செவ்வாய், 13 மே, 2014

கொன்றவனுக்கும் வீரவணக்கம்… கொல்லப்பட்டவனுக்கும் வீரவணக்கம்… யமனுக்கே இடியப்பம் தீத்தும் தமிழன்!

முகப்புத்தகத்தில் ஒரு தகவலைப் பார்த்தன். ரெலோ தலைவர் சிறீ சபாரத்தினத்திற்கு வலைத்தளங்களில் பலர் வீர வணக்கமும் அஞ்சலியும் செலுத்தியிருந்தார்கள். இதை அவர் சார்ந்த அமைப்பு, அவரை நேசிப்பவர்கள் செய்திருந்தார்கள். ஆனால் தங்களைத் தீவிர தமிழ்த்தேசியவாதிகளாகவும் விடுதலைப்புலிகளையும் ஈழ விடுதலைப் போராட்டத்தையும் ஒட்டு மொத்தமாக குத்தகைக்கு எடுத்துக் கொண்டு மற்றவனையெல்லாம் துரோகிகள் ஆக்கியவர்களும் சிறீ சபாரத்தினத்திற்கு அஞ்சலி செலுத்தியது எனக்கு ஆச்சரியத்தை தந்தது.



காரணம் என்னவெனில், தை மாதம் கிட்டுவிற்கு அஞ்சலியும் வீர வணக்கமும் செலுத்தியவர்கள் இந்த மாதம் சிறீ சபாரத்தினத்திற்கும் அதைச் செலுத்துகிறார்கள். கொன்றவனிற்கும் கொல்லப்பட்டவனிற்கும் வீரவணக்கமும் அஞ்சலியும் செலுத்தும் ஒரு வித்தியாசமான விலங்குகளாக (புலம்பெயர்) தமிழர்கள். இதுதான்டா விளையாட்டு…

இது வலைத்தளங்களில மட்டுமில்ல, இஞ்ச நாட்டிலயும் நடக்குது. சிவாஜிலிங்கம் கோஸ்டி புலிகளுக்கும் அஞ்சலி செய்யிது. புலிகளால பலிகளான சிறிசபாரத்தினத்துக்கும் அஞ்சலி செலுத்துது. பிரபாகரன்தான் ரெலோ இயக்கத்தலைவர் சிறிசபாரத்தினத்தைக் கிட்டுவைக் கொண்டு போட்டுத்தள்ளினவர் எண்டதை சிவாஜிலிங்கத்துக்கோ செல்வம் அடைக்கலநாதனுக்கோ… தெரியாதா?

அல்லது, இப்பிடித்தான் நடந்தது எண்டு இந்தச் சனங்களுக்குத் தெரியாதா? நாலைஞ்சு வருசத்துக்கு முந்தி, இப்பிடித்தான் வவுனியாவில தியாகிகள் தினத்தில உமா மகேஸ்வரனுக்கும் புளொட்காரருக்கும் சித்தார்த்தன் தலைமையில அஞ்சலி செய்தவை இந்தத் போ(பு)லித்தேசியவாதிகள்.

இதைமாதிரி ரெலோவின்ரை போராளிகளுக்காக நடத்தப்பட்ட அஞ்சலி நிகழ்வில, பத்நமாபா நினைவுநிகழ்வில எண்டெல்லாம் இந்தப் போ(பு)லித்தேசியவாதிகள் அஞ்சலி செய்யினம். இதுகளில செல்வம் அடைக்கலநாதனும் சுரேஸ் பிரேமச்சந்திரனும்தான் தலைமைதாங்கினவை.

இதெல்லாம் ஏனெண்டால், இப்ப கொள்கை கோட்பாடு, நீதி நியாயம் எண்ட எல்லாத்தையும் விட வாக்குகள் தேவை. வாக்குத் தேவையெண்டால் புலியின்ரை ஆதரவாளரும் தேவை. ரெலோவின்ரை, புளொட்டின்ரை, ஈ.பி.ஆர்.எல்.எவ்வின்ரை ஆதரவாளர்களும் தேவை.

அப்ப என்ன செய்யலாம்? கொன்றவனும் தேவை. கொல்லப்பட்டவனும் தேவை. யாவாரம் எண்டால் யாவாரம்தான். அந்த மாதிரி ஒரு வியாபாரம்… இப்பிடியெல்லாம் செய்து அவனவன் தாங்கள் விரும்பின பாட்டுக்குச் சனங்களை மடையராக்கிறாங்கள்… ஒவ்வொருத்தனும் என்னமாதிரியெல்லாம் சனத்தின்ரை காதில பூவைக்கிறாங்கள்? பிரபாகரனுக்கு முத்தம் குடுக்கிற இவை, சிறிசபாரத்தினத்துக்கு என்ன குடுப்பினம்? எண்டு ஆரும் யோசிக்கிறதில்லை.

பிரபாகரனுக்குப் பாயாசம் குடுக்கிறவை உமாமகேஸ்வரனுக்கு வடையா குடுக்க நினைக்கினம்? இதென்ன நாசமடா…. ! சத்தியமாகச் சொல்லுங்கோ, இதில உங்களுக்கு ஏதாவது விளங்குதா? புலிகள் துரோகி ஒழிப்பு நடவடிக்கையை ஆரம்பிச்ச போது அப்ப சிவாஜிலிங்கம், சிறிகாந்தா, செல்வம் அடைக்கலநாதன் ஆட்கள் எல்லாம் துண்டைக்காணம் துணியைக் காணம் எண்டு ஓடி மறைஞ்சவை.. அப்பிடி ஓடிப்போய்.. இவை மறைஞ்ச இடம் எங்கயெண்டு தெரியுமோ… முதல்ல இந்தியாவுக்குத்தான் ஓடிச்சினம்.

ஆனால், இந்த நாசமாய்ப்போன புலிகள் தமிழ்நாட்டுக்கு வந்து பத்மநாபாவைப் போட்டுத்தள்ளினதுக்குப் பிறகு அங்க நிக்கேலாது எண்டு, கொழும்புக்கு வந்திச்சினம்… கொழும்புக்கு வந்து எப்பிடியிருந்தினம்? ஆரோட இருந்தினம்? எண்டதெல்லாத்தையும் இவை இப்ப மறந்திருக்கலாம். அல்லது மறைக்கலாம். ஆனால், வரலாறு மறைக்குமோ…. அது ஒரு சுத்தமான கண்ணாடி… எல்லாத்தையும் அப்பிடியே வெளிக்காட்டும்.

கொழும்புக்கு வந்தவை அண்டைக்கு அரசாங்கத்தின்ரை தயவில – அரசாங்கத்தின்ரை கொடுப்பனவுகளிலதான் இருந்தவை… இவையின்ரை அரசியல் வாழ்க்கைக்கும் எதிர்காலத்துக்கும் வாழ்வு குடுத்ததே இந்தக் கொழும்புதான்… சம்பந்தருக்கு குண்டு துளைக்காத கார்… ஒரு தூண்டில் கூடப் போட்டறியாத சுரேஸ் பிரேமச்சந்திரனுக்கு மீன்பிடி அமைச்சில ஆலோசகர் பதவி… செல்வத்துக்கும் சித்தார்த்தனுக்கும் படைத்துறையில் (?) வேலைகள்…. அப்பப்பா…. இப்பிடியெல்லாம் இருந்தவைக்கு அடிச்சுதப்பா ஒரு வெள்ளிதிசை… குபேரயோகம்… புலிக்கு என்ன மதி மயக்கம் வந்திதோ தெரியாது… புலி கொடுத்த வாய்ப்பைப் பயன்படுத்திப் புலியையே அழிச்சிட்டு இப்ப அந்தப் புலிக்கொடியை ஏந்தியே தங்கட அரசியலைக் கொண்டு போற ஆட்கள்…

சும்மா சொல்லக்கூடாது… நெருப்புக்குள்ளால தண்ணியைக் கொண்டு போறதெண்டால் இவங்கள்தான்… யமனுக்கு இடியப்பம் தீத்தின ஆட்களும் இவங்கள்தான்….

வடபுலத்தான்
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல