திங்கள், 16 டிசம்பர், 2013

முடிவு உங்கள் கையில்!

ஒரு துறவியும், அவர் சீடர் ஒருவரும் காட்டு வழி நடந்து சென்றனர். இருவரும் ஓர் ஆற்றைக் கடக்க நேர்ந்தது. அப்போது, ஒரு பெண் ஆற்றைக் கடக்கத் தயங்கி நின்றுகொண்டிருந்தாள். தனக்கு உதவி செய்யுமாறு அவள், அவர்கள் இருவரையும் கேட்க, துறவறம் கொண்டபின் பெண்ணைத் தொட்டுத் தூக்குவதா என்று சீடன் யோசிக்க, துறவி சட்டென்று அந்தப் பெண்ணைத் தூக்கிக்கொண்டு ஆற்றைக் கடந்து, அந்தப் பக்கம் இறக்கி விட்டு விட்டார்.

சீடனுக்குப் பெரும் குழப்பம், துறவி எப்படி அந்தப் பெண்ணைத் தொட்டுத் தூக்கலாம் என்று. துறவியும் சீடனும் நெடுநேரம் நடந்து, நெடுந்தூரம் கடந்தபின்னும் சீடனுக்கு குழப்பம் தீரவில்லை. சரி கேட்டு விடுவோம் என்று, குருவே அந்தப் பெண்ணை நீங்கள் தூக்கியது துறவறத்துக்கு இழுக்கல்லவா? என்று கேட்க, குரு சொன்னாராம், சீடனே நான் அந்தப் பெண்ணை அப்போதே இறக்கி விட்டு விட்டேனே, நீ இன்னுமா சுமந்து கொண்டிருக்கிறாய்? என்று!

இப்படித்தான் நம்மில் பலரும் பிறர் மீதான கோபத்தை, நாமாக உருவாக்கிக் கொண்ட வஞ்சினங்களை இறக்கமுடியாமல் சுமந்து கொண்டு இருக்கிறோம். நம்மைத் தோல்வியடைய வைத்தவர்களைப் பழிதீர்க்காமல், நமக்கொரு வாழ்வு தேவையில்லை என்னொரு ரோசத்தில் தீய்ந்தழிய தயாராயிருக்கிறோம்.

மன்னிப்பிலும், பரஸ்பர விளக்கத்திலும் சில விஷயங்கள் தெளிந்து விடும், காலப்போக்கில் சிலது ஐதாகி விடும். ஆனால் நாம் பேச விரும்புவதில்லை. நாமே நமக்கு அறிவாளி, பிறர் எல்லாம் மூடர்கள்-நியாயங்களே அற்றவர்கள் என்ற ரீதியிலேயே நமது நினைப்பும், செயலும் அமைந்து விடுகிறது. குறைந்தபட்சம் நம்மை நாம் திருத்திக் கொள்ள வேண்டி இருக்கிறது, வளரும் தலைமுறைக்கு ஒரு வழிகாட்டுதல் தேவை இருக்கிறது. வெறுப்பும் விரோதமும் பழியுணர்ச்சிகளுமாக நமக்குள் புரையோடிப் போனவற்றை மெல்ல மெல்ல விலக்கி நம்மை சமன்நிறை மனிதர்கள் ஆக்கிக் கொள்வதற்கான போராட்டத்தை நமக்குள்ளேயே தொடங்குவோம்.

வளரும் இளந்தலைமுறைக்கு வழிகாட்டுதலை வீட்டில் இருந்து தொடங்குவோம். நம் குழந்தை, மற்ற குழந்தைகள் மீதான குற்றம் குறைகளைச் சொல்லும் போது, அந்தக் குழந்தையைச் சரியானபடி வழி நடத்த வேண்டும். அதை விடுத்து, அந்தக் குழந்தையைத் திருப்பி அடி, அந்தக் குழந்தையுடன் சேராதே, அவர்களின் பிள்ளைகள் அப்படித்தான், இந்தச் சாதி, அந்த மதம் எல்லாம் அப்படித்தான் என்று தப்பும் தவறுமாகச் சொல்லிக் கொடுக்கும் அடிப்படையில் உருவாகிறது தீவிரவாதம், இனவாதம், மேட்டிமைவாதம் எல்லாமும்.

தீவிரவாதம் நமக்குள் உருவாகிவிட்டால் பிறகு நமக்குப் பொறுமையில்லை, கேட்டுத் தெளியும் அறிவும் இல்லை. பொறுமையும் அறிவும் இல்லாதவருக்கு வன்முறை ஒன்றே ஆயுதம்! விதை பழுது ஆனால், விருட்சம் எப்படி வளரும்? வருங்காலம் வளமாக இருக்க, உங்கள் வீட்டில் குழந்தைகள் மனதிலாவது நல்லதை விதையுங்கள். அன்பையும் அறிவையும் உரமாக்குங்கள். அடுத்த தலைமுறைகையில் பூக்களோடும், புத்தகங்களோடும் இருக்க வேண்டுமா அல்லது கத்தியோடும், கறையோடும் இருக்க வேண்டுமா? மற்ற மற்ற சமூகங்களின் மீது வெறுப்பும் விரோதமுமுடனே வளரவேண்டுமா?

முடிவு உங்கள் கையில்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல