சிம்பு மற்றும் அனிருத் கூட்டணியில் உருவான பீப் சாங் தற்போது தமிழகம் முழுவதும் பெருத்த சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த விவகாரத்தில் இருவரின் மீதும் கோவை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில் சிம்பு, அனிருத் சார்பில் இந்த வழக்கில் ஆஜராகியிருக்கும் வக்கீல் ராஜசேகரன் தற்போது விளக்கம் ஒன்றை அளித்திருக்கிறார்.
கடந்த 10 ம் தேதி அனிருத் இசையில் சிம்பு பாடிய பீப் பாடல் ஒன்று இணையதளங்களில் வெளியானது. இப்பாடலைக் கேட்ட மக்கள் பாடலில் உபயோகப்படுத்திய வார்த்தைகளைக் கண்டு மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாகினர்.அந்த அளவிற்கு மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்தி இந்த பாடல் உருவாக்கப்பட்டிருந்தது.
மகளிர் அமைப்புகளின் கோரிக்கையை ஏற்று கோவை ரேஸ் கோர்ஸ் போலீசார் சிம்பு, அனிருத் இருவர் மீதும் பெண்களை அவமானப்படுத்துதல், இழிவுபடுத்துதல் மற்றும் இணையத்தில் ஏற்றுதல் உட்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் சிம்பு அனிருத் சார்பில் இந்த வழக்கில் ஆஜராகியிருக்கும் வக்கீல் சி.ராஜசேகரன் "இணையத்தில் தற்போது பரவலாக உலவி வரும் 'பீப்' சாங்" என்ற பாடலின் வரிகள் அதிகாரப்பூர்வமான பாடல் வரிகள் அல்ல. மேலும் இவ்வரிகள் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டிருப்பதாகத் தெரிவதை அறிந்து எனது கட்சிக்காரர்கள் சிலம்பரசன் மற்றும் அனிருத் ஆகியோர் அதிர்ந்து போயுள்ளனர்.
எனது கட்சிக்காரர்களின் மீது மக்கள் வைத்திருக்கும் மதிப்பையும், நற்பெயரையும் தகர்க்க வேண்டும் என்ற தீயநோக்கோடும், தவறான எண்ணத்தோடும் சில விஷமிகள் இந்தப் பாடலை இணையத்தில் கசிய விட்டிருக்கிறார்கள் என்பது என் கட்சிக்காரர்களின் வலுவான அபிப்பிராயம் ஆகும்.
இது குறித்து, இணையத்தில் உலவி வரும் இந்தப் பாடல் பதிவேற்றப்பட்ட மூலத்தையும் அதன் அதிகாரத்தையும் ஆராய்ந்து, கண்டறிந்து, சட்டப்படி அதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு, என் கட்சிக்காரர்கள் என்னிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.
நடிகர் சிலம்பரசன் ஒரு இசைப்பிரியர் ஆவார். அவர் பல்வேறு பாடல்களைத் தன் சொந்தப் பயன்பாட்டிற்காக ஒலிப்பதிவு செய்துள்ளார். இவையாவும், அதிகாரப்பூர்வமற்ற, திருத்தப்படாத முதல்படிவ நிலையிலேயே உள்ளன. இவை நூறு விழுக்காடு அவரது தனிப்பட்டச் சொத்தாகும். அவரது தனிப்பட்டச் சொத்துகளிலோ, அந்தரங்கத்திலோ தலையிடுவதற்கு எவருக்கும் உரிமை இல்லை. மேலும் அவ்வாறு செய்வது சட்டப்படி, தண்டிக்கப்பட வேண்டிய குற்றமாகும்" என்று அவர் கூறியிருக்கிறார்.
Thatstamil



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக