ஞாயிறு, 27 அக்டோபர், 2013

கூந்தல் பொலிவிழந்து அசிங்கமா இருக்கா? கவலைப்படாதீங்க... ஈஸியா சரிசெய்யலாம்!

அழகு என்று வரும் போது அதில் சருமம், கண்கள், உதடுகள் மட்டும் முக்கிய இடம் பெறுவதில்லை. அழகில் சருமத்திற்கு பின்னர், கூந்தல் தான் முக்கிய பங்கினை வகிக்கிறது. ஆனால் அதனை பலர் உணர்வதில்லை. சருமத்திற்கு மட்டும் ஃபேஸ் பேக், ஸ்கரப் என்று பலவற்றை பின்பற்றி பராமரிக்கிறோம். கூந்தலுக்கு வெறும் எண்ணெயை மட்டும் தடவுவோம். உண்மையில் கூந்தல் நன்கு பொலிவோடு, வறட்சியின்றி இருக்க வேண்டுமெனில், அதற்கு எண்ணெய் மட்டும் போதாது.

எப்படி சருமத்திற்கு ஃபேஸ் பேக் போடுகிறோமோ, அதேப் போல் கூந்தலுக்கு ஹேர் பேக் போட வேண்டும். இதனால் கூந்தலுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைத்து, கூந்தல் பொலிவோடு வறட்சியின்றி இருக்கும். அதிலும் இயற்கையான ஹேர் பேக் போட்டால் தான் கூந்தலுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைக்கும். குறிப்பாக மூலிகைகளைக் கொண்டு ஹேர் மாஸ்க் போட்டால், இன்னும் நல்ல பலன் கிடைக்கும். அதுவும் சரியான உணவுகளுடன், மூலிகை ஹேர் பேக்குகளைப் போட வேண்டும்.

சரி, இப்போது கூந்தலின் வறட்சியை போக்கவும், அதன் பொலிவை அதிகரிக்கவும் உதவும் சில மூலிகைகள் என்னவென்று பார்ப்போம்.

மருதாணி

மருதாணியில் கூந்தலுக்கு வேண்டிய பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளன. அதுமட்டுமின்றி, இந்த மருதாணி பல்வேறு கூந்தல் பிரச்சனைகளை சரிசெய்யும். அதில் கூந்தல் வறட்சி, பொலிவிழந்த கூந்தல், பொடுகுத் தொல்லை போன்றவை குறிப்பிடத்தக்கவை. ஏனெனில் மருதாணியில் பாக்டீரிய எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பொருள் அதிகம் உள்ளது. ஆகவே வாரம் ஒரு முறை மருதாணியைக் கொண்டு கூந்தலுக்கு மாஸ்க் போட வேண்டும்.

கரிசலாங்கண்ணி

கரிசலாங்கண்ணி கூந்தல் பிரச்சனைகளை சரிசெய்ய உதவும் ஒரு பழங்கால மூலிகை சிகிச்சைப் பொருள். இந்த மூலிகை கூந்தல் வறட்சியைப் போக்காவிட்டாலும், பல்வேறு ஸ்கால்ப் பிரச்சனைகளை குணமாக்கும் தன்மைக் கொண்டது. அதுமட்டுமின்றி, இது நல்ல ஆரோக்கியமான கூந்தல் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும்.

பிரமி

கூந்தல் வறட்சியாகவும் பொலிவிழந்தும் காணப்பட்டால், பிரமியைப் பயன்படுத்துங்கள். இதனால் இரத்த ஓட்டம் ஸ்கால்ப்பில் அதிகரித்து, கூந்தல் வளர்ச்சியை தூண்டும். மேலும் இது கூந்தலை நல்ல அடர்த்தியாகவும், கருமையானதாகவும் மாற்றும்.

நெல்லிக்காய்

நெல்லிக்காயில் பாக்டீரிய எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பொருள் அதிகம் இருப்பதால், இது ஸ்கால்ப்பில் எந்த ஒரு பிரச்சனையும் வராமல் பார்த்துக் கொள்ளும். மேலும் இது வறட்சியான கூந்தலை போக்குவதோடு, கூந்தல் வளர்ச்சிக்கு தேவையான வைட்டமின் சி சத்தை வழங்கும்.

கற்றாழை

கற்றாழையின் நன்மைக்கு அளவே இல்லை. ஏனெனில் இது தலை முதல் கால் வரை உள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் சிறந்த தீர்வை வழங்குகிறது. அதிலும் கூந்தல் பராமரிப்பில் வரும் போது, இது கூந்தல் வறட்சி, பொலிவிழந்த கூந்தல் ஆகியவற்றை சரிசெய்து, நல்ல மென்மையான மற்றும் அழகான கூந்தலைப் பெற உதவும்.

பூந்திக் கொட்டை

பல ஆண்டு காலமாக கூந்தல் பராமரிப்பில் பெரிதும் உதவியாக இருக்கும் ஒரு பொருள் தான் பூந்திக் கொட்டை. ஆகவே இந்த பூந்திக் கொட்டையை பொடி செய்து, அதனை தலைக்கு பயன்படுத்தி குளித்தால், அது கூந்தல் வறட்சியை நீக்குவதோடு, பல்வேறு கூந்தல் பிரச்சனைகளையும் விரைவில் சரிசெய்துவிடும்.

அதிமதுரம்

அதிமதுரம் கூட கூந்தலில் ஏற்படும் பிரச்சனைகளைப் போக்க வல்லது. இந்த பொருள் இந்தியாவில் மட்டுமின்றி, உலகம் முழுவதும் கூந்தல் பராமரிப்பில் பயன்படுத்தப்படுகிறது. ஆகவே கூந்தல் வறட்சியைப் போக்க வேண்டுமெனில், அதிமதுரம் கொண்டு பராமரிப்பது நல்ல பலனைத் தரும். மேலும் இது நல்ல வலுவான கூந்தல் வளர்ச்சிக்கு உதவும்.

சீகைக்காய்

அக்காலத்தில் எல்லாம் ஷாம்பு பயன்படுத்துவோரை விட, சீகைக்காய் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை தான் அதிகம். அதனால் தான் இன்றும் நமது பாட்டியின் கூந்தல் பட்டுப்போன்று மென்மையாக உள்ளது. ஆகவே நல்ல அழகான கூந்தல் வேண்டுமெனில், சீகைக்காயைக் கொண்டு கூந்தலைப் பராமரியுங்கள்.

Thatstamil
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல