ஞாயிறு, 2 ஜூன், 2013

கனிமொழிக்கு வந்த மிரட்டல் கடிதங்கள் நிஜமாகவே சர்வதேச அமைப்பின் வேலையா?

கனிமொழிக்கு அடுத்தடுத்து வந்த மிரட்டல் கடிதங்களை மிகவும் சீரியசாகவே எடுத்துள்ளார் கருணாநிதி என்று கூறுகிறார்கள் தி.மு.க. வட்டாரங்களில். கடிதங்களை படித்தபின், கண்ணீர் மல்க வேதனையில் ஆழ்ந்திருந்தார் அவர் எனவும் கூறப்படுகிறது.

கனிமொழியிடம் பணம் கேட்டதோடு மட்டுமல்லாமல், அவரது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என சர்வதேச அமைப்பு ஒன்றின் பெயரில், வந்துள்ள மிரட்டல் கடிதங்களை கண்டு, கருணாநிதியும், அவரது துணைவி ராஜாத்தியும் மிகவும் கலக்கம் அடைந்துள்ளனர். கனிமொழிக்கு, கட்சி ரீதியாக பாதுகாப்பு அளிக்கவும், மத்திய, மாநில அரசின் போலீஸ் பாதுகாப்பு கனிமொழிக்கு வழங்கப்பட வேண்டும் என கருணாநிதி விரும்புவதாக, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கனிமொழியை அச்சுறுத்தும் வகையில், அவருக்கு சர்வதேச அமைப்பு ஒன்றின் பெயரில் மூன்று கடிதங்கள் வந்தன.

முதல் கடிதத்தில், “எங்கள் அமைப்பை தெற்கு மற்றும் தென் கிழக்கு ஆசிய நாடுகளில் வலுப்படுத்த போகிறோம். குறிப்பாக, இலங்கையில் நாங்கள் வலுப்பெற விரும்புகிறோம். அதற்கு உங்களுடைய நிதியுதவி எங்களுக்கு தேவைப்படுகிறது.
உங்களுக்குள்ள வசதியை ஒப்பிடுகையில், நாங்கள் எதிர்பார்ப்பது சிறிய தொகைதான். அதாவது, ஸ்பெக்ட்ரம் மூலம் 11 பில்லியன் டாலர் (62,000 கோடி ரூபாய்) உங்களிடம் இருப்பதாக அறிகிறோம். இவ்வளவு தொகையை வைத்து நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? எங்களுக்கு தேவையான தொகையை நீங்கள் கொடுக்க வேண்டும்.

அதற்கான சிக்னலை, உங்களிடம் நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

தேவையில்லாமல் நீங்கள் போலீஸ் உதவியை நாடினால், நாங்கள் கோபத்தின் உச்சிக்கு சென்று விடுவோம். தி.மு.க.வின் எண்ணமும், எங்கள் அமைப்பின் எண்ணமும் ஒன்றாகத்தான் உள்ளது. பணம் வாங்குவற்கு, எங்கள் ஆட்கள் உங்களை இ-மெயில் மூலம் தொடர்பு கொள்வர்” என்று எழுதப்பட்டிருந்தது.

இரண்டாவது கடிதத்தில், “உங்களுக்கு கடிதம் அனுப்பி வைத்தும், 24 மணி நேரத்திற்குள் எந்த பதிலும் வரவில்லை. எங்களுக்கு உதவுவதற்கு உங்களுக்கு மனசு இல்லை. மத்தியிலும், மாநிலத்திலும், உங்களை பாதுகாக்க நீங்கள் விரும்பவில்லையா? உங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது” என குறிப்பிடப்பட்டுள்ளது.

மூன்றாவது கடிதத்தில், “எது நடந்தாலும் எங்கள் இயக்கம் தான் பொறுப்பேற்கும்” என, குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மூன்று கடிதங்களும், கடந்த வாரம் தேனாம்பேட்டை தபால் அலுவலகம் மூலமாக சென்னை சி.ஐ.டி. காலனியில் உள்ள கனிமொழியின் அலுவலகத்திற்கு வந்துள்ளன. கடிதங்களை படித்த கனிமொழி அதிர்ச்சி அடைந்து உடனடியாக தன் தந்தை கருணாநிதியிடம் அக்கடிதங்களை கொடுத்துள்ளார். கடிதங்களை கருணாநிதி படித்து பார்த்ததும், கண்கலங்கியுள்ளார்.

இது குறித்து போலீசார் விசாரணையை தொடக்கியுள்ளனர். உண்மையிலேயே சர்வதேச அமைப்பிடம் இருந்து தான் மிரட்டல் கடிதங்கள் வந்துள்ளதா? இல்லை, அரசியல் ரீதியாக கனிமொழிக்கு எதிராக செயல்படுபவர்கள் சார்பில் விடுக்கப்பட்ட மிரட்டலா? என்ற கோணத்தில் போலீசார் இந்த விவகாரத்தை அணுகுகின்றனர்.

மத்திய உள்துறை அமைச்சர் ஷிண்டே மற்றும் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியிடம், கனிமொழிக்கு விடுத்துள்ள மிரட்டல் தொடர்பான புகார் மனுக்களை அளித்து விட்டு, மத்திய, மாநில அரசுகளின் பாதுகாப்பு வழங்க வேண்டும் என, கருணாநிதி சார்பில் விருப்பம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

viruvirupu
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல