செவ்வாய், 7 ஆகஸ்ட், 2012

பிரபாகரன் மீது டில்லிக்கு ஏன் கோபம்?

“நாளை இந்திய ராணுவத்துடன், இலங்கை ராணுவம் நேரடியாக மோதும். இரு நாடுகளுக்கும் இடையில் யுத்தம் நாளை வெடிக்கும்” இந்தியாவுக்கு இப்படி ஒரு மிரட்டல் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியால் விடுக்கப்பட்டது என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
அதற்கு இந்திய தரப்பில் இருந்து, “உங்களுக்கு யுத்தம்தான் தேவை என்றால், நாம் அதற்கும் தயார்” என்ற பதிலடி கொடுக்கப்பட்ட விபரமும் இப்போது தெரியவந்துள்ளது.

புதுடில்லியில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில், இதுவரை வெளியாகாத இந்த விபரங்களை வெளியிட்டுள்ளார், லக்ஹன் லால் மெஹ்ரோத்ரா. இந்திய அமைதிப்படை இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக மோதிய நாட்களில், கொழும்பில் இந்திய தூதராக பணிபுரிந்தவர், இந்த எல்.எல்.மெஹ்ரோத்ரா.

ஐ.ஐ.எஸ்.எஸ். (Indian Institute of Social Sciences) அமைப்பால் புதுடில்லியில் ஒழுங்கு செய்யப்பட்ட கருத்தரங்கு ஒன்றிலேயே, தற்போது ஓய்வு பெற்றுள்ள இந்திய ராஜதந்திரி மெஹ்ரோத்ரா இந்த ரகசியத்தை உடைத்திருக்கிறார்.

ராஜதந்திர முறுகலை ஏற்படுத்திய இந்த விவகாரம், மூன்று தரப்புகளுடன் தொடர்புடையது.

மல்ஹோத்ரா

1) இலங்கைக்கு இந்திய அமைதிப் படையை அனுப்பிய அன்றைய இந்தியப் பிரதமர் ராஜிவ் காந்தி. விடுதலைப் புலிகளுக்கு உதவ என்று ஆரம்பத்தில் அனுப்பி வைக்கப்பட்ட இந்திய அமைதிப்படை, விடுதலைப் புலிகளுடனேயே யுத்தம் புரிந்தது.

2) இந்திய அமைதிப்படையை முதல் தினத்தில் இருந்தே எதிர்த்த அன்றைய இலங்கை ஜனாதிபதி, ரணசிங்கே பிரேமதாச. இந்தியர்களை வெளியேற்றுவதற்காக இவர், விடுதலைப் புலிகளுடன் டீல் வைத்துக் கொண்டார்.

3) புதுடில்லியில் ராஜிவ் காந்தியுடன் பேசிவிட்டு இலங்கை திரும்பியபின், இந்திய அமைதிப்படைக்கு எதிராக யுத்தம் துவங்கிய, விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன். தமது ஆரம்பகால நண்பன் இந்தியாவை இலங்கையில் இருந்து விரட்ட, தமது ஆரம்பகால எதிரி பிரேமதாசவுடன் டீல் வைத்துக் கொண்டார் இவர்.

அன்றைய நிலையில் அப்படியிருந்த இந்த மூவரும், காலப்போக்கில் என்ன ஆனார்கள்?

மே 21, 1991-ல் ராஜிவ் காந்தி, பிரபாகரனின் உத்தரவின் பேரில் ஸ்ரீபெரும்புதூர் பிரசார கூட்டத்தில் கொல்லப்பட்டார். மே 1 1993-ல், பிரேமதாச, பிரபாகரனின் உத்தரவின் பேரில் கொழும்பு வீதியில் கொல்லப்பட்டார். மே 18, 2009-ல் பிரபாகரன், இலங்கை ராணுவத்தால் முல்லைத்தீவு நந்திக்கடல் கரையில் கொல்லப்பட்டார்.

ராஜிவ், பிரேமதாச, பிரபாகரன் ஆகிய மூவரும், மே மாதத்தில் அகால மரணமடைந்தனர்.

இந்த மூவர் தொடர்பான பழைய கதைதான், தற்போது புதுடில்லியில் நடைபெற்ற கருத்தரங்கில் வைத்து மெஹ்ரோத்ராவால் வெளியிடப்பட்டுள்ளது.

இதோ, அவர் வெளியிட்ட விபரங்களை பாருங்கள்:

இந்திய அமைதிப்படை இலங்கையில் இருந்த நேரத்தில், இந்திய பிரதமர் தமது தூதுவரை கொழும்புக்கு அனுப்பியிருந்தார். ஜூலை 12, 1989-ல் ராஜிவ் காந்தியின் தூதராக பிரேமதாசவை சந்திக்க கொழும்பு சென்று இறங்கியவர், பி.ஜி.தேஷ்முக். ஜூலை 12, 13-ம் தேதிகளில் இவர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.

வார்த்தைகள் தடித்த பேச்சுவார்த்தை அது.

“இந்திய அமைதிப்படை இலங்கையில் இருந்து வெளியேற வேண்டும்” என்று தெரிவித்த பிரேமதாச, புதுடில்லி அதற்கு தெளிவான பதில் ஒன்றை தமக்கு கொடுக்க வேண்டும்” என நிர்ப்பந்தித்தார். புதுடில்லி அதை செய்யாவிட்டால், இலங்கையில் தமது அரசியல் எதிர்காலமே அழிந்து விடும் என்றார் அவர்.

இந்த பேச்சுக்கள் காரசாரமாக நடைபெற்ற நிலையில் ஒருகட்டத்தில் உக்கிரமடைந்த பிரேமதாச, “இந்திய ராணுவம் இங்கிருந்து வெளியேறாவிட்டால், நான் தற்கொலை செய்வேன்” என்று மிரட்டல் விடுத்தார். அதன்பின் நடந்ததை அடுத்த பக்கத்தில் தொடர கீழே கிளிக் செய்யவும்

ஜூலை 29-ம் தேதி, இந்திய ராணுவம் இலங்கையில் இருந்து வெளியேற வேண்டும் என்பதே பிரேமதாசவின் நிர்ப்பந்தம். காரணம், அந்த தேதிதான், இந்திய அமைதிப்படை இலங்கையில் போய் இறங்க ஒப்பந்தம் செய்யப்பட்ட 2-வது ஆண்டு தினம்.

பிரேமதாசவுக்கு, இலங்கையின் தென் பகுதியில் சிங்கள ஆயுத அமைப்பாக இருந்த ஜே.வி.பி-யிடம் (ஜனதா விமுக்தி பெரமுன) இருந்து அச்சுறுத்தல் இருந்த காலம் அது. தெற்கே ஜே.வி.பி., வடக்கிலும் கிழக்கிலும் விடுதலைப் புலிகள், மேலும், இலங்கையில் நின்றிருந்த இந்திய அமைதிப் படை என்று மூன்று எதிரிகளை எதிர்நோக்க வேண்டிய நிலை பிரேமதாசவுக்கு.

இந்திய அமைதிப்படையை வெளியேற்ற, விடுதலைப் புலிகளுடன் கூட்டு வைத்துக் கொண்டார் அவர். விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்கள், பணம் ஆகியவற்றை கொடுத்து, இந்திய அமைதிப் படைப்பு எதிராக போர் புரிய வைத்த நாட்கள் அவை.

“இந்திய அமைதிப்படை தாமாக வெளியேறாவிட்டால், இலங்கை ராணுவமும், விடுதலைப்புலிகளும் ஒரே அணியில் நின்று இந்தியப் படைகளை விரட்டும் நிலை ஏற்படும்” என்றார் பிரேமதாச.

“இந்திய அமைதிப்படையை வெளியேற்ற புதுடில்லி சம்மதிக்கா விட்டால், இந்திய ராணுவம் இலங்கையின் விருப்பத்தை மீறி ‘ஆக்கிரமிப்பு ராணுவமாக’ தங்கியுள்ளது என நான் அறிவிக்க நேரிடும். அது, இந்தியாவின் புகழை குறைத்துவிடும்” என்றார் பிரேமதாச.

அதுவரை அமைதியாக அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்த தேஷ்முக், “இந்தியாவின் புகழை காப்பாற்றிக் கொள்ள எமக்கு தெரியும். நீங்கள் அது பற்றி கவலைப்பட வேண்டாம். இந்திய அமைதிப் படையை நீங்கள் சொல்வதுபோல உடனடியாக வெளியேற்ற முடியாது. 1990-ம் ஆண்டு நடுப் பகுதியில் நாமே வெளியேறிவிடுவோம்” என்றார்.

அதாவது, பிரேமதாச நிர்ப்பந்தித்த தேதியில் இருந்து சரியாக 1 வருடத்தின் பின்னர் தான் வெளியேற முடியும் என்றார் அவர்.

அத்துடன் புதுடில்லி திரும்பிய தேஷ்முக், பிரேமதாசவால் மீண்டும் ‘அவசரமாக கொழும்பு வரவும்’ என்று அழைக்கப்பட்டார். ஜூலை 28-ம் தேதி கொழும்பு சென்று இறங்கினார் தேஷ்முக். பிரேமதாச காலக்கெடு விதித்த தினத்துக்கு முதல் தினம் அது.

தேஷ்முக்

எடுத்த எடுப்பிலேயே பிரேமதாச, “இந்தியப் படைகள் நாளை வெளியேறாவிட்டால், இந்திய இலங்கை ஒப்பந்தத்தை நான் கிழித்து எறிவேன். இந்தியாவுடன் அனைத்து ராஜதந்திர உறவுகளையும் துண்டித்துக் கொள்வேன்” என்றார்.

அமைதியான சுபாவமுடைய தேஷ்முக் பிரேமதாசவின் கோப வார்த்தைகளை பொறுமையாக கேட்டுக் கொண்டிருக்க, அடுத்த அஸ்திரத்தை வீசினார் பிரேமதாச. “நாளை உங்கள் படைகளை இலங்கையில் இருந்து வெளியேற்றா விட்டால், நாளை இந்திய ராணுவத்துடன், இலங்கை ராணுவம் நேரடியாக மோதும். இரு நாடுகளுக்கும் இடையில் யுத்தம் நாளை வெடிக்கும்”

இப்போது வாய் திறந்த தேஷ்முக், “நீங்கள் சமாதானமாக பேசப் போகிறீர்கள் என்றால், இந்தியாவின் பிரதிநிதியான என்னுடன் இப்போது பேசலாம். ஆனால், உங்களுக்கு யுத்தம்தான் தேவை என்றால், நாம் அதற்கும் தயார்” என்றார்.

இதைக் கேட்டவுடன் பிரேமதாசவின் முகத்தில் இருந்த கோபம், தன்னம்பிக்கை அனைத்தும் பறந்தோடின. அந்தப் பேச்சை அத்துடன் நிறுத்திக் கொண்டார்.

அதன்பின் பிரேமதாச தமது தேசிய பாதுகாப்பு அமைச்சர் ரஞ்சன் விஜேரத்னவை புதுடில்லிக்கு அனுப்பி, ராஜிவ் காந்தியை சந்திக்க வைத்தார். இந்திய அமைதிப்படை 1990-ல் (தேஷ்முக் ஆரம்பத்தில் கூறியது போலவே) இலங்கையில் இருந்து வெளியேறுவது தமக்கு சம்மதமே என பிரேமதாசவின் சார்பில் ரஞ்சன் விஜேரத்ன, ராஜிவ் காந்தியிடம் தெரிவித்தார்.

இந்திய அமைதிப்படை அலங்கையில் காலடி வைத்த நாள், ஜூலை 30, 1987. சுமார் 32 மாதங்கள் இந்தியப் படைகள் இலங்கையில் நின்றிருந்தன. இந்தியப் படைகளின் இறுதி அணி இலங்கையில் இருந்து வெளியேறிய தினம், மார்ச் 24, 1990.

இந்த இடைப்பட்ட காலத்தில், இந்திய ராணுவத்தினர் 1165 பேரை யுத்தத்தில் கொன்ற விடுதலைப் புலிகள், இந்திய ராணுவத்தைச் சேர்ந்த 3011 பேரை காயமடைய செய்தனர்.

இந்திய ராணுவத்தின் ஒரு சிப்பாய்கூட, இலங்கை ராணுவத்தால் கொல்லப்படவில்லை என்பதை புதுடில்லி குறித்துக் கொண்டது.

1990-ல் தாம் குறித்துக் கொண்டதை புதுடில்லி, 19 ஆண்டுகளாக மறக்காமல் வைத்திருந்து…..

…இலங்கை ராணுவத்துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இறுதி யுத்தம் துவங்கிய போது, இலங்கை ராணுவத்துக்கு இந்தியா உதவி செய்தது.


விறுவிறுப்பு

Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல