ஜான் கென்னடியின் தம்பியான ராபர்ட் கென்னடி, அமெரிக்காவின் அட்டார்னி ஜெனரலாக இருந்தவர். 1968_ல் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட்டார். தேர்தல் பிரசாரத்தின்போது ஜுன் 5_ந்தேதி ஜோர்டான் நாட்டைச் சேர்ந்த ஒருவனால் சுட்டுக் கொல்லப்பட்டார். அப்போது அவருக்கு வயது 42.
கென்னடி இறந்தபோது அவருடைய மகள் கரோலினுக்கு வயது 6. மகன் ஜானுக்கு வயது 3. ஜான் குழந்தையாக இருந்தபோதே சுட்டிப்பையனாக இருந்தான். கென்னடி அவருடைய அலுவலகத்துக்குச் செல்லும் போது, ஜானும் அடம்பிடித்து அவருடன் சென்று விடுவான். அவருடைய அறையில் விளையாடுவான்.
கென்னடி இறுதி ஊர்வலம் நடந்தபோது, தாயார் ஜாக்குலின் அருகே நின்று கொண்டிருந்த 3 வயது ஜான், "சல்யூட்" அடித்து அப்பாவுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினான். அந்தக்காட்சி, பத்திரிகைகளில் புகைப்படமாக வந்தபோது, அதைக்கண்டு கண் கலங்கியவர்கள் ஏராளம்.
இந்நிலையில், ஐந்தாண்டுகளுக்குப்பின் ஜாக்குலின் மறுமணம் செய்து கொண்டார். ஜான், தன் தாயார் வீட்டிலேயே வளர்ந்தான். மகன் மீது ஜாக்குலின் உயிரையே வைத்திருந்தார். ஜான் ஒரு சாதாரண மனிதனாக வாழவேண்டும் என்றே விரும்பினார்.
பிரவுன் பல்கலைக்கழகத்தில் வரலாற்றுப் பாடத்தில் பட்டம் பெற்ற இவர் கொஞ்ச காலம் நாடகங்களில் நடித்தார். பிறகு மீண்டும் கல்லூரியில் சேர்ந்து சட்டம் பயின்றார். 1989_ம் ஆண்டு முதல் வக்கீலாகப் பணியாற்றினார். 1995_ம் ஆண்டு சொந்தமாக அரசியல் பத்திரிகை தொடங்கி, அதன் ஆசிரியராகப் பணியாற்றினார். இவரை "ஜுனியர் கென்னடி" என்றே அனைவரும் அழைத்தனர்.
சைக்கிளிங், ஸ்கேட்டிங், ஜாக்கிங் போன்ற உடற்பயிற்சிகளால் கட்டான உடலையும், வசீகரத் தோற்றத்தையும் பெற்ற ஜான் கென்னடியை "அமெரிக்காவின் கவர்ச்சி இளைஞர்" என்று அமெரிக்க பத்திரிகைகள் வர்ணித்தன.
கென்னடியைப் போலவே இவரும், புகழ் பெற்ற பெண்களுடன் இணைத்து பேசப்பட்டார். "பாப்" பாடகி மடோனா, ஆலிவுட் நடிகை டாரில் ஹன்னா, ஆகியோரின் காதல் வலையில் சிக்கிய இவர், பின்னர் சுதாரித்துக்கொண்டு தன்னை விடுவித்துக் கொண்டார்.
1994_ல் கேரலின் என்ற அழகி அறிமுகம் ஆனார். இருவருக்கும் இடையே காதல் வளர்ந்தது. 1996 செப்டம்பர் 21_ந்தேதி இவர்கள் மணந்து கொண்டனர். திருமணத்துக்கு நெருங்கிய உறவினர்கள் 40 பேர் மட்டும் அழைக்கப்பட்டனர்.
பத்திரிகை ஆசிரியராக இருந்த அவரை, நிïயார்க் நகர மேயர் பதவிக்குப் போட்டியிடும்படி பலரும் வற்புறுத்தினர். ஆனால் அவர் மறுத்துவிட்டார். அரசியலில் ஈடுபட அவர் சற்றும் விரும்பவில்லை.
இந்நிலையில், சித்தப்பா ராபர்ட் கென்னடியின் மகள் ரோரி கென்னடியின் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக 17_7_1999 அன்று, தனி விமானத்தில் நிïஜெர்சியில் இருந்து ஜான் கென்னடி புறப்பட்டார். அது 6 பேர் உட்காரக்கூடிய சிறிய விமானம். விமானத்தில் மனைவி கேரலின், மனைவியின் அக்காள் லாரன் ஆகியோரும் இருந்தனர். விமானத்தை ஜான் கென்னடி ஓட்டினார்.
திருமணம் நடக்க இருந்த இடத்துக்கு இரவு 10 மணிக்கு அவர்கள் போய்ச் சேரவேண்டும். ஆனால், விமானம் போய்ச் சேரவில்லை. இதுபற்றி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கடலோர காவல்படை ஹெலிகாப்டர்களும் கடற்படை படகுகளும், கடலில் 15 மைல் தூரம் தேடியபோது, விமானத்தின் உடைந்த பகுதிகளும், ஜான் கென்னடியின் மனைவி பயன்படுத்திய பொருள்களும் கடலில் மிதந்தது தெரிந்தது. கென்னடி மனைவி அக்காளின் சூட்கேசும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதன் காரணமாக அவர்கள் விமான விபத்தில் சிக்கியிருக்க வேண்டும் என்று கருதப்பட்டது. இவர்கள் யாருடைய திருமணத்துக்காக சென்று கொண்டிருந்தார்களோ, அந்த திருமணம் நின்று போயிற்று. விமானத்தில் இருந்தவர்கள் பத்திரமாக திரும்ப வேண்டும் என்று திருமண வீட்டில் பிரார்த்தனை நடந்தது.
பின்னர், ஜான்கென்னடி, அவர் மனைவி, மனைவியின் அக்காள் ஆகியோரின் உடல்கள் கடலில் கண்டுபிடிக்கப்பட்டன. கடலிலேயே அந்த உடல்கள் அடக்கம் செய்யப்பட்டன. இறந்தபோது ஜான்கென்னடிக்கு வயது 38. அவர் மனைவிக்கு வயது 33.
இளம் வயதில் கென்னடியின் மகனும், மருமகளும் விபத்தில் பலியானது, உலக மக்களைத் துயரத்தில் ஆழ்த்தியது.
Maalaimalar

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக