செவ்வாய், 11 மார்ச், 2014

படிச்சவை கொஞ்சம் படிச்ச மாதிரி நடவுங்கோ

சந்தையில், கடையில், சலூனில், பள்ளிக்கூடத்தில், ஆஸ்பத்திரியில், பஸ்ஸில், தெருக்கரை நிழலில், தொலைபேசிகளில், பத்திரிகைகளில், நாலுபேர் கூடி வேலை செய்கிற இடங்களில் எல்லோம் அழுது வடியும் முகத்துடன் ஜெனிவாத் தீர்மானத்தைப் பற்றி சோகமாகக் கதைத்துக் கொண்டிருக்கிறார்கள் பெரும்பாலான தமிழர்கள்.



உலகம் மீண்டும் ஏமாற்றிப் போட்டுது எண்ட கவலை எல்லோரையும் வாட்டிப்போட்டுது.

உண்மையில் இவர்கள் எல்லோரும் நினைப்பதைப்போல உலகமsrilanka cartoon் தமிழர்களையும் நீதியையும் ஏமாற்றியிருக்கிறதா? அல்லது தமிழர்கள் அப்படி நினைத்துக் கொண்டிருக்கிறார்களா?

நான் சொல்வேன், தமிழர்கள்தான் அப்படி அதிகமாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று.

இதுதான் தமிழர்களின் பெரிய குறைபாடே. எப்பொழுதும் தங்களைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்பதும், உலகமெல்லாம் தமிழர்களைப் பற்றியே – தமிழர்களுக்காகவே சிந்தித்துக்கொண்டிருக்கிறது என்ற மாதிரியும் நினைத்துக்கொண்டிருப்பதும்.

ஆனால், உலகம் தன்னைப் பற்றியே சிந்திக்கிறது. ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு இனமும் ஒவ்வொரு சமூகமும் ஒவ்வொரு மனிதரும் தனக்காகவும் தன்னைப்பற்றியுமே சிந்தித்துக்கொண்டிருக்கிறது.

இதற்குள் சில பொதுமைப்பாடுகள் உண்டு.

தேவைப்படும்போது அந்த அடிப்படையில் ஒவ்வொன்றும் இணைந்து கொள்கின்றன. அது தேவை சார்ந்தும் உணர்வு சார்ந்தும் அமைகிறது. இதில் முதன்மை அடைவது, தேவைசார்ந்த இணைவுகளே. அதிலும் பொருளாதார நலன் சார்ந்த இணைவுகளே.

உலகம் என்பது இப்படித்தான் உள்ளது.

இப்பொழுது இலங்கையை அமெரிக்கா அதிகமான நெருக்கடிக்குள் தள்ளாமல் விட்டதும் இந்தத் தேவை சார்ந்த காரணத்தினால்தான்.

இதைத் தமிழர்கள் இன்னும் விளங்கிக் கொள்ளவில்லை.

இதுதான் சோகமே தவிர, ஜெனிவா தமிழர்களைக் கைவிட்டதற்காக சோகமாயிருக்க வேண்டியதில்லை.

ஏனென்றால் ஜெனிவா மட்டுமல்ல எந்தத் தரப்பும் தமிழர்களை கையேற்கவும் கையிற் தூக்கவும் இல்லை. அப்படிக் கை தூக்கி விட்டவர்கள் இப்பொழுது கையை விட்டிருந்தால் அதற்காக நாங்கள் கவலைப்படலாம்.

உண்மையில் நடந்தது என்னவென்றால், எப்போதையும்போலத் தமிழர்கள் ஏமாளித்தனமாக மற்றவர்களை – ஜெனிவாத் தீர்மான்தையும் அமெரிக்க அறிக்கையையும் நம்பியிருந்ததே.

எத்தனை தடவை கையைச் சுட்டுக்கொண்டாலும் அதிலிருந்து எந்தச் சிறிய பாடத்தையும் படித்துக்கொள்ளாத ஒரு மக்கள் கூட்டம் என்றால் அது இந்தத் தமிழ்ப்பெருங்குடிதான்.

பூனைகூட ஒரு தடவை சூடுபட்டால் மறுபடியும் அடுப்பங்கரையை நாடாது.

ஆனால், தமிழர்கள் தங்களின் தலையைச் சுட்டெரித்துக் கொண்டாலும் அதிலிருந்து ஒரு சிறு அறிவை – அனுபவத்தைக் கூடப் பெற்றுக்கொள்ளாதவர்கள்.

இதற்கு முழுக்காரணமும் தமிழர்கள் தங்களுடைய தலைமைகளாகத் தேர்தெடுத்துக் கொள்ளும் தலைவர்களும் அவர்கள் விரும்பும் ஊடகங்களுமே.

இந்தத் தலைவர்களும் இந்த ஊடகங்களும் தமிழர்களை எத்தனை தடவை ஏமாற்றியிருக்கின்றன. எத்தனை தடவை பெரிய துரோகத்தையெல்லாம் இழைத்திருக்கின்றன.

இந்தத் தலைவர்களும் இந்த ஊடகங்களும் தமிழ் மக்களை ஏமாற்றியதையும் ஏமாற்றிக் கொண்டிருப்பதையும் விட ஜெனிவாத் தீர்மானமும் அமெரிக்க அறிக்கையும் உலகமும் கூடுதலாக ஒன்றும் ஏமாற்றி விடவில்லை.

அமெரிக்கா தன்னுடைய நலன்சார்ந்தே எப்போதும் சிந்திக்கும். அதை விட்டு அது உலக நீதிக்காக என்றும் சிந்தித்ததாக நான் அறிந்ததில்லை.

இந்தியா கூட அப்படித்தான் முன்னரும் சிந்தித்தது. செயற்பட்டது. இப்பொழுதும் அப்படித்தான்.

அதிகம் ஏன், தமிழத்திலிருந்து அரசியல் குரலை எழுப்பும் ஜெயலலிதாவும் சரி, கருணாநிதியும் சரி, சீமான், வை.கோவும் சரி, பாரதீய ஜனதாக் கட்சியும் சரி எல்லாத்தரப்புமே தங்கள் தங்கள் ஆதாயங்களுக்காகவே செயற்படுகின்றன.

தங்கள் நலன் சார்ந்தே உலகம் முழுக்க நீலிக்கண்ணீரும் போலிக்கண்ணீரும் வடிக்கப்படுகிறது.

இதில் பேதைகளாகவும் மூடர்களாகவும் மடையர்களாகவும் முட்டாள்களாகவும் நாங்களே இருக்கிறோம்.

இதையெல்லாம் சொன்னால், உலகம் இப்படித்தானிருக்கிறது. அதை எப்படி விளங்கிக்கொள்ள வேணும் என்று யாராவது சொல்ல முயன்றால், அவர்களை துரோகிப் பட்டியலில் தூக்கிப் போட்டு விட்டு திரும்பத்திரும்ப முட்டாள் வேலைகளில் இறங்கி விடுகிறார்கள் பெரும்பாலான தமிழர்கள்.

இதிலே கொஞ்சம் படித்த – அபிப்பிராயத்தை உருவாக்க வல்லவர்கள் தங்கள் என்று நினைக்கும் தமிழர்கள்தான் படு மோசம்.

அவர்களைச் சுட்டெரிக்கும் வரை, அவர்களுடைய இந்தப் பேய்த்தனமான கற்பனையை – கற்பனைப்பேயைச் சுட்டெரிக்கும்வரை தமிழர்களின் பேய்த்தனம் மாறாது. மாறவே மாறாது.

 - வடபுலத்தான்
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல