செவ்வாய், 13 ஜனவரி, 2015

சிறிசேன அரசாங்கம் எதிர்கொள்ளும் கடினமான சவால்கள்

தற்சமயம் நடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தல்தான் சமீப காலங்களில் நடந்த தேர்தல்களில் மிகவும் முக்கியமான தேர்தல். தேர்தல் நாள் மிகவும் அமைதியாக இருந்தாலும் இவை சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தல்கள் இல்லை. தேர்தல் பிரச்சாரக் காலங்களின் போது எதிர்க்கட்சிப் பிரச்சாரத்துக்கு எதிராக பரந்த அளவிலான வன்முறைகள் பிரயோகிக்கப்பட்டன. அவர்கள் தங்கள் கூட்டங்களை நடத்துவதற்கான இடங்களை வழங்குவதற்குக்கூட மறுக்கப்பட்டது. அரசாங்கம் உயர்ந்த பட்ச அளவுக்கு அரச இயந்திரங்களை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தியருந்தது. இது தேர்தல் சட்டத்துக்கு முரணாணது.



ஊடகங்களானது அனைத்து வேட்பாளர்களுக்கும் பிரச்சாரம் செய்வதற்கு சமமான வாய்ப்பை வழங்கவேண்டும் என்று எதிர்பார்க்கப் பட்டாலும், அரச ஊடகங்கள் கிட்டத்தட்ட மகிந்த ராஜபக்ஸவுக்கும் அரசாங்க பிரச்சாரங்களுக்கும் மட்டுமே முழு விளம்பரம் கொடுத்தன. எதிர்க்கட்சி பற்றி பிரஸ்தாபிக்கும்போது அதன் பலவீனத்தை காட்டும் செய்திகளையே வெளியிட்டன. அரசாங்கம், மேலும் அரச நலன்புரி அமைப்புகளையும் வாக்காளர்களுக்கு நலன்களை வழங்குவதற்கு பயன்படுத்தியதுடன் அதை ஜனாதிபதியின் மனிதாபிமானமிக்க செயற்பாட்டுடன் தொடர்பு படுத்தியது. அதற்கும் மேலாக அரசாங்கம் அவைகளை வினியோகிப்பதற்கும் அரசாங்கத்தின் தேர்தல் பிரச்சாரங்களைக் காட்சிப்படுத்துவதற்கும் இராணுவத்தைப் பயன்படுத்தியது.

இந்த தேர்தல்களில் முக்கிய பங்காக விளங்கியது, ஸ்ரீலங்காவானது தொடர்ந்தும் ராஜபக்ஸவால் அமைக்கப்பட்ட பாதையில் செல்லுமா அல்லது வித்தியாசமான பாதையில் செல்லுமா என்பதுதான். ராஜபக்ஸ பாதையின் மிகவும் முக்கியமான அம்சங்கள், அதிகாரங்களை ஜனாதிபதியின் பக்கத்தில் செறிவு படுத்துவது, சோதனைகள் மற்றும் சமநிலைப் படுத்துவதை உடைத்து அரசியல் அதிகாரம் தனிப்பட்ட அமைப்புக்களின் கைகளில் இருப்பதை தடுப்பது, இதை பிரதம நீதியரசரரை அரசாங்கம் பதவி நீக்கம் செய்ததின் மூலமாக நாம் கண்கூடாகக் கண்டோம், இந்த விடயத்தில் உச்ச நீதிமன்றம் மற்றும் மேன் முறையீட்டு நீதிமன்றம் என்பன அரசாங்கத்துடன் முரண்பட்ட போதிலும் அரசாங்கம் அவரை பதவி நீக்கம் செய்தது. தமிழர் பிரதேசங்கள் மற்றும் நாட்டின் இதர பகுதிகளில் குடிமக்களின் விவகாரங்களில் இராணுவத் தலையீட்டை அதிகரிப்பது. சீனாவுடனான பொருளாதார மற்றும் அரசியல் தொடர்புகளை அதிகரிப்பது, இங்கு நிச்சயமற்ற பொருளாதார மதிப்புள்ள திட்டங்களுக்காக அரசாங்கம் சர்வதேச சமூகத்திடம் இருந்து பாரிய கடன்களைப் பெற்றுக் கொண்டது.

ஜனாதிபதி ராஜபக்ஸவின் ஆட்சியானது ஆட்சி முறைக்கு சற்றும் பொருத்தமற்றதாக இருந்ததுடன், செலவுகளைப்பற்றிய போதுமான கருதலைச் செலுத்தாது விளைவுகளைப் பெறுவதையே விருப்பமாகக் கொண்டிருந்தது. இந்த தேர்தலில் முக்கியமான தேர்தல் தொகுதிகளில் அவரது அரசியல் வீழ்ச்சிக்கு காரணமாக இருந்தது அவரது அத்துமீறல்களே. சிங்களத் தேசிய வாதத்தை அளவுக்கு மீறிப் பயன்படுத்தி இன மற்றும் மதச் சிறுபான்மையினரைத் தனிமைப் படுத்தியது, விசேடமாக இதற்கு முந்தைய தேர்தல்களில் முன்னாள் ஜனாதிபதிக்கு பெருமளவிற்கு வாக்களித்த முஸ்லிம்களை, ஆனால் அவர்கள் அரசாங்கத்தின் ஒரு பகுதியினரால் ஆதரிக்கப்படும் தீவிரவாத பௌத்தர்களினால் உடல் ரீதியான தாக்குதல்களுக்கு இலக்கானார்கள். ஊழல்களின் அளவு கட்டு மீறிப் போனது சிங்கள அறிவுஜீவிகளையும் அரசாங்கத்திடமிருந்து அந்நியப்படுத்தியது, அவர்கள் நாட்டில் பெருகி வரும் கடன் சுமைகளையிட்டு கவலை கொள்ளலானார்கள்.

அரசாங்கம் யுத்த நினைவுகளுக்கு உயிரூட்டுவதற்கு இந்த தேர்தல்களைப் பயன்படுத்தியது. தமிழ் புலம்பெயர்ந்தவர்களிடையே இன்னமும் உயிரோடிருக்கிற எல்.ரீ.ரீ.ஈக்கு, ஸ்ரீலங்காவை துண்டாடப்படுவதை காண விரும்பும் மேற்கு நாடுகள் உதவி செய்கின்றன என்று அரசாங்கம் கூறியது. ஒரு பக்க சார்பான பிரச்சாரம் காரணமாக சிங்கள மக்களில் அநேகர் இந்த ஆபத்து உண்மையான ஒன்று என எண்ணிக் கவலைப்பட்டார்கள்.

இதன் காரணமாக நகர்புறத்திலும் குறைவான இடங்களிலுள்ள பெருமளவு சிங்கள வாக்காளர்கள் ஜனாதிபதி தொடர்ந்தும் பதவியிலிருக்க வேண்டும் என்று தவித்தார்கள். சிங்களவர்கள் பெருமளவு ஆதிக்கம் செலுத்தும் கிட்டத்தட்ட அனைத்து தொகுதிகளிலும் முன்னாள் ஜனாதிபதி வெற்றியின் விளிம்பில் இருப்பது குறிப்பிடத் தக்கது. எனினும் ஜேவிபி மற்றும் ஜாதிக ஹெல உருமய என்பன எதிரணியின் கூட்டில் அங்கம் வகிப்பது அரசாங்கத்தின் இந்தப் பிரச்சாரத்தை முறியடிக்க குறிப்பிட்ட ஓரளவுக்கு உதவியது. தாங்கள் அரசாங்கத்துடன் இணைந்திருந்தது, எல்.ரீ.ரீ.ஈ யினை தோற்கடிப்பதற்காகவே இப்போது எல்.ரீ.ரீ.ஈ இல்லாதபடியால் பிரச்சினையும் இல்லை, ஆனால் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் பாரிய ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் என்பனதான் உண்மையான பிரச்சினை என்று அவர்கள் சொன்னார்கள்.

தமிழ் வாக்குகள்

ராஜபக்ஸவுக்கு எதிரான தமிழ் வாக்குகள் ஆச்சரியமான ஒன்றாகத் தோன்றவில்லை. தமிழர்கள் எப்போதும் யுத்தத்துக்குப் பின்னர் கணிசமான அளவு எந்தவித அரசியல் உரிமைகளையும் விட்டுக்கொடுக்க விரும்பாத ராஜபக்ஸ அரசாங்கத்துக்கு எதிராகவே வாக்களித்து வந்துள்ளார்கள். அரசாங்கம் வட மாகாணசபையை நிறுவி அதற்கான தேர்தல்களை நடத்தியிருந்த போதிலும், அதற்கான அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்க அரசாங்கம் மறுத்திருப்பது தமிழ் அரசியல்வாதிகளை விரக்தியடையச் செய்துள்ளது. மற்றும் தங்கள் சொந்த நிலங்களில் தங்கள் வாழ்க்கையை மீளக் கட்டியெழுப்ப விரும்பும் அம் மக்களின் அவசர தேவையையோ அல்லது யுத்தத்தின்போது காணாமற்போன அவர்களின் பிரியப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதை கண்டறியும் விடயம் சம்பந்தமாகவோ அரசாங்கம் எதுவித பதிலையும் வழங்கவில்லை.

மாறாக அரசாங்கம் தொடர்ந்தும் இராணுவத்தின் ஊடாகத் தமிழ் பகுதிகளை ஆட்சி செய்தது, யுத்தத்தின்போது இராணுவத் தேவைகளுக்காக கையகப் படுத்தப்பட்ட காணிகளில் பெரும்பகுதியை அது திரும்பக் கையளிக்கவும் இல்லை. எப்படியாயினும் ராஜபக்ஸவின் தோல்விக்குப் பின்னாலுள்ள முக்கிய காரணி தமிழ் வாக்குகள் மட்டும் இல்லை. அதன் இன்னொரு முக்கியமான காரணி முஸ்லிம் வாக்குகள். அநேகமாக முஸ்லிம்கள் அனைவருமோ மொத்தமாக ராஜபக்ஸவுக்கு எதிராக வாக்களித்துள்ளார்கள். இது முற்றாக எந்தவித ஆத்திரமூட்டல் செயல்களிலும் ஈடுபடாத முஸ்லிம்கள் மீது அரசாங்கத்தின் ஆதரவின் கீழ் உள்ளதாகத் தோன்றும் தீவிரவாத பௌத்த குழுக்கள் மேற்கொண்ட தாக்குதல்களினாலேயே ஏற்பட்டது. அதனால் அதற்கான தண்டனையை அனுபவித்துள்ளார்கள்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முதல் சவாலாக இருப்பது, ராஜபக்ஸ காலத்தில் குழிதோண்டிப் புதைக்கப்பட்ட ஆளுகை நிறுவனங்களை மீளமைப்பது ஆகும். இந்த அமைப்புகளில் கண்காணிப்பு மற்றும் சமநிலைகள் முறைகள் யாவும் செல்லரித்துப் போயுள்;ளன. நீதிச் சேவைகள் மற்றும் அரசாங்க சேவைகள் யாவும் அரசியல் மயமாகியுள்ளன. இதை மாற்றி அமைக்க வேண்டும். ஜனாதிபதி சிறிசேனவுக்கு ஆதரவு தெரிவித்துள்ள அனைத்துக் கட்சிகளும் இந்த விடயத்தில் ஆதரவு தெரிவிப்பதால் இது கடினமான ஒன்றாக இருக்காது.

கடினமான பிரச்சினையாக இருக்கப் போவது இன மோதலுக்கு ஒரு தீர்வைக் காண்பதே, அந்த தீர்வுக்கு அனைத்து சமூகங்களினதும் ஒப்புதல் இருக்கவேண்டும். இந்த விடயத்தில் கட்சிகளுக்கு இடையில் உள்ள கருத்து வேறுபாடுகள் மிகவும் பெரிதாக உள்ளது. ஜனநாயகத்தை மீண்டும் நிலைநாட்டுவதற்கு, அவர்கள் தங்களுக்குள் போதுமானளவு நம்பிக்கை மற்றும் புரிந்துணர்வுகளை வளர்த்துக் கொண்டு தங்கள் வேறுபாடுகளை சமரசம் செய்து கொண்டு ஒருவரை ஒருவர் ஏற்றுக் கொள்ளும் ஒரு பொதுவான போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்கிற நம்பிக்கை இருக்கிறது,

பிரதான தமிழ் கட்சியான ரி.என்.ஏ, அதன் செல்வாக்கு மிக்க தமிழ் புலம் பெயர் சமூகத்தைச் சேர்ந்தவர்களில் ஒரு பிரிவினர் மற்றும் அவர்களது உள்நாட்டு பங்காளிகள் ஆகியோரது எதிர்ப்பையும் மீறி தன்னை எதிரணியில் கூட்டுச் சேர்த்துக் கொண்டது. கூட்டு எதிரணியானது அது தேர்தல் காலத்தில் செய்ததைப்போல தொடர்ந்தும் கூட்டாகச் செயற்பட வேண்டும் என்பதோடு, தமிழர்களின் கொள்கைக்குரிய தீர்மானத்தை கூட்டாக மேற்கொள்ளவும் வேண்டும்.

புதிய ஜனாதிபதி அமைப்பதாக உறுதிபூண்டுள்ள தேசிய அரசாங்கத்தில் ரி.என்.ஏ பங்கேற்கும் சாத்தியம் உள்ளது. ஒரு அரசியல்வாதி என்கிற வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் தமிழர் பிரச்சினை பற்றிய ஒரு உறுதியான கொள்கை இல்லை. எனினும் அவரது வெற்றி, ஒரு கூட்டு சாதனையின் பின்னணியில் வௌ;வேறு கருத்தியல் சார்புள்ள கட்சிகளிடையே கலந்துரையாடலை மேற்கொள்வதற்கான ஆரம்பத்தை வழங்குகிறது – அவர்களது பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் வெற்றி. அவர்கள் அனைவரும் இப்போது ஒரே பக்கத்தில் உள்ளார்கள் மற்றும் இரு தரப்பும் பரஸ்பரம் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரு தீர்வை பற்றி வேலை செய்வதற்கு இது ஒரு அரிய வாய்ப்பு.

இன முரண்பாடுகளை தீர்க்கும் விவகாரத்தில் ராஜபக்ஸ அரசாங்கம் பிரதானமாக யுத்தத்துக்கு பின்னான காலப் பகுதியில் தோற்றுப் போனதுக்கான காரணம் பரஸ்பரம் ஏற்றுக் கொள்ளக்கூடிய தீhவைக் காண்பதற்குப் பதிலாக கடுமையான இராணுவ பிரசன்னத்தை பயன்படுத்தி தமிழர்களை ஒரு கண்காணிப்பு நிலையில் வைத்திருந்ததேயாகும். அதற்காக செய்ய வேண்டி இருந்தது தமிழர்கள் பெரும்பான்மையாக உள்ள பகுதிகளில் இருந்து இராணுவத்தை விலக்கிக் கொண்டு அங்கு சிவிலியன் ஆட்சியை நிறுவது.

சிங்கள் தேசியவாதத்துக்கு எண்ணெய் வார்த்ததின் பயனாக அது சிந்தி முஸ்லிம் எதிர்ப்பு செயற்பாடாகத் தொடர்ந்தது, அதற்கு அரசாங்கத்தின் ஆதரவும் இருப்பதாகவும் தென்பட்டது இந்த செயல்கள் காரணமாக ராஜபக்ஸ அரசாங்கத்தின் தோல்விகள் தொடர்ந்தன. ஸ்ரீலங்காவில் அனைத்து சமூகங்களையும் சேர்ந்த சகல கட்சிகளையும் பிரதிநிதித்துவ படுத்தும் ஒரு அரசாங்கம் இப்போது உள்ளது. முடிவு எடுக்கும் செயல்முறை மெதுவானதாகவும் மற்றும் கடினமானதாகவும் இருக்கலாம், ஆனால் புதிய அரசாங்கம் ஸ்ரீலங்காவின் வேற்றுமையான பல இன மற்று பல மத மக்களைப் பிரதிநிதித்துவப் படுத்துகிறது. இது சமாதானம் மற்றும் நல்லிணக்கத்துக்கு சிறந்த ஒன்றாக இருக்கும்.

- ஜெகான் பெரேரா

தேனீ மொழிபெயர்ப்பு: எஸ்.குமார்

Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல