செவ்வாய், 28 அக்டோபர், 2014

மாதவிடாயின்போது காட்டுக்குள் விரட்டிவிடப்படும் பெண்கள்! கம்ப்யூட்டர் காலத்தில் இப்படியும் கொடுமை!!

பெங்களூர்: மாதவிடாய் காலத்தில் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டு காட்டில் தங்க வைக்கப்படுவதால் பெண்கள் கடும் துயரத்திற்கு ஆளாகிவரும் சம்பவம் கர்நாடகாவில் நடந்துவருகிறது.


கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் அரசிகெரே தாலுகாவிலுள்ளது கோபாலபுரம் என்ற கிராமம். நாட்டின் தகவல் தொழில்நுட்ப தலைநகர் பெங்களூரில் இருந்து 200 கிலோமீட்டர் தொலைவில்தான் இந்த ஊர் உள்ள போதிலும், கிராம மக்களுக்கு இன்னும் அடிப்படை நாகரீகமே சென்று சேரவில்லைபோலும்.

இக்கிராமத்தில் ஒரு வித்தியாசமான பழக்கம் உள்ளது. மாதவிடாய் காலங்களில் இக்கிராமத்திலுள்ள பெண்கள் வேறு யாரையும் தொட்டால் தீட்டு என்ற எண்ணம் அங்கு வேரூன்றிபோயுள்ளது. இதனால் மாதவிடாயின்போது மாதத்தின் சில நாட்கள், வீட்டில் பெண்கள் தங்க அனுமதிக்கப்படுவதில்லை.

அருகேயுள்ள வயல்வெளிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். அங்கும்கூட மிகவும் இழிவான நிலையில்தான் வாழ வேண்டும் என்பது கட்டாயம். அதாவது, கீழே படுத்திருக்க வேண்டும், ஒரே குவளையில் சாப்பாட்டையும், குழம்பையும் சேர்த்து சாப்பிட வேண்டும் என்பது போல கட்டுப்பாடுகள் பல உள்ளன.

வயல்வெளிகளில் பாம்புகள், பூரான்களுக்கு நடுவே அச்சத்துடனேயே வாழ்க்கையை கழிக்கின்றனர் அந்த பெண்கள். விஷ ஜந்துகள் கடிப்பதால், பல பெண்களும் தோல் வியாதியுடன் அவஸ்தைப்பட்டு வருகின்றனர். இந்த வேதனையை தாங்க முடியாமல், குறைந்த வயதிலேயே கர்ப்பப்பையை அகற்றிவிடும் பெண்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் அவர்களின் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வருகின்றனர்.

இதுகுறித்து கன்னட ஊடகம் ஒன்றில் செய்தி வெளியாகியுள்ள நிலையில், செய்தியின் அடிப்படையில், உரிய நடவடிக்கை எடுக்கப்போவதாக அறிவித்துள்ளார் மாவட்ட கலெக்டர் அன்புகுமார். வேலூரை பூர்வீகமாக கொண்ட ஐஏஎஸ் அதிகாரியான அன்புகுமார்தான் தற்போது, ஹாசன் மாவட்ட கலெக்டர். அவர் இதுகுறித்து கூறியதாவது: கன்னட மீடியாவில் இச்சம்பவம் குறித்து இன்று ஒளிபரப்பான செய்தியை பார்த்த பிறகுதான் இந்த விநோத பழக்கம் குறித்த தகவல் எனக்கு கிடைத்தது.

உடனடியாக தாசில்தாரை சம்மந்தப்பட்ட கிராமத்துக்கு அனுப்பி வைத்து கள நிலவரங்களை ஆய்வு செய்து அறிக்கையளிக்க உத்தரவிட்டுள்ளேன். நானும் கூடிய விரைவில் அக்கிராமத்துக்கு செல்ல உள்ளேன்.

மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலமாகவே, இந்த பழக்கத்தை கைவிடச் செய்ய முடியும். சட்டப்படி நடவடிக்கை எடுத்தால் பிரச்சினையின் தீவிரம் அதிகரித்துவிடும். இப்பிரச்சினையை தீர்ப்பதற்காக ஒரு குழுவை அமைத்து, மாதாமாதம் அந்த குழு சோதனை நடத்த உத்தரவிடப்படும். இவ்வாறு கலெக்டர் அன்புகுமார் தெரிவித்தார்.

Thatstamil
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல