முன்னரெல்லாம் தமிழ்த் திரையுலகில் நடிப்பதற்காக வருபவர்கள் நல்ல முகவெட்டு, உடல் கட்டுடன் இருந்தால் மட்டுமே தயாரிப்பாளர்களோ அல்லது இயக்குனர்களோ அவர்களுக்கு வாய்ப்பளிப்பார்கள். அதே சமயம் அவ்வாறான லட்சணங்கள் இல்லாமல் வெறும் திறமை மட்டும் இருந்து விட்டால் அவர்களை பிரதான வில்லனுக்கு அடியாளாகவோ அல்லது சிறிய பாத்திரமொன்றிலோ போனால் போகட்டுமென்று சந்தர்ப்பம் வழங்குவார்கள்.
அதேபோலத்தான் தான் சினிமாவில் நடிக்கப் போவதாக தன் தந்தையிடம் லிவிங்ஸ்டன் சொன்னபோது, “உன் முகத்தை எப்போதாவது கண்ணாடியில் பார்த்திருக்கிறாயா, கறுப்பும் வெளுப்புமா இருக்கிற உன் முகத்தை எவன் சினிமாவில் பார்ப்பான்?'' என்றாராம். “லிவிங்ஸ்டன்' அப்போதே முடிவு செய்து விட்டார். தமிழ்த் திரையுலகில் நுழைந்து சாதித்துக் காட்ட வேண்டும் என்று. ஆனால், அது அவ்வளவு சுலபமாக இருக்கவில்லை. இவரின் சிறு வயதில் இவர் பாடசாலைக்கு படிக்கப் போன நாட்களை விட வீட்டுக்குத் தெரியாமல் படம் பார்க்கப் போன நாட்கள் தான் அதிகம். எம்.ஜி.ஆர்., சிவாஜி படங்களில் அவர்கள் திரையில் தோன்றும் போது ரசிகர்கள் எழுந்து கை தட்டுவது, கத்துவது எல்லா வற்றையும் பார்க்கப் பார்க்க இவருக்கு சினி மாவின் மேலுள்ள மோகம் அதிக>த்தது.
சினிமா மோகம் அதிகரிக்க சினிமாவில் நடிக்க வேண்டுமென்ற ஆர்வத்தினால் அப்போது பிரபலமாகிக் கொண்டு வந்த இயக்குனர், நடிகர் கே. பாக்கியராஜிடம் வாய்ப்பு கேட்டார். பாக்கியராஜ் அப்போது எடுத்துக் கொண்டிருந்த “ஒரு கை ஓசை'யில் வெட்டியான் வேடம் அளித்தார்.
படம் வெற்றியடைந்த போதும் லிவிங்ஸ்டனுக்கு தொடர்ந்து பெரியளவில் வாய்ப்புகள் வராமையினால் அவர் வறுமையில் ஆறேழு மாதம் மிகவும் கஷ்டப்பட்டார். மறுபடியும் அவர் பாக்கியராஜை போய் பார்த்தார். அவரின் பரிதாப நிலையைப் பார்த்து அனுதாபப்பட்டு பாக்கியராஜ் அவரை தன் உதவியாளராக சேர்த்துக் கொண்டார்.
பாக்கியராஜ் மாதம் ரூபா 500 தந்தார். அவருடன் “அந்த 7 நாட்கள்', மௌன கீதங்கள், டார்லிங் டார்லிங் டார்லிங், தூறல் நின்னு போச்சு ஆகிய நான்கு படங்களில் வேலை செய்தார். அத்தனை படங்களும் அட்டகாசமாக ஓடின.
பாக்கியராஜ் இவருக்கு தொழில் நுணுக்கங்களை மிகவும் நன்றாக கற்றுக் கொடுத்த வேளையில் தான் பாக்கியராஜிடம் உதவி இயக்குனராக பணி புரிந்த பாண்டியராஜன் தனியாக “கன்னி ராசி' என்ற படத்தை இயக்குவதற்காக தனியாக பிரிந்து வந்தார்.
அவருடன் லிவிங்ஸ்டனும் ஜி.எம். குமாரும் சேர்ந்து வந்து திரைக்கதை எழுதினார்கள். அந்தப் படம் முதலுக்கு மோசமில்லாமல் ஓடியது.
அடுத்து “சத்யா' மூவிசுக்காக லிவிங்ஸ்டன் ஜி.எம். குமாருடன் சேர்ந்து “காக்கி சட்டை' படத்துக்கு திரைக்கதை எழுதி கொடுத்தார்கள். படம் வசூலில் சாதனை படைத்தது. இடையில் ஜி.எம். குமாருக்கு சிவாஜி பிலிம்ஸ் தயாரிப்பில் “அறுவடை நாள்' படத்தை இயக்கும் வாய்ப்பு வரவே லிவிங்ஸ்டன் தனிமையானார். மீண்டும் சிரமப்பட்ட இவர் விஜயகாந்தைப் பார்த்து ஒரு கதை சொல்ல, அவரோ தன்னுடைய “பூந்தோட்டக் காவல்காரன்' படத்தில் வில்லனாக நடிக்க வாய்ப்பளித்தார். இந்தப் படம் பெரியளவில் வெற்றி பெற்றதுடன் லிவிங்ஸ்டனுக்கு வாய்ப்புகளும் மளமளவென வந்தன.இவரை ஒரு சினிமா நடிகனாக அங்கீகரித்த படம் “பூந் தோட்டக் காவல்காரன்'. கிட்டத்தட்ட 60 படங்கள் வரை கதாநாயகனிடம் அடிவாங்குவது இவருக்கு போரடித்துப் போனது. வில்லன் வாய்ப்புகளை தவிர்த்தவர். பட்டூர் செல்வம் கூறிய ஒருவரிக் கதையை திரைக்கதையாக விரிவுபடுத்தி “சூப்பர் குட்' சௌத்ரியிடம் சொல்ல அவர் “ஓ.கே.' செய்ய “சுந்தர புருஷனில்' லிவிங்ஸ்டன் கதாநாயகனாக நடித்தார். படம் சூப்பர் ஹிட்டாகி லிவிங்ஸ்டனை திரையுலகம் ஆச்சரியமாக திரும்பிப் பார்த்தது.
சூப்பர் குட் பிலிம்சுக்காக புதுமுக இயக்குனர் சசி ஒரு அருமையான கதையைச் சொல்லி அதற்கு லிவிங்ஸ்டனைத்தான் கதாநாயகனா போட வேண்டும் என்றார்.
அந்தக் கதையின் முடிவுப்படி வேறு யாரும் நிச்சயம் நடிக்க ஒத்துக் கொள்ள மாட்டார்கள் என்பதை சௌத்ரி ஒத்துக் கொண்டார். மற்றவர்கள் ஏனிந்த விஷப் பரீட்சையென எச்சரிக்கை செய்த போதும் அவர் துணிச்சலுடன் “லிவிங்ஸ்டனை' கதாநாயகனாகவும் கௌசல்யாவை கதாநாயகியாகவும் போட்டு “சொல்லாமலே' என்ற பெயரில் புதுமுக இயக்குனர் சசியிடம் முழுப் பொறுப்பையும் ஒப்படைத்தார்.
இந்தப் படம் சக்கைப் போடு போட்டதுடன் லிவிங்ஸ்டனின் திரையுலக வாழ்வில் அது ஒரு மைல் கல்லாக அமைந்தது.
தொடர்ந்து விரலுக்கேற்ற வீக்கம், “என் புருஷன் குழந்தை மாதிரி' ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித் தார். இவர் கதாநாயகனாக நடித்த நான்கு படங்களுமே 100 நாட்கள் ஓடிய போதும் தொடர்ந்து இவரின் கேரக்ட ருக்கேற்ற கதைகள் கிடைக்கவில்லை.
ஆனாலும் இயக்குனர் விக்ரமனின் “வானத்தைப் போல', “சூரியவம்சம்', “உன்னை நினைத்து' போன்ற படங்களில் நல்ல வேடங்களில் தோன்றி நடித்தார். . பாசமுள்ள மனைவி, அன்பான பிள்ளைகள் என அமைதியான வாழ்க்கை வாழ்ந்து வரும் லிவிங்ஸ்டன் தன் விடா முயற்சி மற்றும் தன்னம்பிக்கையுடன் செயற்பட்டமையினால் “அழகு' என்ற தகுதியில்லாமலேயே திறமையினால் தமிழ்த் திரையுலகில் சாதித்துக் காட்டி விட்டார்.
பாலா. சங்குபிள்ளை
சனி, 27 மார்ச், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக