வெள்ளி, 2 ஏப்ரல், 2010

குழந்தைகள் கீழே விழுந்தால் ஏற்படும் பாதிப்புகள் !

‘பூமாதேவிதாங்கிக் கொள்வாள்’ குழந்தைகள் கீழே விழும்போது பெரியவர்கள் கூறும் வார்த்தைகள் இவை. ஆனால் இப் போது நிலைமை தலை கீழ். கீழே விழும் குழந்தைகள் பாதிக்கப்படுகிறார்கள். அதுவும் பலமாகவே ! பழங்காலத்தில் (சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்புவரை) உயரமான வீடுகள் கிடையாது.

தரைகளும் சாணத்தால் மெழுகப்பட்டு இருக்கும். குழந்தைகள் விளையாடும் போது தவறி விழுந்தாலும் அதிகம் அடிபடுவது இல்லை. மேலும் சிறுவயதில் குழந்தைகளின் எலும் புகள் நெகிழும் தன்மை பெற்று இருப்பதாலும் காயங்கள் பெரிதாக ஏற்படுவதில்லை. ஆனால் தற்போது கிராமப்புறங்களிலும் கூட வீடுகள் மாடிகளாக கட்டப்பட்டு வருகின்றன. உயரமான திண்ணைகள் நாற்காலிகள் பயன்படுத்தப்படுகின்றன. அத்துடன் சாணம் மெழுகிய தரைகளையும் பார்ப்பது அரிதாகிவிட்டது. எனவே இத்தகைய சூழல்களில் விளையாடும் குழந்தைகள், சிறுவர்கள் இலேசாக தடுமாறி விழுந்தாலும் காயங்கள் ஏற்படுவது அதிகமாகிவிட்டன. அந்த நேரத்தில் நாமும் நம்மை மீறி ஆத்திரத்தை காட்டிவிடுகிறோம்.

இன்னும் சிலர் பதறி அடித்து கீழே விழுந்த குழந்தைகளை தூக்கிவிடும்போது கைகளை பிடித்து ஏனோதானோ என்று இழுத்து விடுகிறார்கள். தொடர்ந்து உடலை குலுக்குவது தூக்கிப்போட்டு பிடிப்பது, கை, கால்களை இழுத்து விடுவது, சொடுக்கிவிடுவது என்று பலவாறாக தங்களுக்கு தெரிந்ததையெல்லாம் செய்துவிடுகிறார்கள். ஆனால் இதுபோன்ற செயல்கள் பலவித பிரச்சினைகளை தோற்றுவிக்கும் என்று டாக்டர்கள் கூறுகிறார்கள். உடலை குலுக்குவது, தூக்கிப் போட்டு பிடிப்பது போன்றவை மூளைப் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறுகிறார்கள். ஒரு வயது குழந்தைகளின் தலை எடை அதிகம் இருக்கும். அதனால் அந்த வயதுக் குழந்தைகள் கீழே விழுந்தால் தலையில் காயம் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். குழந்தைகள் கீழே விழும்போது அதன் பாதிப் புகள் பல நேரங்களில் உடனடியாக தெரிவதில்லை.

மோசமான பாதிப்புகள் என்றால் மட்டுமே உடனடியாக தெரிகிறது. வெளிப்படையாக ஏதும் காயம் இல்லையென்று நாம் சும்மா இருந்துவிடக்கூடாது. அது சில நாட்கள் சென்றதும் உடலில் பலவித பாதி ப்புகளை ஏற்படுத்தும். அந்த பாதிப்புகள் சில அறி குறிகளாக வெளிப்படும். குழந்தைகள் விழுந்து ஓரிரு நாட்களில் தலைவலி ஏற்படலாம். அடிக்கடி அழ ஆரம்பிக்கும். சாப்பிட்ட சோறு, பால் போன்றவற்றை வாந்தி எடுத்துவிடும். சில நேரங்களில் மயக்கமும் ஏற்படும். உடல் தளர்வாக காணப்படும். இந்த அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக டாக்டரிடம் குழந்தைகளை காண்பிக்க வேண்டும்.

பொதுவாக ஒரு குழந்தை கீழே விழுந் தால் 24 மணி நேரத்துக்கு பாதிப்புகள் வெளியே தெரியாமல் இருக்கும். அடுத்த நாள் அதன் பாதிப்புகள் லேசாக வெளிப்படத் தொடங்கும். எனவே 48 மணி நேரத்துக்கு குழந்தைகளை நன்றாக கண்காணித்து வரவேண்டும். உட்காயம் ஏற்பட்டு உள்ளதா என்பதை சி.டி. ஸ்கேன் செய்து தெரிந்து கொள்ளலாம். உட்காயங்கள் வெளியே தெரியாததால் பல பெற்றோர் கவனிக்காமல் விட்டுவிடுகிறார்கள். ஆனால் அவை மோசமான விளைவுகளை ஏற்படுத்திவிடக் கூடும். கடுமையான காயம் மூளையின் உள் அறையில் இரத்தக் கசிவை ஏற்படுத்தும். மூளை மூடிய நிலையில் டியுரா என்ற பகுதி உள்ளது. இதன் அடிப்பகுதியில் இரத்தக்கசிவு ஏற்பட்டால் இரத்தத்தை அகற்ற வேண்டும். அதே நேரம் உள்பகுதியில் இரத்தம் கசிந்தால் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தும்.

இதை கவனிக்காவிட்டால் சில மாதங்களுக்குப் பிறகு தண்ணீர் போன்ற திரவம் வெளிவரும். தலையில் இடது பகுதியில் இரத்தக்கட்டு ஏற்பட்டால் உடல் பகுதியில் வலது பகுதி தளர்ந்து போகும். உணர்வற்ற நிலைக்கு செல்லும். இதுபோன்ற தீவிர பாதிப்புக்கு உள்ளானால் ஆபரேஷன் செய்ய வேண் டிய அவசியம் ஏற்படும். ஒரு வயதை தாண்டிய குழந்தைகள் எப்படி விழுகிறார்கள் என்பதை பொறுத்து பாதிப்புகள் வேறுபடும். முகம் கீழே படும்படியாக விழுந்தால் மூக்கில் இருந்து இரத்தம் வரும். இதற்கு காரணம் உள் தோல் கிழிந்து போயிருக்கலாம். ஆனால் பலமாக விழுந்திருந்தால் எலும்பே உடைந்துவிடும். சிலர் பின்புறமாக விழும்போது மண்டையின் அடிப் பாகத்தில் அடி ஏற்படுகிறது. அப்போது காதுகள் வழியாக இரத்தம் கசியும் ஆபத்து உள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் பெரும் பாலும் விபத்தில் தூக்கி வீசப்படுபவர்களுக்கே ஏற்படுகிறது.

அப்படி தூக்கி எறிந்து காயம் அடையும் குழந்தைகளின் மூளையில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. கண் அழுத்தம் அதிகமாக ஏற்படும். பார்வைக்கு, பொருட்கள் இரண்டு மூன்றாக தெரியும் நிலை ஏற்படலாம். வாந்தி, மயக்கம், தலைவலி அதிகமாக வர வாய்ப்புண்டு. குழந்தைகள் கீழே விழுந்தால் உடனடியாக தரையில் அமர்ந்த நிலையில் குழந்தைகளின் புஜம் என்று அழைக்கப்படும் கைகள் உடலுடன் இணையும் பகுதியை பிடித்து மார்போடு அணைத்த நிலையில் தூக்கி விட வேண்டும்.

பின்னர் அடிபட்ட இடத்தில் ஐஸ் கட்டியால் ஒத்தடம் கொடுக்க வேண்டும். இரத்தக் கட்டு ஏற்படும் வேளைகளில் தோலில் நீல நிறத்தில் காயம் தென்படும். அப்போது குளிர்ந்த நீர், அல்லது ஐஸ் ஒத்தடம் கொடுத்தால் தோலின் நிறம் இயல்பு நிலைக்கு வந்துவிடும். ஓடியாடும் குழந்தைகள் மீது தனி கவனம் செலுத்த வேண்டும். படிக்கட்டுகள், நாற்காலிகளில் உங்கள் கண்காணிப்பு இல்லாத சமயங்களில் ஏறி அமர்ந்து விளையாட அனுமதிக்காதீர்கள்.

குழந்தைகள் கீழே விழுந்தால் கைகளின் நுனிப்பகுதியை பிடித்து தூக்கக் கூடாது. தூக்கிய உடன் உடலை குலுக்கவோ, தூக்கிப்போட்டு பிடிப்பதோ கூடாது. கை, கால்களை இழுத்துவிடுவதையும் தவிர் க்க வேண்டும். ஆத்திரத்தில் குழந்தைகளை அடித்து துன்புறுத்துவதையும் தவிர்க்க வேண்டும். கோபத்தை கையாண்டால் குழந்தைகள் பயந்துபோய் நடந்த விஷயத்தைக்கூட சொல்லத் தயங்கி மறைத்துவிடும். எனவே அவசர காலங்களில் மட்டுமல்ல எப்போதுமே அன்பான அணுகுமுறையே சிறந்தது என்பதை மறந்து விடாதீர்கள்.

Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல