லேம்படூஸா தீவுக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்குள்ள பிற பயணியர் யாருக்கும் ஔமோக் யார் என்று தெரியவில்லை.
யாருடைய துணையின்றி குடியேறிகளாக இருக்கும் குழந்தைகளை பராமரிக்கும் பணிபொறுப்பை செய்து வருகின்ற, "மம்மா மரியா" என்று அறியப்படும் காவல்துறை கண்காணிப்பாளர் மரியா வால்பே, ஔமோக்கை அழைத்து வர அந்த தீவுக்கு சென்றார்.
புதிய, மொழி புரியாத நாட்டில், அந்த 4 வயது ஔமோக் அதிர்ச்சியில் உறைந்திருந்தாள்.
மற்றவர்களோடு உரையாட முடியாத நிலையில் அவர் இருந்தார் என்று அந்த மையத்தின் ஊழியர் மரிலினா சிஃபாலா தாம்சன் ராய்டஸ் அறக்கட்டளையிடம் தெரிவித்தார்,
ஔமோக் அங்கிருந்து பலெர்மோ என்ற இடத்திலுள்ள ஒரு குழந்தைகளின் மையத்திற்கு அழைத்து செல்லப்பட்டார்.
சில நாட்களுக்கு பின்னர், லேம்படூஸா தீவில் இருக்கும் குடியேறிகளின் வரவேற்பு மையத்தில், மகிழ்ச்சியான திருப்புமுனை தற்செயலாக நடைபெற்றது.
"மம்மா மரியா" என்று அறியப்படும் காவல்துறை கண்காணிப்பாளர் மரியா வால்பே
கடல் வழியாக தப்பி வந்த குழு ஒன்றை லிபியாவின் தொலைதூர கடற்பரப்பில் வைத்து மீட்டபோது, நசான்தே என்ற எட்டு வயது சிறுமியும், அவளுடைய தாய் மற்றும் சகோதரரும் இருந்தனர்.
நசான்தே சிறுமி விளையாடுவதற்காக தன்னுடைய செல்பேசியை அவருக்குக் கொடுத்த அந்த மையத்தின் ஊழியர் மரிலினா சிஃபாலா, அந்த சிறுமியின் தாயோடு பேசி கொண்டிருந்தார்.
அந்த செல்பேசியில் இருந்த புகைப்படங்களை பார்த்து கொண்டே வந்த நசான்தே, ஒருவரை இனம்கண்டு கொண்டார். அது அந்த ஔமோகின் படம்.
"இது ஔமோக். இது ஔமோக்!" என்று மகிழ்ச்சியோடு அவர் கத்த தொடங்கிவிட்டார்.
இந்த இரு சிறுமியரும் துனிசில் சந்தித்திருந்ததாக நசான்தே தெரிவித்தார்.
இதை வைத்து, பின்னர், மரிலினா சிஃபாலா மேற்கொண்ட முகநூல் தேடலில் பிரான்ஸ் நாட்டில் இருக்கின்ற ஔமோக்கின் உறவினர் ஒருவரின் தொடர்பு கிடைத்தது.
அவரிடமிருந்து ஔமோக்குடைய தாயின் தொலைபேசி எண்ணை மரிலினா சிஃபாலா பெற்றுகொண்டார்.
"அவருடைய மகள் பாதுகாப்பாக உயிருடன் இருப்பதை அவரிடம் சொன்னபோது, தாய் மகிழ்ச்சியால் அழுதேவிட்டார்" என்று மரியா வால்பே தாம்சன் ராய்டஸிடம் தெரிவித்திருக்கிறார்,
BBC Tamil
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக