ஞாயிறு, 12 மே, 2019

கவர்னருக்கு எதிராக சட்டப் போராட்டம்! - நீதிமன்றத்தை நாடும் நளினி...

ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகள் ஏழு பேரை விடுதலை செய்வது தொடர்பான தமிழக அமைச்சரவை பரிந்துரையின் மீது இதுவரை கவர்னர் எந்த முடிவும் எடுக்கவில்லை. இந்த விஷயம் ஏற்கெனவே பல்வேறு சர்ச்சைகளைக் கிளப்பியிருக்கிறது. இந்த நிலையில், தமிழக அரசின் பரிந்துரையை ஏற்கும்படி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரவிருக்கிறார் ஏழு பேரில் ஒருவரான நளினி.



முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய ஏழு பேரும் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று, கடந்த 28 ஆண்டுகளாகச் சிறையில் இருக்கிறார்கள். இவர்களில் முருகனின் மனைவியான நளினி, இந்தியாவிலேயே அதிக காலம் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பெண் கைதி ஆவார். இவர்கள் தங்களின் விடுதலைக்காக நீண்டகாலமாகச் சட்டப் போராட்டங்களை நடத்திவருகிறார்கள். கடந்த 2018-ம் ஆண்டு பேரறிவாளன் தாக்கல்செய்த கருணை மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘ஏழு பேரையும் விடுதலை செய்வது தொடர்பான முடிவை எடுக்கும் அதிகாரம் தமிழக அரசுக்கு உண்டு’ என்று உத்தரவிட்டது. அதன் அடிப்படையில், ‘அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 161-ன் கீழ் ஏழு பேரையும் விடுதலை செய்யலாம்’ என்று கடந்த 2018 செப்டம்பர் 9-ம் தேதி தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அது தொடர்பான பரிந்துரை தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித்துக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

ஆனால், அதன்மீது கவர்னர் இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. இந்த நிலையில்தான், தமிழக அரசின் பரிந்துரையை உடனடியாக ஏற்கும்படி கவர்னருக்கு ஆணையிடக் கோரி விரைவில் சென்னை உயர் நீதிமன்றத் தில் ரிட் மனுத் தாக்கல் செய்யவிருக் கிறார் நளினி. இதுகுறித்து நளினியின் வழக்கறிஞரான எம்.ராதாகிருஷ்ண னிடம் கேட்டபோது, “எட்டு மாதங்களுக்கு முன்னால் தமிழக அமைச்சரவை இந்த ஏழு பேரை விடுதலைசெய்ய முடிவு எடுத்து, உரிய ஆவணங்களை கவர்னரின் கையெழுத்துக்காக அனுப்பிவைத்தது. தமிழக அமைச்சரவை அரசமைப்புச் சட்டத்தின் 161-வது பிரிவின்படி இந்த முடிவை எடுத்துள்ளதால், இந்த முடிவை மாற்றவோ, ஆவணங்களைத் திருப்பி அனுப்பவோ கவர்னருக்கு உரிமை இல்லை. 1980-ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தின் ஐவர் நீதிக்குழு - மாரு ராம் எதிர் வழக்கில், ‘மாநில அமைச்சரவை 161-வது பிரிவின்படி எடுக்கும் எந்த முடிவும் கவர்னரைக் கட்டுப்படுத்தும்’ என்று கூறியுள்ளது. கவர்னர் எந்த முடிவும் எடுக்காமல் காலம் தாழ்த்துவது உச்ச நீதிமன்றத்தை அவமதிப்பதாகும்” என்றார்.

இதற்கிடையே, ராஜீவ் காந்தி படுகொலையின் போதான குண்டுவெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத் தினர், ‘ஏழு பேர் விடுதலை’யை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். மே 9-ம் தேதி இந்த வழக்கைத் தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம் இவ்விஷயத்தில், தமிழக ஆளுநரே முடிவெடுப்பார் என்றும் உத்தரவிட்டுள்ளது.

- ஆ.பழனியப்பன்

சுப்பிரமணியன் சுவாமி கருத்து சரியா?

‘‘மாநில அரசு முடிவுசெய்துவிட்டது என்றாலும்கூட, ஏழு பேரும் கடைசிவரை சிறையில்தான் இருப்பார்கள்’ என்று பி.ஜே.பி-யின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி சமீபத்தில் கருத்து தெரிவித்திருந்தார். ஆனால், ‘‘மாநில அரசு முடிவு எடுத்துவிட்ட பிறகு, சட்டப்படி அவர்களை விடுதலை செய்தே ஆக வேண்டும் என்பதுதான் நிலை’’ என்று உறுதி செய்கிறார்கள் அரசியல் வல்லுநர்கள். தொடர்ந்து இதுகுறித்துப் பேசுபவர்கள்...

‘‘நம்முடைய நாடாளுமன்ற ஜனநாயக முறையில், குடியரசுத் தலைவரோ, கவர்னரோ தங்கள் சொந்த விருப்பப்படி செயல்பட முடியாது; அமைச்சரவையின் ஆலோசனைப்படியே அவர்கள் செயல்பட்டாக வேண்டும். இதை, ‘ஷம்ஷெர் சிங் Vs பஞ்சாப் மாநில அரசு’ (1974) வழக்கில், உச்ச நீதிமன்றத்தின் ஏழு நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு தெளிவாகக் கூறியுள்ளது. மேலும், ‘மாரு ராம் Vs இந்திய அரசு’ (1980) மற்றும் ‘கேஹர் Vs இந்திய அரசு’ (1988) ஆகிய வழக்குகளிலும் உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு இதைத் தெளிவாகக் கூறியுள்ளது.

அதாவது, அரசியல் சாசனம் பிரிவு 72 (குறிப்பிட்ட சில வழக்குகளில் மன்னித்தல், தண்டனையை ரத்துசெய்தல் அல்லது நிறுத்திவைத்தல் ஆகியவற்றுக்கான குடியரசுத் தலைவரின் அதிகாரம்) அல்லது பிரிவு 161-ன் கீழ் (குறிப்பிட்ட சில வழக்குகளில் மன்னித்தல், தண்டனையை ரத்து செய்தல் அல்லது நிறுத்திவைத்தல் ஆகியவற்றுக்கான கவர்னரின் அதிகாரம்) குடியரசுத் தலைவர் அல்லது கவர்னர், அமைச்சரவையின் ஆலோசனைப்படி செயல்பட வேண்டும். மாறாக, சொந்த விருப்பத்தின்படி செயல்பட முடியாது என்று உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு கூறியுள்ளது’’ என்கிறார்கள்.

-vikatan
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல