சனி, 26 ஜனவரி, 2013

பச்சை மிளகாயும் பத்ம பூஷனும்! – எஸ் . ஜானகி பற்றி விசேஷ ரிப்போர்ட்!

பிரபல திரைப்பட பின்னணி பாடகி எஸ்.ஜானகி. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள படங்களில் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியுள்ளார். ஏற்கனவே தமிழக, கேரள, கர்நாடக அரசுகளிடம் இருந்து விருதுகள் பெற்றுள்ளார். மத்திய அரசு நேற்று எஸ்.ஜானகிக்கு உயரிய விருதான பத்ம பூஷண் விருது வழங்கியது.

இந்த விருதை பெற ஜானகி மறுத்துவிட்டார். இது குறித்து ஜானகி, “”பத்மபூஷண் விருதை ஏற்க நான் விரும்பவில்லை. தென் இந்திய கலைஞர்கள் புறக்கணிக்கப்படுகின்றனர். வட இந்தியர்களுக்குதான் இவ்விருதுகள் அதிகம் வழங்கப்படுகின்றன. என்னை நீண்ட காலத்துக்கு பிறகுதான் இவ்விருதுக்கு தேர்வு செய்து இருக்கிறார்கள்.எனவேதான் பத்ம பூஷண் விருதை வாங்குவது இல்லை என்று முடிவு எடுத்துள்ளேன்.”"என்று ஜானகி கூறினார்.

இந் நிலையில் எஸ். ஜானகி குறித்து ஒரு ஸ்பெஷல் ரிப்போர்ட்!
*******************************************************************
அந்த ரசிகருக்கு அந்தத் திரைப்படப் பாடகி மீது பெரும் மதிப்பு. காதல் என்று கூட சொல்லலாம். திடீரென்று ஒரு விடுமுறை நாளில் ரசிகருக்குத் தோன்றியது. மனதுக்குப் பிடித்த அந்தப் பாடகியைப் போய் சந்தித்தால் என்ன? அது அந்தப் பாடகி சினிமாவிலிருந்து ஓய்வு பெற்றுவிட்ட மாதிரியான காலகட்டம்தான்.

எனினும் ரசிகர்களை சந்திப்பாரா? ’சரி தொலைபேசியில் முன்கூட்டியே பேசிவிட்டு போவோம்’ என்ற முடிவுக்கு வந்தார். எப்படியோ தொலைபேசி எண்ணைத் தேடிப்பிடித்து பாடகியைத் தொடர்பு கொண்டார். தமிழ் சினிமாவின் இசை உலகம் புதுப்புது ஆட்களைக் கொண்டாடிக் கொண்டிருக்கும்போது, தன்னைச் சந்திக்க ஒருவர் விரும்புவது பாடகியைச் சற்று ஆச்சர்யப்படுத்தியது.

’அப்படியா, சந்தோஷம். வாங்களேன்’ என்ற பாடகியின் குரலே ரசிகரைத் துள்ளிக்குதிக்க வைத்தது. உற்சாகமாகக் கிளம்பினார். ஏதாவது வாங்கிப் போனால்தான் மரியாதையாக இருக்கும் என்று சிலவற்றை வாங்கிக் கொண்டார்.
பாடகியின் வீடு. கெடுபிடி எதுவும் இல்லை. ரசிகர் தான் வந்த விஷயத்தை பணிப்பெண்ணிடம் தெரிவித்த சில நிமிடங்களிலேயே பாடகி வந்து நின்றார்.

தன்னைப் போன்ற லட்சக்கணக்கான ரசிகர்களை உயிர்ப்புடன் வைத்திருக்கும் குரலுக்குச் சொந்தக்காரரை நேரில் பார்த்துவிட்ட மகிழ்ச்சியில் ரசிகரின் உடல் நடுங்கியது. வருடக்கணக்காகப் பாராட்டு மழையில் நனைந்துவிட்ட அலுப்போ, சமீப காலமாக எல்லோரும் தன்னை மறந்து விட்டதற்கான எரிச்சலோ பாடகியிடம் இல்லை. தனக்கே உரிய மெல்லிய குரலில் ரசிகரிடம் மரியாதையாகப் பேசினார். தமிழகத்தையே கட்டிப்போட்ட பாடகியின் சில பாடல்கள் குறித்து சில வார்த்தைகள் பேசிவிட்டு ரசிகர் தான் கொண்டு போயிருந்ததை மெல்ல நீட்டினார்.

தயக்கத்துடன் பையை வாங்கிப் பார்த்த பாடகிக்கு ஆச்சர்யம். பைக்குள் பச்சை மிளகாய்கள் இருந்தன. ‘என்னப்பா இது?’ என்று சிரித்துக் கொண்டே பாடகி கேட்டார். ‘ஒரு பத்திரிகைக்கு கொடுத்த பேட்டியில ‘பச்சை மிளகான்னா எனக்கு ரொம்ப பிடிக்கும்’ன்னு சொல்லிருந்தீங்க. அதான் இதை உங்களுக்கு வாங்கிட்டு வந்தேன். எதுவும் தப்பா நினைச்சிடாதீங்கம்மா’ என்று ரசிகர் சொல்ல, பாடகியின் முகம் பிரகாசித்தது. தன் பணிப்பெண்ணைக் கூப்பிட்டு, தெலுங்கில் இந்த விஷயத்தைச் சொல்லிச் சொல்லி சந்தோஷப்பட்டார்.

தன் மனதுக்குப் பிடித்த ஆளுமைக்கு யாரும் கொடுக்காத ஒரு அன்பளிப்பை கொடுத்துவிட்ட நிறைவோடு ரசிகரும் விடைபெற்றார்.

இந்த சம்பவம் நடந்து இருபது வருடங்களுக்கு மேலிருக்கும். ரசிகன் கொடுக்கும் பச்சை மிளகாயைக் கூட வாங்கிக்கொண்டு பூரிப்படைந்த அந்தப் பாடகி இன்று பத்ம பூஷன் விருதை நிராகரித்துள்ள எஸ்.ஜானகி. அந்த ரசிகர் என் அண்ணன்களின் நண்பர் முருகவேள். தற்போது கடலூரில் அரசு அலுவலராக பணிபுரிகிறார்.

’அவார்டு கொடுத்து…பத்மபூஷன் கொடுத்து..ஞான் ரிஜக்ட் செஞ்சு…ஞான் 55 வருஷமாயிட்டு மியூசிக் பீல்டில் இருக்கும்போள் ஏதோ ஒரு அவார்டு வாங்க இஷ்டமில்லா..பாரத் ரத்னா கொடுத்தால் வாங்காம்’ என்று ஜானகி கேரளாவில் செய்தியாளர்களுக்குக் கொடுத்த பேட்டி ஒரு அவரது வெறித்தனமான ரசிகர்களில் ஒருவனான என்னைப் பெருமைப்பட வைக்கிறது.

நன்றி : செல்லையா ஆனந்த்
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல