புதன், 29 பிப்ரவரி, 2012

ராஜிவ் காந்தி கொலையில், புலிகள் சிக்கிய கதை – 17

புலனாய்வுக் குழுவினருக்கு முதலாவது தடயம் கிடைக்கிறது

லண்டனில் இருந்து வந்து சினிமா இசையமைப்பாளர் (சங்கர்) கணேஷுடன் தொடர்பு கொண்டிருந்த இலங்கைத் தமிழர் ஒருவர்மீது சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு சந்தேகம் ஏற்பட 7 காரணங்கள் இருந்தன என்பதை ஏற்கனவே எழுதியிருந்தோம். (அதைப் பார்த்து விட்டு மேலே படிக்க, இங்கே கிளிக் செய்யவும்)



அந்த நபர் அன்றிரவே கொழும்புவுக்கு புறப்பட்டுச் சென்றார் என்ற தகவல் சிறப்புப் புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்தது. இரு தினங்களில் அவர் மீண்டும் கொழும்புவில் இருந்து சென்னை வந்து இறங்கி, முன்பு தங்கியிருந்த அதே நட்சத்திர ஹோட்டலில் தங்கியுள்ளார் என்ற விபரமும் சற்று தாமதமாக புலனாய்வுப் பிரிவுக்கு வந்து சேர்ந்தது.

அந்த இலங்கைத் தமிழர்தான், ராஜிவ் காந்தி கொல்லப்பட்ட இடத்தில் நின்றிருந்த பைஜாமா-குர்தா அணிந்த மர்ம நபராகவும் இருக்கலாம் என்ற சந்தேகம் புலனாய்வுப் பிரிவுக்கு எழுந்தது. ஆனால், கொழும்பு சென்ற அவர் ஏன் மறுபடியும் சென்னை வரவேண்டும்? இந்தப் பகுதிதான் புலனாய்வுப் பிரிவுக்குப் புரியவில்லை.

இருந்தபோதிலும், அவரைச் சுற்றி வளைப்பது என்ற முடிவு எடுக்கப்பட்டது.

ஆயுதம் தாங்கிய படையினர் உதவியுடன் அந்த நட்சத்திர ஹோட்டலில் திடீர் சோதனை நடத்தியது புலனாய்வுப் பிரிவு. அவர் எடுத்திருந்த அறை காலி செய்யப்படாமல் இருந்தது. அங்கு ஒன்றும் சிக்கவில்லை. மது பாட்டில்கள் மற்றும் பெண்களுடன் சினிமா உலகம் சம்மந்தப்பட்ட அவ்வளவு பிரபலமற்ற சிலர் அங்கு இருந்ததைத்தான் அங்கு இவர்களால் காண முடிந்தது.

இவர்கள் தேடிச்சென்ற இலங்கைத் தமிழர் அங்கே இல்லை.

அங்கிருந்தவர்களிடம் குறிப்பிட்ட இலங்கைத் தமிழர் எங்கே என்று விசாரித்தபோது, அந்த நபர் மீண்டும் கொழும்பு செல்வதற்காக விமான நிலையம் சென்றிருக்கிறார் என்ற தகவல் இவர்களுக்கு கிடைத்தது. பட்சி சிக்கியது என்று விமான நிலையத்துக்குப் பறந்தார்கள் இவர்கள்.

விமான நிலையத்தில் அந்த இலங்கைத் தமிழர் விமானம் ஏறுமுன் அவரைப் பிடித்து விசாரித்தார்கள்.

அவர் இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட பிரித்தானிய பிரஜை என்றும், இலங்கையில் இசை நிகழ்ச்சி நடத்துவதற்காக மே 20-ம் திகதியே சென்னைக்கு வந்துவிட்டார் என்றும் தெரிந்தது. சென்னைக்கு வந்த தினத்திலேயே சில சினிமா புள்ளிகளையும் அவர் சந்தித்திருக்கிறார். இசை நிகழ்ச்சித் திட்டத்தை இறுதி செய்வதற்காக, ஹோட்டல் அறையை காலி செய்யாமலேயே அவர் கொழும்புவுக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தார் என்பதும் தெரியவந்தது.

விமானம் புறப்படும் முன்னர் அவசர அவசரமாக சினிமாத் துறையினர் சிலரிடம் விசாரித்தபோது, சென்னையைச் சேர்ந்த சினிமா கலைஞர்கள் குழு ஒன்று இசை நிகழ்ச்சிக்காக கொழும்பு போவது புலனாய்வுப் பிரிவுக்கு உறுதியானது. அதையடுத்து, இலங்கைத் தமிழரை கொழும்பு செல்ல அனுமதித்தார்கள்.

இதிலுள்ள தமாஷ் என்னவென்றால், இந்த விவகாரம் அத்துடன் முடியவில்லை.

இதெல்லாம் முடிந்து சில வாரங்கள் கழித்து, சென்னை விமான நிலைய அதிகாரிகளிடமிருந்து சிறப்பு புலனாய்வுப் பிரிவுக்கு தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. “சந்தேகத்திற்கிடமான ஒரு நபரை சென்னை சர்வதேச விமான நிலையத்தில் பிடித்து வைத்திருக்கிறோம். நீங்கள் இங்கு வந்து அவரை விசாரிக்க விரும்பினால் விசாரிக்கலாம்” என்று கொன்னார்கள்.

சந்தேகத்திற்குரிய நபர் வைக்கப்பட்டிருந்த இமிகிரேஷன் அலுவலகத்துக்கு இவர்களும் சென்றிருக்கிறார்கள். அங்கே இவர்களைக் கண்டதும் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தார் ‘சந்தேக நபர்’. விவகாரம் என்னவென்றால், இதே நபரைத்தான் கொழும்பு செல்வதற்கு முன் இவர்கள் பிடித்து விசாரித்திருந்தார்கள்! இசை நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்துவிட்டு, அப்போது அவர் லண்டனுக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.

விதியை நொந்தபடி அவரை இரண்டாவது தடவையாக விமானம் ஏற்றிவிட்டுத் திரும்பியது சிறப்பு புலனாய்வுக் குழு!

பொதுவாக அந்தக் காலகட்டத்தில் தமிழகத்தில் வசித்துவந்த இலங்கைத் தமிழர்கள் தொடர்பாகவே புலனாய்வுப் பிரிவினருக்கு ‘துப்புகள்’ கிடைத்துக் கொண்டிருந்தன. கொழும்புவில் இருந்தும் தகவல்கள் சென்னைக்கு கொடுக்கப்பட்டுக் கொண்டிருந்தன.

அப்படியாக புலனாய்வுப் பிரிவுக்கு கொழும்புவில் இருந்து வந்து சேர்ந்த ஒரு தகவல், ராஜிவ் காந்தியை கொன்ற மனித வெடிகுண்டு, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சுந்தரி என்பவராக இருக்கக்கூடும் என்பது! சுந்தரி என்று கூறப்பட்ட பெண்ணின் பெற்றோர் சென்னை, புறநகர் பகுதியான கொட்டிவாக்கத்தில் வசிக்கின்றனர் என்பதும் கொழும்பில் இருந்து தெரிவிக்கப்பட்டிருந்தது. கொட்டிவாக்கத்தில் ஒரு முகவரிகூட கொடுத்திருந்தார்கள்.

சுறுசுறுப்படைந்த புலனாய்வுப் பிரிவு, ஆயுதம் தாங்கிய படையுடன் கொட்டிவாக்கம் முகவரிக்குச் சென்றது. குறிப்பிட்ட முகவரியில் இருந்த வயதான தம்பதிக்கு 4 மகன்கள், 3 மகள்கள் இருந்தனர். இவர்களில் இரு மகள்கள் பெற்றோருடன் சென்னையில் இருந்தனர். மூத்த மகள் இந்தியாவில் இருக்கவில்லை. அவர் யாழ்ப்பாணத்தில் துணிக்கடை நடத்தி வந்தார்.

புலனாய்வுக் குழு விசாரித்ததில், ஒரு மகள் யாழ்ப்பாணத்தில் துணிக்கடை நடாத்தி வந்தது உண்மை என்று தெரியவந்தது. அவர் உயிருடன் இருப்பதால், ‘மனித வெடிகுண்டு’ அல்ல.

இப்படியான தகவல்கள் சில வந்துகொண்டிருந்த நிலையில்தான், புதிய தகவல் கொடுக்க வந்தவர்களில் ஒருவர், பின்னர் இந்த வழக்கில் புலனாய்வுக் குழுவுக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்த சாட்சியாக மாறிப்போனார். ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தற்போது தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள முருகன், சிறையில் உள்ள நளினி ஆகியோரைப் பற்றி தகவல் கொடுத்த நபர்தான் அவர்.

சென்னை வில்லிவாக்கம் ஹைகோர்ட் காலனியில் வசித்த அந்த நபர், செய்தித்தாள்களில் சிறப்புப் புலனாய்வுக் குழு போட்டோ சகிதம் கொடுத்திருந்த விளம்பரத்தை பார்த்துவிட்டு, மே 30-ம் தேதி ‘மல்லிகை’ அலுவலகத்துக்கு சென்றார். அந்த போட்டோவில் உள்ள பச்சை-ஆரஞ்சு நிற சல்வார்-கமீஸ் அணிந்த பெண்ணையும், குர்தா-பைஜாமா அணிந்திருந்த மர்ம நபரையும் தனது மனைவி தமது பக்கத்து வீட்டில் பார்த்திருப்பதாக தெரிவித்தார்.

“பக்கத்து வீட்டில் வசித்தவரின் பெயர் நளினி” என்றார் அவர்.

தகவல் கொடுக்க வந்தவரின் மனைவி மே 21-ம் தேதி, தமது பக்கத்து வீட்டில் வசித்த நளினி, மனித வெடிகுண்டு எனச் சந்தேகிக்கப்பட்ட பச்சை-ஆரஞ்சு நிற சல்வார்-கமீஸ் பெண், குர்தா-பைஜாமா அணிந்த நபர், மற்றும் வேறு ஒருவருடன் சேர்ந்து சென்றதைப் பார்த்ததாகத் தெரிவித்தார்.

ராஜிவ் காந்தி கொல்லப்பட்டது, மே 21-ம் தேதிதான்!

இந்தத் தகவல் உண்மையாக இருந்தால், வில்லிவாக்கம் ஹைகோர்ட் காலனி வீடு ஒன்றில் இருந்துதான் அவர்கள் ராஜிவ் காந்தி கொல்லப்பட்ட இடத்துக்குச் சென்றிருக்க வேண்டும். இந்தத் தகவல் கிடைத்ததும் மீண்டும் சுறுசுறுப்பான புலனாய்வுக்குழு, அவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் நளினி என்பவரைப் பற்றி அவரிடம் விசாரித்தது.

“நளினி இன்னமும் உங்கள் பக்கத்து வீட்டில்தான் வசிக்கிறாரா?”

“இல்லை. 26ம் தேதி வீட்டைவிட்டுப் புறப்பட்டுச் சென்ற நளினி, அதற்குப் பிறகு வீடு திரும்பவில்லை”

“அவர் எங்கே போயிருக்க முடியும் என்று ஏதாவது ஊகம் உண்டா?”

“இல்லை. அவர் எங்கே போனார் என்றே தெரியவில்லை”

“இந்த நளினி எங்காவது வேலை பார்க்கிறாரா?”

“ஏதோ கம்பனியில் வேலை பார்க்கிறார் என்று தெரியும். கம்பனியின் பெயர் தெரியாது. அது அடையாறில் இருக்கிறது என்று நினைக்கிறேன்”

“பச்சை-ஆரஞ்சு நிற சல்வார்-கமீஸ் பெண், குர்தா-பைஜாமா அணிந்த நபர் ஆகியோர் நளினியைத் தேடி அடிக்கடி வருவார்களா?”

“அவர்கள் அடிக்கடி வருவதை நான் காணவில்லை. ஆனால், தாஸ் என்ற பெயருடைய ஒருவர்தான் நளினி வீட்டுக்கு அடிக்கடி வந்து போவதுண்டு” என்று கூறினார் அவர்.

இவர் குறிப்பிட்ட தாஸ் என்ற பெயருடைய ஒருவர்தான், ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தற்போது தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள முருகன்! …(அடுத்த வாரம் தொடரும்)

-பல்வேறு தரப்புகளில் இருந்து பெறப்பட்ட தகவல்கள், மற்றும் ரிப்போர்ட்களுடன், ரிஷி.விறுவிறுப்பு இணையம்
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல