திங்கள், 20 ஏப்ரல், 2015

ஐந்து வயதை எட்டிய ஐபேட்

டிஜிட்டல் சாதனங்களின் சரித்திரத்தில், இமாலய சாதனை படைத்த பெருமை ஆப்பிள் நிறுவனத்தின் ஐபேட் சாதனத்திற்கு உண்டு. ஆப்பிள் நிறுவனத்தின் டேப்ளட், ஒரு தனி தொழில் பிரிவைத் தொடங்கி வைத்தது; இன்று வரை அது உயிர்த்துடிப்புடன் இயங்கி வருகிறது.



அறிமுகமாகி அண்மையில் (ஏப்ரல் 3) ஐந்து ஆண்டுகளைக் கடந்த இந்த சாதனம் தான், ஆப்பிள் நிறுவனத்தின் தலைவர் மறைந்த ஸ்டீவ் ஜாப்ஸ் இறுதியாக அறிமுகப்படுத்திய சாதனம். 2010ல் இதனை அறிமுகப்படுத்திய போது, “மந்திரத்தில் உருவான புரட்சிகரமான” சாதனம் என்று ஸ்டீவ் ஜாப்ஸ் கூறினார்.

அப்போது ஐபோன் அறிமுகப்படுத்தப்பட்டு மூன்று ஆண்டுகள் ஆகி இருந்தன. மக்கள் அதன் மயக்கத்தில் இருந்து விடுபடாத நிலையில், ஐபேட் நுழைந்தது. இதன் பெயரைப் பலர் கிண்டல் செய்தனர். சற்றுப் பெரிய ஐபோன் இது என்று குறை கூறினர். இதனால் நமக்கு என்ன பயன் புதிதாகக் கிடைக்கப் போகிறது? என்று கேலி செய்தனர்.

ஆனால், ஐபோன் அறிமுகமானபோது, முட்டி மோதிய கூட்டத்தைக் காட்டிலும் சற்று அதிகமாகவே, ஐபேடை வாங்க மக்கள் குவிந்தனர். முதல் நாளே 3 லட்சம் ஐபேட்களை விற்றதாக, ஆப்பிள் அறிவித்தது. இரண்டு மாதங்களில், இதன் விற்பனை 20 லட்சத்தை எட்டியது.

இதன் விற்பனையைக் கணித்தவர்கள், முதல் ஆண்டில், 11 முதல் 70 லட்சம் வரை இதன் விற்பனை எண்ணிக்கை இருக்கும் என எதிர்பார்த்தனர். ஆனால், ஒரு கோடியே 48 லட்சம் ஐபேட்களை விற்பனை செய்து அசத்தியது ஆப்பிள் நிறுவனம்.

புகழ் பெற்ற ஆங்கில இதழான “டைம்” அந்த ஆண்டின் சிறந்த டிஜிட்டல் சாதனமாக ஐபேடைத் தேர்ந்தெடுத்து மகுடம் சூட்டியது. இதன் வெற்றி காரணமாக 'டேப்ளட்' என்றால் அது ஐபேட் தான் எனப் பேசப்பட்டது. வேறு நிறுவனத்தின் டேப்ளட் வாங்க வேண்டும் என்று முடிவெடுத்தவர்களும், கடைகளுக்குச் சென்று அந்த நிறுவனத்தின் ஐபேட் கொடுங்கள் என்று தான் கேட்டு வாங்கினார்கள்.

முதல் ஆண்டில், டேப்ளட் பி.சி. சந்தையில், ஆப்பிள் நிறுவனத்தின் ஐபேட் 77% இடத்தைக் கொண்டிருந்தது.

ஆனால், கடந்த 2014ல், டேப்ளட் சந்தையில், ஆப்பிள் நிறுவனத்தின் பங்கு 28% ஆகச் சுருங்கிவிட்டது. பிற நிறுவனங்கள் இந்த சந்தையில் குவித்த பல்வேறு மாடல் டேப்ளட்களே இதற்குக் காரணம். முதல் சரிவு, அமேஸான் தன்னுடைய கிண்டில் சாதனத்தை 199 டாலர் விலையிட்டு அறிமுகம் செய்தபோது ஏற்பட்டது. அப்போது ஐபேடின் விலை 499 டாலர். தற்போது புழக்கத்தில் உள்ள டேப்ளட் பி.சி.க்களில், மூன்றில் இரண்டு ஆண்ட்ராய்ட் இயக்கத்தில் செயல்படும் டேப்ளட்களாகவே உள்ளன.

இருந்தாலும் உயர்ரக டேப்ளட் என்றால், அது ஆப்பிள் தான் என்று மக்கள் இன்னமும் ஏற்றுக் கொண்டுதான் உள்ளனர். இந்தச் சந்தையில் தன் பெயரைத் தக்க வைக்க ஆப்பிள் நிறுவனமும் இன்னும் தொடர்ந்து போராடி வருகிறது. 2013 அக்டோபர் மாதம், ஐபேட் மினி என்று சற்று விலை குறைந்த டேப்ளட்டைக் கொண்டு வந்தது. தொடர்ந்து, அதன் தடிமன் குறைந்த மாடல்களைக் கொண்டு வந்தது. இந்த வகையில், சென்ற ஆண்டில், ஐபேட் ஏர் 2 மாடல் வெளி வந்தது. இதில் விரல் ரேகை சென்சார் டூல் அறிமுகப் படுத்தப்பட்டது. தங்க முலாம் பூசப்பட்ட மாடல் ஒன்றும் வெளியானது.

தொடர்ந்து ஐபேட் சாதனத்தை வடிவமைப்பதில், ஆப்பிள், ஐ.பி.எம். நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. ”ஐபேட் ப்ரோ ("iPad Pro") என்ற ஒன்றை வடிவமைத்து ஆப்பிள் வெளியிட இருப்பதாக வதந்திகள் உள்ளன. ஆனால், இதனை மைக்ரோசாப்ட் பயன்படுத்திக் கொண்டு தன் Surface Pro 3 வைக் கொண்டு வந்தது. நூறு கோடி டாலர் சந்தையைப் பெற்றது.

2011 ஆம் ஆண்டில், கூகுள் தன் குரோம் புக் சாதனத்தைப் பள்ளிகளில் அறிமுகப்படுத்திய பின்னர், 2012ல், ஆப்பிள் ஐபுக்ஸ் மற்றும் ஐ ட்யூன்ஸ் யு சாதனங்களைப் பள்ளிகளில் திணித்தது. ஒரு கட்டத்தில், அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணப் பள்ளிகளில் மட்டும், கிண்டர் கார்டன் வகுப்பிலிருந்து 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களால், 7 லட்சத்து 50 ஆயிரம் ஐபேட்கள் பயன்படுத்தப்பட்டன. இருப்பினும், பள்ளிகளில் பயன்படுத்தப்படும் டேப்ளட் விற்பனைச் சந்தையில், மைக்ரோசாப்ட் 39% பங்கினையும், ஆப்பிள் 32% பங்கினையும் கொண்டுள்ளன.

அடுத்து, முதல் முறை பயனாளர்களின் டேப்ளட் மாற்றத்தை எதிர்பார்த்து ஆப்பிள் காத்துக் கொண்டுள்ளது. பொதுவாக, 3 முதல் 5 ஆண்டுகளில், தங்கள் டிஜிட்டல் சாதனங்களை ஒதுக்கி, புதியனவற்றை மக்கள் வாங்குவார்கள். அந்த வகையில், முதலில் ஐபேட் வாங்கியவர்கள், ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபேட் சாதனங்களை வாங்குவார்கள் என்று ஆப்பிள் எதிர்பார்க்கிறது.

எது எப்படி இருந்தாலும், குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும், ஐபேட் ஒரு மீடியா டேப்ளட் சாதனமாக இருந்து வருகிறது. இப்போது வந்திருக்கும் குறைந்த விலை டேப்ளட் பி.சி.க்கள், பல விஷயங்களில், ஐபேட் சாதனத்தைக் காட்டிலும் பயனுள்ளதாக இருந்தாலும், வர்த்தகப் பணிகளுக்காக, எங்கும் எடுத்துச் சென்று பயன்படுத்தும் வகையில் சிறிய கம்ப்யூட்டரை நாடுபவர்களூக்கு, ஐபேட் மட்டுமே சிறந்த சாதனமாகத் தெரிகிறது.

இந்தியாவைப் பொறுத்தவரை, தொடக்கத்தில் ஐபேட் சாதனங்களில் ஆர்வம் காட்டப்படவில்லை. ஆனால், ஆப்பிள் தொடர்ந்து பல விற்பனை முறைகளை அறிவித்து, தன் சந்தையை இந்தியா மட்டுமின்றி, பிரேசில், ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகளிலும் நிலைப்படுத்திக் கொண்டது. பணம் திரும்ப தருதல், பழைய சாதனங்களுகு ரொக்க கழிவு, வட்டியில்லாமல் மாதந்தோறும் செலுத்துதல் எனப் பல வழிகளை அறிமுகப்படுத்தியது. இதனால், ஐபேட் விற்பனை 45% வரை ஓர் ஆண்டில் அதிகரித்தது.

தற்போது, ஆப்பிள் 9.7 அங்குல திரை கொண்ட ஐபேட் ஏர், ஐபேட் 4 (ரெடினா திரைக் காட்சி கொண்டது) ஆகியவற்றையும், ஐபேட் மினி யில் பல மாடல்களையும் (விலை ரு.21,900 முதல் ரூ.28,900 வரை) விற்பனை செய்கிறது. ரெடினா திரை இல்லாத ஐ பேட் 2 விற்பனை இங்கு நிறுத்தப்பட்டது.

எண்ணிப் பார்க்கையில், ஐபேட் (ஐபோனையும் சேர்த்து) மூன்று புரட்சிகளுக்கு வித்திட்டது. ஒரு புதிய வகையில் கம்ப்யூட்டர் இயக்கம் மேற்கொள்ளல், தனி நபருக்கான ஒரு பயன்பாட்டு சாதனம் மற்றும் ஒரு புதிய தொழில் பிரிவு தொடக்கம் என மூன்று புதிய விஷயங்கள், ஐ பேட் சாதனத்துடன் தொடங்கி, இன்று யாரும் ஒதுக்க இயலாத வகையில் வளர்ந்து வருகின்றன.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல