சனி, 28 மார்ச், 2015

புலிகள் போராடும் காலங்களிலேயே விடுதலைப் போராட்டத்தை தவறான பாதையில் கொண்டு சென்றனர்

1980 களின் இறுதி பகுதி அது, பிரேமதாச அரசும் விடுதலை புலிகளும் தேன் நிலவு கொண்டாடிய காலம் அது, JVP என அழைக்கப்படும் மக்கள் விடுதலை முன்னணியை இரும்புக்கரம் கொண்டு நசிக்கிய காலம் அது. பேராதனிய பல்கலைக்கழகத்தில் பயிலும் ஒரு தமிழ் மாணவன் அந்த பகுதியில் உள்ள ஒரு சிங்கள நண்பன் வீட்டில் இருக்கும் போது திடீர் என அப்பகுதி பிரேமதாச அரசின் விசேட படைப் பிரிவான 'பச்சை புலி'களால் ( Green Tigers) சுற்றி வளைக்கப்படுகிறது. பல சிங்கள இளைஞர்கள் சந்தேகத்தின் பெயரில் கைது செய்து இராணுவ வண்டிகளில் ஏற்றப்படுகிரார்கள். இந்த தமிழ் இளைஞனிடமும் விசாரணை ஆரம்பமாகின்றது. தான் யாழ்பாணத்தை சேர்ந்த தமிழன் என தன் அடையாள அட்டையை (Identity Card) எடுத்துக் காட்டுகிறார்.



உடனே அந்த இராணுவ வீரன் சிங்களத்தில் ஏதோ கூறி தூரதில் நிற்கும் இன்னொரு இராணுவ வீரனை அழைத்து அடையாள அட்டையை அவனிடம் கொடுக்கிறார்.

உன்னிப்பாக பிரட்டி பிரட்டி அடையா அட்டையை பார்த்து விட்டு சரளமாக யாழ்பாண தமிழில் பேசுகிறார் அந்த இராணுவ வீரர். சிறிது நேரத்தில் அவ்விடத்திற்கு இன்னும் இரண்டு இராணுவ வீரர்களும் வந்து சேர்கின்றார்கள், அவர்களும் சரளமாக யாழ்பாண தமிழில் பேசுகிறார்கள். அப்போதுதான் அந்த இளைஞன் புரிந்து கொண்டான் இது 'பச்சை புலிகள்' படை அணிகளுடன் கலந்து விட்ட நமது விடுதலைப் புலிகள் என.
சரி JVP அழிப்பில் புலிகளும் ஏன் ஈடுபட வேண்டும் என்ற கேள்வியை கேட்டால் "நாளை நாம் அமைக்கும் தமிழீழத்தில் எமக்கு எதிராக ஒரு புரட்சி நடந்தால் அதை எவ்வாறு கையாள்வது என்பதை கற்றுக் கொள்வதற்காக" என பதில் கிடைக்கின்றது. - நல்ல பதில்.

தமிழீழத்தில் புரட்சி என வரும் போது இன்னொரு விடையத்தையும் நான் இங்கு குறிப்பிட்டே ஆக வேண்டும்.

1990 களின் ஆரம்ப பகுதியில் புளொட் அமைப்பில் இருந்து பிரிந்து சென்ற 'தீப்பொறி' குழுவினர் விடுதலை புலிகள் உட்பட ஏனைய அமைப்புகளில் உள்ள தேசியத்திற்கு ஆதரவான நல்ல சக்திகளை உள்வாங்கி ஒரு புரட்சிகர ஸ்தாபனத்தை கட்டினார்கள்.

அவர்களின் முதலாவது கொங்கிரஸ் தாய்லாந்தின் பாங்கோக் நகரில் இடம் பெறுகின்றது. 'தமிழீழ புரட்சிகர மக்கள் கட்சி' என அமைப்பிற்கு பெயர் சூட்டப்படுகிறது. இலங்கை இராணுவத்திற்கு எதிராக ஒரு தாக்குதல் நடாத்தி அதை பொறுப்பேற்பதனூடாக அமைப்பை வெளி உலகிற்கு கொண்டு வருவது என தீர்மானிக்கப்படுகிறது.

வடக்கு கிழக்கில் குழு முறையில் இரகசிய அமைப்பாக இயங்குகிறார்கள். பல புதிய புதிய உறுப்பினர்களை உள்வாங்குகிறார்கள். புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசங்களிலும் இயங்குகிறார்கள்.

புலிகளின் புலனாய்வு பிரிவை சேர்ந்த நபரை உள்வாங்கும் முயற்சில் ஈடுபடும் வேளையில் புலிகள் விடையத்தை மணந்து கொள்கிறார்கள். சில நாட்களுக்குள் இதனுடன் சம்பந்தப்பட்டவர்கள் ஆயுதங்களுடன் புலிகளால் கைது செய்யப்படுகிறார்கள். அதில் கோவிந்தன் என்ற பெயரில் 'புதியதோர் உலகம்' என்ற புத்தகத்தை எழுதிய றொபேர்ட் என்பவரும் உள்ளடக்கம். எஞ்சியவர்கள் அங்கிருந்து தப்பி வேறு மாவட்டங்களுக்கு செல்கிறார்கள்.

இதை ஏன் இங்கு கூறுகின்றேன் என்றால் புலிகள் போராடும் காலங்களிலேயே அவர்கள் விடுதலைப் போராட்டத்தை தவறான பாதையில் கொண்டு செல்கின்றார்கள் என்பதை உணர்ந்து இப்படியான புரட்சிகர ஸ்தாபனங்கள் உருவாகும் போது நாளை புலிகள் தமிழீழத்தை அமைக்கும் பட்சத்தில் நிச்சயமாக அவர்களின் போக்கிற்கெதிராக பல புரட்சிகர அமைப்புகள் உருவாகும். அதை புலிகளும் நன்கு அறிந்திருந்தனர். அதுதான் இந்த பிரேமதாச அரசுடனான 'பச்சை புலி' விளையாட்டெல்லாம்.

2002 இல் கிளிநொச்சியில் புலிகள் நாடாத்திய பத்திரிகையாளர் மாகாநாட்டில் ஒரு பத்திரிகையாளன் தலைவர் பிரபாகரனை நோக்கி பின்வரும் தொனியில் கேள்வி ஒன்றை கேட்கிறார், "உங்கள் ஆட்சிக்குள் தொழிலாளர் அமைப்புக்கள், பிற கட்சிகள் போன்றவற்றை அனுமதிப்பீர்களா" என்று, "அப்படி யாரும் இப்போது இல்லை அதை பற்றி ஏன் கதைப்பான்" என்ற தொனியில் பிரபாகரன் பதில் கூறுகிறார். அதாவது இந்த கேள்விக்கே இடம் இல்லை என்ற மனநிலையில் அவர் பதில் அமைந்திருந்தது.

புலிகள் இன்று இல்லாத நிலையில் (?) அவர்கள் ஆதரவாளர்கள் அபிமானிகள் மத்தியிலும் மாற்று கருத்தை அல்லது மாற்று அரசியலை ஏற்றுக் கொள்ளாத மன நிலையே தொடர்ந்து காணப்படுகின்றது. மாற்று கருத்து அல்லது மாற்று அரசியல் என்பதை பற்றி பேசுவதே தவறு அல்லது துரோகம் என்ற கருத்தையே கடந்த முப்பது வருடங்களாக தமிழ் சமூகதில் புலிகள் விதைத்து வைத்துள்ளார்கள்.

இப்படியான ஒரு சிந்தனை கொண்ட சமுகத்தில் இருந்து எதிர் காலத்தில் ஒரு விடுதலை அமைப்பு அல்லது ஒரு வெகுஜன அமைப்பு உருவாகுமாக இருந்தால் அது திரும்பவும் வேறுவடிவில் இன்னொரு முள்ளிவாய்க்காலில் தமிழ் மக்களை நிறுத்திச் செல்லும் என்பதில் எந்த விதமான சந்தேகமும் இல்லை. எனவேதான் எமது சமூகம் புடம் போடப்பட வேண்டும், மாற்று சிந்தனை உருவாக்கம் பெறவேண்டும், சுயமாக சிந்திக்கும் ஆற்றல் உள்வாங்கப்பட வேண்டும், எமது உண்மையான விடுதலைக்கு மேற் கூறியவை இன்றியமையாதது என்பதே என் கருத்து.
(Brin Nath)
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல