ஒகஸ்டஸ் என்பது பட்டப் பெயர். அவருடைய இயற்பெயர் ஒக்டேவியன். சீசர் என்பது குடும்பப் பெயர். ஜுலியஸ் சீசருக்கு ஆண் வாரிசு இல்லை. ஆகையால் தம்முடைய அண்ணனின் மகள் வழிப் பேரனாகிய ஒக்டேவியனைத் தமது மகனாகத் தத்து எடுத்துக் கொண்டார். போரை நடத்துதல், மற்றும் நிருவாகம் செய்தல் முதலியவற்றில் ஒன்றுவிட்ட பேரனாகிய ஒக்டேவியனுக்கு ஜுலியஸ் சீசர் தகுந்த பயிற்சி அளித்தார்.
கி.மு. 63 இல் பிறந்து கி.பி. 14 இல் மறைந்த ஒகஸ்டஸ் எனும் ஆக்டேவியன் 77 ஆண்டுகள் வாழ்ந்தார். வாழ்நாளில், கி.மு. 29 முதல் கி.பி. 14 வரை 43 ஆண்டுகள் உரோம் பேரரசைத் திறம்பட ஆட்சி செய்து புகழ் பெற்றார்.
ஆக்டேவியன் தொல்லைகள் பலவற்றைக் கடந்து ஆட்சிக்கு வரவேண்டியிருந்தது. அவருடைய ஒன்றுவிட்ட பாட்டனாராகிய ஜுலியஸ் சீசர், கி.மு. 44 மார்ச் 15 இல் கொல்லப்பட்டார். அதை அடுத்து உள்நாட்டுப் போர் மூண்டது. புரூட்டஸ் கசியஸ் முதலிய சதிகாரர்கள் ஒரு புறமும், மார்க் அன்டனி, ஒக்டேவியன் முதலியோர் மறுபுறமும் இருந்து போரிட் டனர். ஃபிலிப்பி என்ற இடத்தில் நடந்த போரில் சதிகாரர்கள் தோற்றனர், இறந்தனர். அன்டனி, ஒக்டேவியன், ஆகியோருடன் லெபிடஸ் என்பவரும் இணைந்து மூவர் ஆட்சி ஏற்பட்டது. சில ஆண்டுகளுக்குபின்பு மார்க் அன்டனியும் ஒக்டேவியனும் ஆட்சிப் பகுதிகளைப் பிரித்துக்கொண்டனர். கிழக்குப் பகுதியை அன்டனியும், மேற்குப் பகுதியை ஒக்டேவியனும் ஆண்டனர். பேரரசின் தென்கிழக்குப் பகுதியாக எகிப்து இருந்தது. கிளியோபாட்ரா என்ற அழகி அதன் அரசி, அவளுடைய மையலில் முன்பு ஜுலியஸ் சீசர் மயங்கியதைப் போன்றே அன்டனியும் மயங்கினார். ஆட்சிப் பொறுப்பில் தவறினார்.
ஒக்டேவியன் இதற்கு மாறான இயல்பினன், கட்டுப்பாடும், கடமையுணர்வும் மிக்கவன். காலத்தை வீணாக்காமல், அதை வென்று நின்றவர். இதை வெளிப்படுத்தும் வகையில் தம்முடைய Antony and Cleopatra எனும் நாடகத்தில் ஒரு நிகழ்ச்சியை ஷேக்ஸ்பியர் அமைத்திருக்கிறார். கப்பல் ஒன்றில் கேளிக்கை விருந்து நடக்கிறது. மார்க் அன்டனி உள்ளிட்டோர் அதில் கலந்து மூழ்கியுள்ளனர். ஒக்டேவியன் மட்டும் தனித்த நிலையில் இருக்கிறார். கேளிக்கை விருந்துக்கு வருமாறு அவரை ஒருவர் அழைக்கிறார். நேரத்திற்குத் தகுந்தாற்போல் நடந்து கொள்ளுங்கள் (Be a Child of time) என வேண்டுகி றார். அதற்கு ஒக்டேவியன், காலத்தின் கைப்பிள்ளையாக மாட்டேன். அதைக் கைக்குள் அடக்குவேன் (Possess it) என மறு மொழி கூறுகிறார்.
அன்டனியும் ஒக்டேவியனும் தவிர்க்க முடியாத வகையில் எதிரிகள் ஆகின்றனர். ஏக்டியம் என்ற இடத்தில் கி.மு. 31 இல் அவர்களுடைய கப்பற்படைகள் மோது கின்றன. அன்டனியின் படை தோற்கி றது. அதை அடுத்து அவர் தற்கொலை செய்து கொள் கிறார். அதற் குப் பின்பு கிளியோ பாட்ராவும் தற்கொலைப் பாதையில் சென்று மறைகிறார்.
ஜுலியஸ் சீசருக்கு முன்பு இருந்தே பல ஆண்டுக் காலம் உராம பேரரசு உள்நாட் டுப் போரி னால் அலைக் கழிக்கப்பட்டது. மக்கள் மிகப் பெரும் இடர்களுக்கு ஆட்பட்டனர். ஒக்டேவியன் உறுதியான வகையில் ஆட்சிப் பீடம் ஏறினார். அமைதியை ஏற்படுத்தினார். அவர் தன்னைச் சர்வாதிகாரி என்றோ அரசர் என்றோ அறிவித்துக் கொள்ளவில்லை.
குடியரசு முறைக்கு உரிய சட்ட மன்றம், ஆட்சிமன்றம் (செனட்) ஆகியவற்றைக் கலைக்கவில்லை. அந்த மன்றங்களும் அவருடைய விருப்பத்திற்கு எதிராக நடக்கவில்லை.
மக்கள் நலம் நாடிய மா மன்னர் போன்றே நடைமுறையில் அவர் ஆட்சி செய்தார். அவருக்கு அகஸ்டஸ் (பெருமிதமானவர்) என்ற பட்டத்தைச் செனட் சபை அளித்தது.
பேரரசு மேலும் விரிவடைய வேண்டும் எனும் நோக்கில் தொடர்ந்து போர்களை நடத்துவதை அகஸ்டஸ் நிறுத்திக்கொண்டார். மேற்கில் அய்பீரியன் தீபகற்பம் (ஸ்பெயின், போர்த்துக்கல் நாடுகளைக் கொண்டது). வடக்கில் ரைன், மற்றும் டான்யூப் ஆறுகள், கிழக்கில் கருங்கடல், தென் கிழக்கில் யூப்ரடிஸ் ஆறு, அரேபியா, தெற்கில் சகாரா பாலை வனம் ஆகியவை ரோம் பேரரசின் நிலையான எல்லைகள் ஆயின. ஒகஸ்டஸ் ஏற்படுத்திய அமைதி 200 ஆண்டுகளுக்குத் தொடர்ந்தது. ரோம் பேரரசின் மாநிலங்களில் நிருவாகம் சீர்பெற்றது. ஊழல் ஒழிந்தது, திறமை மிகுந்தது. சிறந்த சாலைகள் போடப்பட்டன.
நேர்த்தியான பல வகைக் கட்டடங்களால் ரோம் நகரம் அழகும் பொலிவும் பெற்றது. உழவும் தொழிலும் வாணிகமும் வளர்ந்தன. வாணிகத் தொடர்பு தமிழகம் வரை நீண்டது.
லத்தின் மொழி இலக்கியம் பொற்காலம் கண்டது. ஏனியஸ் எனும் வீரனின் சாகசங்களைக் கூறும் ஏனீத் என்ற காவியத்தை வெர்ஜில் படைத்தார். ஹொரேஸ், மற்றும் ஓவிட் என்ற பெருங் கவிஞர்கள் எழுதினர். லிவி எனும் வரலாற்றாசிரியர் வாழ்ந்த காலமும் இதுவே.
ரோம் பேரரசின் கிழக்கு எல்லையில் இருந்த அதன் மாநிலம் பலஸ்தீனம். அகஸ்டஸ் ஆண்ட காலத்தில் அங்கு பெத்ல காம் என்ற இடத்தில் உலகம் மறவாத பெருமகன் பிறந்தார், அவர் தான் யேசு கிறிஸ்து.
கு.வெ.கி. ஆசான

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக