ஞாயிறு, 31 மார்ச், 2013

"ஷூ"வை வெற்றிகரமாக எதிர்கொண்ட தலைவர்கள்

அரசியல் தலைவர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்க அவர்கள் மீது 'ஷூ' வீசுவதும் ஒரு வகையான போராட்ட முறையாக வளர்ந்து வருகிறது,.இப்படி ஷூ வீச்சை எதிர்கொண்ட தற்போதைய தலைவர் பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப்.

பொதுவாக ஒருவரை காலணி அல்லது ஷூவால் அடிப்பது போல் பாவனை செய்வது என்பது அநாகரிமானதாக, அவமானமாக கருதுகிறோம். அண்மைக் காலமாக குறிப்பாக அரசியல் தலைவர்களின் கூட்டத்தில் ஷூ வீசுவது ஒரு பேஷனாகிவிட்டது. இந்த பெருமைக்குரிய ஷூ வீச்சு சம்பவத்தை அமெரிக்காவின் அதிபராக இருந்த ஜார்ஜ் புஷ்தான் சமீப காலத்தில் எதிர்கொண்ட முதல் தலைவர். அவர் மீதான ஷூ வீச்சு சம்பவத்துக்குப் பிறகுதான் உலக நாடுகள் பலவற்றிலும் இந்த ஷூ வீச்சு போராட்டம் விரிவடைந்தது.

இந்தியாவில் இந்த ஷூ வீச்சு சம்பவத்தை எதிர்கொண்ட முதல் அரசியல் தலைவர் என்ற பெருமை மத்திய அமைச்சராக இருக்கும் நம்ம ஊர் ப.சிதம்பரம்தான். அவருக்குப் பின்னர் மன்மோகன்சிங், எதியூரப்பா, அத்வானி ஆகியோர் அடுத்தடுத்து ஷூக்களை எதிர்கொண்டனர்.இளைய தலைமுறை அரசியல்வாதிகளான ஒமர் அப்துல்லா மற்றும் ராகுல் காந்தியும் இதில் அடக்கம். தற்போது ஷூ வீச்சை எதிர்கொண்டிருக்கும் பர்வேஸ் முஷாரப்புக்கு 2 வது முறை.

சரி இனி யார் யாரெல்லாம் எப்ப ஷூ வீச்சை எதிர்கொண்டனர் என பார்ப்போம்!



ஜார்ஜ் புஷ் எதிர்கொண்ட ஷூ

2008 ஆம் ஆண்டு ஈராக் தலைநகர் பாக்தாத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின் போது அமெரிக்காவின் அதிபராக் இருந்த ஜார்ஜ் புஷ் மீது செய்தியாளர் முந்தாஸர் தமது ஷூவை கழற்றி வீசினார். ஈராக்கை விட்டுவெளியேறும் உங்களுக்கான பரிசுஎன்று கூவியபடியே அவர் வீசினார். உலகமெங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது இச்சம்பவம். இதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். ஆனால் பொதுமக்களோ ஆளுக்கு ஒரு ஷூவை கையில் ஏந்தியபடி ஷூ பேரணி நடத்தியது அடுத்த பரபரப்பை ஏற்படுத்தியது. அவருக்கு பல தரப்பினரும் ஏராளமான பரிசுப் பொருட்களை வழங்கினர். இதன் உச்சமாக சவூதி அரேபியாவைச் சேர்ந்த கோடீஸ்வரர் ஒருவர் புஷ் மீது வீசப்பட்ட ஷூவை ரூ47 கோடி கொடுத்து வாங்க தயாராக இருப்பதாக அறிவித்திருந்தார். பின்னர் இதே முந்தாஸ்ர் மீது பாரிஸ் நகரில் ஷூ வீசப்பட்டதும் சுவாரசியமே.


சீனாவின் பிரதமர் வென் ஜியாபோ


2009-ம் ஆண்டு பிப்ரவரி 2-ந் தேதி இங்கிலாந்தின் புகழ்பெற்ற கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் சீனாவின் பிரதமர் வென்ஜியாபோ உரையாற்றிக் கொண்டிருந்தார். அவர் உரையாற்றி முடிக்க இருந்த போது அரங்கில் இருந்த 27 வயது ஜெர்மானிய இளைஞர் ஒருவர் எழுந்து, ஒரு சர்வாதிகாரியை இங்கே எப்படி அனுமதிக்கலாம் என்று உரக்கக் கூவியபடியே ஷூவை ஜியாபோவை நோக்கி வீசி எறிந்தார்.


ஈரான் அதிபர் அகமதிநிஜாத்

2009-ம் ஆண்டு ஈரான் அதிபர் அகமதிநிஜாத், உர்மியா நகருக்கு சென்று கொண்டிருந்த போது அவரது வாகனத் தொடர் ஒரு முதியவர் மீது மோதியது. ஆனால் அதிபரின் வாகனம் நிற்காமல் சென்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஷூ வீசப்பட்டது. இதற்கு முன்பு 2006ஆம் ஆண்டு கூட அமிர் கபீர் பல்கலைக் கழகத்தில் அகமதிநிஜாத் மீது ஷூ வீசப்பட்டது கடந்த ஆண்டும் இந்த ஆண்டும் கூட இவர் மீது ஷுக்கல் வீசப்பட்டன.


டெல்லியில் ப.சிதம்பரம்

டெல்லியில் 2009ஆம் ஆண்டு ஏப்ரல் 7-ந் தேதியன்று செய்தியாளர்கள் சந்திப்பில் உள்துறை அமைச்சராக பொறுப்பு வகித்த ப. சிதம்பரம் மீது ஜர்னைல்சிங் என்ற பத்திரிகையாளர் ஷூவை வீசி எறிந்து பரபரப்பை ஏற்படுத்தினார். இந்திரா காந்தி படுகொலைக்குப் பிறகு பல்லாயிரக்கணக்கான சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் காங்கிரஸ் தலைவர் ஜெகதீஷ் டைட்லரை சிபிஐ விடுவித்திருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஜர்னைல் சிங் ஷூவை சிதம்பரம் மீது வீசியிருந்தார். இந்த ஷூ வீச்சு சம்பவத்துக்கு பின்னர் சீக்கியர்கள் மத்தியில் ஜர்னைல் சிங் ஹீரோவாகிவிட்டார்.


2009 தேர்தலும் தொடர் ஷூ வீச்சுகளும்

2009-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் பிரதமர் மன்மோகன்சிங் உட்பட பல அரசியல் கட்சிகளின் தலைவர்களும் ஷூ வீச்சை எதிர்கொள்ள நேரிட்டது.


மன்மோகன், எதியூரப்பா, அத்வானி, நவீன் ஜிண்டால்

2009ம் ஆண்டு ஏப்ரல் 26-ந் தேதி பிரதமர் மன்மோகன்சிங் மீதும், ஏப்ரல் 28-ந் தேதி கர்நாடகா முதல்வராக இருந்த எதியூரப்பா ஆகியோர் ஷூ வீச்சை எதிர்கொண்டனர். அதே ஏப்ரல் மாதம் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்ட நவீன் ஜிண்டாலும் ஷூ வீச்சை எதிர்கொண்டார். பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி மீது பாஜக தொண்டர் பவாஸ் அகர்வால் என்பவர் ஷூவை வீசி எறிந்தார்.

அல் பஷீர், ஆசிப் அலி சர்தாரி

2010-ம் ஆண்டு சூடான் அதிபர் அல் பஷீருக்கு எதிராக ஷு வீசப்பட்டது. 2010-ம் ஆண்டு ஆகஸ்ட் 7- ந் தேதியன்று பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட போது அவர் மீது ஷூ வீசப்பட்டது.


ஒமர் அப்துல்லா

2010-ம் ஆகஸ்ட் 15 சுதந்திர நாளின் போது ஆண்டு ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா மீது ஒரு போலீஸ் அதிகாரி ஷூவை வீசினர். ஜம்மு காஷ்மீர் விடுதலையை வலியுறுத்தி அவர் முழக்கமிட்டு கறுப்புக் கொடி காட்டினார்.

டோனி பிளேர்

2010ஆம் ஆண்டு செப்டம்பர் 4-ந் தேதி இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் டோனி பிளேர் டப்ளின் சென்ற போது ஷூக்களும் முட்டைகளும் அவர் மீது வீசப்பட்டது.

முபாரக்,கடாபி

எகிப்தில் 2011-ம் ஆண்டு நடைபெற்ற புரட்சியின் போது அதிபராக இருந்த ஹோஸ்னி முபாரக் மீதும், லிபியாவில் தொலைக்காட்சியில் உரையாற்றிய அதிபராக இருந்த கடாபிக்கு எதிராகவும் ஷுக்கள் வீசப்பட்டன.

சுரேஷ் கல்மாடி

காமன்வெல்த் போட்டிகளில் ஊழல் செய்ததற்காக கைது செய்யப்பட்ட சுரேஷ் கல்மாடி மீது 2011-ஆம் ஆண்டு ஏப்ரல் 6-ந் தேதி நீதிமன்ற வளாகத்தில் செருப்புகள் வீசப்பட்டன.


அர்விந்த் கெஜ்ரிவால்

சமூக ஆர்வலரான அர்விந்த் கெஜ்ரிவால் மீது 2011ம் ஆண்டு அக்டோபர் 18-ந் தேதி லக்னோவில் ஷு வீசப்பட்டது.

ராகுல் காந்தி

2012 ஆம் ஆண்டு ஜனவரி 23-ந் தேதி காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்த ராகுல் காந்தி மீது டேராடூனில் ஷூவீசப்பட்டது. இதனால் கடுப்பாகிப் போன ராகுல், நான் ஒன்றும் அரசியலை விட்டு ஓடிப்போக மாட்டேன் என்றார்.

பர்வேஸ் முஷாரப்

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷாரப் மீது இன்று சிந்து மாகாண நீதிமன்ற வளாகத்தில் ஷூ வீசப்பட்டது. இதற்கு முன்பு இருமுறை முஷாரப் மீது ஷூக்கள் வீசப்பட்டிருக்கின்றன.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல