செவ்வாய், 14 ஆகஸ்ட், 2012

ஸ்ரீலங்கா இளைஞர்களின் வெளியேற்றம் : என்ன நடக்கிறது?

- துளசி முத்துலிங்கம் மற்றும் சுரானி பெரேரா

“;வடக்கில் வாய்ப்புகள் குறைவடைவதற்கான ஒரு படைப்பு ஏற்படுவதற்கான காரணம் பிரபாகரன்தான் என்பதை நாம் மறந்துவிடலாகாது. தமிழ் தேசியக்கூட்டமைப்பு மற்றும் தெற்கத்தைய அரசியற்கட்சிகள் ஆகிய இருபகுதியினரும் இதில் ஒரு நிலையான தீர்வை ஏற்படுத்துவதற்காக ஒன்றிணைய வேண்டியது அவசியம்.

என்னதான் பிரச்சினை?


ஒரு வளர்ச்சியடைந்த நாடு என்கிற நிலையிலிருந்து ஸ்ரீலங்கா இன்னும் வெகு தூரத்திலேயே உள்ளது என்பதற்கு பல உதாரணங்கள் உள்ளன. அவற்றில் மிகவும் வெளிப்படையான ஒன்று....? பெரும்பாலான வளர்ச்சியடைந்த நாடுகள் தங்கள் இளைஞர்களை தக்க வைத்துக் கொள்வது மட்டுமன்றி, அரும்பிவரும் தங்கள் நாட்டு பொருளாதாரத்தை மேலும் மேம்படுத்துவதற்காக மற்ற நாடுகளில் உள்ளவர்களையும் இங்கு வரும்படி தீவிரமாக வேண்டிக்கொள்கிறார்கள்.

ஸ்ரீலங்காவிலோ விமானங்கள் நிறைந்து மட்டுமன்றி, இப்போது மிகவும் கவலை தரும்படியாக படகுகள் நிறைந்தும் இளைஞர்கள் ஒவ்வொரு நாளும் எங்கள் கரையை விட்டு வெளியேறுகிறார்கள் அல்லது வெளியேற முயற்சிக்கிறார்கள்.

அப்படி என்ன நமது நாட்டிலுள்ள ஆதரவற்ற தன்மை இந்த இளைஞர்களை இந்த இடத்தை விட்டு வேறு எங்காவது ஓடிப்போகவேண்டும் என்கிற வேகத்தை தூண்டிவிடுகிறது? இதை அவர்களிடமிருந்து நேரடியாக கண்டறிவதற்கான ஒரு முயற்சியாக சிலோன் ருடே நாட்டின் சகல பகுதிகளிலுமிருக்கும் சமூகத்தை சேர்ந்த இளைஞர்களுடன் நேர்காணல் நடத்தியது மட்டுமன்றி, உளவியலாளர்கள், பொருளியலாளர்கள், தொழிலாளர்கள், மற்றும் கொள்கை வகுப்பாளர்கள் போன்றவர்களுடனும் இந்தப் பிரச்சினையின் அடிவேரைக் கண்டறிவதற்காக பேச்சுக்களை நடத்தியது.

ஒரு இளைஞர் குழுவினரை குறிவைத்து, ”உங்கள் மத்தியில் இருந்து எவரெல்லாம் குடிபெயர விரும்புகிறீர்கள்?” எனக்கேட்போது, உடனடிப் பதிலாக வெளிவந்தது” “யாருக்குத்தான் விருப்பமில்லாமல் இருக்க முடியும்? நாங்கள் அனைவருமே குடிபெயர விரும்புகிறோம்” என்று. அதற்கான தனித்தன்மையான காரணத்தை கூறும்படி கேட்டபோது, பதில்களானது அதிக மரியாதையுடன் கூடிய சிறப்பான வாழ்க்கை முறைக்கான வாய்ப்புகள் மற்றும் அபிவிருத்தி அடைந்த நாடுகளில் தங்களின் தொழில்களுக்கான அங்கீகாரம் என்கிற வீச்சில் வேறுபட்டிருந்தது.

பொருளியல் நிபுணராக இருந்து அரசியல்வாதியாக மாறியுள்ள கலாநிதி. ஹர்ஷா டீ சில்வா” எங்கள் சமூகத்தில் வயதானவர்களுக்கு பக்கச் சார்பான ஒரு முடிவு உள்ளது. நிறுவனங்கள் அனுபவமுள்ளவர்களையே தங்கள் பணிகளுக்கு தெரிவு செய்ய விரும்புகின்றன. அரசாங்கத் துறையில்கூட பணியாளர்கள் ஓய்வு பெற்றதன் பின்புகூட, ஆலோசகர்கள் என்கிற பெயரில் திரும்பவும் வேலைக்கு கொண்டுவரப் படுவதால் தொழில் ஏணியில் இளைஞர்கள் மேலேறுவதற்கு சிறிதளவு இடைவெளியே விடப்படுகிறது.

அவர் மேலும் சுட்டிக்காட்டியது தொழில் முனைவோருக்கான இடைவெளிகளிலும் அதேபோல இளைஞர்கள் ஓரங்கட்டப்பட்டு வருகிறார்கள். “நம்முடைய வங்கிகள், மற்றும் நிதி நிறுவனங்கள் போன்றவை தாங்கள் வணிகம் செய்யும் முறைகளில் மிகவும் பழைய பாரம்பரிய வழிகளையே பின்பற்றி வருகிறார்கள். அவர்கள்; கேட்கும் பிணை இளைஞர்களிடம் இருப்பதில்லை. இளைஞர்களிடம் பல நல்ல கருத்துக்கள் இருக்கலாம். ஆனால் அதை நிறைவேற்றுவதற்கு அவர்கள் கடன் கோரும்போது அதைப் பின்தாங்க அவர்களிடம் பிணையத் தொகை இல்லை. வளர்ச்pயடைந்த நாடுகளில், நல்ல திட்டங்களுக்கு நிதியுதவி வழங்க முதலீட்டு நிறுவனங்களைப்போல செயலாற்றும் தனவந்தர்களான தனி நபர்கள் மற்றும் நிறுவனங்கள் உள்ளன. அத்தகைய நிதியுதவி ஸ்ரீலங்காவில் இல்லை.

பிரதானத்துவம் இல்லாத தொழில்கள்

நாங்கள் பேசிய இளைஞர்களில் குறிப்பிட்ட எண்ணிக்கையானவர்கள், ஸ்ரீலங்காவில் கிடைக்கும் சம்பளங்கள் இங்குள்ள வாழ்க்கை செலவை ஈடுகட்ட போதுமானவையல்ல என்று சம்பள விடயம் பற்றியும் நமது கவனத்துக்கு கொண்டுவந்தார்கள். தொழிலாளர் ஒன்றியத்தின் பணிப்பாளர் நாயகம் ரவி பீரிஸ் பேசுகையில் தொழிற் சந்தையின் வழங்கல் மற்றும் தேவை என்பனவற்றின் விளைவுகளை வெறுமே பராமரிக்கும் சக்தியாக இருப்பது சம்பளமே. மற்றும் கணக்கியல் போன்ற சில துறைகளில் மிதமிஞ்சியளவுக்கு தொழிலாளர்கள் உள்ளபோதும் குழாய் திருத்தல் போன்ற வேலைகளுக்கு போதுமானளவு ஆட்கள் கிடைப்பதில்லை என்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.” சில இடங்களில் 1,000 ரூபா தினக்கூலிக்கு கூட குழாய் பணியாளர்கள் கிடைப்பதில்லை. ஆனால் கணக்கியல் உதவியாளர்கள் மற்றும் கணக்கு தணிக்கை பயிலுனர்கள் போன்றவர்கள் தங்கள் தொழில்களில் பயிற்சியும் பெறுகிறார்கள். எனவே பரஸ்பர நன்மை கருதி இந்த துறைகளில் சம்பளம் மிகவும் குறைவாகவே வழங்கப்படுகிறது”.

ஐ.ஓ.எம் எனப்படும் சர்வதேச குடியேற்றத்துக்கான நிறுவனத்தின் குடியேற்ற முகாமைத்துவ பிரிவின் தலைவரான சாந்தா குலசேகர, தொழில் சந்தையிலுள்ள சில பிரதானத்துவமான துறைகள் அளவுக்கு அதிகமாக பிரதிநிதித்துவ படுத்தப்பட்டிருப்பதும் மற்றும் அதன்படி அத்தொழில்களுக்கு குறைவான கிராக்கியும், அதேவேளை குறைந்தளவு தேவைகள் உள்ள துறைகளுக்கு வேண்டிய தொழிலாளர்களுக்கு அதிகளவு கிராக்கி இருப்பதையும் பற்றிய விடயத்தை ஒருங்கிணைத்தார்.

“ஸ்ரீலங்காவின் பொருளாதாரம் எட்டு விகிதம் வளர்ச்சியடைகிறது. உத்தியோகபூர்வமான வேலையற்றவர்களின் விகிதம் ஆறு ஆகும். ஒரு புறம் எங்களிடம் வளரும் பொருளாதாரம் உள்ள அதேவேளை மறுபக்கத்தில் மக்கள் வேலை கிடைப்பதில்லை என்று தொடர்ந்து முறையிட்டு வருகிறார்கள். எனினும் சில தொழிலதிபர்கள் சில குறிப்பிட்ட வெற்றிடங்களை நிரப்புவதற்கு போதியளவு ஆட்கள் கிடைப்பதில்லை என்று புகார் தெரிவிப்பதையும் நாம் காண்கிறோம். இன்று நாட்டில் தச்சுத் தொழிலாளிகள் மேசன்கள். மின்சார தொழிலாளர்கள் மற்றும் காப்பாளர்கள் போன்ற தொழில்களுக்கு ஏகப்பட்ட கிராக்கி நிலவுகிறது.

“பல்கலைக்கழக கல்விதான் எல்லாத் தொழில்களுக்கும் தேவை என்கிற தவறான கண்ணோட்டம் எமது மக்கள் மத்தியில் நிலவுவதுதான் இதற்கான பிரச்சினை. இன்று உயர் கல்வித்துறையில் ஒரே முக்கியத்துவம் உள்ள படிப்புகளைத்தான எல்லோரும் கற்கிறார்கள். அந்த குறிப்பிட்ட துறையில் தேவை மற்றும் விநியோக காரணிகள் இருப்பதினால் அவர்கள் எல்லோருக்கும் அதே குறிப்பிட்ட துறையில் வேலைகளை பெற்றுக்கொள்ள முடியாது. எனவே அவர்கள் மனக்குழப்பத்துக்கு ஆளாகிறார்கள் “நாங்கள் வெளிநாடு சென்றால் நாங்கள் நல்ல நிலையில் இருப்போம்” என்று எண்ணத் தொடங்குகிறார்கள்.” அது உண்மையாக இருக்கவேண்டிய அவசியமில்லை. உதாரணத்துக்கு மத்திய கிழக்கை எடுத்துக் கொண்டால், அங்கு அநேகர் வேலை தேடிச் செல்கிறார்கள். இந்தியா, பங்களாதேஷ் ஆகியோருக்கு மத்தியில் எங்களுக்கு கடும் போட்டி உள்ளது. நாங்கள் போட்டியிட முடியாத அளவுக்கு மிகவும் மலிவான விலையில் அவர்கள் தொழிலாளர்களை வழங்குகிறார்கள். உதாரணத்துக்கு ஒரு சாரதி அல்லது பணிப்பெண் 20,000 ரூபாவுக்கு சமமான அளவிலேயே சம்பாதிக்க முடியும், உண்மையில் மற்றொரு நாட்டுக்கு இடம்மாறி உழைப்பதற்கு அது பெறுமதியற்றது.

அதேயளவு தொகையை அல்லது அதற்கும் அதிகமான தொகையை சம்பாதிக்க கூடிய தொழில்கள் இங்கும் உள்ளன என்பதை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும். பொருளாதாரத்தின் நிலை எப்படியிருந்தாலும் வீட்டுப் பணியாளர்கள் போன்ற பகுதிக்கான தொழிற்சந்தைக்குத் தொடர்ந்து நல்ல கிராக்கி இருக்கும் “என்று குலசேகரா தெரிவித்தார்.

சிறுபான்மையான மற்றொரு கோணம்

மற்றவர்கள் அதிகம் ஈடுபடாத தொழில்களில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் உள்ளன என்பதை ஒரு இளைஞர் ஏற்றுக் கொண்டார். அதன் காரணமாக வெளிநாட்டுக்கு இடம் பெயர்வதை பற்றி கவனத்தில் கொள்ளவில்லை என்பதையும் தெரிவித்தார். ஒரு கட்டத்தில் தான் வேறு நாட்டுக்கு ஏன் இடம் பெயர விரும்பினார் என்பதற்கு நாங்கள் சற்றும் எதிர்பாராத ஒரு பதிலை அவர் வழங்கியிருந்தார் – அதற்கான காரணம் அவரது பாலியல் நாட்டம். அவர் ஒரு ஓரினச்சேர்க்கையாளர் என்பது தெரியவந்தபோது, இரண்டு வருடங்களுக்கு முன்பு அவரது 21ம் வயதில் அவரது குடும்பத்தினரால் வெளியேற்றப்பட்டார், அவரைப் பொறுத்தமட்டில் அவரது உறவினர்களின் இந்த எதிர்தாக்கம் தன்னை மிகவும் பாதித்ததாகவும் அதனால் மிகவும் முன்னேற்றமடைந்த ஒரு நாட்டுக்கு குடிபெயர்வதை கவனத்தில் எடுத்ததாகவும் அவர் தெரிவித்தார். எனினும் அவரது பழக்கம் ஒரு கடந்து செல்லும் நிகழ்ச்சி என வெளிப்படையாக நம்பியிருந்த அவரது குடும்பத்தவர்களின் பெரும் திகைப்புக்கிடையில் அவர் தனது துணையை கண்டுபிடித்து வாழ்க்கையை அமைத்துக் கொண்டுவிட்டார்.

அந்த இரண்டு வருடங்களிலும்,அவர் அவரது நண்பர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டாலும், அவரது குடும்பத்தில் பெரிய முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை. “ எனது பாலியல் சார்பு பற்றி நான் ஒரு நிலைக்கு வருவதற்கு ஒரு தசாப்தத்துக்கு மேற்பட்டகாலம் தேவைப்பட்டது, எனவே எனது குடும்பம் இதை ஏற்றுக் கொள்வதற்கு சிறிது காலம் தேவைப்படும் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியும்” என்றார் அவர்.

அவர் அவரது துணைவருடன் கொழும்பில் குடியேறிய பிறகுதான் அவரது புலம் பெயரும் எண்ணங்கள் ஆவியாகியன. மற்றும் அவர்கள் எதிர்பார்த்ததைபோல அவர்களுக்கு துன்புறுத்தல்கள் ஏற்படவில்லை.” நான் அவருடன் எல்லா இடங்களுக்கும் செல்வேன், கிராமப்புறங்களுக்கம் கூடச் செல்வேன். எங்களுக்கு எதிராக பாரபட்சம் காட்டப்படவோ அல்லது ஏளனங்கள் புரியப்படவோ இல்லை. ஆனால் பகிரங்கத்தில் நாங்கள் வழங்கும் தோற்றமும் முதிர்ந்த தன்மையானதாகவே இருக்கும். நாங்கள் எங்கள் அன்பை பகிரங்க காட்சிப்படுத்தலில் வெளிப்படுத்திக் கொள்வதில்லை.”

அதேவேளை பொருளாதாரத்தை தவிர வேறு என்ன காரணங்கள் எங்கள் இளைஞர்களை நாட்டைவிட்டு துரத்தமுடியும் என்பதற்கு இந்த இளைஞன் சிறுபான்மையான மற்றொரு கோணத்தையும் காட்டியிருந்தார். இருந்தபோதிலும் வெளியேற விரும்புவதற்கு முக்கியமான காரணம் பொருளாதாரக் காரணமே.
ஓடிப்போதல்

கொழும்பு பல்கலைக்கழக சமூகவியலாளர், பேராசிரியர் எஸ்.ரி.ஹெட்டிகேயின் கூற்றின்படி பெரும் எண்ணிக்கையான இளைஞர்கள் நாட்டை விட்டு வெளியேற விரும்பவோ, அல்லது முயற்சிப்பதோ நாட்டுக்கு ஒரு நல்ல அறிகுறியல்ல. ”உண்மையில் அதற்கான மோசமான அடையாளங்கள் உள்ளன, ஆனால் இளைஞர்கள்தான் ஒரு நாட்டின் எதிhகாலம். இளைஞர்கள் நாட்டை விட்டு செல்ல நினைப்பது அவர்கள் வசிப்பதற்கு சிறந்த இடங்களைத் தேடியே. அதிகரித்துவரும் பொருளாதார அழுத்தமும் அதற்கான காரணங்களில் ஒன்று.

1970களில் 15 சதத்துக்கு கிடைக்ககூடிய பொருள் ஒன்றின் பெறுமதி இப்போது கிட்டத்தட்ட 15 ரூபாவாக உள்ளது. எனவே பொருளாதார தாராளமயக் கொள்கையின் விளைவாக பொருட்களின் விலை கிட்டத்தட்ட 100 மடங்கு உயர்ந்துவிட்டது. எப்படியாயினும் இங்குள்ள அநேக இளைஞர்கள் வெளிநாடு சென்று குப்பைகளை சுத்திகரித்தல், சாரதி வேலை, மற்றும் தோட்டவேலை போன்ற உடல் உழைப்புகளிலேயே ஈடுபடுகிறார்கள். இதன் விளைவு என்னவென்றால் இந்த நாட்டைவிட்டு அவர்கள் ஓடிப்போவது மிகவும் மோசமான தொழில்களை செய்வதற்காகவே”.

அதேவேளை 2010ல் பேராசிரியர் ஹெட்டிகே மேற்கொண்ட ஆராய்ச்சி, 50விகிதத்துக்கும் அதிகமான இளைஞர்கள் நாட்டைவிட்டு வெளியேற விரும்புகிறார்கள் என்று கணக்கிட வழிவகுத்தது. ஸ்ரீலங்கா ஐக்கியப்படுகிறது என்கிற நல்லிணக்க இளைஞர் அமைப்பின் நிறுவனரும், தலைவருமான பிரஸ்கான் டீ விஸ்ஸர், இந்த எண்ணிக்கை வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளிலுள்ள இளைஞர்களை பொறுத்தமட்டில் 90விகிதத்துக்கு கிட்டவாக இருக்கும் என்கிற தோற்றத்தை ஏற்படுத்துகிறார்.

டீ விஸ்ஸர் தீவு முழுவதிலுமுள்ள பதின்ம வயதுள்ளோர் மற்றும் இளம் பிராயத்தினர் ஆகியோருடன் மூன்று வருடங்களுக்கு மேலாக தொடர்பு கொண்டு வருகிறார், ஸ்ரீலங்காவாசி என்கிற அடையாளத்தின் ஒத்திசைவின் குறைபாடே இந்தப் பிரச்சினையின் மூலகாரணம் என்கிறார் அவர். அவரைப் பொறுத்தவரை ஸ்ரீலங்காவின் அனைத்துப் பகுதிகளிலுமுள்ள இளைஞர்கள் எல்லோரும் வளர்க்கப்பட்டிருக்கும் முறை, ஒரு ஸ்ரீலங்காவாசியாக தன்னை தொடர்பு கொள்ள இயலக்கூடிய வகையிலோ அல்லது பொதுவான ஸ்ரீலங்காவாசியின் அடையாளமோ அல்லது கனவோ இருப்பதற்கான உணர்வு குறைவான நிலையிலேயாகும். இது நாடளாவிய ரீதியில் இளைஞர்களிடம் இந்த நிகழ்வு காணப்படுவதை தான் கண்டதாக அவர் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்தது, அது விசேடமாக வடபகுதி இளைஞர்களிடம் அதிகம் காணப்படுகிறது என்று.

அவுஸ்திரேலியாவுக்கு செல்லும் படகுகளில் உள்ளவர்கள் 99 விகிதமானவர்கள் தமிழர்களாக இருப்பதற்கு இதுவும் ஒரு காரணமா?. பருத்தித்துறையிலுள்ள அபிவிருத்தி நிறுவனத்திலுள்ள அபிவிருத்தி பொருளியலாளர் கலாநிதி.முத்துக்கிருஷ்ணா சர்வானந்தன் தெரிவிப்பது, வடபகுதி குடா நாட்டுப் பகுதியிலிருந்து பெரும்பாலான தமிழர்கள் வெளியேறுவதற்கான காரணம் பொருளாதாரம் என்றுதான். படகுகளை இயக்கும் மனிதக்கடத்தல் கூட்டணியினர் தெரிவிக்கும் பசுமை வளக் கனவுகளுக்கு அவர்கள் தங்களை விற்றுவிட்டார்கள்.

படகு நிறைந்த தமிழர்கள்

ஒரு விகிதாசாரமற்ற முறையில் புலம்பெயருபவர்களின் எண்ணிக்கையில் தமிழர்கள் அதிகமாக இருப்பது ஏன்? இதற்கான பதில் டீ விஸ்ஸரினது அவதானிப்புகள், அதேபோல ஸ்ரீலங்கா கடற்படையினர் எழுப்பியுள்ள பிரச்சனையான, அவுஸ்திரேலியா சிங்களவர்களைக் காட்டிலும் தமிழர்களுக்கு சாதமாக நடந்து கொள்கிறது,அதனால்தான் அது எந்த தமிழரையும் திருப்பி அனுப்புவதில்லை என்பனவற்றின் கூட்டுத்தான்.

அல் ஜசீரா வலையமைப்பினால் சமீபத்தில் ஸ்ரீலங்கா கடற்படையினரால் திரும்ப அழைத்து வரப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட காணொளி நேர்காணலில் இது வெளிப்பட்டுள்ளது. அந்த மனிதர்; தெரிவித்தது, அவருக்கு முன்னால் போனவர்கள் அனைவரும் திருப்பி அனுப்பப்படாமல் அவுஸ்திரேலியாவில் புகலிடம் தேடியுள்ளனர். மற்றும் அது தாங்களும் அதை மேற்கொள்ளலாம் என்கிற நம்பிக்கையை தமக்கு ஏற்படுத்தியுள்ளது என்று. ஸ்ரீலங்கா கடற்படையின் துணை அட்மிரல் மேற்கொண்ட உத்தியோக பூர்வ முறைப்பாடுகளுக்கு ஏற்ப செயற்படும் அவுஸ்திரேலிய அரசாங்கம், தயான் அன்ரனி என்கிற தமிழரை ஒரு வாரத்துக்கு முன்னர் உடனடியாக திருப்பி அனுப்பியுள்ளது. இன்னும் பலரை அனுப்புவதாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

அந்தனி கொழும்புக்கு திரும்பிய பின்னர் அரசாங்க அனுசரணையிலான ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றில் அவுஸ்திரேலியா அரசாங்கம் தனக்கிழைத்த கொடுமைகளை நினைவு கூர்ந்ததுடன் தான் அவுஸ்திரேலியாவில் பல நல்லவைகளை மேற்கொள்ளலாம் என கடத்தல்காரர்களால் ஏமாற்றப்பட்டதாகவும் தெரிவித்திருந்தார்.

ஆனால் அவரது எச்சரிக்கையான பதில்களுக்கிடையில் அவர் எப்படி ஏமாற்றப்பட்டார் என்கிற கேள்விக்கு அவரது எதிர்காலத் திட்டம் அநேகமாக வெளிநாட்டில் ஒரு வேலையை தேடிக்கொள்வதே என அவரது பதில் இருந்தது.

அவர்கள் சொல்வதைப்போல சில விடயங்கள் அதிகம் மாற்றமடைவதற்கு அதிக காலம் அவர்கள் காத்திருக்க வேண்டும் என்பதே. ஆறு மாதங்களுக்கு முன்னர் படகு மூலம,; 24 வயதான தனது மூத்த மகனை அவுஸ்திரேலியாவுக்கு அனுப்பிய மட்டக்களப்பை சேர்ந்த 47 வயதான இந்திராணி என்கிற ஒரு தாய் தெரிவிப்பது, தனது மகன் நாட்டை விட்டு தள்ளிவிடப்பட்டது அரசாங்கம் மற்றும் பிள்ளையான் குழுவினர் ஆகிய இருவரினாலும்தான் என்று.

தமிழ் மொழியில் ஒரு முதுநிலை பட்டத்தையும் அதேபோல ஆங்கில மொழியில் பட்டயச் சான்றிதழும் பெற்ற அவரது மகன் தன்னை காப்பாற்றிக் கொள்வதற்காக தனது பல்கலைக்கழக கல்விக்கு முற்றிலும் பொருத்தமற்ற தொழில்களான மேசன்வேலை போன்றவற்றைக்கூட செய்யவேண்டியதாக இருந்தது. அவர் ஒரு பாடசாலை ஆசிரியராக கஷ்டப்பட்டு ஒரு வேலையை தேடிக்கொண்ட போதும் உள்மட்ட அரசியல் தலையீடுகள் காரணமாக அவருக்கு ஏற்கனவே ஒரு நியமனக்கடிதம் வழங்கப்பட்டிருந்த போதும் அவரது வேலை அவரிடமிருந்து திரும்பப் பெறப்பட்டது. தனது மகன் இவ்வாறு நசுக்கப்படுவதை கண்ட அந்த தாய் பணம் சேகரிப்பதற்காக தனக்கு சொந்தமான காணித்துண்டு ஒன்றை விற்று தனது மகனை அவுஸ்திரேலியாவுக்கு அனுப்பியுள்ளார்.

“அவர்கள் ஆரம்பத்தில் 1.2 மில்லியன் ரூபாக்களை கேட்டார்கள் ஆனால் நான் பேரம்பேசி அதனை 700,000 க்கு கீழே கொண்டு வந்தேன், அதில் அரைவாசி பணம் உடனே செலுத்தப்பட வேண்டும், மற்றைய அரைவாசி எனது மகன் அவுஸ்திரேலியாவை அடைந்ததும் செலுத்தப்பட வேண்டும் என்பதுதான் உடன்படிக்கை. அவர் இன்னமும் அங்கு தடுப்புக்காவல் மையத்தில்தான் உள்ளார். ஆனால் அவர் விரைவில் விடுதலையாகி விரைவிவிலேயே ஒரு வேலையை, அதுவும் ஒரு அரசாங்க வேலையை தேடிக் கொள்வார் என நான் நம்புகிறேன்”

கலாநிதி ஹர்ஷா டீ சில்வா தெரிவிப்பதின்படி எங்கள் இளைஞர்களை இங்கே தங்கவைப்பதற்கு இரண்டு முனைகளுள்ள முயற்சிகள் செய்யப்பட வேண்டும், புலம் பெயர்ந்தவர்களின் துணையுடன், இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்பை வழங்ககூடியதாக நமது உள்கட்டமைப்பை உள்நாட்டில் முன்னேற்ற வேண்டும்.

“;வடக்கில் வாய்ப்புகள் குறைவடைவதற்கான ஒரு படைப்பு ஏற்படுவதற்கான காரணம் பிரபாகரன்தான் என்பதை நாம் மறந்துவிடலாகாது. தமிழ் தேசியக்கூட்டமைப்பு மற்றும் தெற்கத்தைய அரசியற்கட்சிகள் ஆகிய இருபகுதியினரும் இதில் ஒரு நிலையான தீர்வை ஏற்படுத்துவதற்காக ஒன்றிணைய வேண்டியது அவசியம்.

அவுஸ்திரேலியாவை பொறுத்த மட்டில் - இந்த படகு நிறைந்த ஆட்கள் அவுஸ்திரேலியாவுக்கு தப்பிச் செல்வதற்கு முயற்சிப்பதையிட்டு நான் ஆச்சரியப் படுவதுண்டு. இன்று இது ஒவ்வொரு நாளும் நடைபெற்று வருகின்றது. அவுஸ்திரேலியா என்பது என்ன? நாடு கடத்தப்பட்ட குற்றவாளிகளின் கடுமையான உழைப்பினால் முன்னேறிய ஒரு நாடு. அவர்களால் இந்த ஒரு 200 வருட வரலாற்றுக்குள் இந்த நிலைக்கு முன்னேற முடியுமாயின்,ஏன் எங்கள் நாட்டின் உட்கட்டமைப்பை அதற்கு பொருத்தப்படக்கூடிய வகையில் நம்மால் முன்னேற்ற முடியாது?

நாங்களும் அந்த உட்கட்டமைப்பு விடயத்துக்கு ஏற்ற வகையில் வேலை செய்ய வேண்டும் - அல்லது மாற்றத்தை விரும்பாத வகையில் நமது மக்கள் தொடர்ந்து வாக்களித்து வருவதனால் நாம் நமக்கு கிடைக்க கூடிய முதலாவது படகினை நோக்கி பயணப்பட வேண்டிய நிலையிலுள்ளோம். எனவே அதன் விளைவு கிறிஸ்மஸ் தீவோ அல்லது கொக்கோ தீவாகவோ இருக்கலாம்’

மொழிபெயர்ப்பு: எஸ்.குமார்

(சிலோன் ருடே)
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல