வெள்ளி, 16 ஜூலை, 2010

இங்கிலீஷ் படி; இல்லேன்னா வேலை காலி

ஆங்கில வாசனையே அறியாத ஜப்பானியர்கள், தற்போது ஆங்கிலம் கற்றுக் கொள்ள வற்புறுத்தப்படுகின்றனர். ஜப்பானில் கடந்த சில ஆண்டுகளாக மக்கள் தொகை குறைந்து கொண்டே வருகிறது. இதன் காரணமாக, உள்ளூரில் பல்வேறு நுகர்பொருட்களின் சந்தையும் குறைகிறது. அதனால், பல ஜப்பானிய நிறுவனங்கள், தங்கள் சில்லரை வர்த்தகத்தை உலகளாவிய அளவில் கொண்டு செல்ல முனைந்துள்ளன. தங்கள் வர்த்தகம் உலகளவில் வளர்வதற்கேற்ப, தங்கள் ஊழியர்கள் ஆங்கிலத்தில் பேசிப் பழக வேண்டும் என்று வற்புறுத்தி வருகின்றன.

ஜப்பானின் மிகப் பெரிய ஆன்-லைன் சில்லரை வர்த்தக நிறுவனமான "ரகுடென்,' தன் நிறுவனத்தின் அலுவலக மொழியாக ஆங்கிலத்தை கொண்டு வர திட்டமிட்டுள்ளது. அதேபோல், "யுனிக்லோ அப்பேரல் செயின்' நிறுவனமும், 2012க்குள் தன் அலுவலகங்களில் ஆங்கிலத்தில் தான் பேச வேண்டும் என்ற திட்டத்தை, செயல்படுத்த முனைந்துள்ளது. இதுகுறித்து, "ரகுடென்' தலைமை நிர்வாக அதிகாரி ஹிரோஷி மிக்கிடானி கூறுகையில், "எங்கள் கம்பெனியை, ஜப்பான் கம்பெனி என்று யாரும் நினைக்கக் கூடாது. அது இனி பன்னாட்டுக் கம்பெனியாக மாறப் போகிறது. ஆங்கிலம் தெரியவில்லையா? வேலை கிடையாது.

எங்கள் கம்பெனியில் 70 சதவீத விற்பனை ஆன்-லைனில் தான் நடக்கிறது. அதனால் ஆங்கிலம் அவசியமாகத் தேவைப்படுகிறது' என்கிறார். புகழ்பெற்ற நிறுவனங்களான டொயோட்டோ மோட்டார் மற்றும் நிசான் மோட்டார் நிறுவனங்களும், தங்கள் அலுவலகங்களில் ஆங்கிலத்தைப் பயன்படுத்த முனைந்துள்ளன. ஜப்பானில் ஆங்கிலத் திறமையை வளர்க்க ஆண்டுதோறும், ஐந்து கோடி தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இத்தேர்வுகளில் மொத்த மதிப்பெண், 990ல் 700 வாங்கினால் போதுமானது என்று தன் பணியாளர்களிடம் கூறுகிறது "யுனிக்லோ' நிறுவனம். ஆனால் இந்த மதிப்பெண்ணைப் பெறுவதில்கூட பிற ஆசிய நாட்டவர்களை விட ஜப்பானியர்கள் மிகுந்த சிரமத்திற்காளாகின்றனர்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல