புதன், 26 ஆகஸ்ட், 2015

அல்வா (தொதல்) செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்:

1 சுண்டு (1/4 படி) சிவப்புப் பச்சை அரிசி
5 தேங்காய்
250 g சர்க்கரை
1 kg சீனி
100g பயறு
50g முந்திரிப்பருப்பு (கசுக்கொட்டை )
2 மேசைக்கரண்டி சவ்வரிசி (பாயாச அரிசி)



மேற்கூறிய பொருட்கள் மட்டுமன்றி நல்ல திடகாத்திரமான ஆட்கள் குறைந்தது 2 பேர் தேவை.

முதலில் அரிசியை ஒரு பாத்திரத்தில் ஊறப்போடவும்.
இரண்டு மணி நேரம் நன்றாக ஊறிய பின்னர் அரிசியை கழுவி ஒரு பேப்பரில் உலர விடவும். நன்றாக உலர்ந்த பின் மாவாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். (மாவை நன்றாக அரிக்கவேண்டும் / (சலித்துக் கொள்ள வேண்டும்).

அதன் பின் தேங்காயை உடைத்து துருவி கொள்ளுங்கள்.

துருவிய தேங்காய்ப் பூவில் கொஞ்சமாகதண்ணீரை விட்டு கெட்டியாக பிழிந்து முதல் பாலை (முதல் தடவை கிடைக்கும் பாலை) எடுத்து ஒரு பாத்திரத்தில் தனியே வைத்துக்
கொள்ளுங்கள்.

அதன் பின்னர் தாரளமாக தண்ணீரை ஊற்றி பிழிந்து இரண்டாம் மூன்றாம்
பாலையும் எடுத்து தனியே ஒரு பாத்திரத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.

சர்க்கரையை நன்றாக சீவி பௌடராக (தூளாக) எடுத்துக்கொள்ளுங்கள்.

அதன் பின் பயறு எடுத்துநன்றாக வறுத்து கொள்ளுங்கள். பயறை பாதியாக வருமாறு உடைத்துக் கொள்ளுங்கள். (அது உங்களுக்கு கஷ்டம் என்றால் கோது நீக்கிய பயறை வாங்கி வறுத்துக் கொள்ளலாம்.) இறுதியாக முந்திரிக்கொட்டையை சிறு துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளுங்கள்.

செய்முறை:

முதலில் பெரிய அளவிலான ஒரு தாச்சியை (வாணலியை) எடுத்து அதற்குள் பிழிந்து வைத்துள்ள 2 ஆம் 3 ஆம் பாலை பாலை ஊற்றுங்கள். பின் அதற்குள் அரைத்து வைத்த மாவையும், தூளாக்கிய சர்க்கரையையும், ஒரு கிலோ சீனியையும் போட்டு எல்லாவற்றையும் சேர்த்து நன்றாகக் கலந்து கொள்ளுங்கள்.

முக்கியமாக கட்டி (கெட்டியாகாமல்) படாமல் இருக்க வேண்டும். இப்போது உங்களுக்கு அந்த தாச்சி (வாணலி) நிறைந்த அளவில் கலவை கிடைத்திருக்கும் .

அந்த கலவையை எடுத்து அடுப்பில் வைத்து ஒரு மர அகப்பையால் நன்றாக கிளறி கொண்டே
இருங்கள். நேரம் செல்லச் செல்ல கலவை இறுகிக் கொண்டு வரும். தொடர்ந்து கிண்டிக் (கிளறிக்கொண்டே) கொண்டே இருக்க வேண்டும். அண்ணளவாக ஒன்றரை மணிநேரத்தின் பின் கலவை நன்றாக இறுகி இப்போது எண்ணெய் கசியத் தொடங்கியிருக்கும், அந்த நேரத்தில் முதலாம் பாலை எடுத்து கொஞ்சம் கொஞ்சமாக விட்டு கிண்டிக் கொண்டே இருங்கள்.

பின் வறுத்து வைத்துள்ள பயறையும் அதற்குள் கொட்டி நன்றாக கிளறவும்.

இப்படியே 2 அல்லது 3 தடவையாக முதல் பாலை விட்டு கிண்டி இறக்கும் பதம் வருவதற்கு
ஒரு ஐந்து நிமிடம் முன்னர் முந்திரிப் பருப்பையும் (கசுக்கொட்டையையும்) சவ்வரிசியையும் (ஜவ்வரிசியையும்) போட்டு நன்றாக, நன்றாகக் கிளறுங்கள். இறுதியாக ஒரு பெரிய தட்டிலே கொட்டி நன்றாக வடிவத்தை சதுரமாக அல்லது வட்ட வடிவமாக செய்து வைத்துகொள்ளுங்கள். அடுத்த நாள் எடுத்து சிறிய துண்டுகளாக வெட்டி
பரிமாறலாம்.
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல