திங்கள், 8 ஜூலை, 2013

புத்தரும் பிள்ளையாரும்!

புத்தர் சிலையைக் கண்டு அரண்டு மிரண்டு அலறியடித்து அறிக்கை வெளியிட வேண்டாம். சிலை வைத்தால் உறவு சீர்குலையும் என்று கூச்சலிடவும் வேண்டாம், சிலையை அகற்றச் சொல்லி கேட்கவும் வேண்டாம். இப்பொழுது தான் இலங்கையில் புத்தர் சிலை அத்துமீறி வைக்கப்படுகின்றதெனக் கருதவும் வேண்டாம். அத்துமீறி வைக்கப்பட்ட புத்தர் சிலையை அங்கிருந்து அகற்றப்பட்ட வரலாறு உண்டா?

1950 ஆம் ஆண்டுகளின் நடுப்பகுதியில் எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்கா ஆட்சி செய்த காலத்தில் சுதேசிய மறுமலர்ச்சி யுகம் ஏற்பட்டது. மொழிவெறியுடன் மதவெறியும் உருவெடுத்த போதிலும் சுதேசிய படைப்புக் களும் வளர்ச்சி பெற்றதும் உண்டு. “அப்பெ ஆண்டுவ” எங்கள் ஆட்சி என்ற இனவெறியும் மதவெறியும் அதிகரித்தது. லெகொக் பாதிரியார் என்ற ஒருவர் சிறந்த கல்விமானாகவும் சமூகசேவையாளருமாக இந்த நாட்டில் சகல மக்கள் மத்தியிலும் நற்பெயர் பெற்ற காலமொன்றிருந்தது. இவர் எழுதிய ப+கோள இயல் பற்றிய ஒரு நூல் 1950 களின் தொடக்கத்தில் சிரேஸ்ட தராதரப் பத்திர வகுப்புக்கு பாடப்புத்தகமாகவும் விளங்கியது.

பண்டாரநாயக்கா ஆட்சிக்கு வந்த காலப்பகுதியில் லெகொக் பாதிரியாரின் சேவையையும் கல்விப் பணியையும் கௌரவிக்கும் பொருட்டு இவரின் உருவச் சிலை ஒன்றை நிறுவுவதற்கு கல்விமான்கள் மற்றும் சமூகப் பெரியார்களும் சேர்ந்து தீர்மானம் எடுத்தார்கள். லெகொக் பாதிரியாரின் உருவச்சிலையும் உருவாக்கப்பட்டது. இந்த சிலையை வைப்பதற்கு மருதானையில் காமினி தியேட்டருக்குப் பக்கமாக மக்கலம் றோட் (இப்போது டி.ஆர்.ஜெயவர்த்தன வீதி) சந்தியில் இடமும் தெரிவு செய்யப்பட்டு சிறிதாக ஒரு பீடமும் அமைக்கப்பட்டது. மறுநாள் சிலையை நாட்டுவதென்றும் அதற்கடுத்த நாள் சிலையை திறந்து வைப்பது என்றும் தீர்மானிக்கப் பட்டிருந்தது. லெகொக் பாதிரியாரின் உருவச்சிலை அமைப்பதற்கு தயாரிக்கப்பட்டிருந்த பீடத்தில் திடீர் என்று புத்தர் வந்து குந்தியிருந்துவிட்டார்.

லெகொக் பாதிரியாரின் சிலைக்குழுவினர் பொது மக்கள் அமைப்புக்களும் இதற்கு ஆட்சேபம் தெரிவித்து ஆர்ப்பாட் டமும் நடத்திப் பார்த்தனர். பிரதமருக்கு கடிதங்கள், கோரிக்கைகள், தூதுக்குழுக்கள் என வழமையான சத்தங்கள் சந்தடிகள் எல்லாம் நடந்தன. அது அப்பே ஆண்டுவ காலம் வேறு. எந்தக்காலமாக இருந்தால் என்ன புத்தரே வந்து குந்திவிட்டு வெளியே போனாலும் நீ போக முடியாது இதில் இருந்து தானாக வேண்டும் என்ற நிர்ப்பந்தம் இருக்கும். சந்தியில் வைக்கப்பட்ட புத்தர் சிலைக்கு சில நாட்கள் இராணுவம் காவல்காத்து பின் பலகாலம் பொலிஸ் காவல் இருந்தது. இன்று அதே இடத்தில் அதே புத்தர் சிலை அரசமரத்துடன் இருக்கின்றது. யாரும் அவரைப்பற்றி அக்கறை கொள்வதாகவோ கவலைப் படுவதாகவோ தெரியவில்லை. இருத்திய புத்தர் இருக்கிறார். அருகே இருந்த காமினி தியேட்டர் காணாமல் போய்விட்டது.

திருகோணமலையிலும் சில வருடங்களுக்கு முன் திடீரென முக்கியமான இடத்தில் புத்தர் முளைத்தார். கூச்சல் ஆட்சேபம் எழுந்தது. முள்வேலிக்குள் புத்தர் பொலிஸ் பாதுகாப்புடன் இருந்தார். இன்றும் அதே இடத்தில் எந்தப் பாதுகாப்பும் இல்லாமல் இருக்கின்றார். புத்தர் சிலை வைக்கப்போகிறார்கள். இங்கே வைக்கக் கூடாது என்று தமிழ் அரசியல்வாதிகள் சிலர் அதுவும் புதிதாக அரசியலுக்கு வந்தவர்கள் குரல் கொடுத்து தேவையற்ற பிரச்சினை யை உருவாக்க முனைகின்றனர். தமிழ்மக்களுக்கு எத்தனையோ பெரும் பிரச்சினைகள் இருக்கின்றன. புத்தர் சிலை வைத்தால் என்ன கெட்டுப் போகின்றது. எத்தனை புத்தர் கோயில்களில் கணபதி, ஸ்கந்த (கந்தன்) பத்தினி(கண்ணகி), தெய்வச் சிலைகள் வைக்கப்பட்டு அவர்களால் வணங்கப் பட்டு வருகின்றன. களனி ரஜவிகாரையில் புத்தர் சந்திக்கு நேரே நவக்கிரக சந்நிதி இருக்கின்றது.

புத்தர் வைக்காதே என்ற கூச்சல் பூமாறி அம்மன் இடம்பெயர்ந்து இருக் கின்றார். முதிர்ச்சியற்ற அரசியல்வாதிகளின் சில செயற்பாடுகள் தேவையற்ற பிரச்சினைகளையே உருவாக்கும். தமிழ்மக்களுக்கு இன்றைய தேவை என்ன என்பதை சிந்திப்பது அவசியம். ஒற்றுமை அதைவிட முக்கியம்.

புத்தர் சிலை வைக்கும் இடத்தில் புத்தருக்கு அருகே ஒரு குட்டிப் பிள்ளையார் சிலை வையுங்கள். மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது. இதை அவர்களும் கணபதி தெய்யோ என்று வணங்குவார்கள் பிரச்சினையும் ஓய்ந்துவிடும். புத்தரை வைக்காதே என்று கூச்சல் இடாமல் புத்தருக்கு அருகே பிள்ளை யாரை வையுங்கள் என்று அமைதியாகச் சொல்லுங்கள, செய்யுங்கள். கொழும்பிலிருந்து மட்டக்களப்புச் செல்லும் போது மட்டக்களப்பு எல்லையின் வீதியில் ஒருபறத்தில் பெரிய புத்தர் மறுபுறத்தில் உள்ள பெரிய பிள்ளை யாரைப் பார்த்த படி இருக்கின்றார். பிரச்சனை ஏதுவும் இல்லையே!


எஸ் எம் கோபாலரத்தினம்
முத்த பத்திரிகையாளர்
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல