புதன், 5 மார்ச், 2014

வடக்கில் தொடரும் அவல மரணங்கள் தேவலோகத்தில் அவசர மாநாடு

நேற்றிரவு நடுநிசி நேரத்தில் ஒரு கனவு. தேவலோகத்தில் இருப்பது போன்ற பிரமை அது. தேவலோகம் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கின்றது. தேவர்கள், அவர்கள் சார்ந்த அதிகாரிகள் என அனைவரும் ஓடி ஓடி வேலை செய்து கொண்டிருக்கின்றனர். கூடவே தேவலோகம் விசேடமாக அலங்கரிக்கப்பட்டிருந்தது.
எதோ நடக்கப் போகின்றது என்று ஊகித்துக் கொண்டு, சூலாயுதத்துடன் தேவலோக நுழை வாயிலில் காவல்புரியும் ஒருவரிடம் நெருங்கிச் சென்று ஐயா! இங்கு என்ன விசேடம் நடக்கப் போகின்றது? எனக் கேட்டேன். அதற்கு தேவலோக வாயிற்காப்போன், ஓ! மானிடனே, இலங்கையின் வட மாகாணத்தில் அவல மரணங்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. விபத்து, தற்கொலை, கொலை, மர்ம மரணங்கள் என்றவாறு உயிரிழப்புகள் நாளுக்கு நாள் நடக்கின்றது. இதனால் தேவலோகம் அதிர்ந்து போயுள்ளது.

வட மாகாணத்தில் இருக்கக்கூடிய பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் மேற்குறித்த மரணங்களைக் கட்டுப்படுத்துவதற்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்காத நிலையில்,
வட மாகாணத்து மக்கள் இறைவழிபாடினூடாக தேவலோகத்திற்கு தொலைநகல் மூலமாக அனுப்பி வைத்த முறைப்பாட்டை அடுத்து, தேவலோகத்தில் இந்த மாநாடு அவசரமாகக் கூட்டப்படுகின்றது என்றார்.

நான்: ஐயா! வடக்கில் இரணைமடுக்குள விவகாரத்திற்கு நடத்தப்படும் மாநாடு போல இங்கும் மாநாடா? இந்த மாநாட்டிற்கு சம்பந்தர் ஐயா, விக்னேஸ்வரன் ஐயா எல்லோரும் வருவார்களா?

வாயிற்காப்போன்: மானிடனே! இது தேவலோகத்து மாநாடு. இந்த மாநாட்டிற்கு அவர்கள் வந்தால் திரும்பவும் பூலோகத்திற்குப் போக முடியாது. ஆகையால் அவர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொள்ளமுடியாது.

நான்: அப்படியானால் இந்த மாநாட்டில் அரச தரப்புப் பிரதிநிதிகள் கலந்து கொள்வார்களா?

வாயிற்காப்போன்: அவர்கள் ஜெனிவா மாநாட்டிற்கு போவார்களே தவிர அவர்கள் எவரும் இந்த லோகத்திற்கு வரமுடியாது.

நான்: ஐயா! அப்படியானால் இந்த மாநாடு யாருடைய தலைமையில் நடக்கின்றது. இந்த மாநாட்டில் யார் யார் கலந்து கொள்வார்கள்?

வாயிற்காப்போன்: உலகாளும் பரமேஸ்வரப் பெருமானார் தலைமையில் நடைபெறும் இம் மாநாட்டிற்கு பூலோகத்தில் இருக்கக்கூடிய ஒவ்வொரு சமயங்களின் கடவுளர்களான கெளதம புத்தபிரான், யேசுபிரான், நபிகள்நாயகம் ஆகியோரும் முப்பத்து முக்கோடி தேவர்களின் பிரதிநிதிகளுடன் இந்திரன் மற்றும் படைத்தல் துறை அமைச்சர் பிரம்மா, பாதுகாப்பு அமைச்சர் விஷ்ணு, பூலோகத்து கணக்கு வழக்குகளை சரிபார்க்கும் கணக்காய்வு அதிபதி நாயகம் யமதர்மராஜன், பதிவுத்துறை அதிகாரி சித்திர குப்தன் உள்ளிட்ட பலரும் மாநாட்டில் கலந்து கொள்கின்றனர்.

நான்: ஐயா! இந்த மாநாட்டில் என்ன முடிவு…

வாயிற்காப்போன்: உஷ்… மாநாட்டில் கலந்து கொள்பவர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள். நீ ஓடிப்போய் மூலையில் மறைந்திருந்து மாநாட்டைப்பார்.

(வாயிற்காப்போன் கூறியபடி மாநாடு நடை பெறும் மண்டபத்தின் தூண் ஒன்றில் மறைந்து நின்று மாநாட்டை அவதானித்தேன்)

(தொடரும்)
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல