புதன், 20 மார்ச், 2013

கருணாநிதி திடீரென வாள் வீசிய பின்னணி இலங்கை அல்ல, வேறு கதை இருக்கு கண்ணா!

கருணாநிதி மத்திய அரசுக்கு எதிராக வாளை வீசியது ஏன் என்பது தொடர்பாக, தி.மு.க.-வின் ஒரு சர்க்கிளில் சில பேச்சுக்கள் உள்ளன. மூன்று அமைச்சர்களும் வந்து பேசிவிட்டு போனபின், அரசில் இருந்து வெளியேறுவது என்ற நினைப்பில் கருணாநிதி இல்லை.

ஆனால், அன்றிரவு அவருக்கு கூறப்பட்ட ஒரு விஷயம்தான், கூட்டணியில் இருந்து விலகுவது என்ற முடிவை மறுநாள் அவரை எடுக்க வைத்தது என்கிறது இந்த சர்க்கிள்.

இரவு வந்து சந்தித்த மூன்று அமைச்சர்களும் சந்திப்பு முடிந்து போனபின், செய்தியாளர்களை சந்தித்தார் கருணாநிதி. அதில் அவரது பேச்சுக்கள், காங்கிரஸை கைவிடும் விதத்தில் இருக்கவில்லை. செய்தியாளர்களின் கேள்விகளுக்கு சற்றே இடக்காகவே பதில் சொன்னார் அவர்.

செய்தியாளர்களை சந்தித்தபோது, “அமெரிக்கத் தீர்மானத்தில் இலங்கை அரசுக்கு எதிராக பெரிதாக ஏதுமில்லை என்பதால், இந்திய நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டுவர வேண்டும். என்னை வந்து சந்தித்த மூவரும், அப்படிக் கொண்டு வருவதாக வாக்குறுதி கொடுத்துள்ளனர்” என்றார் கருணாநிதி.

இதில் தமாஷ் என்னவென்றால், கருணாநிதி செய்தியாளர்களை சந்திப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர்தான், இவரை சந்தித்த மூன்று அமைச்சர்களிடமும் செய்தியாளர்கள் கேள்வி கேட்டிருந்தனர். “ஒன்றும் முடிவாகவில்லை” என்று அவர்கள் கூறியிருந்தனர்.

“வாக்குறுதி கொடுத்ததாக நீங்கள் சொல்கிறீர்கள். அப்படி வாக்குறுதி எதுவும் கொடுக்கவில்லை என்று ஆசாத் சொல்கிறாரே” என்று சட்டென்று ஒரு நிருபர் கேட்டபோது, குரலில் லேசான கோபத்துடன் பதில் சொன்ன கருணாநிதி, “உங்களிடம் அவர் (அசாத்) பேசியதே வெறும் 1 நிமிடம்தானே.. அதில் அப்படிதான் சொல்ல முடியும்” என்றார்.

மூன்று அமைச்சர்களும், கருணாநிதியுடன் சுமார் 2 மணி நேரம் பேசியிருந்தனர். ‘அதில் பல விஷயங்கள் பேசினோம்’ என்பதை சொல்லாமல் சொன்னார் கருணாநிதி.

மற்றொரு நிருபர், “ஐ.நா. சபையில் நினைத்தவுடன் திடீரென ஒரு தீர்மானத்தை இந்தியாவால் கொண்டுவர முடியுமா?” என்று கேட்டார்.

கொண்டுவர முடியாது என்பது, கருணாநிதிக்கும் தெரியும். அதை சொல்லாமல், கேள்வி கேட்ட நிருபரிடம், “ஏன் கேட்கிறீங்க? நீங்க ஐ.நா.வுக்கு போகப் போறீங்களா?” என்றார்.

அதன்பின் ஒரு கட்டத்தில், “எங்கே, என்ன கேள்வி கேட்கணும், அதை எப்படிக் கேட்கணும், யாருடன் எப்படி நடந்துக்கணும்னு நிருபர்களுக்கு பயிற்சி கொடுக்கணும்” என்று நக்கல் அடிக்க, பல செய்தியாளர்களுக்கு துணுக் என்றது. பொதுவாக இப்படி பேசுபவர் அல்ல அவர்.

ஆனால், ஒரு விஷயம் அன்று அங்கிருந்த அனைவருக்கும் புரிந்தது. “கருணாநிதி காங்கிரஸை கைவிடவில்லை. ‘டீல்’ கைகூடும் என்று நம்புகிறார்” என்பதே அந்த விஷயம்.

மறுநாள் காலை, கருணாநிதியின் நிலைப்பாடு தலைகீழாக மாறியது!

ஏன்? ஏன்? ஏன்?

அமைச்சர்கள் சந்திப்பின்பின், அவருக்கு நெருக்கமான ஒருவருடன் (டில்லியுடன் சம்பந்தப்பட்டவர்) பேசியிருக்கிறார். அவர், டில்லியின் சில திட்டங்களை இவரிடம் போட்டு உடைத்திருக்கிறார். அந்த திட்டங்கள், இலங்கை தொடர்பானவை அல்ல… 2ஜி வழக்குடன் தொடர்பானவை.

2ஜி-ஸ்பெக்ட்ரம் என்ற கத்தியை தலைக்கு மேல் தொங்கியபடி வைத்துக்கொண்டு, நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க காங்கிரஸ் விரும்பவில்லை. தேர்தலுக்கு முன் கேஸை சட்டுபுட்டென்று முடித்துக்கொண்டு (யாரையாவது உள்ளே போட்டுவிட்டு) காங்கிரஸ், ‘கிளீனாக’ தேர்தலை சந்திக்க விரும்புகிறது என்பதை, சில ஆதாரங்களுடன் எடுத்துக் கூறினாராம் ‘அவர்’!

இதையடுத்து, ‘அதிர்ச்சி வைத்தியம்’ முடிவை எடுத்தாராம் கலைஞர்.

இதில் மற்றொரு விஷயமும் உள்ளது. இப்போது, ‘வேண்டப்பட்டவர்கள்’ யாரையாவது பிடித்து 2ஜி குற்றவாளியாக்கி, உள்ளே போட்டால், “கூட்டணியில் இருந்து விலகியதால், காங்கிரஸ் செய்யும் பழிவாங்கல்” என்று தி.மு.க.வால் சொல்ல முடியும் அல்லவா?

காங்கிரஸ் அதுவரை போகுமா? நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம் கைவிட்டு போனாலும், ஒட்டுமொத்த வெற்றி முக்கியம் என்று நினைத்தால்… போகலாம்!

விறுவிறுப்பு
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல