ஞாயிறு, 9 டிசம்பர், 2012

பிரபாகரன் வெட்டிய குழிக்குள் மாட்டிய புளொட்!

தமிழ் மக்களின் உரிமைப் போராட்டம் முனைப்பு அடைந்திருந்த காலம். பல்வேறு விடுதலை அமைப்புகளும் ஆயுதம் தரித்து களத்தில் நின்றன.

தமிழீழ விடுதலைப் புலிகள்.

தமிழீழ மக்கள் விடுதலைக்கழகம்.

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி.

தமிழீழ விடுதலை இயக்கம்.

ஈழப் புரட்சிகர அமைப்பு.

இந்த ஐந்து அமைப்புகளுமே அன்று பலமான விடுதலை அமைப்புகளாக திகழ்ந்தன.

இவை தவிர சிறிய அமைப்புக்கள் மற்றும் குழுக்கள் சிலவும் விடுதலைப் போரட்டத்தில் ஈடுபட்டு இருந்தன.

1984 இன் ஆரம்பம். ஈ.பி.ஆர்.எல்.எவ், ரெலோ, ஈரோஸ் ஆகிய மூன்றும் இணைந்து முக்கூட்டு முன்னணி ஒன்றை உருவாக்கின.

உண்மையில் இம்முக்கூட்டு முன்னணியின் ஒற்றுமைக்கு பிதாமகனாக இருந்தவர் ஈ. பி. ஆர். எல். எவ் தலைவர் பத்மநாபாவே.

இதற்காக ரெலோ சிறிசபாரத்தினத்தையோ, ஈரோஸ் பாலகுமாரையோ முன்னணி முயற்சி விடயத்தில் குறைத்து மதிப்பிட்டு விட முடியாது.

அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு என்பார்கள். மூன்று இயக்கங்கள் இணைந்த முக்கூட்டு ஐக்கிய முன்னணியின் பக்கம் உலகத்தின் பார்வை திரும்பியது. இவ்வொற்றுமை கண்டு அன்றைய ஜே. ஆர் அரசும் மிரண்டது.



முக்கூட்டு முன்னணியில் அடுத்து இணையப் போவது யார்?... புளொட் அமைப்பா?.. அல்லது புலிகள் அமைப்பா?...

புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு இம்முன்னணி குறித்து உண்மையாக அக்கறை இருந்து இருக்கவில்லை. அதில் விருப்பமும் இல்லை.

புளொட் அமைப்பின் உள்ளக மந்திராலோசனைகள் அப்போது அதன் பின்தளத்தில் அடிக்கடி நடந்து கொண்டிருந்தன.

புளொட் அமைப்பின் பாஷையில் பின் தளம் என்று சொல்லப்படுவது தமிழ்நாடு.

முன்னணி குறித்த கலந்தாடல்களும் இங்குதான் நடந்தன.

புளொட் தலைவர் உமா மகேஸ்வரன் சக தோழர்களுக்கு விளக்கங்கள் கொடுத்தார்.

“ சுத்த இராணுவக் கண்ணோட்டம் உள்ள பிற்போக்கான அமைப்போடு நாம் கூட்டுச் சேர முடியாது. அவ்வாறு நடந்தால் நாமும் அச்சகதிக்குள் விழ வேண்டி வரும்.

முக்கூட்டு முன்னணியில் இருக்கும் ஈ.பி.ஆர்.எல்.எவ், ரெலோ, ஈரோஸ் ஆகிய அமைப்புகளை நாம் இனியும் தனித் தனியாக பார்க்க முடியாது. இது அவர்களது ஒற்றுமையை பாதிக்கும். மூன்று அமைப்புகளையும் ஒரே அமைப்பாக கருதி அவர்களோடு நாம் பேச்சு நடத்த வேண்டும். முக்கூட்டு முன்னணியில் நாமும் இணைய வேண்டும். ஐக்கியத்தின் மூலமே நாம் இந்தியாவின் தலையீட்டை தவிர்க்கவும் முடியும். ”



இதுதான் அவரது விளக்கம்.

முக்கூட்டு முன்னணியில் இணைகின்றமைக்கு புளொட் அமைப்பின் தலைவர் பச்சைக் கொடி காட்டிய விடயம் புலிகளின் தலைவர் பிரபாகரனின் புலனாய்வுச் செவிகளுக்கு எட்டி விட்டது.

புளொட்டும் புலியும் கீரியும் பாம்பும் போல். ஒருவரை ஒருவருக்கு பிடிக்காது. புளொட் இருக்கும் இடத்தில் புலி இல்லை. புலி இருக்கும் இடத்தில் புளொட் இல்லை. இதுதான் அன்றைய நிலைவரம்.



புலிகளை நம்ப முடியாது, புலிகளை முக்கூட்டில் இணைக்க முன் புளொட் அமைப்பை இதில் இணைக்க வேண்டும் என்று விடாப்பிடியாக நின்றார் ஈரோஸ் பாலகுமார். இக்கருத்தோடு பத்மநாபாவும், சிறி சபாரத்தினமும் உடன்பட்டு இருந்தனர்.

புளொட்டின் வருகைக்காக அழைப்பு விடுத்து விட்டு முக்கூட்டு முன்னணி தலைவர்கள் காத்து இருந்தனர்.

புளொட் அமைப்பை முக்கூட்டு முன்னணியில் இiணைய விட்டால் புலிகள் இயக்கத்துக்கு பேராபத்து என்கிற முடிவுக்கு ஒரேயடியாக வந்தார் பிரபா.

இதனால் புளொட் அமைப்பை தனிமைப்படுத்துவதற்காகவே முக்கூட்டு முன்னணியில் இணைந்தது புலிகள் இயக்கம்.

இதனால் இம்முக்கூட்டில் புளொட் கடைசி வரை இணையவே முடியாமல் போனது.

ஈ. பி. ஆர். எல்.எவ், ரெலோ, ஈரோஸ் ஆகிய இயக்கங்களையும் புலிகளின் தலைவர் பிரபாகரன் முக்கூட்டுக்குள் இருந்தே திட்டமிட்டு தடை செய்தார் என்பது பிந்திய வரலாறு.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல