வெள்ளி, 27 ஜூலை, 2012

அவுஸ்திரேலியாவுக்கு வர விரும்பும் ஒரு ஸ்ரீலங்கா தமிழ் கிராமம்

ஸ்ரீலங்காவின் மேற்குக் கரையில் ஒதுக்கமாக உள்ள கிராமம் ஒன்று அவுஸ்திரேலியாவுக்கு வர விரும்புகிறது.

இங்குள்ள வீடுகள் ஒருவர் நிமிர்ந்து நிற்க முடியாதபடி தாழ்வாகவும், அதன் ஓலைக் கூரைகள் பருவ மழைக்கும் மற்றும் காற்றுக்கும் எதிராக இறுக்கமாக கட்டப்பட்டுள்ளன. அந்த ஒவ்வொரு வீட்டிலிருந்தும் ஏறக்குறைய யாராவது ஒருவர் அவுஸ்திரேலியாவுக்கு சென்றுள்ளார்கள்.



சிலர் கிறிஸ்மஸ் தீவை அடைந்ததும் தாங்கள் பாதுகாப்பாக உள்ளதாக வீட்டுக்கு தொலைபேசியில் அறிவிக்கிறார்கள். மற்றவர்கள் ஒரு படகில் ஏறுவதற்கு முன்பே பிடிபட்டு விடுகிறார்கள் அல்லது அவர்களது படகுகள் ஸ்ரீலங்காக் கடற்படை கப்பல்களினால் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்படுகிறது. இன்னும் சிலர் புறப்பட்டுச் சென்றதின் பின்னர் அவர்களைப்பற்றிய தகவல் எதுவுமில்லை.

(“இந்தப் பிரதேசத்தில் இந்தக் கிராமத்திலிருந்து மட்டும் ஐநூறு பேர் புறப்பட்டுச் சென்றுள்ளார்கள், எல்லோரும் அவுஸ்திரேலியாவுக்குத்தான் சென்றுள்ளார்கள் என மேலேயுள்ள தனது கிராமத்தை பற்றி தெரிவிக்கும் கஜன்)

“இந்தப் பிரதேசத்தில் இந்தக் கிராமத்திலிருந்து மட்டும் ஐநூறு பேர் புறப்பட்டுச் சென்றுள்ளார்கள், எல்லோரும் அவுஸ்திரேலியாவுக்குத்தான் சென்றுள்ளார்கள்” கடற்கரையிலிருந்து சில நூறு மீற்றர் தூரத்துக்கு அப்பால் கடல்மீது அமைக்கப்பட்டிருந்த இராணுவ கண்காணிப்பு நிலையை நோக்கி தனது கையை வீசியபடி சொன்னார் கஜன். ”எல்லோரும் போகிறார்கள் ஏனெனில் மற்றவர்கள் அங்கு சென்றடைவதை காணும்போது அவர்களும் அந்த வாழ்க்கைக்கு ஆசைப்படுகிறார்கள்”.

மீனவர்களான அவரது மருமகனும் மற்றும் ஒரு நண்பரும் கிட்டத்தட்ட ஒரு மாதத்துக்கு முன்புதான் புறப்பட்டுச் சென்றார்கள் .கடலில் மூன்று வாரங்கள் வரை பயணம் செய்து கிறிஸ்மஸ் தீவை அடைந்தார்கள்.” பணம் காரணமாகத்தான் அவர்கள் சென்றார்கள்” என்று ஒரு மொழி பெயர்ப்பாளரூடாக அவர் பேசினார்.” எங்களால் இங்கு ஒரு வாழ்க்கையை கொண்டு நடத்த முடியவில்லை. எனவே எங்கள் குடும்பத்துக்கு உதவி செய்ய முடியும் என்பதற்காகவே அவர்கள் சென்றார்கள்”.

ஸ்ரீலங்காவின் கொடிய பிரிவினைவாத யுத்தம் முடிவடைந்து மூன்று வருடங்களாகிவிட்ட போதிலும் தமிழர்களுக்கு நல்ல ஒரு வாழ்க்கை வாழ்வதற்கான ஒரு வாய்ப்பை நாடு இன்னமும் வழங்கவில்லை என்பதை கஜன் வலியுறுத்தினார். வேலை இல்லை,படிப்பு இல்லை, காவல்துறையினராலும், மற்றும் இராணுவத்தினராலும் எங்களுக்கு பிரச்சினைகள். நாங்கள் நம்பிக்கையை இழந்துவிட்ட மக்கள்” என்றார் அவர்.

இந்த வருடம் புகலிடம் தேடுபவர்களின் எண்ணிக்கையில் ஒரு பாரிய பாய்ச்சல் ஏற்பட்டுள்ளது, அளவுக்கு அதிகமான தமிழர்கள் ஸ்ரீலங்காவிலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு ஓடுகிறார்கள். இதுவரை 1541புகலிடம் தேடும் ஸ்ரீலங்காவாசிகள் அவுஸ்திரேலியாவின் எல்லையை அடைந்துள்ளார்கள், 2011ம் ஆண்டு எண்ணிக்கையை விட 700விகிதத்துக்கும் மேற்பட்ட அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

அதேபோல 700க்கும் மேற்பட்டவர்கள், முறையற்ற விதத்தில் ஸ்ரீலங்காவிலிருந்து அவுஸ்திரேலியா செல்வதற்கு வழி தேட முயற்சித்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள். கடந்த இருவாரங்களில் மட்டும் வெளியேற முயற்சித்த 334 பேர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள் என்று கடற்படைத் தளபதி கோசல வர்ணகுலசூரிய தெரிவிக்கிறார்.

கடற்படை, காவற்துறை, மற்றும் விமானப்படை என்பன ஸ்ரீலங்காவின் கடலோரங்களை சுற்றி ரோந்து செய்து வருகின்றன, மற்றும் கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் குறைந்தது மற்றொரு படகு நிறைந்த ஆட்கள் வழி மறிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்படுகிறார்கள். காவற்துறை பேச்சாளர் அஜித் றோகண தெரிவிக்கையில் எண்ணிக்கையில் பாரிய பாய்ச்சல் ஏற்பட்டிருப்பது தாமதமாகியும் மற்றும் பலமிழந்தும் போயுள்ள பருவக்காற்று காரணமாகத்தான், ஏனெனில் இந்து சமுத்திரத்தை படகுகள் கடந்து செல்வதற்கு அது நல்லதொரு வாய்ப்பினை வழங்குகிறது என்றார். புகலிடம் தேடுபவர்கள் செல்வதற்கு இலகுவானதும் மற்றும் இலாபகரமானதுமான இடம் அவுஸ்திரேலியாவே என்று அவர் மேலும் தெரிவித்தார். இவர்களில் 99 விகிதமானவர்கள் தமிழர்கள் ஏறக்குறைய அவர்களில் அநேகருக்கு அவுஸ்திரேலியாவில் சில உறவுகள் இருக்கின்றனர், மற்றும் அந்த உறவினர்கள் அவர்களை வரும்படி சொல்கின்றனர்” என்று அவர் ஹெரால்டு பத்திரிகைக்கு தெரிவித்தார்.

ஆனால் திரு.ரோகண, தமிழர்கள் இன்னமும் ஸ்ரீலங்காவில் அடக்கு முறையை எதிர்கொள்கிறார்கள் என்கிற குற்றச்சாட்டை நிராகரித்தார். கடல் கடந்து மக்களை ஏற்றிச்சென்று பணம் சம்பாதிக்கும் மனிதக் கடத்தல்காரர்களால் ஸ்ரீலங்காவை பற்றி ஒரு கெட்ட தோற்றத்தை கொடுக்கும்படி இவர்களிடம் சொல்லப்பட்டுள்ளது. தாங்கள் பாகுபாடாகவும் மற்றும் மோசமாகவும் நடத்தப்படுவதாக பாசாங்கு செய்யும்படி அவர்களுக்கு சொல்லப்பட்டுள்ளது. அது உண்மையில்லை”

இந்த தனிமைப்படுத்தப்பட்ட தமிழர் ஆதிக்கம் நிறைந்த மீன்பிடிக் கிராமத்தின் பெயரை மற்றும் அதன் இடத்தை,மற்றும் பேசியவர்களின் பெயர்களை வெளியிடுவதில்லை என்று ஹெரால்டு முடிவு செய்துள்ளது. தங்கள் பெயர்கள் வெளியிடப்படக்கூடாது என்கிற நிபந்தனையுடனேயே மக்கள் எங்களுடன் பேசினார்கள். தங்களுக்கு அல்லது தங்கள் குடும்ப அங்கத்தினர்களுக்கு எதிராக அரசாங்கம் பதிலடி கொடுக்கலாம் என அவர்கள் அஞ்சுகிறார்கள்.




(சங்கீதா மற்றும் அவளது சகோதரி ஆகியோர் புகலிடம் தேடிப்போன தங்கள் கிராமத்திலுள்ளவர்களுக்காக அழுகிறார்கள். இவர்களது சகோதரர் அப்படிச் செல்ல முயன்று சிறையில் அடைக்கப்பட்டார்)

ஒவ்வொரு வீட்டிலும் ஒரு அவுஸ்திரேலிய கதை உள்ளது. தருணாவின் 27வயது மகன் 18 நாட்களுக்கு முன்புதான் அவுஸ்திரேலியாவுக்கு சென்றார். நடு இரவில் அவர் ஒரு பேருந்தில் ஏறிச் சென்றார், பின்னர் தான் ஒரு படகில் ஏறிவிட்டதாகவும் நாட்டை விட்டு வெளியேறுவதாகவும் தொலைபேசி மூலம் தெரிவித்தார். அதிலிருந்து அவரைப்பற்றிய தகவல் எதுவும் அவளுக்கு கிடைக்கவில்லை.

“இங்கிருந்து சென்ற மற்றவர்கள் எல்லாம் தாங்கள் அவுஸ்திரேலியாவை அடைந்து விட்டதாக தொலைபேசி அழைப்பு விடுத்துள்ளார்கள், ஆனால் அவன் மட்டும் அழைக்கவே இல்லை. ஒவ்வொரு நாளும் நான் அதற்காகக் காத்திருக்கிறேன்”.

அவருக்கு முன்னதாக அவுஸ்திரேலியாவை வெற்றிகரமாக அடைந்து விட்டவர்களின் பாதையைத்தான் தனது மகனும் பின்பற்றியதாக தெரிவித்த தருணா, இருந்தும் அவரை அனுப்புவதற்கு தான் தடைபோட்டதாக தெரிவித்தார்.” அது மிகவும் கடினமான பயணம், அவனை அனுப்ப நான் விரும்பவில்லை, ஆனால் எனக்கு வேறு தெரிவு எதுவும் இருக்கவில்லை. எனக்கு நாலு பிள்ளைகள் உள்ளனர் அவரது உதவி எனக்கு தேவை”

தாரிடப்படாத சாலையில் வைத்து சந்தித்த காடின் மெலிந்து சோர்வாகத் தோற்றமளித்தார். இரண்டு நாட்களுக்கு முன்னர்தான் அவர் சிறையிலிருந்து வெளியே வந்திருந்தார். இரண்டு மாதங்களுக்கு முன்னர் அவுஸ்திரேலியா செல்லும் படகு ஒன்றில் வைத்து அவர் பிடிபட்டார். அது ஒரு கடற்படை கப்பலினால் வழி மறிக்கப்பட்டது. ஸ்ரீலங்கா காவற்துறையினரால் இரண்டு நாட்கள் விசாரணை செய்யப்பட்டதன் பின்னர் ஒரு மாதத்துக்கு மேலாக சிறையில் அடைக்கப் பட்டிருந்ததாக அவர் தெரிவித்தார். அது மிகவும் கடுமையாக இருந்தது. நாங்கள் கூனிக்குறுகித்தான் படுத்தோம். எல்லோரும் தகரத்தில் அடைக்கப்பட்ட மீன்களைப்போல நெருக்கமாக அடைக்கப்பட்டிருந்தோம். நான் தூங்கவே இல்லை,மற்றும் உணவு கிடைப்பதும் கடினமாகத்தான் இருந்தது” என்றார் அவர்.

அவரது சகோதரிகள்தான் அவரை வெளியே கொண்டுவந்தார்கள். அவரது விடுதலைக்கு சில பதினாயிரங்கள் தேவைப்பட்டன என அவர்கள் கண்ணீருடன் சொன்னார்கள். ஆனால் யாரிடம் பணம் கொடுத்தார்கள் எதற்கு கொடுத்தார்கள் என்பதைப் பற்றிய விபரங்களை தெரிவிக்க மறுத்து விட்டார்கள். அவர் திரும்பவும் போனால் நிச்சயம் அவரது குடும்பம் இன்னல்படும்.

உண்மையான அல்லது உணரப்பட்ட பொருளாதார வாய்ப்புத்தான் இந்தக் கிராமத்தில் இருப்பவர்களை ஓட்டைப் படகுகளில் ஏறி சமுத்திரத்தின் மறு கரையை நாடிச்செல்லத் தூண்டும் பிரதான காரணி.ஆனால் சிலர் இந்த இடத்தை விட்டுச்செல்வதற்கு அவர்கள் எதிர்கொள்ளும் தீவிரமான, முறையான மற்றும் சிலநேரங்களில் திகிலூட்டும் அடக்குமுறைகளும் காரணமாக இருக்கின்றன.

வெள்ளை வான் கடத்தல்கள் - இலக்கத் தகடுகளற்ற, சாதாரண உடை அணிந்தவர்களால் செலுத்தி வரும் வானில் ஆட்களை வீதியில் வைத்துப் பிடித்துப் போட்டுக்கொண்டு செல்வார்கள். அந்த ஆட்கள் சில நாட்கள், வாரங்கள் அல்லது சிலநேரங்களில் நிரந்தரமாகவே காணாமற் போய்விடுவார்கள் - பெரிய நகரங்களில் கூட இது சர்வ சாதரணமாக நடக்கிறது. ஆனால் மக்கள் தொடர்ச்சியாக காவற்துறையினரிடம் இழுபட்டு நீண்ட, சில நேரங்களில் வன்முறையான விசாரணைகளுக்கும் முகம் கொடுக்கவேண்டி ஏற்படுகிறது.

ஸ்ரீலங்காவை பற்றிய ஐக்கிய நாடுகள் சபையின் சமீபத்தைய அறிக்கையில் சொல்லப்படுவது “குற்ற சந்தேக நபர்களை பரவலாக சித்திரவதை செய்வது, மற்றும் மனிதத் தன்மையற்ற மிருகத்தனமான கீழ்தரமான முறைகளில் நடத்துவது பற்றி தொடர்ந்தும் சீரான குற்றச்சாட்டுகள் எழுவது பற்றி அது தீவிர கவலை அடைகிறது” என்று.

மக்கள் சொல்வது இந்தக் கிராமம் புலிகள் என்று நன்கறியப்பட்ட பயங்கரவாதிகளான தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஒருபோதும் ஆதரவளித்ததில்லை. சாதாரணமாக அவர்கள் தமிழர்கள் என்கிற காரணத்தால்தான் இலக்கு வைக்கப்படுவதாக அவர்கள் தெரிவித்தார்கள்.

“நீங்கள் ஏதாவது செய்திருந்தால் பரவாயில்ரை,ஆனால் நீங்கள் எதுவுமே செய்யாமல் மற்றும் எதுவுமே தெரியாமலிருக்கையில் எப்போதும் உங்களை சநதேகப்படுவது முறையா” என்றார் காடின்.

இங்குள்ள ஆண்கள் யாவரும் மீனவர்களே, வழமையாக தங்கள் வியாபாரத்தை நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் நடத்தி வந்தார்கள். யுத்தத்தின்போது கிளர்ச்சியாளர்களான புலிகளுடன் பெரும்பாலும் அவர்கள் விருப்பமில்லாமலே தொடர்புகளை எற்படுத்தவேண்டிய நிலமை ஏற்பட்டது.

யுத்தத்திற்கு பிந்திய ஸ்ரீலங்காவில் நிகழும் சங்கடமான சமாதான காலத்தில் கிட்டத்தட்ட ஒவ்வொரு தமிழனுக்கும் நேராக ஒரு கோடு கிழிக்கப்பட்டுள்ளது.“எவர்மீதும் குற்றம் சுமத்த முடியும், நாங்கள் எல்லோருமே அவர்களுக்கு குற்றவாளிகள்தான்” என்றார் காடின். ஆனால் பெரும்பாலும் இதற்கு பின்னால் இருப்பவர்கள்தான் நிலமையை மோசமாக்குகிறார்கள். மக்களின் வீடுகளுக்கு முன்னால் அவர்கள் ஏன் சென்றார்கள், யார் அவர்களை அழைத்து சென்றார்கள் என்பதை அறிய காவல்துறையினர் முன்னறிவிப்பு இன்றி வந்து நிற்கிறார்கள். இந்தக் கிராமத்திலுள்ளவர்களை அடித்து துன்புறுத்தி நாட்கணக்கில் விசாரணைகளை மேற்கொள்கிறார்கள். சித்திரவதை மற்றும் துஷ்பிரயோகங்கள் பற்றி காவற்துறையினர்மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் உண்மையில்லை என்கிறார் அஜித் ரோகண.

“பொதுவாக ஸ்ரீலங்கா காவல் நிலையங்களில் பொதுவான நடைமுறையாக சித்திரவதைகள் மேற்கொள்ளப்படுவதில்லை”

இந்தக் கரையோரக் கிராமத்திலிருந்து தஞ்சம் கோருபவர்கள் பெருமளவு வெளியேறிய போதிலும், அவுஸ்திரேலியா புகலிடம் தேடுபவர்களை கையாளும் நடைமுறைகளைப்பற்றிய இவர்களுக்கான அறிவு மிகக் குறைவு. பெரும்பாலானவர்கள் நம்புவதும் எம்மிடம் சொன்னதும் புகலிடம் தேடுபவர்கள் வந்திறங்கியதுமே குடியுரிமை கிடைத்துவிடும் அல்லது அவர்கள் கிறிஸ்மஸ் தீவினை அடைந்ததும் அவர்களின் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கான அங்கீகாரம் கிடைத்துவிடும் என்று.

மற்றவர்கள் சொன்னது அது சில வாரங்களுக்கான பிரச்சினை மட்டுமே அங்குள்ள அவர்களது உறவினர்கள் அதற்கான வேலைகளை செய்வார்கள், இவர்கள் அவுஸ்திரேலியா டொலர்களை சம்பாதித்து வீட்டுக்கு அனுப்ப வேண்டியதுதான் பாக்கி என்று.

சிறைவாசத்துக்கான அச்சுறுத்தல், மற்றும் மற்றைய பக்கத்தின் நிலையற்ற தன்மை என்பவைகள் போன்ற சகல ஆபத்துக்கள் உள்ளபோதிலும் ,இந்த ஆபத்தான கடப்பை கடப்பதற்கான ஒரு வாய்ப்பை மேற்கொள்வதற்கான இளம் ஆண்களுக்கு இங்கு குறைவேயில்லை. ஆனால் காடின் அவுஸ்திரேலியாவுக்கு செல்வதற்கு ஒருமுறை முயற்சி செய்து தோல்வி கண்டவர், மீண்டும் முயற்சி செய்யமாட்டார். “எனக்கு போவதற்காக ஒரு வாய்ப்பு கிடைத்தது,ஆனால் நான் அதை இழந்து விட்டேன், ஆனால் என் இடத்தில் உள்ள மற்றவர்கள் அதற்காக முயற்சி செய்வார்கள்” என்றார் அவர்

(நேர்காணல் செய்யப்பட்டவர்களின் பெயர்கள் அவர்களின் அனாமதேயத்தை பாதுகாப்பதற்காக மாற்றப்பட்டுள்ள அதேவேளை அந்த மக்களை பாதுகாப்பதற்காக அந்தக் கிராமத்தின் பெயரும் வெளியிடப்படவில்லை. இந்தக் கட்டுரை “சிட்னி மோர்ணிங் ஹெரால்டு பத்திரிகையில் பிரசுரமானது)


- பென் டோஹேர்ட்டி

மொழிபெயர்ப்பு: எஸ்.குமார்
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல