தெருவோர வியாபாரிகள், சில ஓட்டல் ஊழியர்கள் சீனாவின் டாங்யாங் நகரில் உள்ள தொடக்கப் பள்ளிகளில் பக்கெட்களுடன் அலைகின்றனர். எல்லாம்.. சின்ன பசங்களின் சிறுநீரை பிடித்து செல்வதற்குதான். அந்த சிறுநீரில் முட்டைகளை வேகவைத்து தெருவோரங்களில் விற்கின்றனர். உடல்நலத்துக்கு மிகவும் நல்லது என்று கூறுவதால், விற்பனை அமோகமாக நடக்கிறது. சீனாவின் ஜிஜியாங் மாகாணத்தின் கிழக்கு பகுதியில் உள்ளது டாங்யாங் நகரம். அழகிய கடலோரத்தில் இந்த நகரம் அமைந்துள்ளது. மிகவும் பிரபலமான நகரம். இங்குள்ள தொடக்க பள்ளிகளில் ஆயிரக்கணக்கான சிறுவர், சிறுமிகள் படிக்கின்றனர். பள்ளி முடியும் நேரத்தில் குழந்தைகளை அழைத்து செல்ல பெற்றோர் கும்பலாக காத்திருக்கின்றனர். அவர்களுடன் தெருவோர வியாபாரிகளும் காத்திருக்கின்றனர். பள்ளி டாய்லெட்டில் வைத்துள்ள பக்கெட்டை எடுத்து செல்லதான் அவர்களும் காத்திருக்கின்றனர். காலையில் இருந்து மாலை வரை பள்ளியில் சிறுவர்கள் கழிக்கும் சிறுநீர், பக்கெட்டில் சேகரிக்கப்படுகிறது. அதுவும் 10 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களின் சிறுநீர் மட்டுமே சேகரிக்கின்றனர்.