வெள்ளி, 2 நவம்பர், 2012

ராஜிவ் கொலையும் கருணாநிதி, வைகோ, ரா, கிட்டுவும்.. புயலைக் கிளப்பும் புத்தகம்

ராஜிவ் கொலை செய்யப்பட்டு 21 ஆண்டுகள் ஆகிவிட்டன! ராஜிவ் கொலையாளிகள் என்போருக்கும் தண்டனை விதிக்கப்பட்டு தூக்குக் கொட்டடியில் நிற்கின்றனர்! ஆனாலும் ராஜிவ் கொலை வழக்கில் இன்னமும் தீர்க்கப்படாத சந்தேகங்கள் இருக்கிறது என்று விடாது சொல்லி வருகிறார் இந்த வழக்கை விசாரித்த சிபிஐயின் தலைமை புலனாய்வு அதிகாரி ரகோத்தமன்!

ரகோத்தமன் ஏற்கெனவே ‘ராஜிவ் கொலை வழக்கு- மர்மம் விலகும் நேரம்' என்ற புத்தகத்தை 2009-ம் ஆண்டு நவம்பர் மாதம் வெளியிட்டிருந்தார். தற்போது "Conspiracy to Kill Rajiv Gandhi: From CBI Files" என்ற ஆங்கிலப் புத்தகத்தை வெளியிட்டிருக்கிறார்.

அதில் கருணாநிதி, வைகோ, ரா அமைப்பு, கிட்டு மற்றும் எம்.கே. நாராயணன் பற்றிய கருத்துகளை ரகோத்தமன் முன்வைத்திருக்கிறார்.

ரகோத்தமன் சொல்வது என்ன?

திமுக,கருணாநிதி, வைகோ


"மே 21-ந் தேதி திமுகவின் ஸ்ரீபெரும்புதூர் கூட்டம் ரத்து செய்யப்பட்டது பற்றிய தகவல்களை சேகரித்துக் கொண்டு எஸ்ஐடி தலைவராக இருந்த கார்த்திகேயனின் கவனத்துக்குக் கொண்டு சென்றேன். டிஜிபி ரங்கசாமிதான் திமுக தலைவர் கருணாநிதியைத் தொடர்பு கொண்டு ஸ்ரீபெரும்புதூர் கூட்டத்தை ரத்து செய்யுமாறு கூறியது என் விசாரணையில் தெரியவந்தது. இது தொடர்பாக கருணாநிதியிடம் விசாரணை நடத்த விரும்பினேன். ஆனால் "சில பிரச்சனைகளை" உருவாக்கிவிடும் என்று கூறி கார்த்திகேயன் அனுமதி மறுத்துவிட்டார். இந்த விஷயத்தில் இதனால் அமைதியாக இருந்துவிட்டேன்.. அதன் பின்னர் வர்மா கமிஷனில் டிஜிபி ரங்கசாமி தாக்கல் செய்த பிரமாண வாக்குமூலத்தைப் பார்த்தேன். அதில் இப்படி ஒரு தகவல் இடம்பெறவில்லை"

"இதில் ஒரு ஆச்சரியம் என்னவெனில், ஜெயின் கமிஷன் விசாரணை டெல்லியில் நடைபெற்ற போது நானும் அப்போது இருந்தேன். திமுகவின் ஸ்ரீபெரும்புதூர் பொதுக் கூட்டத்தை ஆளுநராக இருந்த பீஷ்மநாராயண்சிங் சொல்லித்தான் ரத்து செய்ததாக திமுக தலைவர் சொல்லியிருந்ததுதான் ஆச்சரியமாக இருந்தது."

"ராஜிவ் கொலை தொடர்பாக வைகோவிடமும் முழுமையாக விசாரணை நடத்தப்படவில்லை."

ரா, கிட்டு

"மே 22-ந் தேதி காலையில் அரசியல் விவகாரங்களுக்காக கேபினட் கமிட்டி( சிசிபிஏ) கூட்டத்தை பிரதமர் சந்திரசேகர் கூட்டியிருந்தார். அக்கூட்டத்தில் ‘ரா' அமைப்பின் தலைவர் ஜி.எஸ். பாஜ்பாய், ஐ.பி. இயக்குநர் எம்.கே. நாராயணன் ஆகியோரும் இருந்தனர். விடுதலைப் புலிகள்தான் ராஜிவ் கொலையை நிகழ்த்தியதாக கூறிவந்த நிலையில் ரா தலைவர் பாஜ்பாய், நிச்சயமாக விடுதலைப் புலிகள் செய்திருக்கமாட்டார்கள் என்று கூறினார்."

"விடுதலைப் புலிகள் அமைப்பின் கிட்டு, ‘ரா'வின் உளவாளி என்று சந்திரசேகரிடம் பாஜ்பாய் கூறினார். ஆனால் கிட்டு ஒருபோதும் ‘ரா'வின் உளவாளியாக இருந்திருக்கமாட்டார். அவர் பிரபாகரனின் வலது கரமாக இருந்தவர். மாறாக, மிகவும் புத்திசாலித்தனமாக ‘ரா' அமைப்பின் தலைவரையே தங்களது உளவாளியாக்கிய கிட்டுவின் செயல் ஆச்சரியப்பட வைத்தது!

- இதுதான் ரகோத்தமன் தமது புத்தகத்தில் கூறியிருப்பது!


கார்த்திகேயன் மறுப்பு

ரகோத்தமனின் குற்றச்சாட்டுகளை ராஜிவ் கொலை வழக்கு விசாரணை தலைமை அதிகாரியாக இருந்த கார்த்திகேயன் மறுத்துள்ளார். மலிவான விளம்பரத்துக்காக இப்படி எழுதுகின்றனர். எங்களுக்குக் கிடைத்த அனைத்து ஆவணங்களும் நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுவிட்டன. எங்களது விசாரணையை ரோல் மாடலாக இண்டர்போலே எடுத்துக் கொண்டது. 22 ஆண்டுகளுக்குப் பிறகு உணர்வுகளைக் கிளறிவிடுவதற்காக எழுதுகின்றனர் என்று கார்த்திகேயன் கூறியுள்ளார்.

ரகோத்தமன் விளக்கம்

கார்த்திகேயன் கருத்தை மறுத்துள்ள ரகோத்தமன் "ராஜிவ் கொலை செய்யப்பட்ட மே 21-ந் தேதியன்று அதே ஸ்ரீபெரும்புதூரில் திமுக தலைவர் கருணாநிதி பங்கேற்கும் பொதுக்கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் மே 21-ந் தேதி முற்பகல் 11.30 மணிக்கு திடீரென தந்தி மூலமாக கூட்டத்தை ரத்து செய்வதாகவும் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் உள்ளூர் அதிகாரிகளுக்கு திமுக தலைமையகம் தந்தி மூலம் தெரிவித்தது. இந்த தந்தியை கண்டுபிடித்து எங்களது மேலதிகாரியான கார்த்திகேயனிடம் கூறினேன். ஆனால் இது தொடர்பாக கூடுதல் விசாரணைக்கு அவர் அனுமதி மறுத்துவிட்டார்" என்று விளக்கம் கொடுத்திருக்கிறார்.


எம்.கே.நாராயணன் மறைத்த வீடியோ

இதே புத்தகத்தில் ஐபியால் ராஜிவ் பொதுக்கூட்டம் வீடியோவாக்கப்பட்டதாக பிரதமராக இருந்த சந்திரசேகரிடம் அப்போதைய ஐபி இயக்குநர் எம்.கே. நாராயணன் கூறியிருந்தார். ஆனால் கடைசி வரை அப்படி ஒரு விடியோ கேசட்டை சிபிஐயிடமோ அல்லது வேறு எந்த விசாரணை அமைப்பிடமோ நாராயணன் கொடுக்கவில்லை என்றும் ரகோத்தமன் எழுதியது பற்றிய சில நாட்களுக்கு முன்பு செய்திகள் வெளியானது. எம்.கே. நாராயணன், தற்போது மேற்கு வங்க ஆளுநராக இருக்கிறார்.

தட்ஸ்தமிழ்
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல