செவ்வாய், 25 ஜூன், 2013

அமெரிக்கன் உளவுத்துறைப் பிடிக்குள் போய் விட்ட ஃபேஸ்புக் !

உலக மக்கள் தொகை அதிகரித்துக் கொண்டே போவது போல் சமுதாய இணையதளமாக மிக வேகமாக உயர்ந்து வரும் ஃபேஸ்புக் பயன்படுத்துவோரின் ஜனத் தொகையும் தொடர்ந்து உயர்ந்து கொண்டேதான் இருக்கிறது. ஆனால் சமீப காலமாக இந்த ஃபேஸ்புக் ஓரளவிற்கு பயமுறுத்தும் தளமாகவே பலரால் கருதப்படுகிறது. காரணம் இந்த தளத்திற்கு, இதனை நிர்வகிப்பவர்களுக்கு, நீங்கள் யார், உங்கள் நண்பர்கள் யார், உங்களுக்கு என்ன பிடிக்கும், நீங்கள் எங்கே வசிக்கிறீர்கள், ஏன், இப்போது எங்கிருக்கிறீர்கள் என்பது கூடத் தெரியும் என்பது மட்டுமல்ல.இந்த தகவல்களை இந்த ஃபேஸ் புக் நிர்வாகிகள் பாதுகாப்பாக வைத்திருக்க தெரியவில்லை என்பதால் சோகம்

ஆனாலும் இளைஞர்கள் மத்தியில் ஃபேஸ்புக் மிகவும் பிரபலமாக உள்ளது. நண்பர்களிடையே தகவல் மற்றும் கருத்துகளை பகிர்ந்துக்கொள்ள சாட் செய்ய என பல பயன்பாடுகள் இதில் உள்ளன.உலக அளவில் உள்ள பிரபலங்கள் பற்றி தெரிந்து கொள்ளவும் அன்றாட நிகழ்ச்சிகளை பற்றி அறியவும் இது உதவுகிறது. அதே சமயம் இத்தனை சிறப்புகள் உடைய ஃபேஸ்புக் முன்னிலும் பாதுகாப்பு அற்றதாகவே உள்ளது என்பதால் தங்கள் டேட்டாகளை பாதுகாப்பிற்காக யு.எஸ் இணடெலிஜன்ஸ் நிறுவனத்திடம் ஒப்படைக்க ஆரம்பித்துள்ளது என்கிறார்கள்.

ஆம், கடந்த ஆண்டு வரை ஃபேஸ்புக் தனது 6 மில்லியன் பயனீட்டாளர்களின் போன் நம்பர் மற்றும் இ-மெயில் களை அதிகாரமற்ற பார்வையைளர்களுக்கு பாதுகாப்பற்ற முறையில் வெளியிட்டுள்ளது.மேலும் இந்த தகவலை ஃபேஸ்புக் நிறுவனமே நேற்று வெளியிட்டது. இதற்க்கு காரணம் டேட்டா லீக்கேஜ் தான் என்றும் இந்த பிரச்னை 2012 முதலே உள்ளதாகவும் உலக அளவில் உள்ள தனது 1.1 பில்லியின் பயனீட்டாளர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்கள் மூலம் இதை தெரிவிப்பதாகவும் கூறியது.

ஃபேஸ்புக் பயனீட்டாளர்கள் தங்களுக்கு தேவையானவர்களை பற்றிய தகவல்களை டவுன்லோடு செய்யும் பொழுது தேவையற்ற மற்றவர்களின் பற்றிய தகவல்களும் வருவதாக கூறியள்ளனர். இதை பற்றி அறிந்த ஃபேஸ்புக் நிறுவனம் கடந்த வாரம் தனது பாதுகாப்பு குழுமத்திடம் 24 மணி நேரத்தில் இந்த பிரச்சனையை சரி செய்யும்மாறு கட்டளையிட்டுள்ளது. ஆனால் தனது பயனீட்டாளர்களுக்கு இதை பற்றிய தகவலை நேற்று தான் தெரிவித்துள்ளது.

இந்த பிரச்சனை பூதாகாரமாக இருப்பதற்க்கான ஆதாரம் இல்லை என்றும் ஆனால் இது போன்ற பிரச்சனைகள் திரும்பவும் வராமல் இருக்க நாங்கள் இரு மடங்காக உழைப்போம் என்றும் ஃபேஸ்புக் நிறுவனம் தனது பிளாகில் தெரிவித்துள்ளது.
இதைவிட கிளைமாக்ஸாக ஃபேஸ்புக்,கூகுள்,யாஹூ,மைக்கிரோசாப்ட் மற்றும் ஆப்பிள் போன்ற நிறுவனங்கள் தங்கள் டேட்டாகளை பாதுகாப்பிற்காக யு.எஸ் இணடெலிஜன்ஸ் நிறுவனத்திடம் ஒப்படைக்க ஆரம்பித்துள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.இதன் மூலம் ஃபேஸ்புக் யு எஸ் இண்டெலிஜன்ஸ் பிடிக்குள் போய் விட்டது என்கிறார்கள்..

இதற்கிடையில் நம் தனிநபர் தகவல்களை பேஸ்புக் தளத்தில் எவ்வாறு பாதுகாக்கலாம் என்பதற்கான சில செயல்முறைகள் இங்கு தரப்படுகின்றன.

1. பேஸ்புக் பிளேசஸ் ( Facebook Places ): இந்த தளத்தில் காணப்படும் “”பேஸ்புக் பிளேசஸ்” என்னும் வசதியைப் பயன்படுத்துவது சில நன்மைகளைத் தருகிறது. ஆனால் அது நீங்கள் உங்கள் மொபைல் அல்லது டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் மூலம் பேஸ்புக் தளத்தைப் பயன்படுத்து வதனைப் பொறுத்து உள்ளது.நீங்கள் இருக்கும் இடத்தை வெளிப்படுத்துகையில், மோசமான எண்ணம் அல்லது திட்டம் கொண்டிருப்பவர்களின் கைகளில், இந்த தகவல்கள் சென்றடைவது நமக்குப் பாதிப்பைத் தரலாம். நீங்கள் ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில் இயங்கும் மொபைல் போன் அல்லது ஐ-போன் பயன்படுத்தி பேஸ்புக் செல்பவராக இருந்தால், இந்த ஆபத்து ஏற்படும் வாய்ப்புகள் அதிகமாகும். பேஸ்புக் பிளேசஸ் தளத்தில் இருக்கையில், உங்கள் தகவல்களை மாறா நிலையில் பேஸ்புக் வைக்கிறது. எனவே பேஸ்புக்கில் மட்டுமல்ல, இன்டர்நெட்டில் இருக்கும் எவருக்கும் அந்த தகவல்கள் கிடைக்க வாய்ப்புண்டு. இதிலிருந்து மீள, வலது மேல்புறம் உள்ள Account டேப் செல்லவும். அங்கு Privacy Settings என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு நீங்கள் யாரெல்லாம் உங்கள் தனிநபர் தகவல்களைக் காண முடியும், எந்த அளவிற்குக் காண முடியும் என்பதனை வரையறை செய்திடலாம். நீங்கள் உங்கள் கமென்ட்ஸ் மற்றும் பைல் அப்லோடிங் செய்திடுகையில் மற்றவர்கள் எந்த அளவிற்கு அதனைக் காணலாம் என்பதனையும் முடிவு செய்து செட் செய்திடலாம். யாருமே உங்கள் பெர்சனல் தகவல்களை அணுகக் கூடாது எனில், பேஸ்புக் பிளேசஸ் பக்கத்தினையே முழுமையாக உங்களைப் பொறுத்தவரை இயங்காமல் வைத்திடலாம். இதற்கு பேஸ்புக் தளத்தில் லாக் இன் செய்து, Account ட்ராப் டவுண் மெனுவில்,Privacy Settings தேர்ந்தெடுக்கவும். இங்கு இடது பக்கம் கீழாக உள்ளCustomize settings என்பதில் கிளிக் செய்திடவும். இங்கு இறுதியாக உள்ள வரியான Things I share என்பதில் தான் பேஸ்புக் பிளேசஸ் உள்ளது. இதில் Edit என்பதனைத் தேர்ந்தெடுத்து, Disable என்பதில் கிளிக் செய்து வெளியேறவும்.

உங்கள் நண்பர்கள் உங்கள் இருப்பிடம் குறித்து மற்றவர்களுக்கு அறிவிப்பதனைத் தடுக்க, Things others share என்ற பிரிவிற்குச் செல்லவும். இதில் Edit என்பதனைத் தேர்ந்தெடுத்து, Disable என்பதில் கிளிக் செய்து வெளியேறவும்.

2. தனிநபர் தகவல்களை மட்டும் கட்டுப்படுத்த: உங்களைப் பற்றிய குறிப்புகளடங்கிய தொகுதியில் ( Profile ) சில குறிப்பிட்ட தகவல்களை மட்டும், மற்றவர் அணுகுவதிலிருந்து தடுக்கலாம். இதனைப் பலர் அறியாமலேயே உள்ளனர்.

முதலில் நீங்கள் உங்களைப் பற்றிய தகவல்களை அளிக்கையில் ஒரு முறைக்குப் பல முறையாக அது குறித்து சிந்தித்து முடிவெடுக்க வேண்டும். ஏனென்றால், பின் ஒரு நாளில் உங்கள் அக்கவுண்ட்டையே நீங்கள் நீக்கினாலும், உங்கள் நண்பர்களிடம் உங்கள் போட்டோ மற்றும் மற்றவர்களுக்கு அனுப்பப்பட்ட தகவல்கள் இருக்கலாம். எனவே தகவல்களை அப்டேட் செய்வதில் கவனம் தேவை. அடுத்ததாக, இந்த தகவல்களை யாரெல்லாம் பெறுகின்றனர் lock என்பதனை வசதி கொண்டு கண்காணிக்கலாம். இந்த lock வசதியினை எப்படிப் பயன்படுத்துவது எனப் பார்க்கலாம். உங்கள் போட்டோவினை உங்கள் தொகுதிக்கு அனுப்பும் முன் அல்லது share என்ற பட்டனை அழுத்தும் முன், இந்த டூலுக்கு மேலாக உள்ள கீழ் விரி மெனுவினைப் பார்க்கவும். அதில் நீங்கள் யாரை எல்லாம் ( Everyone, Friends of Friends, Friends Only, அல்லது Customize ) இதனைப் பார்ப்பதற்கு அனுமதி அளிக்கலாம் என்று காட்டப் பட்டிருக்கும். நன்கு யோசனை செய்து குறிப்பிட்ட பிரிவினைத் தேர்ந்தெடுக்கவும். அல்லது இதில் இறுதியாக உள்ள Customize என்ற பிரிவின் மூலம் நீங்கள் உங்களுக்கு நல்ல பரிச்சயமான நண்பர்களை மட்டும் தேர்ந்தெடுக்கலாம். உங்களுக்கு அடிக்கடி என்னை உன் நண்பனாகச் சேர்த்துக் கொள் என்றெல்லாம் மெயில் செய்தி வரும். தெரியாதவர் என்றால், உடனே அதனை அலட்சியப் படுத்திவிடுங்கள். இது போன்ற வேண்டுகோளுக்கு யெஸ் சொல்லித்தான் பலர் மாட்டிக் கொள்கிறார்கள்.

3. அப்ளிகேஷனை இயக்கத்தான் வேண்டுமா? : பேஸ்புக் தளத்தில், மெட்ரோபோலிஸ் மற்றும் மாபியா வார்ஸ் போன்ற விளையாட்டுக்களை இயக்குகையில், மேலும் நண்பர்களை அதற்கு அறிமுகப்படுத்தினால் தான், நீங்கள் ஜெயிக்க முடியும். இது போன்ற விளையாட்டுக்கள் மற்றும் அப்ளிகேஷன்கள், பலரை உங்கள் தள சுவரில் செய்திகளை அமைக்க வழி தரும். இது போன்ற செய்திகள் உங்களுக்குத் தொல்லை தருவதுடன், மற்றவர்களுக்கு உங்களைப் பற்றிய தகவல்களைக் கொண்டு செல்லும். மேலும், நீங்கள் வேலையை எல்லாம் ஒதுக்கி வைத்து விளையாடுவது மற்றவர்களுக்குத் தெரிய வேண்டுமா என்று யோசிக்கவும். இதில் நீங்கள் மட்டுமே இயங்க ஒரு செட்டிங்க்ஸ் அமைத்துவிடலாம். உங்கள் அக்கவுண்ட் செட்டிங்கில்Privacy Settings செல்லவும். இதன் கீழ் இடது பக்கத்தில் Applications and websites என்று ஒரு பிரிவு இருக்கும். இங்கு Edit Your Settingsஎன்பதனைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் Game and application activityஎன்பதில் கிளிக் செய்திடவும். இது மூன்றாவதாகக் காட்டப்படும். இதில்Only Me என்பதைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்து மூடவும். இதன் பின்னர், உங்கள் விளையாட்டுக்களை நீங்கள் மட்டுமே பார்க்க முடியும். பங்கு கொள்ள முடியும்.

4. அப்ளிகேஷன்களுக்குத் தடா: பேஸ்புக்கில் பயன்படுத்த மற்றவர்கள் தயாரித்து வழங்கும் அப்ளிகேஷன்களை இயக்குகையில் நாம் பல சிக்கல்களை வரவேற்கிறோம். எந்த அளவிற்கு அவை நம் பாதுகாப்பு செட்டிங் வளையத்தை மதிக்கின்றன என்று நமக்கும் தெரியாது; பேஸ்புக் வடிவமைத்தவர்களுக்கும் தெரியாது. பின் ஏன் வம்பு? எந்த தர்ட் பார்ட்டி அப்ளிகேஷன்களையும் பயன்படுத்தாமல் இருந்துவிடலாமே! அனைத்தையும் தடை செய்திட கீழ்க்காணும் செட்டிங்ஸைப் பயன்படுத்தவும். Privacy Settings >>Applications and websites>> Edit your settings எனச் செல்லவும். Applications you useஎன்பதன் கீழ் Turn off all platform applications என்பதனைத் தேர்ந்தெடுத்து அமைக்கவும். இப்போது ஒரு எச்சரிக்கை செய்தியுடன் பெட்டி ஒன்று காட்டப்படும். அதில் Select all >>Turn Off Platformஎன்று தேர்ந்தெடுக்கவும்.

5. அணுகுவதற்குத் தடை: உங்களுடைய நண்பர்கள் உங்களைப் பற்றி அறிய வேண்டும் என நீங்கள் விரும்புவதைப் போல, அவர்கள் உங்களைப் பற்றி என்ன எழுதுகிறார்கள் என்று அறிந்து கொள்ள நீங்கள் எண்ணுவீர்கள். ஆனால் நீங்கள் விரும்பாத உங்கள் பெர்சனல் தகவல் குறித்து உங்கள் நண்பர் கருத்து தெரிவிப்பதனை நீங்கள் விரும்ப மாட்டீர்கள். இங்கும் அவர்கள் எந்த தகவல்களைத் தெரிந்து கருத்து தெரிவிக்கலாம் என்று நீங்கள் வரையறை செய்திடலாம்.Account>>Privacy Settings >> Applications and websites சென்று Edit your settings- ய் கிளிக் செய்யவும். இங்கு Info accessible through your friends என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு விரிவாக பல பிரிவுகள் இருக்கும். நீங்கள் அனுமதிக்க விரும்புவதனைத் தேர்ந்தெடுக்கலாம். அல்லது மொத்தமாக அனைத்திற்கும் அனுமதியைத் தடுக்கலாம்.

6.இறுதி நடவடிக்கை: பேஸ்புக் தளத்தில் உறுப்பினராகிப் பல நண்பர்களைப் பெற்று ஒரு வட்டத்தை உருவாக்கிக் கொண்டீர்கள். இப்போது தேவையற்றவர்கள் பேஸ்புக் மூலம் தொல்லை தருகின்றனர். இது என்ன தொல்லை என்று எண்ணி, பேஸ்புக் தளத்தையே விட்டு விலக எண்ணுகிறீர்களா? அப்படியே செய்துவிடலாம். இந்த விலகல் செயல்பாட்டினைத் தொடங்கிவிட்டால், அது முடிய 14 நாட்கள் ஆகும். அதுவரை பேஸ்புக் தளத்தினை நீங்களும் அணுக முடியாது.https://ssl.facebook.com/help/ contact.php?show_form=delete_account என்ற முகவரியில் உள்ள பக்கம் சென்று, மொத்தமாக விலகும் முடிவை அதற்கான பிரிவுகளைத் தேர்ந்தெடுத்து அறிவிக்கவும். Submit என்பதில் கிளிக் செய்தவுடன், கிடைக்கும் படிவத்தில் தேவையான தகவல்களை நிரப்பவும். பின்னர் அந்த தளத்தை விட்டு விலகவும். திரும்பிப் பார்க்காமலேயே.

பேஸ்புக் தளத்தில் இருப்பது ஒரு நல்ல இனிமையான மற்றும் வேடிக்கையான அனுபவம் தான். ஆனால் உங்களை நீங்கள் பாதுகாத்துக் கொள்வது உங்கள் கைகளில் தான் உள்ளது. அதற்கான வழிகளைத் தான் மேலே பார்த்தீர்கள். அவற்றை மேற்கொள்வது உங்கள் முடிவைப் பொறுத்தே உள்ளது.


ஆந்தை ரிப்போர்ட்டர்
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல