செவ்வாய், 9 பிப்ரவரி, 2010

திபெத்தை சீனா கைப்பற்றியது; தலாய் லாமா, இந்தியாவில் அடைக்கலம்

திபெத் நாட்டை சீனா கைப்பற்றிக் கொண்டதால், அந்த நாட்டின் அதிபராக இருந்த தலாய் லாமா இந்தியாவுக்கு ஓடிவந்தார். அவருக்கு இந்திய அரசாங்கம் அடைக்கலம் கொடுத்தது. இந்தியாவின் வட எல்லையில் உள்ள திபெத், 1959_ம் ஆண்டுவரை தனி சுதந்திர நாடாக இருந்து வந்தது. புத்த மதத்தலைவரான தலாய் லாமா, நாட்டின் அதிபராகவும் இருந்து வந்தார்.

(ஒரு தலாய் லாமா இறந்ததும், திபெத்தில் அதே நிமிடம் பிறந்த குழந்தை அடுத்த தலாய் லாமாவாகத் தேர்ந்தெடுக்கப்படுவது வழக்கம். அதாவது, இறந்த தலாய் லாமா மறு பிறப்பு எடுப்பதாக திபெத்தியர்கள் நம்பிக்கை கொண்டிருந்தார்கள்.

தற்போதைய தலாய் லாமா, 1935_ம் ஆண்டு பிறந்தவர். திபெத் நாட்டின் 14_வது தலாய் லாமா.) திபெத் தனி நாடு என்றாலும், சீனாவின் அதிகாரத்துக்கு உட்பட்டு இயங்கி வந்தது.

இந்த நிலையில் 1959_ம் ஆண்டில் திபெத்தை கைப்பற்றிக் கொள்ள சீன அரசாங்கம் முடிவு செய்தது. சீன ராணுவம் திபெத்துக்குள் நுழைந்தது. திபெத்தின் தெற்கு எல்லையில் நேபாளம், பூடான் ஆகிய நாடுகள் இருக்கின்றன. இந்த நாடுகளுக்கு திபெத்தியர்கள் ஓடுவார்கள் என்று சீனா கருதியது. எனவே அவர்களுக்கு அடைக்கலம் தரக்கூடாது என்று நேபாளம், பூடான் நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்தது. மேலும் நாட்டை விட்டு ஓடும் திபெத்தியர்களை சுட்டுக் கொல்லும்படியும் உத்தரவிடப்பட்டது.

சீனா ஆக்கிரமிப்பை தொடர்ந்து தலாய் லாமா நாட்டை விட்டு வெளியேறினார். அவர் எங்கு சென்றார் என்பது மர்மமாக இருந்தது. அவரைப் பற்றி பல்வேறு யூகங்களுடன் செய்திகள் வெளிவந்தன. தலாய்லாமா ஒரு மலையில் இருந்து விழுந்து விட்டார் என்றும், இதனால் அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் படுத்தபடுக்கையாக இருக்கிறார் என்றும் ஒரு தகவல் வெளியானது. அதே நேரத்தில் புரட்சிக்காரர்களுடன் தலாய் லாமா தப்பி ஓடிவிட்டார் என்றும், அவர் திபெத்தை விட்டு வெளிநாட்டுக்கு போய் இருக்க முடியாது என்றும் மற்றொரு தகவல் கூறியது.

தலாய் லாமா திபெத்தில் உள்ள "லோகா" என்ற பகுதிக்கு கடத்திச் செல்லப்பட்டு இருப்பதாக சீன செய்தி நிறுவனம் அறிவித்தது. தலாய் லாமா எங்கிருந்தாலும் பிடித்து விடும்படி சீன படைகளுக்கு சீன அரசு உத்தரவு பிறப்பித்தது.

தலாய் லாமாவுக்கு பதிலாக "பஞ்சன் லாமா" என்பவரை திபெத்தின் புதிய நிர்வாகியாக சீன அரசாங்கம் நியமித்தது. இவர் தலாய் லாமாவுக்கு எதிரானவர். சீனாவின் கைப்பொம்மையாக செயல்பட்டு வந்தவர். திபெத்தில் ஏற்பட்டுள்ள ரத்த புரட்சியை அமெரிக்கா தடுத்து நிறுத்தவேண்டும் என்று அமெரிக்காவில் உள்ள "லாமா"க்கள் கேட்டுக்கொண்டார்கள். அமெரிக்க தலைநகரில் ஊர்வலம் நடத்தி கோஷம் போட்டார்கள்.

சீன அரசாங்கம் ஒரு அறிவிப்பை வெளியிட்டது. "திபெத்தில் நடந்த புரட்சி இப்போது முழுவதுமாக அடக்கப்பட்டு விட்டது. 4 ஆயிரம் பேர் கைதிகளாக பிடிபட்டுள்ளனர். ஏராளமான போர் ஆயுதங்கள், துப்பாக்கிகள், குண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன" என்று அறிவித்தது.

திபெத் நிலைமை பற்றி இந்திய பாராளுமன்றத்தில் விவாதம் நடந்தது. இந்த விவாதத்தின் போது ஒரு எம்.பி. பேசுகையில், "தலாய் லாமா இந்தியா வந்தால் அவருக்கு அடைக்கலம் கொடுப்பீர்களா? என்று கேட்டார். அதற்கு பிரதமர் நேரு, "அப்பொழுது இருக்கும் சூழ்நிலைப்படி நடந்து கொள்வோம்" என்று பதில் அளித்தார். அவர் மேலும் கூறியதாவது:-

"சீனாவுடன் நட்புடன் இருக்க இந்தியா விரும்புகிறது. எனினும், திபெத் நாட்டில் நடைபெறும் சம்பவங்களை "வெளிநாட்டு விவகாரம்" என்று தள்ளி விடுவதற்கு இல்லை. திபெத் சுதந்திரம் அடைவதை இந்தியா ஆதரிக்கும். இந்திய எல்லையில் சீன ராணுவம் குவிக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்தி தவறு."

இவ்வாறு நேரு கூறினார்.

புரட்சியின் காரணமாக 200 திபெத்தியர்களை சீன ராணுவம் கொன்றதாகவும், அந்த நாட்டின் நிலப்பரப்பில் 10_ல் ஒரு பங்கு புரட்சிக்காரர்களின் வசம் இருப்பதாகவும் தகவல் வெளிவந்தது. புரட்சிக்காரர்களை ஒடுக்க சீன ராணுவம் பீரங்கிகளை பயன்படுத்தி தாக்குதல் நடத்தியது.

இந்நிலையில், "தலாய் லாமா இந்தியாவில் இருக்கிறார்" என்று 2_4_1959 அன்று சீனா திடீரென்று அறிவித்தது. "திபெத்தில் இருந்து தப்பிய தலாய் லாமா, இந்தியாவுக்குள் சென்றுவிட்டார். அவரை இந்திய அதிகாரிகளும், பத்திரிகை நிருபர்களும் சந்தித்தார்கள்" என்று அந்த அறிவிப்பில் சீனா கூறியது. ஆனால் இதை டெல்லியில் உள்ள அதிகாரிகள் உறுதிபடுத்தவில்லை.

மறுநாள் பாராளுமன்றத்தில் பிரதமர் நேரு பேசினார். அப்போது "தலாய் லாமா இந்தியாவுக்கு வந்து இருக்கிறார்" என்று அறிவித்தார். இதை கேட்டு "எம்.பி."க்கள் கைதட்டி ஆரவாரம் செய்தார்கள்.

"தலாய் லாமா காயம் அடைந்து இருக்கிறாரா?" என்று ஒரு உறுப்பினர் கேட்டார். அதற்கு, "இப்போது சுகமாக இருக்கிறார்" என்று நேரு பதில் அளித்தார். அவர் மேலும் கூறியதாவது:-

"தலாய் லாமா அவருடைய ஆதரவாளர்களுடன் இந்தியாவுக்குள் வந்துள்ளார். அடைக்கலம் தரவேண்டும் என்று கோரியுள்ளார். அவருக்கு அடைக்கலம் கொடுத்துள்ளோம். மீண்டும் திபெத் தலைவராக தலாய் லாமா ஆவாரா என்பது குழப்பத்தில் உள்ளது. இப்போதைக்கு அவருக்கு அடைக்கலம் கொடுத்துள்ளோம்." பின்னர் பிரதமர் நேரு, நிருபர்களிடம் கூறியதாவது:-

விரும்பதகாத கட்டுப்பாடுகளை அவருக்கு விதிக்க மாட்டோம். அதேபோல், அவரும் இந்திய அரசுக்கு தர்ம சங்கடமான நிலைமையை ஏற்படுத்தும் நடவடிக்கை எடுக்கமாட்டார் என்று நம்புகிறோம்."

இவ்வாறு நேரு கூறினார்.

தலாய் லாமாவுக்கு நேரு ஒரு கடிதம் அனுப்பினார். அதில், காடுகளில் நெடுந்தூரம் பிரயாணம் செய்து களைத்துப்போய் வந்து இருக்கும் உங்களை "குளு குளு" நகரத்துக்கு அழைத்துப் போய் அங்கு தகுந்த பாதுகாப்பு அளிக்க முடிவு செய்து இருக்கிறோம். அங்கேதான் நல்ல ஓய்வு எடுக்க முடியும்" என்று எழுதியிருந்தார்.

அதன்படியே தலாய் லாமா "டுவாங்கு" என்ற மலைப்பிரதேச நகரில் உள்ள புத்த மடத்தில் ஓய்வு எடுத்தார். பிறகு அவர் `முசோரி' "டார்ஜிலிங்" போன்ற இடங்களுக்கு சென்று தங்கினார். "தலாய் லாமாவை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும்" என்று இந்தியாவிடம் சீனா கோரியது. ஆனால் அதற்கு நேரு மறுத்துவிட்டார்.

இதனால், இந்தியா மீது சீனா ஆத்திரம் அடைந்தது. 1962 செப்டம்பர் மாதத்தில் இந்தியா மீது படையெடுத்தது. லடாக் பகுதியிலும், வடகிழக்கு எல்லைப் பகுதியிலும் நடந்த போரில், இந்தியாவின் சில பகுதிகளை சீனா கைப்பற்றிக்கொண்டது.

சீனாவின் போக்கை உலக நாடுகள் கண்டித்தன. அதனால், சீனப்படைகள் வாபஸ் ஆயின. திபெத் நாடு, சீனாவுடன் இணைக்கப்பட்டு விட்டது. தலாய் லாமா இந்தியாவில் வசித்து வருகிறார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல