திங்கள், 22 ஜூலை, 2013

ராஜிவ் காந்தி கொலையில் புலிகள் சிக்கிய கதை - 41

கோடியக்கரை காட்டுக்குள் விடுதலைப் புலிகள் புதைத்து வைத்த பொருட்களை காட்ட…

வேதாரண்யம் கடத்தல் புள்ளியான சண்முகம், விடுதலைப் புலிகளின் தீவிர ஆதரவாளர். தமிழகத்துக்கு வந்து போன விடுதலைப் புலிகளில் பெரும்பாலானோருக்கு பரிச்சயமானவர். காரணம், சிக்கலான காலங்களில் படகுகளில் வரும் விடுதலைப் புலிகள் தமிழக கரையை நெருங்கும்போது சண்முகத்தை தொடர்பு கொண்டு, கரையில் அபாயம் இல்லையா என்று கேட்டு தெரிந்து கொண்டுதான், கரைக்கு வருவார்கள்.

இதற்காக சண்முகத்திடம் விடுதலைப் புலிகளின் தொலைத் தொடர்பு ரேடியோ சாதனம் நிரந்தரமாக இருந்தது.

நாம் இதுவரை வெளியிட்ட தொடரின் அத்தியாயங்களில் வாசகர்கள் அதன் கீழுள்ள லிங்கில் சென்று விளம்பரங்களில் கிளிக் செய்து ஆதரவு தெரிவித்திருந்தார்கள். விளம்பரங்களின் வருமானத்திலேயே இந்த இணையத்தளத்தை தொடர்ந்து நடத்த முடியும். தமிழில் அதிகம் வெளியாகாத இதுபோன்ற கட்டுரைகளை தொடர்ந்து தர முடியும். இந்த கட்டுரைக்கும் வாசகர்கள் ஆதரவு தருவார்கள் என நம்புகிறோம்.

மெல்லிய தேகமுடைய சண்முகம், கடத்தல் நபர்களுக்குரிய தோற்றமுடையவராக தெரியமாட்டார். வேதாரண்யத்தில் அவருக்கு கீழ் நிறையப் பேர் பணிபுரிந்தார்கள். கடலோரத்தை அடுத்து சில குடில்களை அமைத்திருந்தார். தமிழகத்துக்கு படகுகளில் வரும் விடுதலைப் புலிகள் அந்தக் குடில்களில் தங்கி ஓய்வு எடுத்துவிட்டு செல்வார்கள்.

இந்த சண்முகம், ஜூலை 17-ம் தேதி தமிழக பொலீசாரிடம் சரணடைந்தார்.

தமிழக போலீஸ் தம்மை தேடத் தொடங்கி விட்டதை அறிந்து முதலில் தலைமறைவான சண்முகம், முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததால் வேறு வழியில்லாமல் சரணடைந்தார். உடனடியாகவே அவரை தமது பொறுப்பில் எடுத்துக் கொண்டது, சி.பி.ஐ.

விசாரணையின்போது, அவர் தனக்குத் தெரிந்த அனைத்து உண்மைகளையும் தெரிவித்தார்.

படகில் வேதாரண்யம் கொண்டுவரப்படும் விடுதலைப் புலிகளின் பொருள்களை கடற்கரையில் இருந்து வாகனங்களில் ஏற்றிச் செல்வது இவர்தான். அவற்றில் வெடிபொருள்கள் இருந்தால், சில சமயங்களில் மாதக்கணக்கில் கோடியக்கரை காடுகளில் மறைத்து வைக்க உதவுவதும் இவர்தான். இதற்காக கோடியக்கரை காடுகளில் பல இடங்களில் தனது ஆள்களைவிட்டு குழிகள் தோண்டி வைத்திருந்தார்.

அந்த நாட்களில் இலங்கையில் வட மாகாணத்துக்கு பெட்றோல், டீசல் போகாதபடி இலங்கை அரசு தடை செய்திருந்தது. அப்போது விடுதலைப் புலிகளின் பாவனைக்கான பெட்றோல், டீசல் தமிழகத்தில் இருந்து படகுகளில் போனது.

தமிழகத்தில் இருந்து அவற்றை அனுப்பி வைத்தது, இந்த சண்முகம்தான். சிறிது சிறிதாக வெவ்வேறு இடங்களில் வாங்கப்பட்ட பெட்றோல், டீசலை கோடியக்கரை காடுகளில் தனது ஆள்களைவிட்டுத் தோண்டிய குழிகளில் பெரிய கேன்களில் மறைத்து வைத்திருந்து, விடுதலைப் புலிகளின் படகுகள் வருகைக்காகக் காத்திருப்பது அந்த நாளைய நடைமுறை.

இலங்கையிலிருந்து படகுகளில் வரும் விடுதலைப் புலிகளை கடற்கரையில் வரவேற்று, சண்முகத்தின் வீட்டுக்கு அருகில் கட்டப்பட்டுள்ள காட்டோஜ்களுக்கு அழைத்துச் சென்று உபசரிப்பதில் அவரது ஆட்கள் ஈடுபட்டிருந்தனர்.

சண்முகத்தின் நேரடி தொடர்பில் விடுதலைப் புலிகளின் மூன்று பிரிவுகள் இருந்தன. அரசியல் பிரிவு, உளவுப்பிரிவு, பொருள்கள் கொள்முதல் பிரிவு ஆகியவையே அவை. இவர்களுடன் ஒயர்லெஸ் மூலம் தொடர்பு வைத்திருந்தார் சண்முகம்.


“கண்ணாடிக்காரர் வருகிறார், அவரை காட்டேஜில் தங்க வைத்து சென்னைக்கு அனுப்பி வையுங்கள்”


ராஜிவ் கொலை ஆபரேஷனுக்காக சிவராசன் தலைமையிலான 9 உறுப்பினர் குழு மே 1-ம் தேதி கோடியக்கரை வந்து இறங்கியது என்று ஏற்கனவே குறிப்பிட்டிருந்தோம். அன்று சண்முகம் கோடியக்கரையில் இல்லை. வெளியூர் போயிருந்தார். தாம் வெளியூரில் இருந்தபோதிலும், சிவராசன் தலைமையிலான குழு கோடியக்கரை வருவது பற்றி அறிந்திருந்தார் சண்முகம்.

சண்முகத்துக்கும், அவரது ஆட்களுக்கும் சிவராசனை ‘கண்ணாடிக்காரர்’ என்ற பட்டப் பெயரில் பரிச்சயம். ஒரு செயற்கை கண் போட்டிருந்த சிவராசன் எப்போதும் கண்ணாடி அணிந்திருந்ததால் ஏற்பட்ட பெயர் அது.

சண்முகம் வெளியூர் செல்லுமுன் தனது ஆட்களிடம், “‘கண்ணாடிக்காரர்’ வருகிறார், அவரை வரவேற்று காட்டேஜில் தங்க வைத்து சென்னைக்கு அனுப்பி வையுங்கள்” என்று சொல்லிவிட்டுத்தான் சென்றிருந்தார். சிவராசன் குழுவினர் அங்கு தங்கிவிட்டு, திருச்சி ஊடாக சென்னை சென்றனர்.

ராஜிவ் கொலையில் மனித வெடிகுண்டாக செயல்பட்ட பெண் விடுதலைப்புலி தனுவும், அந்தக் குழுவில்தான் வந்து இறங்கியிருந்தார்.

இவ்வளவு விபரங்களையும் சி.பி.ஐ. புலனாய்வுக் குழுவுக்கு தெரிவித்த சண்முகத்தை இடைவிடாமல் விசாரித்ததில் இரு முக்கியத் தகவல்கள் கிடைத்தன.

ஒன்று, கோடியக்கரை வனப்பகுதியில் ஏராளமான வெடிபொருள்கள், பெட்றோல், டீசல் மற்றும் சில ஒயர்லெஸ் சாதனங்கள் எந்த இடங்களில் ஆழக்குழிகளில் மறைத்து வைக்கப்பட்டிருக்கின்றன என்ற விவரம் அவருக்குத் தெரியும்.

இரண்டாவது தகவல், முருகனிடமிருந்து சி.பி.ஐ. விசாரணை அதிகாரியால் ஏற்கெனவே பெறப்பட்டது என்பதால், சண்முகம் அதை உறுதிப்படுத்த வேண்டியதாயிற்று. முருகனின் பைகளை புதைத்து வைத்திருக்கும் தகவல்தான் அது. இந்தப் பைகளில் முக்கிய தடயங்கள் இருக்கக்கூடும் என்பதால், அவை முக்கியத்துவம் வாய்ந்தவை என புலனாய்வுக் குழு கருதியது.

எனவே கோடியக்கரை காடுகளில் புதைத்து வைக்கப்பட்டிருந்த பொருட்களை மீட்க சி.பி.ஐ. முடிவு செய்தது. அதற்காக சென்னையில் வைத்து விசாரிக்கப்பட்ட சண்முகத்தையும் அங்கு அழைத்துச் செல்வது என்று முடிவாகியது.

ராஜிவ் கொலை புலனாய்வில் ஈடுபட்ட சி.பி.ஐ. புலனாய்வுக் குழுவுக்கு, அவர்கள் விசாரணைக்காக எங்கு வேண்டுமானாலும் செல்வதற்கு ஹெலிகாப்டர் ஒன்றை வழங்கியிருந்தது மத்திய பாதுகாப்பு அமைச்சு. ஜூலை 16-ம் தேதி வந்த எம்.ஐ.-8 ரக ஹெலிகாப்டர் இரு விமானிகளுடன் பெங்களூருவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

சென்னையில் இருந்த புலனாய்வுக்குழு கோடியக்கரை காடுகளில் புதைத்து வைக்கப்பட்டிருந்த பொருட்களை மீட்க செல்வதற்காக, இந்த ஹெலிகாப்டர் சென்னை பல்லாவரத்தில் உள்ள ராணுவ விமானத் தளத்துக்கு வந்தது. அதில் சண்முகத்தையும் ஏற்றிக்கொண்டு வேதாரண்யம் பறந்தது சி.பி.ஐ. புலனாய்வுக்குழு.

அப்போது சண்முகத்துக்கு, வேதாரண்யத்தில் மிக மர்மமான முறையில் தாம் உயிரை விடப் போகிறோம் என்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை.


விறுவிறுப்பு இணையம்
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல