திங்கள், 4 நவம்பர், 2013

இலங்கையில் விடுதலை புலிகளின் முன்னாள் போராளிகள்: இப்போது என்ன நடக்கிறது? – 4

பயிற்சி முடியும் கட்டத்தில் உள்ளவர்களை சந்தித்தபோது அவர்களில் சிலர், தமது சொந்த இடங்களுக்கு செல்ல தயங்குகிறார்கள் என்பது தெரிந்தது. அதற்கு அவர்களிடம் வெவ்வேறு காரணங்கள் உள்ளன என்று கடந்த பாகத்தில் தெரிவித்திருந்தோம். இவர்களில் முக்கியமானவர்கள், விடுதலைப் புலிகள் இயக்கம் செயல்படும் நிலையில் இருந்த காலத்தில் நடுத்தர தலைமை, மற்றும் தளபதிகளாக இருந்தவர்கள்.

இவர்களில் பலர், வன்னியில் வாழ்ந்த மக்களால் நன்கு அறியப்பட்டவர்களாக உள்ளார்கள். வன்னியில், புலிகள் காலத்தில் இவர்களது அந்தஸ்து உயர்ந்த நிலையில் இருந்தது. இவர்களது உத்தரவுகளை செயல்படுத்த ஆட்கள் இருந்தனர். இவர்களிடம் உதவி கேட்டு பொதுமக்கள் வீடு தேடி வந்து கோரிக்கைகள் வைத்த காலமும் ஒன்று இருந்தது.

புலிகளின் காலத்தில் விழாக்களிலும், விளையாட்டுப் போட்டிகளிலும், மேடைகளை அலங்கரித்தவர்களாகவும், பரிசில்களை வழங்கியவர்களாகவும் இவர்கள் இருந்திருக்கிறார்கள்.

யுத்தம் முடிந்தபின் தடுப்பு முகாம்களுக்கு கொண்டுசெல்லப்பட்ட சுமார் 12,000 முன்னாள் போராளிகளில், யாருக்கும் எந்த சலுகையும் கிடைக்கவில்லை. அனைவரும் சமமாகவே நடத்தப்பட்டனர். இதனால், புலிகள் இருந்த காலத்தில் உயர் நிலையில் இருந்த ஒருவரும், அடிமட்டத்தில் இருந்த ஒருவரும், ஒரே வசதி வாய்ப்புகளை பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.

அடுத்த விஷயம், அடிமட்டத்தில் இருந்தவர்கள் சீக்கிரம் தடுப்பு முகாம்களில் இருந்து வெளியேறி விட்டார்கள். உயர் மட்டத்தில் இருந்தவர்கள் அங்கு அதிக காலம் தங்கியிருக்க வேண்டியிருந்தது. பலர் தற்போதும் உள்ளார்கள்.

இதனால், தடுப்பு முகாம்களிலேயே இவர்கள் ஒருவித மன இறுக்கத்துடனேயே உள்ளார்கள்.

தற்போது புனர்வாழ்வு முகாம்களுக்கு மாற்றப்பட்டு, பயிற்சிகள் பெறும் நிலையில் உள்ள இவர்களில் பலருக்கு தமது விடுதலை தேதி எப்போது என்பது தெரியவில்லை. அதை அறிந்து கொள்வதில் ஆர்வம் அற்றவர்களாகவும் உள்ளார்கள்.

புனர்வாழ்வு நடவடிக்கைகளுக்கு பொறுப்பாக உள்ள அலுவலக அதிகாரிகளிடமும், ராணுவ அதிகாரிகளிடமும் நாம் பேசியபோது, இவர்களில் பலருக்கான விடுதலை தேதிகள் அடுத்த ஆண்டின் ஆரம்ப மாதங்களில் உள்ளதை தெரிந்துகொள்ள முடிந்தது. ஆனால், அந்த தேதிகள் மாற்றத்துக்கு உட்பட்டவை என்றும் எமக்கு தெரிவிக்கப்பட்டது.

அதன் அர்த்தம் என்னவென்றால், இவர்கள் வெளியே போய் சமூகத்துடன் இயல்பாக இணைந்து கொள்ளக்கூடிய மனநிலையில் உள்ளார்கள் என்ற நம்பிக்கை, புனர்வாழ்வு அதிகாரிகளுக்கு ஏற்படாவிட்டால், விடுதலை தேதி தள்ளிப் போகும்.

இவர்களில் பலருடன் நாம் தனித்தனியாக பேசினோம். அநேகருக்கு தமது சொந்த ஊர்களுக்கு செல்வதில் அவ்வளவாக விருப்பம் கிடையாது. பல ஆண்டுகளாக சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் இருந்த இவர்கள், இப்போது தத்தமது ஊர்களுக்கு திரும்பினால், முன்பு இருந்த அந்தஸ்த்தும், கிடைத்த மரியாதையும் கிடைக்காது என்பதை நன்றாக புரிந்து வைத்துள்ளார்கள் இவர்கள்.

அந்தஸ்து பிரச்னையை விட வேறு ஒரு சிக்கலும் இவர்களில் சிலருக்கு உள்ளதை, வெளிப்படையாக தெரிவித்தார்கள்.

அது என்னவென்றால், புலிகளின் காலத்தில் தலைமையில் இருந்து வந்த கட்டளைகளை கேள்வி கேட்காமல் நிறைவேற்றும் நிலைமையில் இவர்கள் இருந்திருக்கிறார்கள். அப்படி இவர்களால் நிறைவேற்றப்பட்ட கட்டளைகள் எப்போதுமே, ஒரே மாதிரி மகிழ்ச்சிகரமானவையாக இருக்க முடியாது.

அந்த வகையில் இவர்களால் நிறைவேற்றப்பட்ட சில கட்டளைகள் மக்களில் சிலரது அதிருப்தியையும், வெறுப்பையும் சம்பாதித்திருக்க சந்தர்ப்பங்கள் அதிகம் இருந்தன. அப்படி இவர்கள் மீது வெறுப்படைந்தவர்கள், புலிகள் இருந்த காலத்தில் ஏதும் செய்ய முடியாமல், மௌனமாக இருந்திருக்க வேண்டிய நிலை இருந்தது.

இப்போது நிலைமை அப்படியல்ல. முன்பு இருந்த பாதுகாப்பும், ஆயுதங்களும் இப்போது இவர்களுக்கு கிடையாது.

புலிகள் இயக்கத்தில் இடைநிலை தளபதியாக இருந்த ஒருவர் இதுபற்றி கூறுகையில், “எங்கள்மீது முன்பு ஆத்திரமடைந்த யாராவது இப்போது எங்களை தாக்க முயன்றால், எங்களது பாதுகாப்புக்காக அரசு போலீஸ் ஸ்டேஷன்களுக்கோ, ராணுவ முகாம்களுக்கோ ஓடிச் செல்வதை தவிர வேறு வழியில்லை” என்றார்.

“நாம் இயக்கத்தில் இருந்தபோது, எமக்கு வந்த உத்தரவுகளை செயல்படுத்தினோம். அதை எம்மால் மீற முடியாது. இதை எத்தனை பேர் புரிந்து கொள்ளப் போகிறார்கள்? சில நடவடிக்கைகளை எமது விருப்பத்துக்கு விரோதமாக எடுக்க வேண்டியிருந்தது. சில நடவடிக்கைகளை எடுத்தபோது, எமது உறவினர்களே பாதிக்கப்பட்டனர். ஆனால், பாதிக்கப்பட்ட எத்தனை பேர் எமது சூழ்நிலையை புரிந்து கொள்வார்களோ தெரியாது” என்றும் அவர் கூறினார்.

மற்றொருவர் மிகவும் விரக்தியடைந்த நிலையில் கூறியது, சிந்திக்க வைத்தது. “தற்போது நாங்கள் தடுப்பு முகாமில் உள்ளோம். வெளியே செல்ல முடியாது. நாளைக்கே விடுதலையாகி வீட்டுக்கு சென்றால், என்னாகும்? அநேகமாக வெளியே தலைகாட்ட முடியாமல் வீட்டுக்கு உள்ளேயே அடைந்து கிடக்க வேண்டிய நிலை ஏற்படலாம். இங்கு இருப்பதும், அங்கு இருப்பதும் ஒன்றுதான்” என்றார் அவர்.

இது ஒரு மிகவும் கவலைக்குரிய விஷயம். விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்தவர்களை, தற்போது இலங்கைக்கு வெளியே உள்ள தமிழர்களில் பலர், ஆகா, ஓகோ என்று புகழ்ந்து தள்ளுகிறார்கள். இன விடுதலைக்காக போராடியவர்கள் என சிலாகிக்கிறார்கள்.

ஆனால், அந்த இயக்கத்தில் தளபதிகளாக இருந்தவர்களே, மேலே நாம் குறிப்பிட்ட நிலையில் உள்ளார்கள். தமது எதிர்காலம் என்ன என்றே தெரியாத நிலையில் உள்ளார்கள். ஆண்டுக்கணக்கில் தடுப்பு முகாமில் இருந்த பின்னரும், விடுதலையாகி வீடு செல்ல ஆர்வமின்றி உள்ளார்கள் என்பது, எவ்வளவு பெரிய கொடுமை!

இவர்களை யார் கவனிப்பது? வெளிநாட்டு தமிழர்களின் வெறும் புகழ்ச்சி வார்த்தைகள் மட்டும் இவர்களுக்கு வாழ்க்கையை பெற்று தந்துவிடாது.

இந்தப் பிரிவில் உள்ள முன்னாள் போராளிகளிடம் நாம் பேசியபோது, புரிந்துகொள்ள முடிந்த விஷயங்கள்:

1) இவர்கள் மீண்டும் சமூகத்தில் இணைந்து இயல்பு வாழ்க்கை வாழ்வதற்கு, நேர்த்தியாக கவுன்சிலிங் இவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். தற்போது வழங்கப்படும் கவுன்சிலிங் போதுமானதாக இல்லை. அதற்கு, தமிழர்களின் சமூக அமைப்பை நன்கு புரிந்து கொண்டவர்களால் கவுன்சிலிங் வழங்கப்படவில்லை என்பது காரணமாக இருக்கலாம்.

2) இவர்களிடம் தனித்தனியே உள்ள திறமைகளை வைத்து, இவர்களால் எப்படி வெற்றிகரமான வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கை ஊட்டப்பட வேண்டும். சிலருக்கு, வேறு துறைகளில் பயிற்சிகள் கொடுக்கப்பட வேண்டும்.

3) சொந்த ஊருக்கு போகவே விருப்பம் அற்ற நிலையில் பலர் உள்ளார்கள். இவர்களை சொந்த ஊர்களுக்கு போகுமாறு வற்புறுத்துவதில் பலனில்லை. இவர்களுக்கு சில ஆண்டுகளுக்காவது, வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க முடிந்தால் நல்லது. உதாரணமாக, அரபு நாடுகளில் ஓரிரு ஆண்டுகளுக்கு கான்ட்ராக்ட் வேலைகள்.

4) அப்படி செய்ய முடிந்தால், இவர்கள் நாடு திரும்பும்போது, தன்னம்பிக்கையும் ஏற்பட்டிருக்கும். சமூகத்தில் ஒரு அந்தஸ்துடனும் இவர்கள் நாடு திருப்புவார்கள்.

அடுத்த பகுதியில் வேறு சில தகவல்களை பார்க்கலாம். (தொடரும்)


விறுவிறுப்பு.காம்
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல