திங்கள், 30 நவம்பர், 2015

மாவீரர்கள் நினைவாக செய்வதற்கு பல உண்டு!

வழக்கம்போலவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த மாவீரர் வாரம் முடிந்துவிட்டது. இரண்டாயிரத்தி ஒன்பதுக்குப் பின்னர் கடந்து சென்ற ஒவ்வொரு மாவீரர் வாரங்களிலும் பார்க்க கடந்த வாரம் முடிந்த மாவீரர் வாரம் சற்று வித்தியாசமாக கடந்து சென்றதை கவனிக்க முடிந்தது.



கடந்த காலங்களில் மறைவிடங்களில் கொண்டாடப்பட்ட மாவீரர் வார நிகழ்வுகள் இம்முறை சற்று பகிரங்கமாகவே அனுஸ்டிக்கட்டதைக் காணமுடிந்தது. மாவீரர் வாரம் என்பது விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து மரணித்த போராளிகளை நினைவுகூர்வதற்காக புலிகள் ஏற்படுத்திய ஒன்று. அந்த நாளில் புலிகள் வேறு எவருக்கும் அஞ்சலி செலுத்த அனுமதித்ததில்லை.

ஒருவர் மரணித்ததால் அவர் மரணித்த நாளை ஒவ்வொருவருமே நினைவுகூர்வதுண்டு. இது ஒரு மத சடங்குமல்ல. எல்லா மதத்தவர்களும் தத்தமது சொந்தங்களை அவர்கள் மரணித்த நாளில் அவர்களை நினைவுகூர்வதுண்டு. அவ்வாறு நினைவு கூர்வதற்கு எவரும் தடையும் விதித்ததில்லை. ஆனால் நவம்பர் இருபத்தியேழு என்பது புலிகள் மரணித்த தமது போராளிகளை நினைவுகூர்வதற்காக ஏற்படுத்திய ஒரு சடங்கு.

அந்தச் சடங்கை இன்றும் தொடரவேண்டுமா என்பது இன்று நம்முன் உள்ள கேள்வி.

மரணித்த போராளிகள் ஒவ்வொருவரும் மரணித்த நாட்களை அவர்களின் உறவினர்கள் இன்றும் நினைவுகூர தவறமாட்டர்கள். அப்படியிருக்கையில் பொதுவாக இந்த போராட்டம் காரணமாக மரணித்த அனைவருக்காகவும் ஒரு தினத்தை ஒதுக்கி அவர்கள் அனைவரையும் நினைவுகூரவேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாகவே இருந்து வருகின்றது. ஆனாலும் யாரும் அதனை பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை. ஆனால் மாவீரர் வாரம் வந்துவிட்டதும் மரணித்த எமது மக்களுக்காக நாம் அவர்களை நினைவுர எமக்கு உரிமை இருக்கிறது என்று கூறிக்கொள்வதையே இன்றும் காண முடிகின்றது.

எதிர்வரும் காலங்கிளிலாவது மரணித்த அனைத்து மக்களையும் நினைவுகூர ஒரு பொதுவான நாளை ஒதக்கி அதனை தமிழ்மக்கள் அனைவரும் பகிரங்கமாகவும் பயமின்றியும் நினைவுகூர வகைசெய்யவேண்டும்.

கடந்த வாரம் புலம்பெயர் நாடுகள் எங்கும் மாவீரர் வாரம் கோலாகலமாக கொண்டாடப்பட்டிருக்கிறது. பிரிட்டனில் லண்டனில் நடைபெற்ற வைபவத்தில் வழமைக்கு மாறாக அந்த நிகழ்வின் வரவுசெலவுக் கணக்கும் பகிரங்கமாக அறிவிக்கப்பட்டது. அந்தக் கணக்கை கேட்டவர்கள் அனைவரும் நிச்சயம் அதிர்ச்சியடைந்திருப்பார்கள். சுமார் ஒரு லட்சம் பவுண்கள் இந்த நிகழ்வுக்கு செலவாகியதாகவும் அதனை பிரிட்டனில்வாழும் தமிழர்களிடம் எவ்வாறு சேர்க்கப்பட்டது என்பதும் அறிவிக்கப்பட்டிருந்தது.

ஒரு லட்சம் பவுண்கள் என்பது இன்று இலங்கை ரூபாவில் இரண்டு கோடி. இந்த இண்டு கோடியையும் மாவீரர் நினைவாக பயனுள்ள வகையில் செலவிட்டிருந்தால் இன்று உயிருடன் தமது வாழ்வுக்காக போராடிக்கொண்டிருக்கும் முன்னாள் போராளிகளின் வாழ்வை வளப்படுத்த பயன்படுத்தியிருந்தால், அது மாவீரர்களிற்கு செய்யும் மிகப்பெரிய அஞ்சலியாக இருந்திருக்கும்.

இன்று உயிரோடு இருக்கும் அந்த முன்னாள் போராளிகள் இன்று உயிரோடு இல்லையென்றால், அவர்களுக்கும் சேர்த்தே இந்த அஞ்சலி நிகழ்த்தப்பட்டிருக்கும். ஆனால் அவர்கள் உயிர்தப்பிவிட்டபோதிலும், அவர்களின் தியாகங்களும் அர்ப்பணிப்பும் யாரும் குறைத்து மதிப்பிடக்கூடியதல்ல. அவர்களின் இன்றைய வாழ்க்கை எத்தகைய போராட்டம் நிறைந்தது என்பதை ஏற்கனவே பலரும் சொல்லியாகிவிட்டது. யுத்தம் முடிவடைந்து இதுவரை ஏழு மாவீரர் தினங்கள் கடந்து விட்டன. இந்த ஏழு ஆண்டுகளும் பிரிட்டனில் மாத்திரம் சுமார் பதின்நான்கு கோடி ரூபாக்கள் செலவிடப்பட்டிருக்கின்றன.

கிட்டத்தட்ட ஒரு மாதிரிக் கிராமத்தையே இந்த நிதியைக்கொண்டு உருவாக்கியிருக்கமுடியும். இனிவரும் காலங்களிலாவது இதுபோன்ற வீண்செலவுகளைத் தவிர்த்து மறைந்துபோன போராளிகள் நினைவாக உயிரோடு இருக்கும் போராளிகளின் வாழ்வை வளப்படுத்த ஆக்கபூர்வமான பங்களிப்பை புலம்பெயர் சமூகம் வழங்க வேண்டும்.

-சுகுனா

 ezhanaadu

Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல