புதன், 29 ஏப்ரல், 2015

யார் இந்த மயூரன் சுகுமாறன்....?

சென்னை: இந்தோனேசியாவில் துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட 8 பேரில் ஒருவர் மயூரன் சுகுமாறன். ஆஸ்திரேலிய குடியுரிமை பெற்றவரான இவரது பூர்வீகம் இலங்கை.


சுகுமாறன் உள்பட மொத்தம் 8 பேரை போதைப் பொருள் கடத்தல் வழக்கில் துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளது இந்தோனேசிய அரசு. கடைசி நேரத்தில் ஒரு பெண்ணின் தண்டனை மட்டும் நிறுத்தி வைக்கப்பட்டது.

1981ம் ஆண்டு ஏப்ரல் 17ம் தேதி பிறந்தவர் மயூரன் சுகுமாறன். இவர் ஒரு பிரிட்டிஷ் - ஆஸ்திரேலியர் ஆவார். பாலி நைன் என்ற குழுவில் இடம் பெற்றுள்ள போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டவர் இவர் என்பது குற்றச்சாட்டாகும்.

2005ம் ஆண்டு இவரையும், மேலும் மூன்று பேரையும் இந்தோனேசியாவின் குடா நகரில் உள்ள மெலஸ்டி ஹோட்டலில் வைத்து போலீஸார் கைது செய்தனர். இவரிடமிருந்து 334 கிராம் ஹெராயின் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் சுகுமாறனுக்கு கடந்த 2006ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மரண தண்டனை விதிக்கப்பட்டது.

சுகுமாறனுடன் கைதான மற்றும் தற்போது தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளவரான ஆண்ட்ரூ சான் ஆகியோர்தான் இந்த ஹெராயின் கும்பலின் முக்கியத் தலைவர்களாக இந்தோனேசிய போலீஸார் கூறுகிறார்கள். இந்தோனேசியா, ஆஸ்திரேலியா இடையே போதைப் பொருட்கள் கடத்தலை இவர்கள் மேற்கொண்டு வந்ததாகவும் கூறுகிறார்கள்.
சுகுமாறனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதும் அவர் அப்பீல் செய்தார். ஆனால் அது நிராகரிக்கப்பட்டது. மேலும் இந்தோனேசிய ஜனாதிபதியும் பொது மன்னிப்பு அளிக்க மறுத்து விட்டார். அவரது கருணை மனுவும் நிராகரிக்கப்பட்டது.

இதையடுத்து சுகுமாறன், சான் ஆகியோரின் இறுதி முடிவு உறுதிப்படுத்தப்பட்டது. ஏப்ரல் 19ம் தேதி சான், சுகுமாறன் மற்றும் 6 பேர் துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டு விட்டனர்.

சானும் சுகுமாறனும், ஹோம்புஷ் பாய்ஸ் உயர்நிலைப் பள்ளியில் படித்தவர்கள் ஆவர். சுகுமாறன் பின்னர் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார்.

ஆனால் படிப்பை பாதியிலேயே விட்டு விட்டு அமெரிக்க முதலீட்டு வங்கி ஒன்றில் வேலையில் சேர்ந்தார். சிட்னியில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகத்திலும் வேலை பார்த்துள்ளார்.

பிரேசில் நாட்டு ஜியூ ஜிட்சு கலையைக் கற்றறிந்தவர் சுகுமாறன். மேலும் ஆங்கில ஆசிரியராகவும் இருந்தார். கிராபிக் டிசைனர், தத்துவவியல் போதனையாளர் என பல முகம் கொண்டவர் சுகுமாறன்.

சிறையிலும் கூட அவர் கைதிகளுக்கு ஆங்கலம் கற்றுக் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Thatstamil
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல