சுட்டுக் கொல்லப்பட்ட அமெரிக்க ஜனாதிபதி கென்னடி, 1917_ல் அமெரிக்காவில் உள்ள புரூக்ளின் என்ற ஊரில் பிறந்தவர். அவருடைய தந்தை ஜோசப் கென்னடி, புகழ் பெற்ற வியாபாரி; சினிமாத் துறையிலும், அரசியலிலும் ஈடுபாடு உள்ளவர். இங்கிலாந்தில் அமெரிக்க தூதராகவும் பணியாற்றியவர்.
படிப்பில் சிறந்து விளங்கிய கென்னடி, புகழ் பெற்ற ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் படித்துப் பட்டம் பெற்றார். இரண்டாவது உலகப்போரின்போது, அமெரிக்க கடற்படையில் பணியாற்றினார். அப்போது பல வீரச்செயல்கள் புரிந்து, பாராட்டும், பரிசும் பெற்றார். அவருடைய சாகச செயல்களை அடிப்படையாக வைத்து ஒரு சினிமாப்படம் தயாரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
1953_ல், கென்னடிக்கு திருமணம் நடந்தது. அப்போது அவர், அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர். கென்னடியை மணந்த ஜாக்குலின் 1929_ம் ஆண்டு, அமெரிக்காவில் ஒரு பணக்கார குடும்பத்தில் பிறந்தவர். பல்கலைக்கழகத்தில் உயர் கல்வி பயின்றவர். சிறந்த அழகி. நாகரீகமாக உடை அணிபவர்.
1961_ம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நடந்தது. அதில், அமோக வெற்றி பெற்றார், கென்னடி. இளம் வயதிலேயே ஜனாதிபதியான கென்னடியின் புகழ் உலகம் முழுவதும் பரவியது. புத்திசாலியான ஜாக்குலின் அரசியல் விவகாரங்களில் கணவருக்கு துணையாக இருந்தார்.
கென்னடியும், ஜாக்குலினும் அரசு விழாக்களில் ஒன்றாகக் கலந்து கொள்வார்கள். அந்தப்படங்கள் உலகம் முழுவதிலும் உள்ள பத்திரிகைகளில் பிரசுரம் ஆகும்போது, கென்னடியுடன் சேர்ந்து ஜாக்குலின் புகழும் பரவியது.
1963 நவம்பர் 22_ந்தேதி கென்னடி சுட்டுக் கொல்லப் பட்டார். இந்த சம்பவம் உலகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இளம் வயதிலேயே விதவையாகிவிட்ட ஜாக்குலினுக்காக மக்கள் கண்ணீர் சிந்தினர்.
கென்னடி_ஜாக்குலின் தம்பதிகளுக்கு கரோலின் என்ற மகளும், ஜான் என்ற மகனும் இருந்தனர். கென்னடி இறந்தபோது கரோலினுக்கு 6 வயது; ஜானுக்கு 3 வயது.
(கென்னடி இறப்பதற்கு சில நாட்களுக்கு முன் ஜாக்குலினுக்குப் பிறந்த மூன்றாவது குழந்தை, சிறிது நேரத்தில் இறந்துவிட்டது.) கென்னடியின் எதிர்பாராத மரணம் ஜாக்குலினை நிலைகுலையச் செய்தது. அரசியலில் ஈடுபட விரும்பாமல், தன் குழந்தைகளை வளர்ப்பதில் கவனம் செலுத்தினார்.
இந்த நிலையில் 1968_ம் ஆண்டு அக்டோபர் 20_ந்தேதி ஒனாசிஸ் (வயது 62) என்ற கோடீஸ்வரரை ஜாக்குலின் திடீரென்று மறுமணம் செய்து கொண்டது, உலக மக்களை திடுக்கிடச் செய்தது. "கென்னடி எத்தகைய பெரிய தலைவர்! அவருடைய மனைவி இப்படி இன்னொருவரை அதுவும் கிழவரை _ மறுமணம் செய்வதா?" என்று பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
ஒனாசிஸ், கிரேக்க நாட்டைச் சேர்ந்தவர். பல கப்பல்களுக்கு அதிபதி. பல தீவுகளும் அவருக்கு சொந்தம். 110 கம்பெனிகளில் அவருக்கு பங்கு இருந்தது. அவருடைய சொத்து மதிப்பு ரூ.2 ஆயிரம் கோடி. பணத்துக்கு ஆசைப்பட்டே ஜாக்குலின் மறுமணம் செய்து கொண்டிருக்க வேண்டும் என்றே அனைவரும் நினைத்தனர்.
ஆனால், தன் மறுமணத்துக்கு என்ன காரணம் என்பதை, சில காலத்துக்குப்பின், ஒரு நிருபரிடம் ஜாக்குலின் விளக்கினார். "என் குடும்பத்தையே அழித்துவிடப்போவதாக, கென்னடியின் விரோதிகளிடம் இருந்து எனக்கு மிரட்டல்கள் வந்துகொண்டு இருந்தன. என் மகனையும், மகளையும் காப்பாற்ற எனக்குப் பாதுகாப்பு தேவை என்பதை உணர்ந்தேன்.
கொலை வெறி எதிரிகளிடம் இருந்து என் குழந்தைகளைக் காப்பாற்றும் நோக்கத்துடன்தான் மறுமணம் செய்து கொண்டேன். இரண்டாம் திருமணத்துக்கு நான் ஒரு இளைஞனை தேர்ந்தெடுக்கவில்லை என்பதில் இருந்தே, இல்லற சுகம் கருதி நான் மறுமணம் செய்யவில்லை என்பதை உணரலாம்" என்று கூறினார், ஜாக்குலின்.
1975_ம் ஆண்டில் ஒனாசிஸ் இறந்தார். ஒனாசிஸ் தன் சொத்தில், வெறும் 25 ஆயிரம் டாலர்களை மட்டுமே ஜான்பெயருக்கு எழுதி வைத்திருந்தார். ஒனாசிஸ் குடும்பத்தாருடன் ஜாக்குலின் போராடி, தனக்கும், குழந்தைகளுக்கும் 2 கோடி டாலர் (இன்றைய மதிப்பில் சுமார் 90 கோடி ரூபாய்) பெற்றார். ஒனாசிஸ் மரணம் அடைந்தபின், ஜாக்குலின் 20 ஆண்டுகள் வாழ்ந்தார். 1995_ல் இறந்தார்.
Maalaimalar

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக