அப்படியானால் நகரம் நீரின் மேல் கட்டப்பட்டதா? நகரம் கட்டப்பட்டபின் நீர் சூழந்ததா?
பொது ஆண்டுக்கு 400 - 500 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது சுமார் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு அங்கு குடியேறியவர்கள் தேர்ந் தெடுத்த இடமே நீர் நிறைந்த சதுப்பு நிலம்தான். ரோமானியப் பேரரசு நாடோடி இனத்தவரால் தாக்கப்பட்டு சிதைந்த பிறகு தெற்கு நோக்கி ஓடிவந்த மக்கள்தான் வெனிஸ் நகரில் குடியமர்ந்தனர். எதிரிகளின் படையெடுப்பிலிருந்து தப்பிக்கும் உபாயமாக இப்பகுதியைத் தேர்ந்தெடுத்துள்ளனர். ஆனால் இங்கு மீன்பிடிப்பவரின் சிறு குடிசையைக் கூடக் கட்ட முடியாத நிலையில் சதுப்பு நிலம் காணப் பட்டது. பிறகு எங்கே கல்லா லான கட்டடங்களைக் கட்டுவது? ஆனாலும் வீடுகள் கட்டப்பட வேண்டும் ஆகவே முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. நீளமான தூண்களைப் பூமியில் நட்டு கட்டடங்களைக் கட்டலாம் எனத் தீர்மானித்து தூண்களைப் புகுத்தி அடியில் உள்ள பாறைத்தரையைக் கண்டறிந்து அதன்மீது கட்டடம் கட்டலாம் என முயன்றனர். வெற்றி பெற்றனர். ஆனாலும் இது ஏதோ ஒரு சில மாதங்களில் வருடங்களில் நடந்த கதை அன்று.
பல நூற்றாண்டுகள் முயற்சி செய்துதான் வெற்றி பெற்றனர்.
ரோம் நகரம் ஒரு நாளில் கட்டப்பட்டதல்ல என்று சொல்வார்கள். அந்த வசனம் வெனிஸ் நகருக்கு மிகவும் பொருந்தக் கூடியது. வரலாற்றின் மத்தியக் காலத்தில்தான் கல்லாலான கட்டடங்கள் கட்டப்பட்டன. அதற்கான அடித்தளமே ஆச்சரியம் தரக்கூடியது. மிக நீளமான பைன் மரங்களும் லொர்ச் மரங்களும் வெட்டப்பட்டு அப்படியே சதுப்பு நிலத்தில் புகுத்தப்பட்டன, வெண்ணெயில் தீக்குச்சிகளை நெருக்கமாக நட்டால் எப்படி இருக்குமோ அப்படி மரங்கள் நடப்பட்டு சதுப்பு மண் மறைக்கப்பட்ட மேலே அமைந்த சமதளத்தின் மீது கட்டடங்கள் எழுப்பப்பட்டன. உண்மையில் சொன்னால், வீட்டைக் கட்டிப்பார் என்பது இவர்களுக்குத்தான் பொருந்தும்.
வீடு கட்டியாகிவிட்டது. நீர் இருந்து கொண்டே இருந்ததை எப்படிச் சமாளிப்பது? இந்தக் கேள்விக்கான பதிலாக வடிகால் அமைப்பு முறையைக் கண்டுபிடித்தனர்.
சிந்து வெளி நாகரிகத்திற்குச் சொந்தக்காரரான திராவிடர்கள் வடிகால் முறையைக் கண்டுபிடித்து 5 ஆயிரம் ஆண்டுகள் ஆகின்றன. ஐரோப்பியர்களுக்கு அது பிடிபட்டு ஆயிரம் ஆண்டுகள்தான் ஆகின்றன. நீர் மேற்பார்வையாளர் பதவியில் இருந்த கிரிஸ்டோ போரோ சபாடினோ என்பவர்தான் இம்முறையை ஒழுங்குபடுத்தி வாய்க்கால்களைச் சீரமைத்தார். தடி எடுத்தவன் தண்டல்காரன் என்பதைப்போல அவனவன் இஷ்டத்திற்கு வடிகால் வாய்க்கால்களை வெட்டவிடாமல் ஒழுங்குபடுத்தினார். வெனிஸ் நகரம் அழகே உருவான நகரமாக உருவாகப் பெரிதும் உதவினார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக